திங்கள், 15 மார்ச், 2021

நேர்மைக்கு மகளையும் பலி தருவேன் !

 மகள் இறந்த போது  "நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்" என்று கூறிய  முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய்..இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா!


நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள்  சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச்சுவடுகளைக் காண முடியும்.


இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமமந்திரிகளில் ஒருவராக இருந்தவர் மொரார்ஜிதேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையைக் குறைத்தவர் அவர். தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பல மடங்காகக் குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர். இப்படிப்பட்ட மொரார்ஜிதேசாய்க்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி இருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? நிச்சயம் முடியாது. தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்களே தவிர தனது சொந்த மக்களுக்காக சுயநலத்தோடு விளம்பரம் பண்ணிக்கொண்டு வாழவில்லை. 


மொரார்ஜி தேசாய் பம்பாய் (குஜராத்தின் பல பகுதிகள் சேர்ந்திருந்த கால கட்டம்) முதலமைச்சராக இருந்தபோது அவரது  மகள் இந்து மருத்துவ கல்லூரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். நன்றாகப் படித்திருந்தும் அந்தப் பரீட்சையில் அவர் தோற்றுவிட்டார். மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் தான் வெற்றி அடைவோம் என்று நம்பி அந்தப் பெண் தனது தந்தையாரிடம் அதற்கு அனுமதி கேட்டார்.


தேசாய் அதற்குச் சொன்ன பதில்: "அம்மா நீ ஒரு சாதாரண குடிமகனின் மகளாக இருந்தால் மறுகூட்டல் செய்தால் அதில் வெற்றி பெற்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் நீ இந்த மாநில முதல்வரின் மகள். தப்பித் தவறி மறுகூட்டலில் வென்று விட்டாய் என்று வைத்துக்கொள். தேசாய் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மகளை வெற்றியடையச் செய்துவிட்டார் என்று எல்லோரும் பேசுவார்கள்.எனவே நீ சிரமத்தைப் பார்க்காமல் இன்னொரு முறை படித்து பரீட்சை எழுது. இது தான் என் முடிவு" 


அந்தப் பெண் உலகம் அறியாத சிறிய பெண். வாழ்வில் அவளுக்கு அனுபவங்கள் எதுவுமே ஏற்பட்டது இல்லை. தனக்குச் சகலமும் தந்தை என்று வாழ்ந்திருந்தவள் தான் உயிருக்கு உயிராக நம்பிய தந்தை கூட தன் மனதைப் புரிந்து கொள்ளாமல் தனது கஷ்டத்தை உணர்ந்து கொள்ளாமல் தன்னுடைய நிலையிலிருந்தே பேசிவிட்டார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துக்கத்தைச் சொல்லி வெளியே அழக்கூட இயலாத நிலையில், தற்கொலை செய்துகொண்டார். 


தனது  மகளை துடிக்கத் துடிக்கப் பறிகொடுத்த மொரார்ஜி தேசாய் அப்போது என்ன சொன்னார் தெரியுமா? "நான் நேர்மையோடு வாழ்வதற்கு என் மகளைப் பலிகொடுத்து தான் ஆகவேண்டும் என்றால் என் மகளைக் கொடுப்பேனே தவிர நேர்மையைக் கைவிட மாட்டேன்"


மொரார்ஜி பதவியில் இல்லாத நிலையில் அடுக்கு மாடிக்குடியிருப்பில் குடியிருந்தார்.வீட்டு உரிமையாளர் தொடுத்த வழக்கில் மொரார்ஜி காலி செய்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை தாங்க முடியாத அவரது மருமகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அந்தத் தலைவரையும் இன்றைய நமது தலைவர்களையும் ஒப்பிட்டால் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் எரிமலை வெடிக்கச் சித்தமாக இருப்பதை அறிய முடிகிறது.


ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நான்காம் ஆண்டு, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில்  தினமணி நாளிதழின்  முதல் பக்கத்தில் பிரசுரமாகி இருந்தது ஒரு புகைப்படம்‌.


ஒரு முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவர் காலடியில் சில மூட்டை முடிச்சுகள், பாத்திர பண்டங்கள் கிடக்கின்றன. ஒரு வீடு, பூட்டு பூட்டித் தொங்கியபடி பின்னணியில் தெரிகிறது. புகைப்படத்திற்குக் கீழே குல்சாரிலால் நந்தா வாடகை கொடுக்க முடியாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற ஒரு செய்தி எழுதப்பட்டிருக்கிறது. யார் இந்த குல்சாரிலால் நந்தா?


இவர் பஞ்சாப் மாநிலம் சியால் கோட்டில் பிறந்தவர். மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். விடுதலைப் போரில் மகாத்மா காந்தியோடு பங்குபெற்று பலமுறை சிறை சென்றவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இந்தியத் தொழிலாளர்களின் அவல நிலையை சர்வதேச அரங்கம் அறிந்து கொள்வதற்கு பல உலக மாநாடுகளில் கலந்துகொண்டு தனது சொல்லாற்றால், பல தலைவர்களை வசீகரித்தவர். விடுதலைக்குப் பிறகு, இந்திய திட்டக்கமிஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த குல்சாரிலால் நந்தா தொழிலாளர் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். பிரதம மந்திரிக்கு சமமான அதிகாரம் படைத்த இந்திய உள்துறை மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். 


ஆச்சரியப்படாதீர்கள்.. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க செல்வாக்கு மிக்க இவர் கடைசி வரையில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கான பென்சன் தொகையான ரூபாய் ஐநூறிலேயே குடும்பம் நடத்தினார். தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு, அதாவது தான் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பிறகு தியாகிகளுக்கான சலுகையாக சிறிய வீடு தரமுடியுமா என்று அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார். கருணையே வடிவான இந்தியப் பேரரசு அந்தத் தியாகியின் கோரிக்கையை அவர் இறக்கும் வரையில் ஏற்றுகொள்ள வில்லை.


ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திலேயே ஆடி காரில் பயணம் செய்யும் மனிதர்கள் மிகுந்த *இந்த நாட்டில் மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த ஒருவர், ஐநூறு ரூபாய் பணத்திலே சாகும் வரை வாழ்ந்தார். தனது அதிகாரத்தை செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு கூட தனக்கென்று சேர்க்காமல் நேர்மையாக இருந்தார்* என்பதை நினைத்துப் பார்க்கும் போது உடம்பு சிலிர்க்காமல் இருக்கவில்லை. 


*மொரார்ஜி தேசாய்களும், குல்சாரிலால் நந்தாக்களும் மாண்டு போயிருக்கலாம். ஆனால் அவர்கள் விதைத்து விட்டுப் போன மாண்புகள் இன்னும் மாண்டுவிடவில்லை* ஆயிரம் இடிமுழக்கங்கள், ஆயிரம் எரிமலைகள் தொடர்ந்து தாக்கினாலும் *இந்தியாவின் ஆத்மா எந்த அதிர்வும் அடையாமல் இன்னும் ஜீவித்துக் கொண்டிருப்பது போல தேச தர்மம் என்பதும் இன்னும் உயிரோடேயே இருக்கிறது. அதன் நிழலில் சில தலைவர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மட்டும் தான் நமது வேலை*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு