ஞாயிறு, 15 அக்டோபர், 2023

சாதி சமயம் மதங்களை கைவிட வேண்டும்!

*சாதி சமய மதங்களை கைவிட வேண்டும்!* 

*இயற்கை உண்மைக் கடவுளைத் தொடர்புகொள்ளவும் அருளைப் பெறவும் தகுதியானவர்கள் யார்?*

*கீழே உள்ள 13 நிலைகளைத் தாண்டி மேலே செல்லும் தகுதி உடையவர்கள் மட்டுமே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்*

*வள்ளலார் சொல்லும் நிலைகள்!*

*திரயோதச நிலைகள் யாவெனில்:?*

1. பூதநிலை

2. கரணநிலை

3. பிரகிருதி நிலை

4. மோகினி நிலை

5.அசுத்த மாயாநிலை

6. அசுத்த மகாமாயாநிலை

7. சுத்த மாயாநிலை

8. சுத்த மகாமாயா நிலை

9. சர்வ மகாமாயா நிலை

10. குண்டலி நிலை

11. பிரணவ நிலை

12.பரிக்கிரக நிலை

13.திருவருள் நிலை

*ஆக 13. இதற்கதீதத்தில் சுத்த சிவநிலை. இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி, பிரகாசம், அனுபவம், பதம், இடம் முதலிய பெயருள்ளன.*

மேலும், *வர்னமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழிலாகிய பெயராலும் அனந்தமாக விரியும். இவை யாவும் ராகமென்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும். மேலும் இவைகள் படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.*

*15 ஆம் படியான ஞானயோக அனுபவ நிலைகள்*

1. படிகமேடை

2.ஆயிரத்தெட்டுக் கமல இதழ்

3. ஓங்காரபீடம்

4.குண்டலி வட்டம்

5.ஜோதி ஸ்தம்பம்

6. சுத்தநடனம்

*இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லக்ஷணம்.*

 *சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள்*

*சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.*

*சகஜ நிலை*!

*சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.!* 

*மேலே கண்ட அனுபவ நிலைக்கு பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நிலைகள் என்பதாகும், அந்நிலைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் தடையாக இருப்பவை யாவை எனில்?*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*

*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 

*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.!* 

சாதி சமய மதங்களில் எதனிலும்  பற்று வைக்க வேண்டாம் என்று சொல்வதற்கு முக்கிய காரண காரியம் யாதெனில்?

*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.* 

*சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்திருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.!*  

*மேலும் சொல்லுகின்றார் வள்ளலார்!*

*இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*

*ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.* 

*அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்:?* 

*கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*. 

*"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.!* 

*கண்ணைமூடிக் கொண்டு என்றால் குருடர்கள் என்பது பொருள்* 

*இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரியும்படி வள்ளலார் சொல்லியுள்ளார்.* 

*ஜீவ நேயத்தையும் மனித நேயத்தையும் ஆன்ம நேயத்தையும் பிரித்து உயிர்களை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் சாதி சமய மதங்களை பற்றுஅற விட்டுவிட்டு சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்*

*அவ்வாறு பின்பற்றுபவர்களே அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழும் தகுதி பெற்றவர்களாவார்கள்.*

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்க சுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு