திங்கள், 20 மார்ச், 2023

மனம் ! குணம்!

 *மனம்!குணம்!!*


*மிருககுணம், தேவகுணம், மனிதகுணம், கடவுள்குணம்* *என நான்கு குணங்கள் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் உண்டு*


*மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணங்கள் மாறி மாறி தோன்றி கொண்டே இருக்கும், அதில் மிகவும் முக்கியமானது, நல்லகுணங்கள் தீயகுணங்கள் என இரண்டு வகையாக இரண்டு பிரிவுகளாக  இருக்கின்றது,இந்த குணங்கள் "மனத்தின்" செயல் பாட்டால்  உண்டாகின்றது*


*அதேபோல் மனம்,பன்முகமனம்,விரிந்த மனம்,பாய்மனம் என நான்கு வகையான மனங்கள் உண்டு!*


*நல்ல குணம்,நல்ல மனம் நன்மையைத் தரும்,தீயகுணம்,தீயமனம் துன்பத்தைத் தரும்* 


*நம் உடம்பில் "எண்ணம்" என்பது மிகவும் முக்கியமான ஆற்றல் மிகுந்த கருவியாகும். அந்த எண்ணத்திற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டு, அதே போல் எண்ணத்திற்கும்  மனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.* 


*எண்ணம் அகத்திற்கும் புறத்திற்கும் மத்தியில் உள்ள பேராற்றல் கொண்ட கருவியாகும்*


*மனித உடம்பில் புறம் என்னும் கரணங்களில்முதல் இடத்தில் உள்ளது மனம், மனம் எண்ணத்தின் துணை கொண்டு உலகியல் வாழ்க்கையில் நீந்தி செல்கின்றது. மனம் எண்ணம்  இரண்டும் உருவமற்றது, ஆனாலும் அதிகமான வல்லமை பெற்ற உணர்வு கொண்ட ஆற்றல்(சக்தி) பெற்றது.*


*மனித உடம்பில் மனம் என்ன நினைக்கின்றதோ! அதற்கு எண்ணத்தின் துணை பெற்று அதுவே புற உலக  வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது.*


*ஆனாலும் உயிரில் தோன்றும் ஆற்றல்,ஆன்மாவில் தோன்றும் ஆற்றல் இரண்டும் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் புறக் கருவிகளுக்கும்,கண்,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் புறப்புறக் கருவிகளுக்கும் தன் சக்தியை எண்ணத்தின் வாயிலாக கொடுத்து கொண்டே இருக்கும், வேறு வழியில்லாமல் கருணையோடு துணை போகின்றது.*


*ஆகையினால் குணங்களுக்குத் தகுந்தாற்போல் எண்ணம், சொல், செயல் என்னும் மனம்,வாக்கு,காயம்(உடம்பு) என்னும் மூன்றினாலும் நன்மை தீமைகள் மாறி மாறி உண்டாகி, நல்வினை, தீவினை என்னும் செயல்பாட்டு வினைகள் மனித ஆன்மாவில் திரைகளாக மறைப்புகளாக பதிவாகி விடுகின்றது.இதுவே பாவங்கள் புண்ணியங்களாக இன்பம் துன்பங்களாக வெளிப்பட்டு  உடம்பில் நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,துன்பம்,இறுதியில் மரணம் போன்ற வாழ்க்கை மாற்றம் தொடர்ந்து கொண்டே உள்ளது* 


*மனித வாழ்க்கையில் மிருககுணம்,தேவகுணத்தை விட்டு,மனிதகுணம் கடவுள்குணம் என்ன? என்பதை அறிந்து அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் பரிசுத்த எண்ணங்களைத் துணைக் கொண்டு,புறம் புறப்புறம் என்னும் கரணங்கள்,இந்திரிங்களை  அடக்கி,பரிசுத்த ஆன்மாவைத் தொடர்பு கொள்வோமானால், அருள் என்னும் ஆற்றல் வெளிப்பட்டு எல்லா நன்மைகளும் உடனுக்குடன் விளங்கும்.*


*வள்ளலார் தன் குணத்தையும் எண்ணத்தையும் மாற்றுகின்றார் !* 


*வள்ளலார் பாடல்!*


குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்

கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து


மணமுறு பே ரருள்இன்ப அமுதமெனக் களித்து

மணிமுடியும் சூட்டிஎனை வாழ்க என வாழ்த்தித்


தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்

தானும் ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே


அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!


*மனித குலத்தின் இயற்கை குணமான தயவு என்னும் கருணை தான் என்ன ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது என்கிறார் வள்ளலார்.* 


*ஆதலால் மனித குணத்தை பயன் படுத்தி எண்ணத்தின் துணைக் கொண்டு கடவுள் குணத்தை அடைந்து, கடவுளின் தனிப்பெருங் கருணையால், என்றும் அழியாத நன்நிதியாகிய அருள் பெற்று,தன்னுடைய ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி, மரணத்தை வென்று ஞான தேகத்துடன், அருட்சோதி அருளாட்சி புரிந்து வாழ்ந்து கொண்டுள்ளார்*


எல்லா உயிரும் ஒன்று என உணர வேண்டும்!


*எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது என்று நினைக்கின்ற ஒருமை வரவேண்டும், ஏன்?  என்றால் எல்லா உயிர்கள் உள்ளும் ஆன்மா இருக்கின்றது, ஆன்மாவின் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு இருப்பவரே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை  ஆன்ம அறிவின் மூலமாக எண்ணத்தை வெளிப்படுத்தி எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல், நன்மையே செய்து வந்தால்,வள்ளலார் போல் நாமும் மரணத்தை வென்று ஏறா நிலைமிசை ஏற்றி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.*


*வள்ளலார் பாடல்!*


எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - 


உண்ணுகின்றேன்

தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்

வள்ளல் நட ராயன் மகிழ்ந்து.! 


*மேலும் வள்ளலார் பதிவு செய்கின்றார்!*


எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

உண்ணுகின்றேன் உண்ண உண்ண ஊட்டுகின்றான் 


நண்ணு திருச்

சிற்றம்பலத்தே திருநடஞ் செய் கின்றான் என்

குற்றம் பல பொறுத்துக் கொண்டு.!


மேலும்...


எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்

எண்ணிய வாறே இனிது தந்தென்னைத்

திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி! 


என்கின்றார் *இதுபோல் பல நூறுபாடல்கள் பதிவு செய்துள்ளார்.*


*ஒவ்வொரு  மனித ஆன்மாவிற்கும் நல்லகுணம், நல்லஎண்ணம்,நல்லமனம்,நல்லசொல், நல்லசெயல், நல்ஒழுக்கம்,மேலும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதியர்! என்கின்ற உண்மை தெரிந்து இருந்தால் போதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தானே வந்து அருள் வழங்கி ஆட்கொள்வார்*


*மனித உடம்பில் 96 தத்துவங்கள், ஆறு ஆதாரங்கள்,64 கலைகள் 4 நான்கு கரணங்கள், ஒருஜீவன், ஒருஆன்மா கொண்ட நுண்ணிய கண்களுக்குத் தெரியாத, உறுப்புக்கள் யாவும் தன்னைத்தானே இயங்கிக் கொண்டுள்ளது. இவற்றை யாவையும் ஆன்மாவின் (உள்ஒளி) வாயிலாக இயக்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பேரொளி என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.*


*இந்த உண்மையை தெளிவாக வெளிப்படுத்தியவர் வள்ளலார் ஒருவரே!*


*ஒரேத் தன்மைஉள்ள உயிர்களை நமது சகோதர உரிமை உள்ளதாக நினைக்காமல்,அவைகளை எதிரியாக, விரோதமாக, பாவித்து  நினைத்து, அவற்றை அழித்து வாழ்வதால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும்,அவரிடம் இருந்து அருள் பெற முடியாமலும், பிறந்து பிறந்து,இறந்து வீண் காலம் கழித்துக் கொண்டே உள்ளோம்.*


*இனியும் வீண்காலம் கழிக்காமல், ஜீவர்களாகிய நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை அறிந்து அன்பு செய்து,உண்மை அறிவு,உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையவர்களாய்,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொதுநெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும் சுகத்தையும் பெரும் களிப்பையும் அடைந்து வாழ்வாங்கு வாழ்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு