திங்கள், 24 பிப்ரவரி, 2020

பஞ்ச பூத தேகம் ஒளி தேகம் மாற்றம் !

*ஒளி தேகம் மாற்றம்* !

பஞ்ச பூத தேகம்!  ஒளி தேகம் மாற்றம் !

நம்மை இயக்கும் ஆன்மாவைப் பார்த்தால் ஒழிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பார்க்க முடியாது. ஆன்மாவை புற ஊனக் கண்களால் பார்க்க முடியாது.அருள் கண்களால் மட்டுமே பார்க்க முடியும்.தொடர்பு கொள்ள முடியும்.

எல்லா உயிர்களையும் ஆன்ம ஒளியாக இருந்து இயக்குபவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

எனவே தான் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்று வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.
மனித தேகம் எடுத்த நாம்.
இந்த அசுத்த பூத காரிய தேகம் எவ்வாறு பின்னப்பட்டது. எதனால் பின்னப்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்

இந்த தேகத்தை இயக்க உயிர். மற்றும் உள் ஒளி எப்படி வந்தது என்ற உண்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே உடம்பையும் உயிரையும் உள் ஒளி என்னும் ஆன்மாவையும் பாதுகாக்கும் வழியை தெரிந்துகொள்ளலாம்.

உள்ளொளி என்னும் ஆன்மாவானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டது  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமானது  அருட்பெரு வெளி என்பதாகும். அதற்கு பர வெளி என்றும் அருட்பெரு வெளி என்றும் பெயர்.

அப் பரவெளியில் அருள்சக்தி நிறைந்து இருக்கின்றன. அதற்கு கடவுள் சமூகம் என்று பெயர் அந்த  சமூகத்தில் ஆன்ம ஆகாசம் என்ற ஒரு தனி இடம் உண்டு அங்கு ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றன அதற்கு ஆன்ம அணுக்கள் என்று பெயர். ஆன்ம அணுக்கள் வெளியே செல்ல செல்ல குறையாமல் நிறைந்து கொண்டே இருக்கும்.

*அந்த ஆன்மாக்களுக்கு வள்ளலார் சொல்லும் விளக்கத்தை பார்ப்போம்*!

இயற்கை உண்மை நிறைவாகி உள்ள  சுத்த சிவாஅனுபவ வெளியில் இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ் ஜோதி சொரூப ராய் இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பம் அடைதற் பொருட்டு திருஉளக் கருணையால் செய்து அருள்கின்ற சர்வ வல்லவர் ஆகிய தனித்தன்மை கடவுளே!

அறிவு என்பது ஓர் சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்த காரத்தில் நெடுங்காலம் சிற்றணுப் பசுவாகி அருகிக்கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி இருந்து .அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து.எல்லா பிறப்பு உடம்புகளிலும் உயர்வு உடைத்தாகிய அறிவுள்ள இம்மனிதப் பிறப்பு உடம்பில் என்னைவிடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனும் அறிவேன்! எவ்வாறு கருதுவேன் ! என்னென்று சொல்வேன்.என்று போற்றி போற்றி புகழ்வேன்  என்கிறார் வள்ளலார் சொல்லுகின்றார்.

ஆன்மாவானது இவ்வுலகில் வாழவேண்டுமானால் அதற்கு வேண்டிய சுதந்திரம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்பட்டு உள்ளது.

சுதந்திரம் கொடுக்கப் பெற்றதால் ஆனமாவிற்கு உயிர்.உடம்பு. கொடுக்கப்பட்டது. பஞ்சபூத உலகில் போகப்பொருட்கள் எடுக்க அனுபவிக்க தடை இல்லாமல் வழங்கப்படுகின்றது.

*ஆன்மாவானாது 84 லட்சம் யோனி பேதங்களிலும் உள்ள ஜீவன்களிடத்தும் சென்று இறுதியாக மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது. *ஆன்மா அத்தனை பிறப்புகளும் எடுத்ததால் தான்.எல்லா ஆன்மாக்களிடத்தும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கிறார் வள்ளலார்*

ஆன்மாவானது  தேக சுதந்தரம் .போக சுதந்திரம்.ஜீவசுதந்திரம் அனுபவிக்கின்றவரை அருள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.

அருள் பெறுவதற்கு எல்லாம் வல்ல *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் சுதந்தரம்  பெறவேண்டும்.என்பதை வள்ளலார் முடிந்த முடிவாக *சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்*  தான் பெற்ற அருள் அனுபவத்தை தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

உயர்ந்த அறிவு பெற்ற மனிதப்பிறப்பு எடுத்த நாம் *அறம்.பொருள்.இன்பத்தை குறுகிய காலத்தில் அனுபவித்து அனைத்தையும் பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் சுதந்தரத்தைப் பெற வேண்டும்*.

திருவருள் சுதந்தரம் பெறுவதற்கு கருணை நன் முயற்சி வேண்டும் என்கிறார்.

*கருணை நன் முயற்சி எவ்வாறு பெற முடியும்* ?

ஜீவ தேகம் எடுத்துள்ள ஆன்மா எல்லா உயிர்கள் மேலும் அன்பு தயவு கொள்ள வேண்டும். *அன்பும் தயவு மட்டுமே கருணைக்கு வழிகாட்டும்* .ஆன்மாவில் கருணை நிறைந்து பொங்கி வழிய வேண்டும்.ஆன்மா மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.உருக்கம் அடைய வேண்டும்.

அவ்வாறு ஆன்மா அடைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணையை நாட வேண்டும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை உள்ளவர்.ஆதலால் *ஆன்மாக்களுக்கு கருணையுடன் அருள் பெறும் சுதந்தரம் வழங்குவார்*.

தேக சுதந்தரம். போக சுதந்தரம்.ஜீவ சுதந்தரத்தை நீக்கி அருள் சுதந்தரம் வழங்கும் போது பூரண அருள் பெறும். அருள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வள்ளலார் மிகத் தெளிவாகச் சொல்லுகின்றார்.!

எனது விருப்ப முயற்சி இங்கனமாக .அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடுமென்று அரியத் தொடங்கிய தருணத்து.

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது. *எல்லாம் உடைய கடவுளரது திருவருள் சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடும்* என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்.

மேலும் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து. *எனது யான் என்னும் தேகசுதந்தரம்.போகசுதந்தரம்.ஜீவ சுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும். என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்*.

வள்ளலார் விரும்பிய வண்ணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருள் சுதந்தரம் அளித்துள்ளார்.

வள்ளலார் பாடல்.!

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
தூயநல் உடம்பினில் புகுந்தேம்

இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்

பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
பரிசுபெற் றிடுகபொற் சபையும்

சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்கநின் சீரே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
மனித தேகத்திற்கு தொடர்ந்து கிடைக்கின்ற நேருகின்ற *மரணம்.பிணி.மூப்பு.பயம்.துன்பம்* முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு .எக்காலத்தும்.எவ்விடத்தும்.எவ்வித்த்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ வேண்டும் என்பதே மனிதப் பிறப்பின் சத்திய அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நாம் காலத்தை வீண் விரையம் செய்யாமல்
  வள்ளலார் சொல்லிய வண்ணம் அருள் பெறுவதற்கு முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

*நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்*.

ஆன்மா இவ்வுலகில் வரும் போது ஏதும் அறியாத சிற்றணு பசுவாகும்.ஆன்மா உயிர் உடம்பு பெற்று சிற்றின்பத்தை அனுபவித்து வாழ்ந்து முற்றுப்பெற்று.பின்பு உண்மைத் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. *அருள் ஒளியான ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டு வாழ்வதே பேரின்ப வாழ்க்கையாகும்*.

*இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட ஆன்ம அறிவுள்ள மனிதர்களே அருளைப் பெறும் தகுதி உடையவர்கள்*.

இந்த உண்மை அறியாமல் இவ்வுலகில்  எவ்வளவு பெரிய உயர்ந்த பதவி வகித்து.உலகை ஆண்டு பேர் புகழுடன் வாழ்ந்தாலும் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் வாழ்க்கை அற்ப வாழ்க்கையாகும் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கம் தருகிறார்.

*வள்ளலார் பாடல்* ! 

கரணம்மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்

மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே

திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திர சிற் சபையில்

சரணம் எனக்களித்து எனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே!.

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தருகின்றார்.

இந்திரியம்.கரணம் மகிழ்ச்சி அடைவது உலகியல் பொருள் வாழ்க்கையாகும்..ஜீவன் ஆன்மா மகிழ்ச்சி அடைவது அருள் வாழ்க்கையாகும்.

மரணம் பயம் தவிர்க்காத வாழ்வதில் எந்த பயனும் இல்லை.மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு உண்டு. *எந்த பிறப்பு என்பதே தெரியாதது கொடுமையிலும் கொடுமையாகும்*. எனவேதான் இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி கொள்ளுங்கள் என்கிறார்.

நாம் இனியும் வீண்காலம் கழிக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்வதே சிறந்த பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும். எனவேதான் *சாகாதவனே சன்மார்க்கி* என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகின்றார்.

நாம் தயவு உடைய சன்மார்க்கம் சார்ந்தவர்களாக இருக்கிறோமேத் தவிர.அருள் உடைய சன்மார்க்கம் அடைந்தவர்களாக இல்லை. முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.முயற்சி வெற்றிபெற பல சாதி.சமய.மதக் கொள்கைகள் தடையாக இருக்கின்றது.

சாதி சமய மத சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ..

எங்குலம் என்குலம் என்பது தொண்ணூற்று ஆறு அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி.

சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

என்று ஆயிரக்கணக்கான பாடல்களிலே தெரியப்படுத்துகின்றார்.
நாம் அருளைப் பெறுவதற்கு முக்கிய தடைகளே சாதி.சமய மதங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் அவற்றின் கொள்கைகளும் அதன் வழிகாட்டுதலுமேயாகும்..
சுத்த சன்மார்க்கத்திற்கு சாதனம் !

சாதனம் என்னவென்றால் ..
*எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் அன்பும்* முக்கிய சாதனமாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது. *கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக*.

மற்று எல்லாம் மருள் நெறி எனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்று இருக்கின்றேன் என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

பழைய வாழ்கை வரலாறுகளையும் ஆன்மீக சித்தாந்தங்களையும் படித்து தெரிந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.இதுவரையில் உண்மையை தெரிந்து கொள்ளாமல் கண்டதை எல்லாம் படித்து தெரிந்து கொண்டீர்கள்.அதுவே ஆன்மாவை தெரிய வொட்டாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளாக மறைத்து கொண்டுள்ளது.

அந்த திரைகளை நீக்கி ஆனமாவைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறும் வாழ்க்கையை தெரிந்து கொள்ளவே வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு வருவிக்க வந்துள்ளார்.

இனி சுத்த சன்மார்க்க காலம் !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும்.

*பலவகைப்பட்ட சமய பேதங்களும்*, *சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய்* சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்.

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற *பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல*.

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.!

பஞ்ச பூத அசுத்த ஆணுக்களால் பின்னப்பட்ட உடம்பை .சுத்த பிரணவ ஞான தேக அருள் ஒளி அணுக்களாக மாற்றுவதே மரணத்தைj வெல்லும் வழியாகும்.

மேலே கண்ட உண்மையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் சொல்லப்பட்டது.

படித்து தெரிந்து அறிந்து உணர்ந்து  கொண்டு உண்மையான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

2 கருத்துகள்:

7 மார்ச், 2020 அன்று 3:04 PM க்கு, Blogger Unknown கூறியது…

If you're looking to lose pounds then you certainly have to try this totally brand new tailor-made keto diet.

To create this keto diet service, licensed nutritionists, fitness couches, and professional cooks united to produce keto meal plans that are useful, decent, economically-efficient, and satisfying.

Since their launch in 2019, 100's of individuals have already completely transformed their figure and well-being with the benefits a smart keto diet can give.

Speaking of benefits: in this link, you'll discover eight scientifically-certified ones given by the keto diet.

 
24 ஏப்ரல், 2021 அன்று 4:28 PM க்கு, Blogger Karthikeyan Ravi கூறியது…

ஐயா வணக்கம் எவ்வாறு கடைபிடிப்பது

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு