ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !

*பசித்திரு! தனித்திரு! விழித்திரு!*

*மேலே கண்ட மூன்று வார்த்தைகளும் சுத்த சன்மார்க்கத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், இந்த மூன்று வார்த்தைகளிலும் சொல்லியவாறு வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவரோ அவரே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து, அருள்பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள.*

*பசித்திரு என்றால்?*

*சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதல்ல!*

*நம்மை நஷ்டம் செய்வது நான்கு! அவை யாவன ?*

*ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் ஆகிய இந்த நான்கிலும் முக்கியமானது ஆகாரம் மைத்துனம் ஆதலால் இவ் இரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும் இந்த இரண்டிலும் முக்கியமானது மைத்துனம் ஆதலால் இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிறோம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும் (மரணம் அடையும்) பின்பு முக்தி சித்தி அடைவது கூடாது, முத்தி சித்தி அடைவதற்கு இம் மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பது ஆதலால் எவ்விதத் தாயினும் தேகம் நீடித்து இருக்கும் படி பாதுகாத்தல் வேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான்.*

*ஆதலால் நாம் உண்ணும் உணவுகள் யாவும் புழுக்கின்ற உணவு  அதாவது மலமாகும் உணவு,ஆதலால் அவ் உணவுகளை உட்கொள்ளாமல், புழுக்காத உணவுகளான தேன், சக்கரை, வெல்லம்,கற்கண்டு, அயச் செந்தூரம்,தாமரைப் பஷ்பம் போன்ற மலம் வராத உணவுகளை உட் கொள்ளவேண்டும் இந்த உணவுகளை உட்கொண்டால் தூக்கம் வராது*

*இந்த பழக்கத்தில் பயின்று உடம்பை சுத்தமாக்கிக் கொண்டு, அருள் உணவு உட்கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வோடு பசியோடு இருக்க வேண்டும் இதுவே,இதுவே பசித்திரு என்பதாகும்*

*தனித்திரு !*

*உலகியலில் வாழ்ந்தாலும் எதிலும் பற்று வைக்காமல் இறை சிந்தனை உடன் தூங்காமல் விழிப்போடு தனித்திருக்க வேண்டும்*

*வள்ளலார் பாடல்!*

தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது
துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ

ஈங்கினி நான் *தனித்திருக்க வேண்டும்* _ ஆதலினால்
என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி

ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குக நீ தோழி
என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே

ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே! 

*என்னும் பாடலிலே தெளிவுப் படுத்துகின்றார்*


*விழித்திரு!*

*விழித்திரு என்பது, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எந்த நேரமும் வரலாம் ஆதலால் விழிப்பு என்ற உணர்வோடு தூங்காமல் விழித்திருக்க வேண்டும்*

தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - 

ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.!

மேலும்

தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை

நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே

வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்

தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.! 

*எனவே தூங்காதே விழுப்புடன் தனித்து இருந்து அருள் பெற வேண்டும் இதுவே தனித்திரு என்பதாகும்*

*நம் உடம்பில் சிரநடு சிற்சபையில் ஆன்ம பிரகாசமும்,கடவுள் பிரகாசமும் உள்ளது,ஆன்ம கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் உள்ளது,மேற்படி பூட்டை அருள் என்கின்ற திறவுகோலைக் கொண்டு திறக்கு வேண்டும்,ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும். பெருந்தயவு,*

*நாம் பசித்திருந்து,தனித்திருந்து,விழித்திருந்து ஜீவதயவோடு வாழ்ந்து சத்விசாரம் செய்தால்,ஆன்ம இயற்கை பெருந்தயவால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையால் தானே உவந்து (விரும்பி) வந்து ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கி ஆன்மாவின் உள்ஒளியின் வழியாக அருளை வாரி வாரி வழங்குவார்* 

*வள்ளல்பெருமான் பாடல்!*

*ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் சோதி அது.!

மேலும்...

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - 
சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன்

எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்

*அருள் பசிக்காக காத்திருந்து பசித்திருந்து. தயவுக்காக தனித்திருந்து, சத்விசாரம் செய்ய விழித்திருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெற வேண்டும்.

தொடரும்...

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு