புதன், 20 ஏப்ரல், 2022

மனித பிறப்பு !

 *மனித பிறப்பு !*


*மனிதபிறப்பு என்பது முதல்பிறப்பா? கடைசிபிறப்பா? என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக சரியான விடைதெரியாத புதிராகவே இருக்கிறது.*


*பல ஆன்மீக அருளாளர்கள் தாவரம்தான் முதல் பிறப்பு அதற்கு அடுத்து ஊர்வன பறப்பன நடப்பன தேவர் அசுரர் இறுதியாக மனிதர் என சொல்லி உள்ளார்கள் மனிதபிற்ப்பு என்பது  உயர்ந்த ஆறு அறிவுள்ள பிறப்பு என்றும் சொல்லி உள்ளார்கள்.*


சிவபுராணம் பாடல்!


புல்லாகிப் பூடலாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்


கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுராகி முனிவராய்த் தேவராய்ச் 


செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்


*என்னும் திருவாசகப்பகுதியில் சொல்லப்படுகிறது.ஆனாலும் பிறப்பைப்பற்றி கோர்வையாக விளக்கவில்லை*


*ஒருசில மதவாதிகள் குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சொல்லி உள்ளார்கள்*


*அதேபோல் பலபேர் பலவிதமான கருத்துக்களை அவரவர் புத்திக்கு தகுந்தவாறு நம்பமுடியாத ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை உண்மைக்கு புறம்பாக சொல்லி உள்ளார்கள்*


*வள்ளல்பெருமான் சொல்லுவதை பார்ப்போம்!*


வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில் கீழ்கண்டவாறு  சொல்லுகின்றார்.!


*ஆன்மாக்கள்!*


(ஆன்மாக்களின் தகுதிகளைப்பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்)


*அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியாது உணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,*


*தாவரயோனி வர்க்கம்:*


இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து *அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,*


*ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:*


பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து *அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,*


*பறவையோனி வர்க்கம்:*


பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து *அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;*


*விலங்குயோனி வர்க்கம்:*


பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து *அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;*


*தேவயோனி வர்க்கம்:*


பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் *இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்*;


*நரகயோனி வர்க்கம்:*


பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து *அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.*


*கைமாறு:*


*அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி *அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை* 


*தாவரம்.ஊர்வன.

பறவை.விலங்கு.தேவர்.நரகர்.

இறுதியாக மனிதபிறப்பு என ஏழாவது பிறப்பே மனித பிறப்பு  கிடைத்துள்ளது என்பதை மிகவும் அழகாக கோர்வையாக தெளிவாக சொல்லி உள்ளார்.* 


*மேலும் ஒவ்வொரு உருவத்திற்கும் ஏழு பிறப்பு உண்டு என்கிறார்*


*மேலும் ஆன்மாக்கள் 84100000 எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களில் சென்று இறுதியாக மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது*

*என்கிறார்* *அதாவது சுமார்  84 லட்சம் யோனிபேதங்கள் ஆன்மா சென்று இறுதியாக மனித பிறப்பு எடுத்துள்ளது.*


*இந்த மனிதப் பிறப்பு போனால் மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது நிச்சயம் அல்ல.உறுதி அல்ல என்கிறார் வள்ளல்பெருமான்.எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து இம் மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது என்பதை அறிவு பூர்வமாக சிந்தித்தால் மயக்கமும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தோன்றும். அவ்வாறு கிடைத்த இந்த மனித தேகத்தை தவறான வழியில் சென்று அழிக்க மனம் வருமா என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்.* 


*உலகியல் உள்ள பகுத்தறிவு வாதிகள் விஞ்ஞானிகள் அறிவியல் சார்ந்த அறிவாளிகள்  பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்கிறார்கள்* 


*ஆன்மாக்கள் பலலட்சம் பிறப்புகள் எடுத்து இறுதியாக மனிதபிறப்பு எடுத்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்திப்பெற்று  மரணத்தை வென்று கடவுள் நிலைஅறிந்து அம்மயமாக மாற வேண்டும் என்பதே மனித பிறப்பின் லட்சியமாகும்.* 


*மனித தேகத்தின் அருமையும் பெருமையும் மதிப்பையும் மரியாதையும் வள்ளல்பெருமான் போல் உலகில் ஒருவரும் தெளிவாக எடுத்து சொல்லவில்லை.* *எனவேதான் இந்த உயர்ந்த அறிவுடைய மனித தேகத்திற்கு மரணம் வந்துவிடக்கூடாது என்கிறார்.இத்தேகத்தையே சித்திய தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்*


*அதற்குப்பெயர் தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.* *மரணத்தை வெல்லும் அக் கல்வியைக்*

*கற்றுக் கொள்வதே* *சாகாக்கல்வி சாகாக்கலை என்பதாகும்.*


*சுருக்கமாக சொல்லுகிறேன்!*


*இனிமேலும் மனித ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும்*


*சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,*


 *"இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம்,*

 *உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் -*


* அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, *சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்*


,*கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது* அவசியமாகும்.


*சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.*


இந்நான்கு ஒழுக்கங்களை முழுமையாக பின்பற்றி கடைபிடிப்பவர்கள் எவரோ அவரே மனித்தேகத்தின் அருமையை அறிந்து மரணத்தை வெல்லும் தகுகி பெற்றவராகும்.


வள்ளலார்பாடல் !


சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம் தன்னை எண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி


ஈவது மன் றிடைநடிப்போய் *நின்னாலே ஆகும் மற்றை இறைவ ராலே*


*ஆவதொன்றும் இல்லை* என்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு எந்த கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு