திங்கள், 3 டிசம்பர், 2018

அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥🔥 நிறை அருள் பூரணத்தால் பெற்ற தெருள் நிறை திருவருட்பா 🔥🔥🙏
🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼
       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🔥🙏
   
கலியுக முடிவு சுத்தசன்மார்க்க யுகம் தொடக்கம் 🌺

கர்மசித்தர் ஆட்சி முடிவு ஞானசித்தர் ஆட்சி தொடக்கம்🌺

உருவ வழிபாடு முடிவு ஜோதி வழிபாடு தொடக்கம்🌺

சாதி சமய மதங்களின் முடிவு சமரச சுத்தசன்மார்க்கத்தின் தொடக்கம்🌺

மனிதநேயம் கடந்த ஆன்மநேயம் வெளிப்படுதல்🌺

கோயிலில் சென்று இறைவனிடம் பத்தி செய்து முக்தி பெற்றது நீங்கி,

ஒவ்வொரு உயிர்களின் தேகங்களையே கோயிலாகக் கொண்டு அவற்றின் உயிர்களையே கடவுளாக கண்டு அவைகளுக்கு உபகாரம் செய்கின்ற ஜீவகாருண்ய செய்கையே கடவுள் வழிபாடாகவும்  அறிந்து, அந்த ஜீவகாருண்யத்தினால் மட்டுமே மோட்சமாகிய அருள்வீட்டை அடைந்திடும் வழியாகவும் கண்டுகொள்ளப்பட்டது 🌺

பிரபஞ்ச வரலாற்றில் முதன்முதலில் ஓர் ஆன்மா ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அருள்சக்தியின் வடிவாய் நின்று இவ்வுலகை அரசாளுகின்றது🌺

இதுவரை இவ்வுலகில் நிலம்,
நீர்,
காற்று,
நெருப்பு ,
ஆகாசம் ,
சூரியன்,
சந்திரன் என்று ஏழு மூர்த்தங்களுக்கு கர்மசித்தர்களின் ஆட்சியில் ஆலயங்கள் கட்டப்பெற்று உருவ வழிபாட்டால் வழிபடப் பட்டது 🌺

ஆனால் ,
எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஓர் ஆலயம் எங்குமே இல்லாமல் இருந்தது🌺

ஏனென்றால் எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் ,
 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, பூரணஅருள்வடிவாகி,
அருட்பெருஞ்ஜோதி மயமாய் நின்று,
இவ்வுலகில் எல்லாம் செய்யவல்ல ஞானசித்தியைப் பெற்றுக்கொண்ட ஓர் சுத்தசன்மார்க்க ஞானசித்தரால்தான் ,

அட்ட மூர்த்தங்களின் கடைசி மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஒரு திருக்கோயிலை,
உண்மை கடவுள் வழிபாடான ஜோதிவழிபாட்டுடன்  கட்டப்படவேண்டும் என்பது திருவருள் சித்தமாய் இருந்ததனால்,

நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானும் இதுவரை இவ்வுலகில் யாரும் பெறாத பூரண அருள் அனுபவத்தை பெற்றுக்கொண்டதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ,

அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அகமாகிய சத்தியஞானசபையில் வந்தமர்கின்றார்கள்🌺

இதனால் ,
பூரண அருள் ஞானசித்தராய் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தனது அகமாகிய சத்தியஞான சபையில் கண்டு தரிசித்து அனுபவித்த " அகவாழ்வாகிய சிற்சபை " அனுபவத்தையும்,

அகத்திலிருந்து  அனகமாக பெற்ற
 " பொற்சபை வாழ்வாகிய அனகவாழ்வு " அனுபவத்தையும் பெற்றுக்கொண்டதால்,

இப்பிரபஞ்சத்தில் பக்குவ ஆன்மாக்களாகிய ஞானிகளும் அருளாளர்களும் தனது அகத்தே கண்டு அனுபவித்துவந்த அருட்பெருஞ்ஜோதி அருள் தரிசனத்தை ,

இனி,
இவ்வுலகவரும் புறத்தே கண்டு தரிசித்திட வேண்டி ஆண்டவரும் திருவுள்ளங்கொண்டு ,

முதன் முதலில் இப்பூவூலகில் புண்ணியபூமியாம் வடலூரில்,
இயற்கை உண்மை (சத்து) நிறைவாகிய திருவுருவை தரித்து,

இயற்கை விளக்கம்(சித்து) நிறைவாகிய சுத்த சிவானுபவ சத்தியஞானசபையில்,

இயற்கை இன்பம்(ஆனந்தம்) நிறைவாகிய ஓர் சிவானந்த ஒருமை திருநடச் செய்கையை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டும்,

மற்றும் தனது சச்சிதானந்த  உண்மையை(மெய்யறிவானந்தம்) எவ்வுயிர்களும் அறிந்து
அந்த சச்சிதானந்தமயமாய் அருள் வாழ்வு வாழ்ந்திட வேண்டியும் ,

வேதாந்தம்,சித்தாந்தம்,சுத்தவேதாந்நம்,
சுத்தசித்தாந்தம் கடந்த பூரண அருள்நிலையான சுத்தசன்மார்க்க சுகப் பெரு நிலையில் கண்டுகொள்ளப்பட்ட சுத்தசிவமாகிய அருட்பெருஞ்ஜோதி கடவுளை பற்றி அனைவரும் அறிந்து தெளிந்து அனுபவம் பெறுவதற்கும் என்றே,

வடலூர் பெருவெளியில் சத்தியஞானசபையை திருவருட்பிரகாசப் பெருமானாரால் கட்டிமுடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அத்திருச்சபையில் சித்திஎல்லாம் விளங்க திருநடம் செய்து அருள்பாலிக்கின்றார்கள் 🌺

இதன்பொருட்டு இவ்வுலகில் புலைகொலை தவிர்த்த சுத்தசன்மார்க்கப் பெருநெறியை திருவருள் சம்மதத்துடன் நமது வள்ளல் பெருமானாரால் முன்னின்று நடத்தப்படுகின்றது.

அந்த சுத்தசன்மார்க்கப் பெருநெறி அனுபவத்தைப் பெறுவதற்கு , அதற்குரிய பக்குவத்தையும் பதத்தையும் அடைவதற்கு ஏதுவாக பூரண அருள் ஞானியாம் நமது அருட்பெருந்தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் கொடுக்கப்பட்ட சுத்தசன்மார்க்க சுத்தவேதப் புத்தகமாகிய திருவருட்பா ஆறு திருமுறைகளை உள்ளடக்கமாய் கொண்டு விளங்குகின்றது 🌺

இதில் முதல் ஐந்து திருமுறைகள் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே அவரவர்களின் அருள் அனுபவத்திற்கு தக்கவாறு "அனேகராய்" இருந்த நிலையைக் காட்டியும்,

ஆறாம் திருமுறை,
பூரணமான அருள் அனுபவம் பெற்றபின் தனது முழு அருள் அனுபவ உண்மையை வெளிப்படுத்தி , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே "ஏகராய்" இருக்கின்ற அருட்பெருநிலையையும் காட்டி அம்மயமாய் தம்மை ஆட்கொள்ளுகின்ற தன்மையையும் விளக்குவதாய் உள்ளது🌺

இதுவே இவ்வுலகின் கடைசி வேதப் புத்தகமாகும்.
இத்திருவருட்பா ஒன்றே இனி இவ்வுலகில் எங்கெங்கும் ஓதப்பட இருக்கின்ற வேதப் பொக்கிஷமாகும்🌺

காரணம் இது வரை இவ்வுலகில் நிலைபெற்று வந்த சமயம் மதம் மார்க்கங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டன,

அந்தந்த மதத்திலும் சமயத்திலும் ஓதிவந்த சமய மத நூல்களும் இனி சிறிது சிறிதாக ஓதுவார் இன்றி ,

எல்லோரும் சுத்தசன்மார்க்கம் சார்ந்து திருவருட்பா ஒன்றையே ஓதுவார்கள் இதுதான் திருவருள் ஆணையாகவும் உள்ளது🌺

சமய மதத்திற்காக வாதம் செய்கின்ற வாதிகள் கடைசிவரை இருக்கத்தான் செய்வார்கள் .

காரணம்,
அதுதான் அவர்களுக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட வேலை ,அவற்றை அவர்கள் சரியாக செய்கின்றார்கள் .
அதுவும் திருவருள் காரியமேயாகும்🌺

அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க சுத்தசன்மார்க்கம் உலகமெங்கும் வளர்ந்துகொண்டே இருக்கும்🌺

சமனத்தை கரையேற்ற திருஞானசம்பந்தர் வருவிக்கப்பட்டது போன்று ,

சமய மதத்தை கரையேற்றி கடவுள் உண்மையை வெளிப்படுத்தும் சுத்தசன்மார்க்கத்தை நிலைநிறுத்த வள்ளல் பெருமான் வருவிக்கப் பெற்றார்கள்🌺

எப்பொழுது சமயமடாதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இலங்கை ஆறுமுக நாவலரை அழைத்துவந்து கடலூர் நீதிமன்றத்தில் திருவருட்பாவை மருட்பா என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துபொழுது,

அதில் திருவருட்பாவிற்கு சாதகமாக திருவருட்பா மருட்பா அல்ல அது திருவருட்பாவேயாகும் என்று நீதிமன்றம் நீதி வழங்கியதோ அன்றே சமயமும் மதமும் மறைவை நோக்கிய பயணத்தை தொடர்ந்தன🌺

இது எல்லாமே திருவருள் சம்மதம் ஆகும்.
எப்படி என்னில் அன்று சமய மடாதிபதிகள் எதிர்ப்புகாட்டி ஆறுமுகநாவலரைக் கொண்டு அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனால்தான் ,

உலகத்தின் எங்கோ ஒர் மூலையில் இருக்கும் வடலூர் என்ற ஊரில் தோற்றுவிக்கப்பட்ட சுத்தசன்மார்க்கம் ,

திருவருட்பாவிற்கு யாதும் தடைக்கிடையாது
அது மருட்பா அல்ல அருட்பாதான் என்று ,

திருவருட்பாவிற்கு அரசே அங்கீகாரம் தந்து இவ்வுலகமுழுதும் பரவியிருந்த சமயத்தார்கள் எல்லாம் அறிந்துகொள்ளும் அளவிற்கு திருவருட்பாவை அவர்களைக்கொண்டே உலகமறியச் செய்தது திருவருள் காரியமேயாகும் 🌺

திருவருட்பாவிற்கு எப்பொழுது அரசே அங்கீகாரம் கொடுத்து வழக்கு தொடர்ந்த சமயவாதிகளின் வழக்கு தோற்றுபோனதோ அப்பொழுதே சமயம் தேய்பிறையானது🌺

இவையெல்லாம் திருவருள் காரியமே என்பதைத்தான் நாம் அனைவரும் சத்தியமாக உணர்தல் வேண்டும்🌺

இங்கு ,
வாதம் செய்தல் கூடாது,
ஏனென்றால் இங்கு இதுவரை நான் சொல்லியுள்ளது எல்லாம் பெருமானே ஆறாம் திருமுறையில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள் மற்றும் தற்போது நாமும் ஒவ்வொரு சமயக்கோயில்களிலும் திருவருட்பாவே ஓதப்படுதலை கண்ணுறக் காண்கின்றோம்🌺

ஆகலில் ,
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகள்,
அனைவரும் இவ்வுண்மையை தயவாய் தங்களது மேலான அறிவால் ஆராய்ந்து உணர்ந்து,
இவ்வுலகில் அவர் "அன்றி ஓர் அணுவும் அசையாது என்றால்"

இன்று சாதி சமய மத பேதமற்ற சுத்தசன்மார்க்கம் இவ்வுலகில் நிலைபெற வேண்டி அருள்செய்தது அந்த ஒருவரே என்பதை உணர்ந்து ,

ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதமற்ற சமரசத்தை போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை அனைவரும் அடைந்து ,

அருள் வாழ்வைப் பெற்று , அருள் நிலையில் வாழ ,சாகாக் கல்வியைப் போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை பற்றுவோம் ! போற்றுவோம் !🌺
......நன்றி !🔥🙏
......வள்ளல் மலரடிப் வாழ்க ! வாழ்க !🔥🙏
......பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🔥🙏
.....வடலூர் இரமேஷ் ;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு