ஞாயிறு, 15 மார்ச், 2020

அருள் வழங்கும் இடம் !

அருள் வழங்கும் இடம் !

அருள் வழங்குவதற்கும் அருள் பெறுவதற்கும் ஓர் இடத்தை தேர்வு செய்கிறார் வள்ளலார்.

அருள் வழங்கும் தெய்வம் எங்கு இருக்கிறதோ அங்குதான் அருள் வழங்கப்படும்.

உலகில் அருள் வழங்கும் ஒரே தெய்வம்  அருட்பெருஞ்ஜோதி தெய்வம் மட்டுமே என்பதை வள்ளலார் கண்டு பிடித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுள்ளார்.

மூடநம்பிக்கையில் வாழ்ந்து கலை உரைத்த கற்பனைகளை நிலையானது என்று கண்மூடித்தனமாக பின்பற்றி அறிவு தெளிவு இல்லாமல்.அருளைப் பெற முடியாமல் வாழ்ந்து மக்கள் மாண்டு கொண்டே உள்ளார்கள்.

சத்திய ஞானசபை !

மக்களைக் காப்பாற்றவும் அருளை வழங்கவும் அருளைப் பெறவும் ஓர் இடத்தை தேர்வு செய்கிறார் வள்ளலார். அந்த இடம்தான்  *வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்*.

ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்தால் தான் அருளைப் பெறமுடியும்.எனவே வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைக்கின்றார்.

வள்ளலார் பாடல் !

  • வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
    வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
  • 2. திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
    சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
  • 3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
    தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
    இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
    இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
  • 4. இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
    இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
    ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
    உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
  • 5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
    விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
    எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
    இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
    வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
    வந்தாற் பெறலாம்நல்ல வரமே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

வருவார் அழைத்துவாடி வந்தால் பெறலாம் நல்ல வரமே என்கிறார்.வரம் பெற்றால் போதாது நல்ல வரம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

யார் வந்தால் நல்ல வரம் பெறலாம் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்தால் தான் நல்ல வரமான அருளைப் பெற முடியும். எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வடலூர் சத்திய ஞானசபைக்கு அழைக்கின்றார் வள்ளலார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமரந்து அருள்பாலிக்கும் இடமாக சத்திய ஞானசபையைத் தோற்றுவித்து உள்ளார் வள்ளலார்.

வரத்தில் இரண்டு வரம் உள்ளன.ஒன்று பொருள் வரம்.ஒன்று அருள்வரம்.இங்கே நல்ல வரம் என்பது அருள் பெறும் வரத்தைச் சொல்லுகின்றார் வள்ளலார்.

பொருள் வரம் பெற்றால் மரணம் உண்டு.அருள் வரம் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.ஆதலால் வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரமே என்கிறார் வள்ளலார்.

உலகில் அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர் சத்திய ஞானசபையாகும்.அருள் வழங்கும் ஒரேக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே !

சன்மார்க்க அன்பர்கள் !

சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு ஊரிலும் சன்மார்க்க சங்கம் அமைக்கலாம் .ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க தருமச்சாலை ஆரம்பிக்கலாம்.கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒளி வழிப்பாட்டு முறையை மக்களுக்கு போதிக்கலாம்.

வடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவதுபோல் .ஒவ்வொரு சங்கங்களிலும் சபையைக்கட்டி ஜோதி தரிசனம் காட்டுவது சரியானதா என்பதை சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.

அருள் பெறும் இடம் .அருள் வழங்கும் இடம் வடலூர் மட்டுமே என்றும்.வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரமே என்றும் தெளிவாக சொல்லியும்.சத்திய ஞானசபையை தோற்றுவித்தும் உள்ளார் வள்ளலார்.

ஜோதி தரிசனம் காணும் ஒரே இடம்.அருள் வழங்கும் ஒரே இடம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபை மட்டுமே என்பதை வள்ளலார் தெளிவுபட பதிவு செய்துள்ளார்..

வள்ளலார் பதிவு செய்துள்ளது !

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். 

இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். 
நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

மேலே கண்ட உண்மை தெரிந்து கொண்டு வடலூர் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தரிசித்து வேண்டும்போது எல்லா நன்மைகளும் பெற்றுக் கொள்ளலாம் என்றும்.இது ஆண்டவர் கட்டளை என்றும்.

இது சத்தியம் சத்தியம் என்றும்  கண்டிப்புடன் சத்தியம் வைத்துச் சொல்லி உள்ளார்.

நாம் வள்ளலார் சொல்லியதை எதையும் செவிமடுக்காமல் அவரவர் விருப்பம்போல் செயல்படுவதால் எந்த நன்மையும் எந்த லாபமும் பெறமுடியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பது சரியானதுதானா  என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..

சிந்திப்போம் செயல்படுவோம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு