வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

உயர்ந்த குலம்! தாழ்ந்த குலம்!

 *உயர்ந்த குலம்! தாழ்ந்த குலம்!*


*வள்ளலார் பாடல் !*


நரை மரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்


வரையில் *உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்**

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்


புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம் என் றறிந்தே

புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே


உரைபெறும் என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.! 


மேலே கண்ட பாடலில் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறார்.


*இவ்வுலகில் சாதி சமயம் மதம் என்னும் தோற்றத்தில் பல பொய்யான கொள்கைகளை வகுத்து மனித குலத்தின் வாழ்க்கை முறைக்காக பல ஆன்மீக மதவாதிகள் சமயவாதிகள் மற்றும் அரைகுறை அருளாளர்கள் போதகரகள் கடவுளின் சிந்தனையாளர்கள் பல வகையான ஆச்சார சங்கற்ப விகற்பங்களான வேற்றுமையை உருவாக்கி மக்களுக்கு வழிகாட்டி உள்ளார்கள்.*


*அதிலே முக்கியமானது உயர்ந்தகுலம் தாழ்ந்தகுலம் என்பதாகும்.அதாவது உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி என்பதாகும்*


*இறைவனால் படைத்த உயர்ந்த அறிவு கொண்ட மனிதப் பிறப்பாகிய உயிர்குலத்தில் உயர்ந்த சாதி. தாழ்ந்த சாதி என்பது மிகவும் அருவறுக்கத்தக்க மிகவும் கொடுமையான பிரிவினையாகும்.* 


*இதுவே மனிதகுலத்தின் பொருளாதார ஏற்ற தாழ்விற்கும்*.

*பஞ்சம் பட்டினி வறுமை ஏழ்மைக்கும் காரண காரியமாக அமைந்துள்ளது.*

*பணம் வசதி உள்ளவர்களை உயர்ந்த சாதி எனவும்.*

*உழைக்கும் வர்க்கத்தையும் பணம் வசதி இல்லாதவர்களை தாழ்ந்தசாதி எனவும் பிரித்து வைத்துவிட்டார்கள்* *மற்றும் தொழில் வாயிலாகவும் சாதியை பிரித்து வைத்து விட்டார்கள்*


*அதேபோல்  சைவ உணவை (தாவர உணவு) வைத்து வழிபாடு செய்யும்  தெய்வங்களை பெரிய தெய்வம் என்றும் அவற்றை வழிபாடு செய்பவர்களை உயர்ந்தசாதி எனவும். உயிர்க்கொலை வாங்கும் சிறிய தெய்வங்களை வணங்குபவர்களை தாழ்ந்த சாதி எனவும் பிரித்து வைத்துவிட்டார்கள்* 


*இதனால் பல முற்போக்கு சிந்தனை வாதிகளின் தெளிவால் சாதிச்சண்டை சமயச்சண்டை மதச்சண்டைகள் இதுவரையில் உலகம் முழுவதும் நடந்து கொண்டே உள்ளன* 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

*பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்*

*பிள்ளைவிளை யாட்டென* உணர்ந்திடாது உயிர்கள் பல*


பேதமுற்று  *அங்கும்இங்கும்*

*போருற்று இறந்து* *வீண் போயினார்* இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

*புனிதமுறு* *சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*

*பொருளினை* உணர்த்திஎல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை* ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் 

அகற்றும்ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!


*மேலே கண்ட பாடலில் சாதியாலும் சமயத்தாலும் மதத்தாலும் மனித குலத்தை பிரித்து வைத்ததால் மக்கள் இன்றுவரை போரிட்டு அழிந்து கொண்டே உள்ளார்கள்*


*இயற்கை மரணத்தைவிட சாதி சமய மதச்சண்டைகளால் அடைந்த செயற்கை மரணம் அதிகம் என வரலாறு சொல்கிறது*


*உயர்ந்த அறிவுகொண்ட மனிதகுலம் இனிமேலும் வீண்போகாமல் காப்பாற்றவே புனிதமான சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்துள்ளார் வள்ளலார்.*


 *பேய்பிடித்த பைத்தியக்காரத்தனமான  சாதி சமயம் மதத்தை அழித்து சம்ப்படுத்த வேண்டும். உலகில் உள்ள  எல்லா உயிர்களுக்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். எல்லோரும் அக் கடவுளின் குழந்தைகளே என்ற உண்மையை மக்களுக்கு போதித்து சாதி சமய மதம் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் என்பதே வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*


*புழுக்குலம்!*


*மனித குலத்தின் உண்மைத் தெரியாமல் உயர்ந்த குலம் தாழ்ந்தகுலம் என்று வகுத்து வாழ்கின்றீர்கள்*.

*இறுதியில் இரு குலத்திற்கும் மரணம் வந்துவிடுகிறது.*

*பூமியில் புதைக்கின்றீர்கள் ஒரு மூன்று மாதம் கழித்து பிணம் புதைத்த இடத்தில் தோண்டி பார்க்கின்றீர் இருகுலமும் புழுக்கள் நிறைந்த குலமாக இருக்கின்றது*


*நீங்கள் வகுத்து வாழ்ந்த உயர்ந்த குலமும் தாழ்ந்த குலமும் எங்கே போனது ? இரண்டு குலமும் புழுக்குலம் என்பதை உணர்ந்து பேதம் இல்லாமல் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழுங்கள் அதுவே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விருப்பமாகும் என்கிறார் வள்ளலார்*


*நரை மரணம் மூப்பு  அறியார்!*


*நரை திரை பிணி மூப்பு மரணம் அறியாத நல்ல உடம்பினரே நற் குலத்தார் எனபதை உணர்ந்து அறிந்து தெரிந்து வாழ்பவரே உயர்ந்த குலத்தார் என்பவர்களாகும்.*


எங்குலம் எம்இனம் மென்பது தொண் ணூற்றா

றங்குலம் என்றரு ளருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


எம்மதம் மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்

அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி! (அகவல்)


சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!(அகவல்)


சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!(அகவல்)


*மேலே கண்ட அகவலில் எல்லாம் பொய் என்பதை தெளிவாக அழுத்தமாக சொல்லுகிறார்.*


*அதாவது இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக  மாற்றிக்கொண்டு மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறுபவர் எவரோ  அவரே உயர்ந்த குலத்தை சார்ந்தவராகும் என்ற உண்மையை மக்களுக்கு தெளிவாக போதிக்கிறார் வள்ளலார்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு