வியாழன், 29 ஏப்ரல், 2021

அக இனத்தார் ! புற இனத்தார் !

 *அக இனத்தார் !  புற இனத்தார்* !  


*அக இனம்.புற இனம் என்னும் உண்மையை முற்றும் தெரிந்த அருளாளர் மரணத்தை வென்ற மகான் திருஅருட்பிரகாச வள்ளலார் சொல்வதை அறிவுக்கண் கொண்டு சிந்தித்து செவிசாய்க்க வேண்டும்*.


*வள்ளலார் பாடல்!*


 *உயிர்க் கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்*

*உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார்* அவர்க்குப்


பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே


நயப்புறு *சன் மார்க்கம்அவர் அடையளவும்* இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே


மயர்ப்பறு மெய்த் தவர்போற்றப் பொதுவில் நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.! 


*அக இனத்தார் என்பது ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தகுதி பெற்றவர்கள்* என்பதாகும்  


*புற இனத்தார் என்பது ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தகுதி அற்றவர்கள்* என்பதாகும். 


உயிர்க் கொலை செய்பவர்களும் அதன் புலாலை உண்பவர்களும். இறைவனை எவ்வளவு காலம் தொழுதாலும் பிரார்த்தனை செய்தாலும்.அன்னதானம் செய்தாலும் மற்றும் தவம்.தியானம் யோகம் பிரார்த்தனைகள் இடைவிடாது செய்தாலும் ஆண்டவர் ஏற்றுக் கொள்வதில்லை.


இறைவன் ஏற்றுக் கொள்ளாததால் அவர்களை புற இனத்தார் என்று வெளிப்படையாக வள்ளலார் சொல்லுகிறார்.


உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலால் உண்ணாமலும் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் உடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தகுதியும் அனுமதியும் பெற்றவர்கள் என்பதால் அவர்களை அக இனத்தார் என்று வெளிப்படையாக சொல்லுகிறார்.


உயிர்க்கொலை செய்பவர்கள் புலால் உண்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் பசியை மட்டும் போக்குங்கள்.

மற்றபடி அவர்கள் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து அக இனத்தாராக மாறுகின்ற வரை அவர்களுக்கு பண்பை பற்றியும் அன்பை பற்றியும்.

அறிவைப்பற்றியும்.அருளைப்பற்றியும் மற்றும்  

நன்நெறிகளைப் பற்றியும் போதிக்காதீர்கள்.சொல்லாதீர்கள்

இது என் ஆணை என்று கட்டளை இடுகிறார் வள்ளலார்.


*ஏன் என்றால்?*  


*உயிர்க்கொலை செய்பவர்கள் அதன் புலால் உண்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த சாதி சமயம் மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஆன்ம விளக்கமும். அறிவு விளக்கமும். அருள் விளக்கமும் தோன்றாது என்பது வெளிப்படையான உண்மையாகும்.*  


*ஜீவகாருண்ய ஒழுக்கம்*! 


வள்ளலார் கொள்கையிலே மிகவும் முக்கியமானது *ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்*.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளலார்*


ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றாலே எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும். 


*வள்ளலார் பாடல்* !  


*எத்துணையும் பேத முறா தெவ்வுயிரும்*

*தம்உயிர்போல்* எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


*சித்துருவாய் எம்பெருமான்* *நடம்புரியும்*

*இடம்எனநான்* *தெரிந்தேன்* அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


மேலே கண்ட பாடலில்.யார் ஒருவர் ? எல்லா உயிர்களையும்  தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒருமையுடன் நினைந்து பாவித்து எந்த உயிர்களுக்கும்  தீங்கு செய்யாமல் வாழ்கின்றார்களோ அவர்கள் உள்ளத்தில் .

அவர்கள் ஆன்மாவில்  இறைவன் நடம் புரிகின்றார் என்பதை அறிவாலே அருளாலே அறிந்தேன் என்கிறார் வள்ளலார்.


எனவே அவர்கள் ஆன்மாவில் உள்ளத்தில் இறைவன் நடம் புரியும் இடம் என தெரிந்நதால் அவர்களை எல்லாம் தெரிந்த வித்தகர் என்றும்.உளவு தெரிந்த உத்தமர்  என்றும் அறிந்ததால் அவர்கள் இட்ட கட்டளையை சிரமேற் ஏற்றுக்கொண்டு அன்பு பணிசெய்ய காத்திருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.....  அருளாளர்கள் மூலமாக அருளை வழங்கி தாம் படைத்த உயிர்களை காப்பாற்ற வெளிப்படையான உண்மைகளை வெளிப்படுத்துவார். 


*அவற்றை ஏற்றுக்கொண்டு மக்கள் பின்பற்றினால்* *துன்பம்.துயரம்.

அச்சம்.பயம்.மரணம் இல்லாமல்* *வாழ்வதற்கு வழிகிடைக்கும்*


உண்மை சொல்ல வந்த அருளாளர்கள் இரண்டு பேர்.!


*ஒருவர் திருவள்ளுவர். ஒருவர் வள்ளலார்*


திருவள்ளுவர் கொல்லாமை புலால் மறுத்தல் என இரண்டு அதிகாரங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.


*கொல்லாமை பற்றிய  முக்கியமான மூன்று குறள் !*


1.அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும் ! 


2.நல்லா றெனப்படுவதி யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி ! 


3.கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணும் கூற்று ! 


*புலால் உண்ணாமை பற்றிய முக்கியமான மூன்று குறள் !*


1.உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு.


2.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி  தூனுண்பான் எங்கனும் ஆளும் அருள் ! 


3.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் ! 


*என கொல்லாமை பற்றியும் புலால் உண்ணாமை பற்றியும் அதனால் உண்டாகும் தீமைகள் பற்றியும் திருவள்ளுவரும். திருவருட்பிரகாச வள்ளலாரும் தெளிவாக வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்கள்*


மேலும் வன்புலால் உண்ணும் மனிதரைக்கண்டு என்பெலாம் கருக இளைத்தன்ன் என்று வள்ளலார் சொல்லுகிறார். மேலும்..


*கொலைபுரிவார் தவிரமற்றை* *எல்லாரும் நினது*

*குலத்தாரே* *நீ எனது குலத்துமுதல் மகனே*


மலைவறவே சுத்தசிவ சமரச சன் மார்க்கம்

வளர வளர்ந்திருக்க என வாழ்த்தியஎன் குருவே


நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா

நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற் குணனே


புலை யறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.! 


இதுபோல் நூற்றுக்கணக்கான பாடல்களில் கொலைசெய்வோர் பற்றியும் அதன் புலால் உண்போர் பற்றியும்.அவர்கள்  யாவரும் இறைவன் முன் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என கடுமையாக சாடியுள்ளார். 


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையின் வெளிபுறத்தில் *புலால் மறுத்தவர்கள் மட்டும் உள்ள பிரவேசிக்க வேண்டும்* என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.


அதன் உண்மை என்னவென்றால் புலால் உண்பவர்கள் இறைவனை வணங்கும் வழிபடும் அருள்பெரும் தகுதி அற்றவர்கள்.மேலும்

இறைவன் ஆசீர்வாதமோ அருளோ அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது அதன் உண்மை பொருளாகும். 


*ஏன் இவ்வளவு கடுமையான கட்டளை பிறப்பிக்கிறார்* ? 


எல்லா உயிர்களையும் இறைவன் படைத்து அதன் உள்ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டுள்ளார்.

*அந்த உயிரைக் கொலை செய்கின்றபோது அதனுள் இருக்கும்  இறைவனையே துடிக்க துடிக்க பயமுறுத்தி வெளி யேற்றுவதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல் !*

*உயிருள் யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே*

*உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே* !


மேலும்..


*உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்*

*ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்*


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

*சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்*


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!  


எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்பதை மனிதன் அறிவால் அறிந்து தெரிந்து உணர்ந்தால் நம் சகோதர உயிர்களை கொலை செய்யவோ ! அதன் புலாலை( மாமிசம்) உண்ணவோ மனம் வருவமா ?  


உடம்பு வேறு வேறாக இருந்தாலும் அதன் உள்ளே இருந்து இயங்கும் உயிர்.ஆன்மா 

ஒரேவிதமான ஒளித்  தன்மை உடையது என்பதை அறிவுள்ள மனிதகுலம் அறிந்து கொள்ள வேண்டும். 


இன்று உலகம் முழுவதும் வாய்பேசாத உயிர் இனங்கள் எண்ணில் அடங்காத கோடானகோடி உயிர் இனங்கள் உணவிற்காக அழிக்கப்படுகிறது.


இன்று உலகம்  முழுவதும் கொரோனோ தொற்றாலும் மற்றும் தீராத வியாதிகளாலும்   தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அலைந்து திரிந்து கொண்டு இருக்கும் மனித குலத்தை பார்க்கும் போதும் கேட்கும்போதும் மிகவும் வேதனையாக இருக்கிறது.


இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இறைவனால் படைத்த உயிர்களின் மேல் அன்பு தயவு கருணை இரக்கம் காட்ட தவறிய காரணத்தினால் நம்முள் இருக்கும் உயிரைக் காப்பாற்ற வேண்டி அளவில்லா துன்பப்பட நேர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


எனவே இனிமேலாவது மனிதகுலம் திருவள்ளுவர் திருஅருட்பிரகாச வள்ளார் அவர்கள் சொல்லும் உண்மை அறிந்து உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலாலை உண்ணாமலும் அக இனத்தாராகி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று அச்சம் பயம்.துன்பம்.துயரம் மரணம் நீங்கி வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு