செவ்வாய், 27 அக்டோபர், 2020

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !

 *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*


மனிதன் மிகவும் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்.? *உண்மையான கடவுள் யார்*? என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.அவரை உண்மை அன்பால் நேசித்து தொடர்பு கொள்ள வேண்டும்.அவரிடம் பெற வேண்டிய *அருள்அமுதைப்*? பெற்றுக்கொள்ள வேண்டும்.அந்த அருள் அமுதத்தால் *பொய்யான மனித உடம்பை மெய்யாக்க வேண்டும்*.

மெய்யான உடம்புதான் மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழ்வு முடியும். 


இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமல்.பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளாமல்.மரணத்தை வெல்லும் வழிதெரியாமல். பொய்யான வாழ்க்கையில் வாழ்ந்து. காலத்தையும் நேரத்தையும் வீண் விரையம் செய்து அழிந்து கொண்டே உள்ளது மனித இனம்.


மனித குலத்தை நல்வழிப்படுத்தி நல்வாழ்வு வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற உண்மை நெறியான தனித்தன்மை வாய்ந்த நெறியைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான் .


*வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்*


உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய நீங்கள் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள். *வாழ்க்கையில் பிடிக்க வேண்டியதைப் பிடித்துக்கொண்டு விடவேண்டியதை விட்டுவிடவேண்டும்*. உண்மையை அறிந்து கொள்ள எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் தடை செய்ய வேண்டும்.


*முக்கிய தடைகள்*


சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். *மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.* 


*அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்*.


 *அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்*. 

அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள். என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்து உள்ளார்கள்.


* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் என்னும்  சித்தி வளாகத்தையும்.வடலூரில் உள்ள தருமச்சாலையும் சத்திய ஞானசபையும் குறிக்கும்.


*சுத்த சன்மார்க்க சாதனம்*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்*


 *திருஅருட்பா*


*சன்மார்க்க சாதனம். சத்விசாரம் பரோபகாரம் இரண்டு மட்டுமே*.


 வேறு சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது *எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்*. 


*இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்*.


 *சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை!*


ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி ஆவிடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.


*வள்ளலார் பாடல்* !


பாதி இரவில் எழுந்தருளி இப் பாவி யேனை யெழுப்பியருட்


சோதி யளித்து என் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை


ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*


என்பதே சுத்த சன்மார்க்க  பிரார்த்தனை யாகும். 


வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க  கொள்கையைப் பின்பற்றாமல் அவரவர்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு.சாதி.

சமய மதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் செயல்படுபவர்கள் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.


*நாம் பெற வேண்டியது ஆன்மலாபம் மட்டுமே*


எனவே காலத்தையும் நேரத்தையும் வீண் விரையம் செய்யாமல் வள்ளலார் சொல்லிய இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை முழுமையாக  பின் பற்றினால் மட்டுமே பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளமுடியும்.


*வள்ளலார் பாடல்*


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண் கின்றீர்

கரணம் எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ


சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


*இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந் திடுமின்*

*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே*.!


மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும். வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையானது.

இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு