வெள்ளி, 6 மே, 2022

பசி என்பதும் ஓர் உபகாரக் கருவி !

 *பசி என்பதும் ஓர் உபகாரக் கருவி!*


*பசி வேதனை !*


*வேதனைகளில் முக்கியமான வேதனை மூன்று அவை யாதெனில்*?


 *நரக வேதனை சனனவேதனை (பிரசவ வேதனை ) மரணவேதனை* என்பதாகும் .


*மேலே கண்ட மூன்று வேதனைகளும் சேர்ந்ததே பசி வேதனையாகும்*


*பசி வேதனைப்பற்றி முற்றும் அறிந்தவர் வள்ளல்பெருமான் ஒருவரே !*


*பசி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்பதாகும்*


*பசியினால் உடம்பில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனித்து படியுங்கள் உங்களுக்கே பசியைப்போக்கும் எண்ணம் தானாக வந்துவிடும்*


*சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் !*


1.சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. 


2.அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது.


3.அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது.


4.அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது.


5.அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. 


6.மனம் தடுமாறிச் சிதறுகின்றது.


7.புத்தி கெடுகின்றது.


8.சித்தம் கலங்குகின்றது.


9.அகங்காரம் அழிகின்றது.


1.பிராணன் சுழல்கின்றது.


11.பூதங்களெல்லாம் புழுங்குகின்றன.


12.வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன.


13.கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது.


14.காது கும்மென்று செவிடுபடுகின்றது.


15.நா உலர்ந்து வறளுகின்றது.


16.நாசி குழைந்து அழல்கின்றது.


17.தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது.


18.கை கால் சோர்ந்து துவளுகின்றன.


19.வாக்குத் தொனிமாறிக் 

குளறுகின்றது.


20.பற்கள் தளருகின்றன.


21.மலசலவழி வெதும்புகின்றது. 


22.மேனி கருகுகின்றது.


23.ரோமம் வெறிக்கின்றது.


24.நரம்புகள் குழைந்து நைகின்றன.


25.நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன.


26. எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன.


27.இருதயம் வேகின்றது.


28.மூளை சுருங்குகின்றது.


29.சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது.


30.ஈரல் கரைகின்றது.


31.இரத்தமும் சலமும் சுவறுகின்றன.


32.மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது.


33.வயிறு பகீரென்றெரிகின்றது.


33.தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.


34.உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. 


பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.


*இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன.* *அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது.*


 *இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்?* *இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்?*


*எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.* 


*இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும்* 


*அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.*


*பசியில்லாவிடில் சீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரையொருவர் எதிர்பார்க்க மாட்டார்கள்; எதிர்பாராத பக்ஷத்தில் உபகாரச் செய்கை தோன்றாது. அது தோன்றாதபோது சீவகாருணியம் விளங்காது; அது விளங்காதபோது கடவுளருள் கிடைக்க மாட்டாது.*


 *ஆதலால், பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.*

*அருள் பொருள் !*


*ஆன்மாவின் மகிழ்ச்சிக்கு பொருள் உணவு ஒன்று. அருள் உணவு ஒன்று இவ்விரண்டும் உணவும் இல்லை என்றால் ஆன்மாவின் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.*


*எனவேதான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றார்கள்* 


*இங்கே பொருள் என்பது உணவை குறிப்பதாகும்* 


*பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும்.பொருளே இல்லாதவர்களாக இருந்தாலும்.அவர்கள் வாயின்வழியாக உடம்பிற்குள்  செலுத்துவது உணவு மட்டுமே*


உணவு உண்பவர்கள் யாராக இருந்தாலும் மரணம் என்பது நிச்சயம்.


*மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் உணவைப் பெற வேண்டும்.அருள் உணவைப் பெற்றால் மட்டுமே தேகம் மாற்றம் உண்டாகும்* 


*ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட உபகாரக் கருவியாகிய பசியை உழைத்து சம்பாதித்த ஆகாமிய ( சாத்வீக உணவு) உணவைக் கொண்டு அகற்ற வேண்டும்.* 


*இறைவனால் படைத்த  ஜீவர்களின் பசியைப் போக்குகின்ற போது இறைவன் நம் பசியைப் போக்கி அருள் உணவு வழங்குவார் என்பதுதான் சத்திய உண்மையாகும்*


*வேறு தவறான சாதி சமயம் மதம் சார்ந்த வழிமுறைகளால் அருளைப் பெறவே வாய்ப்பே இல்லை.*


*இந்த உண்மையைக் கண்டுபிடித்து உலகிற்கு வழிகாட்டியவர் தான் நமது அருள் தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*அதனால்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்* *ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடும் என்றும் மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு போதித்துள்ளார்*


*இந்த உண்மை அறியாமல் மக்கள் காலத்தையும் நேரத்தையும் பொருளையும் வீண்விரயம் செய்து அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.*


*வள்ளலார் பாடல்!*


*கலையுரைத்த கற்பனையே* *நிலைஎனக் கொண்டாடும்*

*கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக*


மலைவறு சன் மார்க்கம் ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே


உலைவறும் இப் பொழுதே நல் தருணம் என நீயே

உணர்த்தினை வந் தணைந்து அருள்வாய் உண்மை உரைத் தவனே


சிலைநிகர் வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்த சிகாமணியே என் திரு நடநாயகனே.! 


என்ற பாடல் மூலம் அறிய வேண்டும்.


அன்புடன் ஆன்மநேயன் சன்மார்க்க முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு