புதன், 17 மார்ச், 2021

ஆன்மா உயிர் உடம்பு !

 *ஆன்மா உயிர் உடம்பு*!  


ஆன்மா (உள்ஒளி) உயிர். உடம்பு ..இவை மூன்றும் சேர்ந்தது தான் மனித இயக்கம் என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.


*இவற்றை பதி.பசு.பாசம் என்பார்கள் சைவ சமயத்தார்கள்.*


*வள்ளலார் பாடல்*!


உடம்பு வரு வகைஅறியீர் உயிர் வகையை அறியீர்

உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர்


இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே


நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 


மேலே கண்ட பாடலில் .உடம்பு வந்த வழியும்.உயிர்வந்த வழியும்.ஆன்மா என்கின்ற உள்ஒளி வந்த வழியும் தெரியாமல்.உடல் பருக்க உணவு உண்டு தினமும் தூங்குவதற்கும் விழிப்பதற்கும் மட்டும் தெரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். உலகத்தையும் உலகில் உள்ள பொருள்களையும் படைத்தது யார் ? என்ற *உளவு அதாவது அதன் ரகசியத்தையும்* தெரிந்து கொள்ளாமல்.


மடம்புகு பேய் பிடித்த மனம் போல் மயங்கி அலைந்து திரிந்து கொண்டு உள்ளீர்கள். வெளியே திரியும் மனதை தன் வசப்படுத்தும் வழிதுறை கற்று கொள்ள அறியீர்.மேலும் உலகியலின்  பொய்யான வாழ்க்கையில் உழன்று இன்பம் துன்பம் அடைந்து எண்ணி எண்ணி அதாவது நினைந்து நினைந்து  இளைக்கின்றீர்.

ஏழை உலகியரே *இனிமேலாவது நான் சொல்லுவதை  கேளுங்கள். இனிமேல் தீமையில் இருந்து விலகி நன்மை அடைவீர்கள்* வாருங்கள் என்று மக்களை அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.


உடம்பையும் உயிரையும். *ஆன்மாவிற்குள்  உள் ஒளியாக நடம் புரிந்து இயக்கிக் கொண்டுள்ள தனித்தலைமை தனித் தந்தையாகிய இயற்கை உண்மையாம்  *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் இதுவே. நீங்களும் ஆண்டவரைத் தொடர்பு கொண்டு என்றும் அழியாத *அருள்* பெற்று இன்பம் துன்பம் பாவங்கள் நீங்கி பூரண புண்ணியம் பெற்று மரணத்தை வென்று 

*சுத்த தேகம் பிரணவதேகம் ஞானதேகம்* என்னும் *முத்தேக சித்தி* பெற்று என்றும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல் அழியாமல் நிலைத்து வாழலாம் வாருங்கள் என ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.


*ஆணவம் மாயை.மாமாயை.பெருமாயை. கன்மம்*  !  


ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள  ஆணவம்.மாயை.

கன்மம் என்னும் மூன்று மலங்கள் என்பார்கள் சைவ சமயத்தார்கள். 


*ஆணவம். மாயை*் *மாமாயை*.

*பெருமாயை. கன்மம்* என ஐந்து மலங்கள் உண்டு என்கின்றார் வள்ளலார்.


ஆன்மாவை வெளியே காட்டாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் ஆன்மாவின் *துணைக் கருவிதான் ஆணவம்* என்பதாகும். 


ஆன்மா பூரண அருள்பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு. *ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் கொண்டு. கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தருணத்தில் தான் ஆன்மாவைவிட்டு ஆணவம் விலகி செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடும்.* 


ஆன்மாவின் உள் இருந்து உயிர் என்ற ஜீவ ஒளி வெளிப்பட்டு பஞ்ச பூததேகம் எடுப்பதால் ஜீவதேகம் என்று பெயர் வழங்கப்படும். ஜீவ அணுவை வெளிப்படுத்திய பின்பு பஞ்ச பூதங்களில் அனந்த வண்ண பேதமாய் உள்ள  ஏழுவித  அணுக்களான வாலணு.திரவணு.

குருவணு.லகுவணு.அணு.பரமாணு விபுவணு. போன்ற அணுக்களால் பின்னப்பட்டதுதான்  ஜீவதேகம் என்னும் மனிதஉடம்பாகும்.


*ஆண்பாகம் 3 .பெண்பாகம் 4.*


பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி! அகவல்.


இதில் ஆணிடம்  மூன்றுவிதமான அணுக்கள்.

பெண்ணிடம் நான்குவிதமான அணுக்கள் ஒன்று சேர்ந்து கலவையாகி பெண்ணின்  கருவறைக்குள் சென்று.

அந்த மாபெரும் இருட்டு அறையில். அங்குதான் அணுக்களின் கூட்டு சேர்க்கைக்குத் தகுந்தாற்போல் பின்னப்பட்டு ஆண் பெண் என்ற உருவம்  தோற்றுவிக்கப் படுகிறது. 


அணுக்களால் பின்னப்பட்ட  

மனிததேக உடம்பை உருவாக்கியதுதான் *மாயை*. *மாமாயை*

*பெருமாயை என்னும் சக்திவாய்ந்த அணுக் கருவிகளாகும்.*

ஆதலால் தான் அதற்கு *மாயா சக்தி*  *என்றும் சாத்தான் என்றும்* *சைத்தான் பெயர்*. 


*ஆன்மாவை அனுப்பியது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். உயிர் உடம்பைக் கொடுத்தது மாயா சக்திகள்.*


*வள்ளலார் பாடல் !*

*பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை* *நீதான்* *பெற்ற*

*உடம்பு இது* 

*சாகாச் சுத்த உடம்பாக்கி*


ஒரு ஞானத் திருவமுதம் உண் டோங்குகின்றேன் இனி நின்

உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்


அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது நீ

அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க


தெருளாய உலகிடை என் சரிதமுணர்ந் திலையோ

சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.!


மேலே கண்ட பாடலில் உடம்பு கொடுத்தது பெருமாயை என்னும் பெண்பிள்ளை நீ தான் என்பதை தெளிவுப்படுத்துகிறார். எல்லாவற்றுக்கும் காரண காரியமானது  அருட்பெருஞ்ஜோதி தான் என்பதை அறிந்து கொண்டேன். ஆதலால் உம் உபசரிப்பு உபகாரம் எதுவும் எனக்கு வேண்டாம்.

இப்போது அருட்பெருஞ்ஜோதி என்னை ஆண்டு கொண்டு உபசரிக்கின்றது என்கிறார்.


*ஆன்மாவானது உயிர் உடம்பு எடுத்து இந்த பஞ்ச பூத உலகில் பற்றுக்கொண்டு *தேக சுதந்திரம்* *போக சுதந்தரம்* *ஜீவ சதந்திரம்* என்னும் மூவகை சுதந்தரம் பெற்று அனுபவித்து நல்வினை.தீவினை என்னும் பாச வலையில் சிக்கி வாழும் வாழ்க்கையின் செயல் அனைத்தும். ஆன்மாவில் பதிவாகியதற்கு பெயர் கன்மம் என்றும் கன்மபலன் என்றும் சொல்லப் படுகின்றது.


*ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது எதுவோ  *அதுவே மாயா திரைகளாகும்*


*உடம்பையும் உயிரையும் அழிக்காமல் காப்பாற்றும் வழியைத் தெரிந்து கொண்டு மரணம்இல்லாப் பெருவாழ்வு வாழ்வதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்* அக் கொள்கையில் மிகவும் முக்கியமானது. *சாகாக்கல்வி.*

*சாகாக்கலை* கற்றுக் கொள்வதாகும்.


*எனவேதான் சாகாதவனே சன்மார்க்கி  என்கிறார் வள்ளலார்*


*ஆன்மா அழியாது  உயிர் உடம்பு அழிந்துவிடும்.*

*உடம்பைவிட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பின் பாவம் புண்ணியங்களுக்குத் தகுந்தாற் போல் மீண்டும் பிறப்பு எடுக்கும் என்பது உண்மைதான்*


இறை சிந்தனை உள்ளவர்கள் மற்றும் சித்தர்கள்.யோகிகள் ஞானிகள் போன்றவர்கள் கடுமையான பக்தி.தியானம். தவம்.யோகம் செய்பவர்களின் ஆன்மாவானது. உடம்பு உயிரை விட்டு மரணம் அடைந்தாலும்.

மீண்டும் பிறப்பு உண்டு.


*உடம்பு உயிரோடு  பஞ்ச பூதங்களில் கலந்து கொண்டாலும்.* *சமாதிநிலை. *ஜீவசமாதி நிலை அடைந்தாலும்.* ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு

*மீண்டும் பிறப்பு உண்டு*


ஆன்மா  சொர்க்கம்.

கைலாயம்.

வைகுண்டம்

பரலோகம் 

மோட்சம்  போன்ற இடங்களுக்கு

சென்று கடவுளுடன் கலந்து கொள்வார்கள் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்யான கற்பனை கருத்துகளாகும்.

அப்படி எந்த இடங்களும் இல்லை என்கிறார் வள்ளலார். 


*நாம் எங்கிருந்து வந்தோம் என்று தெரிந்து அங்கு செல்வதே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் நிலையாகும் அதுவே முடிந்த முடிவான நிலையாகும்.* அதன் விபரம் தனி கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.


*வள்ளலார் பாடல் !* 

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி


நோவதின்று புதிதன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி


ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவ ராலே


ஆவதொன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே.! 


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே உயர்ந்த அறிவுபெற்ற மனிதஇனம் சாவதும் பிறப்பதும் என்னும் பெரும் நோயிலிருந்தும் அந்த பாவத்தில் இருந்தும் தப்பிக்க முடியவில்லை என்பது புதியது அல்ல.என்றும் உள்ளதால் அந்த நோயை நீக்குவதற்கு மருந்து கண்டு பிடித்தவர்தான் வள்ளலார். 


*அந்த மருந்திற்கு  ஞானமருந்து என்றுபெயராகும்* 


*அந்த மருந்தை வழங்குபவர் யார் ? என்றால் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*ஞான மருந்தும் மருந்து சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து !* 

என்னும் தலைப்பில் 34 கன்னிகளில் பாடல் இயற்றியுள்ளார்.


மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் ஞான மருந்தைப்பற்றி பதிவு செய்துள்ளார்.


உடற்பிணி அனைத்தையும்  உயிர்ப்பிணி அனைத்தையும்

மடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே !


சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்

தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே!


இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியுஞ்

சிறந்த வல்லபமுறு திருவருண் மருந்தே ! 


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே ! 


நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீர் உடைய நன்மருந்தே ! 


என்றே என்னினும் இளமையோடு இருக்க

நன்றே தருமொரு ஞான மாமருந்தே ! 


மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்

நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே ! 


சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே! 


என்னும் அகவல் வழியாக தகவல் சொல்லுகிறார்.


மனிதனின் தன் அசுத்த பூதகாரிய அணு தேகத்தை.சுத்த பூதகாரிய அணு தேகமாக மாற்ற வேண்டும்.அதற்கு இந்திரிய. கரண. ஜீவ ஒழுக்கங்களை கடைபிடித்து.மனம்.

புத்தி.சித்தம் அகங்காரம் எண்ணம் அவற்றை வெளியே செல்ல வொட்டாமல். உடம்பையும் உயிரையும் இயக்கும்  *சிற்சபையில் உள்ள ஆன்மாவை* இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணை உணர்வோடு ஆன்மாவின் வழியாக தொடர்பு கொண்டு அருள் என்னும் ஞான மருந்து வழங்குவார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால்* *ஆன்மாவில் தோன்றும் அருள் ஞானமருந்தின் வருகையால் வேதியல் முறைப்படி* *அசுத்த பூத காரிய தேகமானது*

*சுத்ததேகம்*

*பிரணவதேகம்*

*ஞானதேகம்*

*என்னும் மூன்று தேக மாற்றங்கள்* *உண்டாகும்.* மூன்று தேகமாற்றமும் ஒன்றாக இணைந்த தேகத்திற்கு *முத்தேக சித்தி* என்றும் சொல்லப்படுகிறது. அதுவே அருள்தேகம். ஒளிதேகம் என்பதாகும்.


*ஒளிதேகம் பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே இறைவனுடன் கலந்து பேரின்பமுடன் வாழமுடியும்.*


*வள்ளலார் பாடல்*! 


இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு *சன் மார்க்கம்ஒன்றே* பிணி மூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


*பிறந்த பிறப்பில் இதிற்றானே நித்திய* *மெய்வாழ்வு*

*பெற்றிடலாம்* *பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!*


ஆன்மா உயிர் உடம்பு வந்த வழியையும் அவற்றின் காரண காரியத்தையும்.

அவற்றை 

படைத்த இயற்கை உண்மை கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே நித்தியமான *பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.


.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு