ஞாயிறு, 22 அக்டோபர், 2023

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கவனித்துக் கொண்டுள்ளார்!

*கவனித்துக் கொண்டு உள்ளார்!*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் உள்ளார் யாரும் தப்பிக்க முடியாது !*

*என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் !*

*வள்ளலார் பாடல்!*

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.! 

*வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடிக்காமல் காற்றிலே பறக்கவிட்டு ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சமய மத வாதிகளைப்போல் பன்னாத தீமைகளை பண்ணியும், செய்தும் பகராத வன்மொழிகளைப் பேசியும் வருகின்றார்கள்,மேலும் ஒன்று கிடக்க ஒன்றை செய்து கொண்டு உள்ளார்கள், எண்ணாததை எண்ணி வருத்தப்படும் காலம் வரும்,அப்போது அழுது புலம்பினாலும் வேலைக்கு ஆகாது,*

*மரணத்தை வென்ற மகான்!*

*வள்ளலார் மரணத்தை வென்று அருள் ஒளிதேகம் என்னும் ஞானதேகம் பெற்றவர் எங்கும் பிரகாசமாய் திகழ்ந்து இயங்கி கொண்டு இருப்பவர்.*

*வள்ளலார் பாடல்!*

*அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு*

*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*

*மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு*

*மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!*

மேலும்....

பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்

இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே

அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்

நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.! 

மேலும்....

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 

*என்பன போன்ற பல நூறு பாடல்கள் வாயிலாக தன் னுடைய உடம்பை ஒளிதேகமாக மாற்றிக் கொண்ட விபரத்தையும் விளக்கத்தையும் உண்மையும் தெரியப் படுத்தி உள்ளார்.*

*இவ்வளவு உண்மை நிலை விபரம் யாவும் அறிந்து, தெரிந்து இருந்தும் பொய்யான வள்ளலார் படத்தையும், சிலையும் வைத்து, மாலை சூடி,படையல் வைத்து அபிஷேகம், ஆராதனை, மற்றும் ஆசார சங்கற்ப விகற்பங்கள் யாவும் செய்து வழிபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்பதை சிந்திக்க வேண்டும்.* 

*மேலே கண்டவாறு வழிபாடு செய்வது தத்துவ சிலை விக்கிரங்களுக்கும்,சமாதி நிலை அடைந்தவர்களுக்கும், இறந்த போன  மனிதர்களுக்கம் செய்யும் வழிபாடுகளாகும்* 

*வள்ளல்பெருமான் என்ற பெயரில் பொய்யான சிலைகளைவைத்து,போட்டோ படத்தை வைத்து  வழிபாடு செய்வது வள்ளலார் கொள்கைகளுக்கு நேர் விரோதமான செயல் என்பதை சன்மார்க்க அன்பர்கள் புரிந்து கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை,புரியவில்லலை.*

*தெரிந்து செய்கிறார்களா ? தெரியாமல் செய்கிறார்களா ? சமய மதவாதிகளின் தூண்டுதலால் செய்கிறார்களா ? என்பது தெரியவில்லை.*

*படம் வேண்டாம் என்பவருக்கே படமா ? சிந்திக்க வேண்டும்!*

*இந்த மாதிரி செயல்களை மக்கள் அறியாமல் செய்வார்கள் என்று தெரிந்தே சன்மார்க்கிகளுக்கு என்றே தனிப் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார்* 

*வள்ளலார் பாடல்!*

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் *உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன்* தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனை நுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்ல நம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்தி மயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.! 

*என்ற பாடல் வாயிலாகத் தெரியப் படுத்துகின்றார்*

*அதாவது கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !* *அவர் ஒளியாக உள்ளார்,அதன் அடையாளமாக புறத்தில் தகரக் கண்ணாடி கூண்டுக்குள் விளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் என்று மிகத் தெளிவாக  சொல்லி உள்ளார்*

*வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன் அறிவித்த அருள் வாக்கியம்!*

உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து

*இதைத் தடைபடாது ஆராதியுங்கள்,இந்தக் கதவைச் சாத்திவிடப் போகின்றேன்,இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல்,நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய 28,பாசுரம் அடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள்,*

*நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன்,இனி எல்லா உடம்பிலும் புதுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்து அருளியுள்ளார் வள்ளலார்* 

*இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இருந்து இயங்கி கொண்டுள்ளார் அதேபோல் நானும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து இயங்கி கொண்டு இருக்கிறேன் என்பதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் தெரிவிக்கின்றார்.* 

*அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்* 

*வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார்,எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கினாலே போதுமானதாகும்,தனியாக வள்ளலார் படத்தையோ சிலையையோ வணங்குவதாலோ வழிபாடு செய்வதாலோ எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்தாலே பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்*

*வள்ளலார் பாடல்!*

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

*ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
*எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்*

தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

*மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்*
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! 

*வள்ளல்பெருமான் சொல்லிய ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை கடைபிடித்து, சுத்த சன்மார்க்க  கொள்கையை முழுமையாக கடைபிடித்து அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மய்யம்
*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு