புதன், 20 ஜூலை, 2011

அசையாமல் இருந்தால் ஏதும் கிடைக்காது !

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

________________________________________________________________
அசைவற்று இருப்பதாலும், அமைதியாக இருப்பதாலும், ஓரிரு நாட்கள் தியானம் பயில்வதாலும் இறை அனுபவம் கிட்டாது.அறிவு நிலைகள் உயர்ந்து இந்திரியங்கள், கரணங்களின் சேட்டைகள் நின்றால் துரிய அனுபவ நிலை நம்மை சூழ்ந்து கலந்திடும். இதுவே வள்ளல் பெருமானார் கூறிய துரிய அனுபவமாகும். ஒரிரு நாட்களில் தியானம் கற்று அதன் மூலம் துரிய அனுபவத்தை பெற்றுக்கொண்டேன் என்பது துரிய அனுபவமாகாது.
________________________________________________________________

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபட்டு அதன் பயனால் இறைவனை எல்லா உயிர்களிலும் காணும் பக்குவம் பெற்றவர்கள், இறையருளால் “காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அகங்காரம்/மமங்காரம் நீங்கி சுத்த சன்மார்க்க சிவானுபவம் பெறுவார்கள்” என்பது வள்ளல் பெருமானின் வாக்கு. ஆனால் இவ்வனுபவத்தை உணர வள்ளல் பெருமானார் காட்டிய அருள்நெறியில் நின்று உலகியியல் வாழ்வைத் தொடர வேண்டும். 

அசைவற்று இருப்பதாலும், அமைதியாக இருப்பதாலும், ஒரிரு நாட்கள் தியானம் பயில்வதாலும் இறை அனுபவம் கிட்டாது. அறிவு நிலைகள் உயர்ந்து இந்திரியங்கள், கரணங்களின் சேட்டைகள் நின்று துரிய அனுபவ நிலை தாமே ஏற்பட வேண்டும். இதனை வள்ளல் பெருமானார்:

சேட்டையற்றுக் கருவியெலாம் என் வசம் நின்றிடவே
சித்தியெலாம் பெற்றே நான் திருச்சிற்றம்பல மேல்..

"தனுகரணாதிகள் தாம் கடந்து அறியுமோர்
அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி"

மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்து
ஒழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
கட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றும்
சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத்தேவே


என்று கூறுகிறார்.

ஆகவே அருள்நெறி என்றால் என்ன? என்பதை ஆன்மீகத் தேடுதலில் இருக்கும் ஆன்மாக்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அருள்நெறி என்றால் என்ன? என்பதை பக்குவப்பட்ட ஆன்மாக்களுடன் கலந்து, உரையாடி, பிறகு வள்ளல் பெருமானார் காட்டிய ஞானநெறியை முழுமையாக உணர்ந்தால் இயற்கையாகவே துரிய முதல் சிவ துரியம், குரு துரியம், பர துரியம் முதலிய அனுபவ நிலைகளெல்லாம் கடந்து இவற்றின் உச்ச நிலையான“ நிராசை” ஏற்படும்.

“நிராசை” நிலை இல்லாததால் தான் இன்றைக்கு எது மாயை? எது மாயை இல்லை என்று தெரியாமல் எத்தனை எத்தனையோ தற்கால குருமார்கள் மாயை வலையில் எளிதாக வீழ்கிறார்கள், அவர்கள் வீழ்வதும் மட்டுமல்லாமல் தங்களை நாடி வந்த பக்தர்களுக்கும் இறை ஞானத்தை அளிக்க முடியாமல் “அத்தனைக்கும் ஆசைப்பட்டு” முடிவில் விளக்கை நோக்கி ஓடும் விட்டில் பூச்சிப்போல் மாய்ந்துவிடுகின்றனர். இதனை அன்றே வள்ள பெருமானார்:

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே. என்று கூறுகிறார்

ஆகவே மனித வாழ்வில் சிவானுபவம் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் மனித தேகம் எடுத்தவர்கள் அனைவரும் சிவானுபவத்தைப் பெறலாம், நித்தியமாக வாழலாம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ற வள்ளவர் வாக்கிற்கிணங்க ஜீவகாருண்ய நெறியில் நாம் பழக ஆரம்பித்தால் மனித நிலையில் இருக்கும் அனைவரும் புல்லறிவு நிலையில் இருந்து மாறி தெய்வ நிலையான அருளறிவு நிலைக்கு செல்லலாம்.

“ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது பசிப்பிணியை நீக்குவது மட்டுமல்ல, எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தராமலும், துன்பத்தில் இருக்கும் உயிர்களுக்கு தக்க சமயத்தில் அந்த துன்பத்தை போக்குவதிலும், சர்வ காலமும் இறை சிந்தனையுடன் யாதொரு இச்சையும் இல்லாமல் உலக உயிர்களின் நன்மையைப் பொருட்டு இறை சிந்தனையுடன் இருப்பதாம்”.


உங்கள் அன்பன் கதிர்வேலு 
மீண்டும் தொடரும் 

1 கருத்துகள்:

10 ஏப்ரல், 2012 அன்று PM 7:53 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது பசிப்பிணியை நீக்குவது மட்டுமல்ல, எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தராமலும், துன்பத்தில் இருக்கும் உயிர்களுக்கு தக்க சமயத்தில் அந்த துன்பத்தை போக்குவதிலும், சர்வ காலமும் இறை சிந்தனையுடன் யாதொரு இச்சையும் இல்லாமல் உலக உயிர்களின் நன்மையைப் பொருட்டு இறை சிந்தனையுடன் இருப்பதாம்.i want to be like this. but my mind always think to be selfish. how to become live for others

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு