ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

முத்தேக சித்தி !

 *முத்தேக சித்தி !* 


*உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் இறைவனால் கொடுக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷமாகும்.   மனிதன் உலக வாழ்க்கையில் ஈடுபாடுகொண்டு உண்மை. நேர்மை.சத்தியம் ஒழுக்கத்தை கடைபிடித்து அறம் .பொருள். இன்பம். வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில் முழுமையாக பெற்று அனுபவித்து பின்பு பற்று அற விட்டு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டுவதே மனித இயல்பாகும்.*


*இறைவனிடம் சரணாகதி அடைந்த மனிதனுக்கு இறைவனுடைய அருள் தகுதிக்குத் தகுந்தவாறு தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது சத்தியம்* 


*அருள் பெறும் மனிதர்களுக்கு அருள் சக்தியின் தன்மைக்குத் தகுந்தவாறு  மனித தேகத்திற்கு மூன்று வகையான சத்தியும் சித்தியும் ஆனந்தமும் கிடைக்கும்.மேலும் அவற்றிற்கு உண்டான மாற்றங்கள் ஒவ்வொரு உடம்பின் அணுக்களுக்கும்  உள் ஒளியுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் ஆற்றல் வழங்கப்படுகிறது*


*அதாவது அவ்வாறு அருள் வழங்குவதால் மாற்றம் அடைந்த தேகத்திற்கு ஏக தேசமான சுத்ததேகம் பிரணவதேகமும்.அருள் பூரணத்தால் ஞானதேகமும் என மூன்று வகையான தேகம் கிடைப்பதாக வள்ளல்பெருமானால் சொல்லப்படுகிறது*


*வள்ளலார் பாடல்!!!*

*(அகவல்)*


கருமசித் திகளின் *கலைபல கோடியும்*

அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி! 

122. யோகசித் திகள்வகை *யுறுபல கோடியும்*

ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி!

123. ஞானசித் தியின்வகை *நல்விரி வனைத்தும்*

ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி!*

124. புடையுறு சித்தியின் பொருட்டே *முத்தியை*

அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி!

125. முத்தியென் பதுநிலை *முன்னுறு சாதனம்*

அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி!

126. சித்தியென் பது *நிலை சேர்ந்த*

*வநுபவம்*

அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி! 


*சுத்த தேகத்திற்கு கர்மசித்தி என்றும்.பிரணவ தேகத்திற்கு யோகசித்தி என்றும்.ஞான தேகத்திற்கு ஞானசித்தி என்றும் சொல்லப்படுகிறது*


*கர்மசித்தி யோகசித்தி ஞானசித்தி என்னும் மூன்று சித்தியும் சேர்ந்து பெற்றால்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்பசித்திப் பெருவாழ்வு பெறமுடியும்.*

*அதற்கு பெயர் முத்தேக சித்தி என்று சொல்லப்படுகிறது*


*மூன்று வகையான சித்திகளையும்  பெற்றவர்களுக்கும் மூன்று வகையான பூரண லாபமும் மூன்று வகையான பூரண வாழ்க்கையும் கிடைக்கிறது.*


*அதாவது சுத்ததேகம் பெற்றவர்களுக்கு இம்மை இன்ப லாபமும்.இம்மை இன்ப வாழ்க்கையும் கிடைக்கும்.*


*பிரணவதேகம் பெற்றவர்களுக்கு மறுமை இன்ப லாபமும்.மறுமை இன்ப வாழ்க்கையும் கிடைக்கும்*


*ஞானதேகம் பெற்றவர்களுக்கு பூரணமான பேரின்ப லாபமும் பேரின்ப வாழ்க்கையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்*


*இவைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளின் பூரணத்தால்  கிடைக்கும் பேரின்ப வாழ்க்கை முறையாகும்.*


*முத்தேக சித்திபெற்று மரணத்தை வென்று கடவுள் நிலைஅறிந்து அம்மயமானவர் வள்ளலார் ஒருவரே!* *வள்ளலாரைப் போல் வாழ்ந்து நாமும் மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் என்பதே வள்ளலாரின் சத்திய வாக்காகும்*


*அருள் பெறும் வாய்ப்பு எவ்வாறு கிடைக்கும்.?* 


*நினைப்பு மறைப்பு.விருப்பு வெறுப்பு. மற்றும் பற்று அற்று இயற்கை உண்மை மெய் பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டு வாழ்ந்தால் மட்டுமே அருள் ஏகதேசமும்.அருள் பூரணமும் பெற முடியும்.*


*நினைப்பு மறைப்பு.விருப்பு வெறுப்பு. பற்று எதனால் உண்டாகிறது?* 


*விருப்பம் என்பது உலக வாழ்க்கையில் மனம் விருப்பம் கொண்டு. ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு. பூரண அருள் லட்சியத்தை விட்டு அதிசயமாக பார்த்து நிற்றல்.இந்த விருப்பத்தால் தானுங்கெட்டு இதர வஸ்துவையும்  கெடுத்து. சாதனமும் தடைப்பட்டுவிடும்.ஆதலால் எவ்வகையிலும் விருப்பம் என்பது கூடாது.*


*வெறுப்பு என்பது யாதெனில்? வேண்டுதல். வேண்டாமை.துவேஷம்.முதலிய இதர வஸ்துவை மனம் பற்றாதிருத்தல்.*

*இந்த வெறுப்பால் இதர வஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவ உபகாரத்தைத் தடை செய்யும்* . *ஆகையால் வெறுப்பு கூடாது*


*அதேபோல் மனம் ஒன்றின்மேல் பற்று வைத்தால் ஆண்டவரிடம் பற்று செல்லாது*

*ஆகையால் மேற்குறித்த  விருப்பு வெறுப்பு பற்று மூன்றும் கூடாது* 


*விருப்பு வெறுப்பு பற்று இருக்கின்ற வரையில் தத்துவங்களை கடக்க முடியாமல் தத்துவங்களின் ஆதிக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அருளைப்பெற முடியாமலும் மரணம் வந்துவிடும்.*


*வள்ளலார் பாடல்!*


தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீத மேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்த அந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று


அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெரியப் படுத்துகின்றார்.


*ஆதலால் மனித தேகமானது சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் எனும் மூன்றுவிதமான தேகமாற்றம் உண்டாகி முத்தேக சித்தி பெறுவதே மனித தேகத்தின் முடிந்த முடிவாகும்.* 


*வள்ளலார் பாடல்!*


*சுத்த வடிவும்* சுகவடிவாம் *ஓங்கார*

*நித்த வடிவும்* நிறைந்தோங்கும் - 

சித்தெனும் ஓர்

*ஞான வடிவும்* இங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.! 


மேலும் பதிவு செய்கிறார்.


நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்

*நானே அருட்சித்தி நாடடைந்தேன்* - நானே

*அழியா வடிவம் அவைமூன்றும்* பெற்றேன்

இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.!


*மேலே கண்ட பாடல்களில் வள்ளலார் தான் பெற்ற உடம்பின் மூன்று மாற்றத்தின் அனுபவத்தை தெளிவாக தெரியப் படுத்துகின்றார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு