ஞாயிறு, 8 நவம்பர், 2020

அடுத்த பிறவி என்ன ?

 *அடுத்த பிறவி என்ன ?*


பிறவிகளிலே உயர்ந்த பிறவி மனித பிறப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே தெரியும்.உயர்ந்த பிறவிப் பெற்ற மனிதன் மேன்மேலும் உயர்ந்து உயர்ந்த  இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே மனித பிறவிக்கு கொடுத்த சுதந்தரம் ஆகும். 


*இறந்து விட்டால் அடுத்த பிறவி என்னவென்று தெரியாமல் இருந்த உலகத்தார்க்கும். சன்மார்க்கிகளுக்கும்  மீண்டும் மனித பிறப்பு கிடைக்கும் வாய்ப்பை வெளிப்படுத்துகின்றார்*.


மனிதன் இவ்வுலகில்  வாழ்வதற்கு இறைவன் கொடுத்த சுதந்தரத்தை எவ்வாறு பயன்படுத்தி வாழவேண்டும் என்பதை அறிந்து தெரிந்து கொள்வதே மனிதனின் உயர்ந்த அறிவாகும்.தனக்கு கொடுத்த அறிவால்  இவ்வுலகில் மாயையின் ஆதிக்கத்தில் உள்ள  பொருள்களைப் பெற்று அனுபவித்தும் வாழலாம்.


*இவ்வுலகைப் படைத்த இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்றும் வாழலாம்.*


பொருளைப்பெற்று பொருளை அனுபவித்து வாழும் வாழ்க்கைக்கு சிற்றின்பம் என்று பெயர். சிற்றின்பத்தினால் மரணம்வரும் மீண்டும் பிறப்பு கொடுக்கப்படும்.


அருளைப்பெற்று வாழும் வாழுக்கைக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும். பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும். பெயராகும்.


இறைவன் கொடுத்த உயர்ந்த பிறப்பை.உயர்ந்த அறிவைப் பெற்ற மனிதன்.உயர்ந்த அருளைப்பெற்று உயர்ந்த இடத்திற்கு செல்ல வழிதெரியாமல்.சில பல ஆன்மீக அருளாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட சாதி சமய மதங்களின் கொள்கைகளை பின்பற்றி வாழ்வதால் இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்.  


*இறந்த பின்பு மீண்டும் என்ன பிறவி கிடைக்கும்.*


இறந்தால் மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது உறுதி அல்ல. மனித பிறப்பு கிடைத்தால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் வாய்ப்பு உண்டு.

தவறிவிட்டால் பலகோடி பிறவிகள் எடுத்து பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் மனிதப் பிறவி கிடைக்கும்.


இந்த மனித பிறவியில் அறியாமையால் அஜாக்கிரதையால் மரணம் வந்தாலும் அடுத்து மனிதப் பிறவிகிடைக்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஒரு சிறந்த வழியைச் சொல்லுகின்றார் வள்ளலார்.


*மீண்டும் மனித பிறப்பு*! 


ஒவ்வொரு மனிதர்களும் அகத்தில் உள்ள ஆன்மாவின் உள் ஒளியைத் தொடர்பு கொள்ளாமல்.புறம்  புறத்தில் உள்ள இந்திரிய கரணங்களின் மனம். வாக்கு. காயம் என்னும் செயல்பாடுகளால் தான் நன்மை தீமைகளும்.

புண்ணிய பாவங்களும் வந்து ஆன்மாவை பற்றிக் கொள்கின்றன.


மனம் வாக்கு காயம் என்பன. எண்ணம் சொல் செயல்கள் மூலமாக புறத்தில் உள்ள ஜீவன்களின்  ஆன்மாவில் பதிந்து.அவைகளால் உண்டாகும் நன்மை தீமைகள் யாவும் அவர்களின் எண்ணம்  சொல் செயல் மூலமாக  திரும்பவும் செய்பவர்களின் ஆன்மாவில் வந்து பதிவாகின்றன.அந்த பதிவுகளே திரைகளாக ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளன.


இவற்றில் நாம் அறிந்து செய்து பாவங்கள்

அறியாமல் செய்த பாவங்கள் இரண்டுமே  நம்மை வந்து அடைந்து  அடுத்த பிறவி என்ன என்பதற்காண காரண காரியமாக அமைந்து விடுகின்றன.


*இதற்கு பரிகாரம் பிராய்ச்சித்தம்* 

*என்ன செய்தால் தீர்ந்து மீண்டும் மனிதபிறப்பு கிடைக்கும்* 


தங்கள் தங்கள் தரத்திற்கு தக்கவாறு ஜீவர்களுக்கு உண்டாகும் பசி .பிணி .தாகம்.

இச்சை.

எளிமை.பயம்.

கொலை.துன்பம் போன்றவற்றால் வருந்துகின்றவர்களுக்கு நம்மால் முடிந்த உபகாரம் இயன்றவரை செய்ய வேண்டும்.முடியாத பட்சத்தில் *நம்மைப் படைத்த இறைவனிடம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என பிரார்த்தனை செய்ய வேண்டும்.*


மேலும் உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருக்க வேண்டும்.


ஜீவகாருண்யம் என்னும் பரோபகாரம்.மற்றும் இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு சத்விசாரம் செய்தும்  முயற்சி பற்றாமலும் அஜாக்கிரதையாலும் அறியாமையாலும்  அருள் பெறமுடியாமல்.

மரணத்தை வெல்ல முடியாமல் போனாலும். *சுத்த சன்மார்க்கிகளுக்கு மீண்டும்   மனித பிறப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதை உறுதி செய்கிறார் வள்ளலார்*.


மீண்டும் மனிதபிறப்பு கிடைப்பதே பெரிய புண்ணியம் பெரிய பாக்கியமாகும்.


*சாலை சம்பந்திகளுக்கு இட்டகட்டளையில் வள்ளலார் வெளிபடுத்துவது.*


அன்புள்ள நீங்கள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலைக்கு மிகவும் உரிமை உடையவர்கள் ஆதலால் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.


நீங்களும் உங்களை அடுத்தவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக என்று வள்ளல்பெருமான் அவர்கள் வாயால் வாழ்த்தி சொல்கிறார். 


மேலும் *வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனித்து படித்து உணர்ந்து கொள்ள வேண்டும்*


கர்ம காலம் முதலிய பேதங்களால் யாருக்காயினும் தேக ஆனி நேரிட்டால் தகனம் செய்யாமல் சமாதியில் வைக்க வேண்டும்.


இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கைக் கொண்டு எவ்வளவும் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சிந்தையுடன் இருக்க வேண்டும்.


கணவன் இறந்தால் மனைவி  தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்ய வேண்டாம். 


தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும் இவ்வாறு உண்மையாக நம்பி செய்யுங்கள்.செய்து இருந்தால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும்.மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணைகூர்ந்து எனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம்  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கச் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந்தருணம் மிகவும் அடுத்த சமீபமாக இருக்கின்றது.


*அந்த தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகி இருந்து இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து அருள்வார்* இது வெளிப்பட்டு அறிந்த பின் தகனம்( எரிக்ககூடாது) செய்தல் கூடாது.

அது சன்மார்க்கத்திற்கு தக்கது அல்ல.ஆகலில் மேற் கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக...


*மேலும் வள்ளலார் சொல்லுகின்றார்*


எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம் அடையும் வரையில்.என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து *இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங் கருணைவள்ளல்* சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும்.


அவநம்பிக்கை யுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தே அருள்வார். *ஆனால் அவர்கள் சன்மார்க்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள்*.

ஆகையால் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை அடைவீர்கள்.இது சத்தியம். இது சத்தியம்.என்று சத்தியம் வைத்து வள்ளல்பெருமான் சொல்கிறார்.


எனவே இப்பிறவியில் மரணம் இல்லாப்பெருவாழ்வு பெற்று  வாழ்வதற்கு  வாய்ப்பு கிடைக்காமல் மரணம் அடைந்தாலும்.

கீழ்பிறப்பு எடுக்காமல் மனித பிறவி கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஜீவகாருண்ய தயவு உடையவர்களுக்கு நிச்சயம் அடுத்த பிறவி மனிதபிறப்பு கிடைக்க நிறைய வாய்ப்பு உண்டு.


எனவேதான் தயவு உடையோர் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றும்.


எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி! என்றும் தெளிவாக சொல்லியுள்ளார்.


வள்ளலார் பாடல் ! 


சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீ உரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


*செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்*

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே*.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு