வெள்ளி, 6 நவம்பர், 2020

சன்மார்க்கியா ? சமய மத வாதியா ?

 *சன்மார்க்கியா ? சமய மத வாதியா?*


சன்மார்க்கத்திற்கும் சமய மத மார்க்கத்திற்கும்  உள்ள முக்கியமான வேறுபாடுகள் என்னவென்றால்.? 


சன்மார்க்கம் என்பது ஒரே கடவுள் என்ற உண்மை அறிந்து இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதிஆண்டவரை ஒளியாக கண்டு வழிபடுவதாகும்


சமய மத மார்க்கம் என்பது தத்துவங்களை உருவக் கடவுள்களாக பாவித்து படைத்து பல தெய்வங்களைப் பின்பற்றி வழிபடுவதாகும்.


சன்மார்க்கத்தில் சித்திப்பெற்று மரணத்தை வென்று கடவுள்நிலை அறிந்து அம்மயமாகி பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழ்வதாகும். அதாவது ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி ஆன்மதேகம் பெற்று வாழ்வாங்கு வாழ்வதாகும்.

அதாவது பிறப்பு இறப்பு இல்லாத நித்திய தேக வாழ்க்கையாகும் .


சமய மத மார்க்கத்தில்.சமாதி .ஜீவசமாதி.பதமுக்தி ஜீவமுக்தியை  மட்டுமே பெற்று வாழ முடியும். மரணத்தை வெல்ல முடியாது.

ஆனமதேகம் பெறமுடியாது.

நித்திய தேகம் பெறமுடியாது மீண்டும் மீண்டும் பிறப்பு உண்டாகும்.


*சன்மார்க்கத்தில்  சமாதி பழக்கம் பழக்கம் அல்ல சகஜ பழக்கமே பழக்கமாகும்*


சன்மார்க்கத்தில் இம்மை இன்பலாபம்.

மறுமை இன்பலாபம். பேரின்பலாபம் என்கின்ற மூன்று லாபத்தையும்.

கர்மசித்தி.

யோகசித்தி.

ஞானசித்தி என்கின்ற மூன்று சித்திகளையும். சுத்ததேகம்.

பிரணவதேகம்.

ஞானதேகம் என்கின்ற மூன்று தேகங்களையும் பெற்று முத்தேக சித்தி என்னும் பேரின்பசித்தி 

பெருவாழ்வு பெற்று. கடவுள்நிலை அறிந்து அம்மயமாகும் வல்லமையைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வதாகும்.. 


சமய மத மார்க்கங்களில் 

இம்மை இன்பலாபம்.

மறுமை இன்பலாபம்.

என்கின்ற இரண்டு லாபத்தையும்.

கர்மசித்தி.

யோகசித்தி என்கின்ற இரண்டு சித்திகளையும்.

சுத்ததேகம் பிரணவதேகம் என்கின்ற இரண்டு தேகமாற்றமும் மட்டுமே பெறமுடியும்.

மூன்றாவதாகிய ஞானதேகத்தை பெறமுடியாது.


*வள்ளலார் வாழ்ந்து காட்டிய மார்க்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மார்க்கமாகும்*.


வள்ளலார் வாழ்ந்து  காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியைப்பெற்று. மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் என்றும்.மேலும் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் என்கின்ற உண்மையை அழுத்தமாக பதிவு செய்கிறார்.


*வள்ளலார் சொல்லுவதை பார்ப்போம்.!*


முத்தி யென்பது நிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்ற என் அருட்பெருஞ் ஜோதி!


சித்தி யென்பது நிலை சேர்ந்த அனுபவம்

அத்திறல் என்ற என் அருட்பெருஞ் ஜோதி! 


என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலிலே தெளிவாக விளக்கி உள்ளார்.

 *சாதனம் உபாயம் சமயமத மார்க்கம். உண்மை அனுபவம் சுத்த சன்மார்க்கம்*.


சமயமத மார்க்கத்தில் சரியை4 கிரியை4 யோகம்4 என்னும் 12 படிகளோடு நின்று விடுகிறது.சன்மார்க்கம் சரியை4 கிரியை4 யோகம்4 ஞானம்4 என்னும் 16 படிகளையும் கடந்தது.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!*


சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்


புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்


பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் *முத்திபெற் றிடவும் உரியதோர்*

 *இச்சை எனக்கிலை* எனது உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்* 


சமய மதங்களில் சொல்லிய சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கினும் எனக்கு இச்சை இல்லை என்கிறார்.


 *அனுபவ மாலை பாடல் !*


சரியை நிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்

தனியோக நிலைநான்கும் தனித்தனி 

கண்டறிந்தேன்


உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்

ஒன்றொன்றாய் அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்


அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்


*பெரியசிவ அனுபவத்தால்* *சமரசசன் மார்க்கம்*

*பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி*! 


சமய மத சன்மார்க்கத்தின் 16 படிகளையும் கடந்து உயர்ந்த பெரிய அனுபவமான சமரச சுத்த சன்மார்க்கம் பெற்றேன் என்கிறார் வள்ளல்பெருமான். இதுவே  தத்துவங்களைக் கடந்த ஆன்மீகத்தின் சுத்த சன்மார்க்க அனுபவ நிலையாகும்.

தத்துவங்களைக் கடக்காமல் இயற்கை உண்மைநிலையை காணமுடியாது. தொடர்பு கொள்ள முடியாது. பேர்இன்பம் அடையமுடியாது.


வள்ளலார் பாடல்! அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.


தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீதமேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்த அந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று

அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்களையும் கடந்த நிலையே தத்துவம் கடந்தநிலையாகும். ஆன்ம நிலையாகும்.அதற்குமேல் ஆன்மநிலை கடந்து கடவுள் நிலை அறிவதாகும். கடவுளைத் தொடர்பு கொண்டு பூரண அருள்பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும்   உயர்ந்த பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.


*சத்திய ஞானசபை*


 எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாக விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் *சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்*..


ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு* - 


மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய *உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை*.

உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில்.

தமது திருவருட் சம்மதத்தால் தோற்றுவித்துள்ளார்.

ஆதலால் சமயமத மார்க்கங்களை பின்பற்றாமல் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பின்பற்றி வள்ளலார் சொல்லிய இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களைப் கடைபிடித்து வடலூர் சத்திய ஞானசபைக்கு வந்து வந்து தரிசிப்பீர்களானால் பெற வேண்டியதை பெற்று பெருங்களிப்பு அடையலாம். இது சத்தியம் சத்தியம் என்கின்றார்.


நாம் சமய மத்த்தை பின்பற்றுவதா?  சன்மார்க்கத்தை பின்பற்றுவதா? என்பதை உயர்ந்த அறிவைக்கொண்டுல நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு