செவ்வாய், 29 மார்ச், 2022

இயற்கை உண்மை என்பது எது ?

 *இயற்கை உண்மை என்பது எது ?*


*இயற்கை என்பது ! பஞ்ச பூதங்கள் அற்ற மாபெரும் அருள் நிறைந்த பெருவெளியாகும். அதற்கு அருள் நிறைந்த ஆகாயம் என்று பெயர். அந்த ஆகாயத்தின்  தலத்தின்மேல் பீடத்தில் அருட்பெரு வடிவில்.அருட்பெருந் திருவிலே அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இயற்கை உண்மை கடவுளாகும்.* 


*அவரே அருட்பெரும் பதியாகவும் அருட்பெரும் நிதியாகவும் அருட்பெரும் சித்தியாகவும் அருட்பெரும் களிப்பாகவும்.அருட்பெரும் சுகமாகவும். எல்லை அற்ற பெருவெளியில் ஓங்கி உயர்ந்து அமர்ந்து அருள்ஆட்சி செய்யும் மாபெரும் தனித்தலைமை  பெரும்பதியே அருட்பெருஞ்ஜோதியாகும். அதன் சமூகத்தில் உள்ள ஆன்ம ஆகாயமும் அங்கு நீக்கமற நிறைந்து இருக்கும் ஆன்மாக்களும். ஜீவன்களும் மட்டுமே இயற்கை உண்மையாகும்.*


*இவற்றைத்தான் இயற்கை உண்மை என்றும்.இயற்கை விளக்கம் என்றும்.இயற்கை இன்பம் என்றும் வள்ளலார் தெளிவுபட உரைநடைப் பகுதி வாயிலாகவும்.  ஆறாம் திருமுறை திருஅருட்பாவில் பாடல் வாயிலாகவும் எழுதி பதிவு செய்து வைத்துள்ளார்.*


*இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் மனிதன் வாழ்ந்து வருகிறான்.*

*எக்காலத்தும் அழிவில்லாமல் நிலையானதும் தோற்றம் மாற்றம் இல்லாததும் எதுவோ அதுவே இயற்கையாகும்.* *இயற்கை உண்மையாகும்.*

*இயற்கை உண்மைக்குள் நிறைந்து விளங்குவது இயற்கை விளக்கமான திருஅருளாகும்.*

*அத் திருஅருளை பெற்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வதே இயற்கை இன்பமாகும்*


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதே ஆன்மாக்களின் இயற்கை நியதியாகும்* 


*அவற்றைவிட்டு செயற்கை கடவுள்களான தத்துவ உருவங்களை வணங்குவதாலோ வழிபாடு செய்வதாலோ ஆன்மாக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை ஒவ்வொரு மனிதேகம் எடுத்துள்ள ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


*இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார்* குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


*செயற்கை இல்லார்* *பிறப்பில்லார் இறப்பில்லார்* *யாதும்*

*திரிபில்லார்*  *களங்கம் இல்லார்*

*தீமைஒன்றும் இல்லார்*


வியப்புறவேண் டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்

*மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கி இன்ப மயமாய்*


உயத்தரும் ஓர் *சுத்தசிவா னந்தசபை தனிலே*

*ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*


*இயற்கை என்பது அருட் பெருவெளி என்பதாகும். பலகோடி அண்டங்களையும் உலகங்களையும் அதில் நிறைந்த பொருள்களையும் படைத்து தன் கட்டுபாட்டில் இயக்கிக் கொண்டு உள்ள இடமே அருட்பெருவெளி என்பதாகும்.அதாவது  (அருள் நிறைந்த ஆகாயம் ) அதன் உள்ளே கடவுள். அருள்.  ஆன்மா. ஆணவம். ஜீவன்  என்னும் உயிர்கள் மட்டுமே இயற்கையானது* மற்றவை யாவும் செயற்கையாகும்.


*நாம் இயற்கை என்று நினைத்துக் கொண்டு இருப்பதும் பேசிக்கொண்டு இருப்பதும் எழுதிக் கொண்டு இருப்பதும் இயற்கை அல்ல எல்லாம் செயற்கையே !* எல்லாம் தோற்றம் மாற்றம் உள்ளவைகளேயாகும்.


*நாம் வாழும் இவ்வுலகம் மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் மற்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் போன்ற கிரகங்கள். மேலும் மலைகள் நதிகள் ஆறுகள் நீர் ஓடைகள் கற்கள் வனங்கள் காடுகள் குகைகள். மரம் செடி கொடிகள் காய் கனிகள் போன்ற அனைத்தும் செயற்கையாகும்*

*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகளான ஆன்மாக்கள் சுதந்தரமாக வாழ்வதற்காகவும் அருளைப் பெறுவதற்காகவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால். படைக்கப்பட்டது யாவும் செயற்கையாகும்.*

*அருள் என்பது இயற்கை. பொருள் என்பது செயற்கை.*

*செயற்கையான பொருள் உடம்பில் வாழும் ஆன்மாக்கள் இயற்கையான அருள் உடம்பு பெற்றால் மட்டுமே இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலக்க முடியும்.*


*நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பங்கள் யாவும் ஆன்மாவையே சார்ந்ததாகும்* 


அதே நேரத்தில் ஆன்மா வாழும் பூத உடம்பை அருள் உடம்பாக மாற்றும் புதிய கல்வி கொள்கையை (சாகாக்கல்வி) உலகிறகு கொண்டு வந்தவர் வள்ளலார். 


செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்றும் ரகசியத்தை கற்றுக் கொடுப்பதே வள்ளலார் தோற்றுவித்த *சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும்


வள்ளலார் பாடல்! 


நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்


வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்


*ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்*


கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.!


மேலும்...


*ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க*

*ஞான அமுதெனக்கு நல்கியதே -*


வானப்

பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்

அருட்பெருஞ் சோதி அது.!


மேலும்...


*சுத்த வடிவும் சுகவடிவாம்* *ஓங்கார*

*நித்த வடிவும்* நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்*


*ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன்* எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.!


இவ்வாறு பல பாடல்களில் தன் சாகாக்கல்வி அனுபவத்தை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.


*மனிதனுக்கு உயர்ந்த அறிவு கொடுத்திருந்தும் அறிவு விளக்கம் இல்லாமல் அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும்  இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல். செயற்கையை இயற்கை என்றும்.. இயற்கையை செயற்கை என்றும் தெரியாமல் பாவிப்பதால். இயற்கையானது எதுவென்று தெரியாமலும்.அதன் ரகசியம் என்னவென்று புரியாமலும். இயற்கையுடன் தொடர்பு கொள்ள முடியாமலும். நெருங்க முடியாமலும்.மாயா திரைகளால் ஆன்மா மறைக்கப்பட்டு அருள் பெறமுடியாமல்  நரை திரை பிணி மூப்பு பயம் மரணம் வந்து அழிந்து கொண்டே உள்ளான் மனிதன்.*


*பெரியவர்கள்!*


*இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் நமக்கு வழிகாட்டிய முன்னோர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களிடம்.*

*தெய்வத்துக்குக் கை.கால்.முதலியன இருக்குமா ?* *என்று கேள்வி  கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.* *இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று  பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும்.*

*உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு* *(குருடனைப்போல்)

*உளறிக் கொண்டு இருக்கிறார்கள்.*


*ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவன் பூட்டிய அந்தப் பூட்டை (மறைத்ததை) ஒருவரும் திறக்கவரவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்.அதன் உண்மை என்னவென்றால்  அவர்கள்  மறைத்து வைத்து இருந்த பொய்யான பூட்டை நான் உடைத்துவிட்டேன் என்பது பொருளாகும்*

*இனிமேல் இயற்கையான மெய்ப்பொருளை மக்கள் தெரிந்து கொள்வார்கள்*


வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும் !


உயிர்க் கொலையும் புலை புசிப்பும் ஏன் செய்யக்கூடாது ?


*ஜீவகாருண்யத்திற்கு நேர் விரோதம்!*


*எல்லா ஜீவர்களும் அதாவது உயிர்களும் இயற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்ற படியாலும்.கடவுள் இயற்கை விளக்கம் மறைபடும்போது ஜீவத்தன்மை இல்லாதபடியாலும்.கடவுளின் இயற்கை விளக்கமும்.ஜீவன் இயற்கை விளக்கமும்  ஒன்றோடு ஒன்று மாறுபாடு இல்லாததாலும்.கடவுள் இயற்கை விளக்கமும் ஜீவன் இயற்கை விளக்கமும் அந்தந்தத் தேகங்களிலும் விளங்குகின்ற படியாலும்.*


*ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல்  ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்று அறிய வேண்டும்* 


*உயிர்க்கொலை செய்யக்கூடாது புலால் உண்ணக்கூடாது என்பதற்கு இதைவிட அறிவியல் சார்ந்த உயர்ந்த விளக்கம் உலகில் எவராலும் சொல்ல முடியாது* 


எனவே இயற்கை உண்மையான அழிவில்லாத ஆன்மாக்கள் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு இயற்கை விளக்கமான அருளைப்பெற்று.இயற்கை இன்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு