செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

திருக்கதவு திறப்பது எங்கனம் ?

*திருக்கதவு திறப்பது எங்கனம்*.?

நாம் வாழும் பஞ்சபூத உலகம் உருண்டை வடிவம் ஆனது. உருண்டையான உலகத்தை விட்டு வெளியே செல்ல எதற்கும் எவருக்கும் அனுமதி கிடையாது.

*அருள் பெறல் வேண்டும் அருள் பெறாமல் எதுவும் நடைபெறாது*

அருள் பெற்ற சன்மார்க்கிகள் உலகில் ஒருவரும் இல்லை. திருவருட்பா படிக்கிறார்கள் பாடுகிறார்கள் மேடையில் பேசுகிறார்கள் விழாக்கள் எடுக்கிறார்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

*சாகாக்கலையும் சாகாக்கல்வியும் எவரும் கற்று மரணத்தை வெல்ல முடியவில்லை*. அதற்குண்டான பயிற்சி முயற்சியை பின்பற்ற வில்லை.

ஜீவகாருண்யம் என்ற பெயரில் அவர்களால் முடிந்த அன்னதானம் செய்கிறார்கள் அதுவும் மற்றவர்களிடம் வசூல் செய்து செய்கிறார்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு செய்வதில்லை இப்படி  செய்வதால் இறைவன் தொடர்பு கிடைக்குமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

தன்னை அறியாமல் செய்கின்ற செயல்கள் எதுவும் கைக்கூடாது.தன்னை அறிந்து இன்பம் உறும் தந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளை தொடர்பு கொள்ள கருணை மிகவும் அவசியமானது எனவேதான் வள்ளலார் *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்ஜோதி* என்று தெளிவாக சொல்லியுள்ளார் கருணை என்பது அன்பு தயவு  என்பதின் வடிவமே கருணை என்பதாகும்.

அருட்பெருஞ்ஜோதி என்னும்  கடவுள் தனிப்பெரும் கருணை உள்ளவர் அவரை தொடர்பு கொண்டால் மட்டுமே ஆன்மாவை (உள்ஒளியை) மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகள் விளக்கப்படும். திரைகள் விலகுவதற்கு நாம் செய்யும் முயற்சிகள் வழிகள் ஒழுக்கங்கள் சரியானதாக உள்ளதா என்பதை சிந்தித்து உணர்ந்து செயல்பட வேண்டும். உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதற்கு இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கம் நிறைந்த தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பஞ்சபூத உலகத்தை படைத்த இறைவனை தொடர்பு கொண்டால் மட்டுமே திரைகள் விலகி அருள் பெறும்வாய்ப்பு கிட்டும்.திருக் கதவுகள் திறக்கப்படும். அருள் என்னும் திரவம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையினால் ஆன்மாவின் உள் ஒளியிலிருந்து சுரக்கும். அந்த அருள் உடல் முழுவதும் நிறைந்து வழிந்து. பூரணமாகி பஞ்சபூத உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வல்லமை உடையதாகும்.

பஞ்சபூத உடம்பை  ஒளி உடம்பாக  மாற்றுவதே  மரணம் இல்லா பெரு வாழ்வு என்பதாகும். அதாவது அசுத்த  பூத அணுக்களை சுத்த பூத அணுக்களாக மாற்றுவதாகும். இதைத்தான் ஊனுடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதம் நல்கிய நாயகனே என்கின்றார் வள்ளலார் ஒளி உடம்பு பெற்றால் மட்டுமே உலகத்தை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுவதற்கு இறைவனால் அனுமதி வழங்கப்படும்..

*உலகத்தை படைத்த இறைவன் யார் என்பதை முதலில்  நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.

நாம் வாழும் இந்த உலகம் போல் பல கோடி அண்டங்கள்.உலகங்கள் தன்னைத் தானே இயங்கி கொண்டிருக்கின்றன நாம் வாழும் உலகம் எண்ணிலடங்கா விரிவு உடையதாகும் சுருங்கி விரியும் தன்மை உடையது.

அதேபோல் நம் உடம்பு சுருங்கவும் விரியவும்.ஒன்றும் இல்லாமல் செய்வதுமான தன்மை உடையதாகும்.

எண்ணிலடங்கா உலகங்களை படைத்தவர் யார் என்பதை கண்டு பிடித்தவர் திரு அருட்பிரகாச வள்ளலார்
என்பதை  நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
 வள்ளலார் கண்டுபிடித்த இயற்கை உண்மை கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.

ஜாதி சமயம் மதம் போன்ற கொள்கைகளையும் அவைகளில் சொல்லப்பட்ட கடவுள்களையும். பின்பற்றினால் எக்காலத்திலும் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகாது. திரைகள் விலகி அருளை பெறுவதற்கு ஒரே வழி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் பெற முடியும் என்பதை உண்மையாக சத்தியமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் உள்ளவர்கள் இந்த பிறப்பினால் அடையக்கூடிய லாபம் ஆன்ம லாபமே! அந்த ஆன்ம லாபத்தை காலம் உள்ளபோதே பெற்றுக் கொள்வதே இறைவன் கட்டளையாகும். இதுவரை இந்த உண்மை மனிதகுலத்திற்கு தெரியாமல் இருந்தது இதுசமயம் வள்ளளர் தெளிவாக தெரிவித்து உள்ளார்.

மனித குலத்திற்காக புதுமையான பொதுமையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சாலை சபை என்ற 3 மூன்று வழிகளை மனிதகுலத்திற்கு காட்டியுள்ளார் அவற்றில் சொல்லப்பட்ட வழிமுறைகளை தெளிவாக அறிந்து புரிந்து தெரிந்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே பெற வேண்டியதை பெற்றுக்கொள்ள முடியும்.

சமய மத வாதிகள் போல் சன்மார்க்கம் சார்ந்தவர்களும் ஒன்று கிடக்க ஒன்றை உளறிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் மக்கள் குழம்பிக் கொண்டும்  புலம்பிக் கொண்டும் உள்ளார்கள்.

வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை சபை வள்ளலார் சொல்லியவண்ணம் நடைபெறவில்லை அவற்றை செயல்படுத்த தகுதியானவர்கள் எவரும் இல்லை இதுவே இன்றைய நிலையாக உள்ளன. கூடிய விரைவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திரு அருளால் வள்ளலார் எண்ணத்தின் படி கொள்கையின்படி சிறப்பாக நடைபெறும் காலம் விரைவாக வந்து கொண்டிருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது உண்மை ஒழுக்க நெறியான சுத்த சன்மார்க்க கொள்கைகளை திசை மாறாமல்.நேர் வழியில் சென்று.வள்ளலார் சொல்லிய ஒழுக்கத்தை பூரணமாக கடைபிடித்து. ஆன்மாவை மறைத்து கொண்டு இருக்கும் மாயா திரைகளை விளக்கி நீக்கி திருக்கதவை திறக்கவேண்டும்.

 வள்ளலார் திருக் கதவை திறப்பதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் வேண்டுதல் எவ்வண்ணம் செய்கிறார் என்பதை கீழ்வரும் பாடல்களில் தெளிவாக  தெரிவிக்கின்றார்

வள்ளலார் பாடல் !

  • 1. திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
    திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
    உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
    ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
    கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
    கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
    செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 2. மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
    மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
    கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
    கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
    தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
    தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
    திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 3. உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
    உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
    இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
    என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
    கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
    கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
    திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 4. உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
    உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
    அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
    அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
    என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
    என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
    தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 5. இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 6. பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
    பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
    மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
    விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
    பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
    பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
    செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 7. கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
    ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
    இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
    தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 8. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
    ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
    ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 9. கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
    கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
    மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
    வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
    உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
    உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
    சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
  • 10. திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
    திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
    கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
    கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
    உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
    தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
    திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

மேலே கண்ட பாடல்களில் எளிய தமிழில் தெளிவாக அனைவரும் புரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.

ஆன்மாவை மறைத்துக் மறைத்து கொண்டு உள்ள திரைகளை நீக்கும் வழிமுறைகளை மிகத்தெளிவாக தெரிவித்து உள்ளார் மேலே கண்ட பாடல்களில் உள்ளபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்புகொண்டு வேண்டினால் பெற வேண்டியதை நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம்.

வள்ளலார் காட்டிய நேர்வழியில் சென்றால் மட்டுமே திருக்கதவு  திறந்து அருள் பெறும் வாய்ப்பு உள்ளன.

இன்று உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் பேசப்படுகிறது.அந்த வேலையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே செய்து கொண்டுள்ளார்.

*சுத்த சன்மார்க்க தார்க்கு  சாகாக்கலை.சாகாக்கல்வியின் தரமான அதி தீவிர முயற்சியும் பயிற்சியும் அவசியம் தேவை.அதற்காக பெரு முயற்சி எடுத்து வருகிறேன் அதற்கான நல்வழியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அமைத்துக் கொடுப்பார்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

1 கருத்துகள்:

16 மார்ச், 2020 அன்று 5:24 AM க்கு, Blogger Blog27999 கூறியது…

Do this hack to drop 2lb of fat in 8 hours

Over 160 thousand women and men are utilizing a simple and SECRET "liquids hack" to lose 2 lbs each and every night while they sleep.

It is scientific and it works with anybody.

This is how you can do it yourself:

1) Hold a drinking glass and fill it up half the way

2) And now do this amazing HACK

and you'll become 2 lbs lighter the next day!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு