ஞாயிறு, 4 அக்டோபர், 2020

வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !

 *வள்ளலார் வருவிக்க உற்ற நாள்* !


*எல்லாம் செயல் கூடும் எம்மாணை எல்லாம் வல்லான் தனையே ஏத்து* ! 


05-10-1823 ஆம் ஆண்டு இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி இறைவனால்  வள்ளலார் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற நாள்..


05-10-1823 இல் இருந்து 05-10-2020 ஆண்டுவரை 197 ஆண்டுகள் ஆகிறது.ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் வருவிக்க உற்ற நாளை உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகம் எங்கும் உள்ள  சன்மார்க்க சங்கங்களும் சன்மார்க்க அன்பர்களும் அன்னதானத்துடன் சிறப்பாக விழா எடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.


வள்ளலார் காட்டிய. போதித்த கொள்கையை பின்பற்றி வாழ்கிறார்களா ? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.


இயற்கை உண்மையாம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு இயற்கை விளக்கமான பூரண அருளைப்பெற்று மரணத்தை வென்று.இயற்கை இன்பமாம் இகத்தே பரத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.


*வள்ளலார் ஆன்மீகத்தின் தனி ஒரு அருளாளர் தனி ஒரு ஆன்மீகப் புரட்சியாளர்*.  


உலகில் ஆன்மீகம் என்னும் பெயரில் தோன்றிய  வேதங்கள். ஆகமங்கள். புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்கள். போன்றவற்றின் வழியாக உருவாக்கிய சாதி சமய மதங்களின் கடவுள் கொள்கைகள் யாவும் உண்மைக்கு புறம்பானவைகள் என்னும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் வள்ளலார்.


ஆன்மீகத்தின் பெயரில்  பொய்யான கொள்கைகளால்.பொய்யான வாழ்க்கை வழிப்பாட்டு முறைகளால் மனிதகுலத்தை  மூடநம்பிக்கையில் மூழ்கவைத்து படுகுழியில் தள்ளப்பட்டு அறியாமையில் அழிந்து வருகிறார்கள்.


ஆன்மீகத்தில் பலவகையான புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.


இதுவரை உலகில் தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் வள்ளலாருக்கு நிகர் உலகில் ஒருவரும் இல்லை. சீர்திருத்தவாதிகளுக்கு எல்லாம் முதன்மை  சீர்திருத்த வாதியாகும்.


உலகியல் அறிவியல். விஞ்ஞானம் ஆன்மீகம்.அரசியல் எல்லாவற்றிலும் தனிமுத்திரைப் பதித்தவர்.


*தனிக்கொள்கை கண்டவர்* ! 


பன்முகத்தன்மை கொண்டவர். வள்ளலாருக்கு குருவாக இருந்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்பதை அவரேத் தெரிவிக்கின்றார். மருடபகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி ! என்பார்.  இயற்கையிலே முழுமையான ஞானம் பெற்றவர்.உலகில் உள்ள எல்லா மொழிகளும்.எல்லா கலாச்சாரமும்.எல்லா நாகரீகமும் காணாமலும் கற்காமலும் வள்ளலாருக்குத் தெரியும்.


*பலவகையிலும் முதன்மையும் தனிச்சிறப்பும் பெற்றவர்*.!


நூலாசிரியராய்.உரையாசிரியராய்.பதிப்பாசிரியராய்.பத்திரிகை ஆசிரியராய்.போதகாசிரியராய்.ஞானாசிரியராய்.வியாக்கியானகர்த்தராய்.சித்தமருத்தவராய்.சீர்சிருத்தவாதியாய்.அருட்கவிஞராய்.அருண்ஞானியாய்ப் பன்முகத் தன்மைக் கொண்டவர் வள்ளலார்.


தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.முதன் முதலில் முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர்.


முதன் முதலில் கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்.புதைப்பொருள் ஆராய்ச்சி யாளர்.


உரைநடை நூல்கள் அரிதாக உள்ள அக்காலத்தில் சின்மயதீபிகை. மனுமுறைகண்டவாசகம்.ஜீவகாருண்ய  ஒழுக்கம்.ஒழிவியல் ஒடுக்கம் போன்ற உரைநடைநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.


*உலகின் பொதுக் கொள்கைக்காக பொது வாழ்க்கைக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கம். சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை வடலூரில் தலைமை இடமாக வைத்து தோற்று வித்துள்ளார்*


*மக்களை துண்டாடிய சாதி.சமயம் மதங்கள்* ! 


ஒற்றுமையைக் குலைத்து பிரிவினையை உண்டாக்கிய சாதி சமயம் மதக் கொள்கைகளைப் பின்பற்றி அழியும் மனித குலத்தை அழியாமல் காப்பாற்ற வந்தவர் தான் வள்ளலார். உலகின் முதன்முதலில் சாதி சமய மதக் கொள்கைகளுக்கு சாவு மணி அடித்தவர் வள்ளலார்.


வள்ளலார் பாடல் ! 


திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனை யாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


உலகின் திருநெறி பொதுநெறி தனிநெறி ஒன்றே ஒன்று அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும்.


*வள்ளலாரின் முக்கிய கொள்கைகள்!*


கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! அவரை உண்மை அன்பால் ஒளிவடிவில் வழிபட வேண்டும்.


சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது.அத்தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது. புலால் உண்ணலாகாது.


சாதி.சமய.மதம் போன்ற வேறுபாடுகள் கூடாது.


எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்.


ஏழைகளின் பசிதவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்பவீட்டின் திறவுகோல்.


வேதம். ஆகமம்.புராணம்.இதிகாசம்.சாத்திரங்கள் யாவும் உண்மையைத் தெரிவிக்க மாட்டாது.


இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக்கூடாது.கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.


பெரியவர்கள். குழந்தைகள் இறந்தால் அழுகுரல் செய்ய வேண்டாம்.முடிந்த அளவு அன்னவிரயம் செய்ய வேண்டும்.


கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.


சாகாக்கலை.சாகாக்கல்வி கற்று இறைவன் பூரண அருள் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும்.இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் நிலைத்து வாழ்வாங்கு வாழ வேண்டும்.


சாகாதவனே சன்மார்க்கி என்பதுதான் வள்ளலாரின் முக்கிய கொள்கையாகும்.


*எதிலும் பொதுநோக்கம் வேண்டும்*.


என்பனவெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகள்யாகும்.


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை*


காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் 


தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.! ....


என்னும் பாடல்வாயிலாக தருமச்சாலையின் வல்லபத்தை வெளிப்படுத்துகின்றார். 


சீவகாருண்யமும்.

உயிர் இரக்கமும் .அற்றார் அழிபசி தீர்த்தல் மட்டுமே புறம் புறப்புற கடவுள் வழிபாடாகும் என்பதை மக்கள் மனிதில் பதிய வைக்கவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை 23-05-1867 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றுவரை அனையாமல்  பசிப்பிணியைப் போக்கிக்கொண்டு வருகிறது.


*சமரச சுத்த சன்மார்கக சத்திய ஞானசபை* ! 


உலகமெலாந் தொழ உற்றது எனக்குண்மை ஒண்மைதந்தே


இலக எலாம் படைத்து  ஆருயிர் காத்தருள் என்றது என்றும்


கலகமிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்


திலகம் எனாநின்றது உத்தர ஞான சிதம்பரமே.! 


*பூர்வஞான சிதம்பரத்தை உத்தரஞான சிதம்பரமான வடலூரில் தோற்றுவித்தது தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்*.


கடவுள் தத்துவ உருவமாக இல்லை.இயற்கை உண்மையாக.இயற்கைவிளக்கமாக.

இயற்கை இன்பத்தை அளிக்ககூடிய அருள் வல்லபம் பொருந்திய அருட்பெருஞ்ஜோதியாக தனிப்பெருங்கருணையாக அருள் ஒளி பிரகாசமாய் விளங்கிக் கொண்டு இருப்பவரை.உலக மக்கள் யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அகம் அகப்புறத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைத் புறத்தில் காட்டவே   25-1-1872 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவிக்கிறார்.

அங்கு ஒளிதான் சோதி தரிசனமாக காட்டப்படுகிறது.


சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றும் பின்பற்ற வரும் அன்பர்கள் வள்ளலார் சொல்லிய கருத்துக்களை ஆன்மாவில் பதியவைத்து அறிவின் வழியாக.இந்திரிய.

கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வதே வள்ளல் பெருமான் அவர்களின் அவதாரதினத்திற்கு நாம் செய்யும் கடமையாகும். அருள் பெறும் ஒழுக்கம் நிறைந்த  தொண்டாகும்.


*சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு  முக்கிய தடையாக உள்ளதை அகற்ற வேண்டியதே நம் ஒவ்வொருவரின் செயலாக இருக்க வேண்டும்*.


*சுத்த சன்மார்க்கத்தின் தடைகள்*


சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!


எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்து *சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.*


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்*. *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்*.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!


தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு