வெள்ளி, 12 டிசம்பர், 2014

மனம் ஒரு கண்ணாடி !


மனம் ஒரு கண்ணாடி !

ஒவ்வொருவருடைய வாழ்வும் அவர்களின் மனத்தின் நினைவு களுக்கும் பதிவுகளுக்கும் தகுந்தாற்போல் தான் அமையும் .

மனத்தை தூய்மை படுத்த தெரியாதவர்கள் எதையும் தூயமைப் படுத்த முடியாது .
கண்ணாடி முன் எதைக் காட்டினாலும் அது தெரியும் அதேபோல் மனதில் எதை நினைத்தாலும் அது பதிந்து அதை செய்யத் தூண்டும்.

மனம் ஒரு கத்தி போன்றது .கத்தி மாம்பழம் அறுக்கவும் உதவும் பிறருடைய தலையை அறுக்கவும் உதவும் .அதுபோல் மனத்தினால் நன்மை செய்யவும் முடியும் .தீமை செய்யவும் உதவும்.

மனத்தில் நெடுங்காலமாக மாசு என்னும் அழுக்கு ஏறி தடிப்பாக உள்ளது .அதை தூய்மை படுத்த வேண்டும்.

நாம் தினமும் பாத்திரங்களை விளக்குகின்றோம் .பல் விளக்குகின்றோம்,அன்றாடம் ஆடைகளைத் துவைத்து அழுக்கை எடுக்கின்றோம்,வீட்டை அன்றாடம் சுத்தம் செய்கின்றோம் .நாம் பார்க்கும் கண்ணாடியை தினமும் சுத்தம் செய்கின்றோம்.

அதேபோல் நம்முடைய மனத்தை தினமும் தூயமைப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் என்பது ஒரு பேய் பிடித்த குரங்கு போன்றது .அது சும்மாவே இருக்காது குரங்கு போன்று தாவிக் கொண்டே இருக்கும் .

மனத்தை அடக்க தெரிந்தவனே மனிதன் .

கண்ணாடி எப்படி அசையாமல் இருக்கின்றதோ அதேபோல் மனதை அசையாமல் அலையாமல் நிலை நிறுத்தப் பழகிக் கொள்ளவேண்டும்.அப்படி பழகினால் மனதில் மாசு என்னும் அழுக்கு படியாமல் சுத்தமாக இருக்கும் .

மனத்தை அடக்க வள்ளலார் சொல்லும் வழி ..மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்கின்றார் .வேறு வழிகளால் மனம் அடங்காது அமைதி அடையாது .

சிற்சபை என்பது ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் .நம் தலைப்பாகத்தின் உச்சிக்கும் கீழே, உள் நாக்கிற்கும் மேலே.மூளையின் மத்தியில் அந்தக் கரணக் கூட்டத்திற்கு நடுவில் உள்ளது .

அதை தெரிந்து மனத்தை வெளியே அலைய விடாமல் இழுத்து புருவ மத்தியில் செலுத்திக் கொண்டே இருந்தால் ,மனம் தானே அடங்கும் .மனத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு நீங்கியதால் மனம் அலைந்து கொண்டு உள்ளது .
மனத்தின் சங்கிலியை ஆன்மாவில் மாட்டிவிட்டால் அது துண்டிக்கப் படாமல் இணைந்து கொள்ளும்.அப்போது ஆன்மாவின் இயற்கை குணமான கருணை ,தயவு,அன்பு,அருள் என்ற தன்மைக்கு,குணத்திற்கு மனத்தை மாற்றி விடும் அதுவே சன்மார்க்க தியானம் ,

அப்போது மனம் அலையாமல் கண்ணாடிபோல் எப்போதும் தூய்மையாகவும் ,சுத்தமாகவும் ,மாசுபடாமல் இருக்கும் .

நமக்கு எக்காலத்திலும் துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் வராமல் பாதுகாக்கப் படும் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு