சனி, 17 நவம்பர், 2018

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமா ? சந்தேகமா ?

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமா ? சந்தேகமா ?

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமா ? என்று உலகில் உள்ள  எல்லோரும் வியக்குகிறார்கள்.

வள்ளல் பெருமான் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளார் என்பது சத்தியமான உண்மை...

வள்ளல் பெருமான் சுத்த சன்மார்க்க கொள்கையே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டுவதே யாகும்.

இறைவனுடைய கட்டளையும் அதுவே !

இந்த உண்மைத் தெரியாமல் கடவுள் மறுப்பு கொள்கை உடைய பகுத்தறிவாளர்கள்... பிராமணர்கள் மீது உள்ள வெறுப்பால்...உண்மை என்னவென்று தெரியாமல் முட்டாள் தனமாக.
வள்ளலாரை கற்பூரத்தை வைத்து பிராமணர்கள் கொளுத்திவிட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி விட்டார்கள்.

அறிவு விளக்கம் இல்லாத அருளாளர்களும். ஆன்மீக வாதிகளும் உண்மைத் தெரியாமல்  கண்டபடி உளரிக் கொண்டு உள்ளார்கள்.

*மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.*

எல்லா உயிர்களும் வாழ்வதற்கு பொருள் உணவு வேண்டும்.என்பது அனைவரும் அறிந்த்தே..பொருள் உணவு இல்லை என்றால் எல்லா உயிர்களும் அழிந்து மாண்டு போகின்றது.உண்மைதான்...

உயிர் தோன்றிய காலத்தில் இருந்தே பொருள் உணவால் சிறியதாக தோன்றிய
(தாவரங்களில் இருந்து மனிதர்கள் வரை) உடம்பு பெரியதாக வளர்ச்சி அடைந்து முதுமை அடைந்து பொருள் உணவை முழு வயது உள்ளவரை. ஏற்றுக் கொள்ள முடியாமல் மாண்டு போகின்றது...

மனித உடம்பு வளர்ச்சிக்கு நாம் தினமும் ஆகாரம் உண்கின்றோம்.நாம் உண்ணும்  ஆகாரத்தை ஒருமணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து எடுத்து ஊட்ட வேண்டிய தத்துவ உருப்புகளுக்கு ஊட்டுகின்றது.

மறுபடியும் இரண்டு மணி நேரத்தில் அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி  இரண்டரை வராகன் எடையில் கோச நுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும்.பிரமந்திரத்தில் அரையுஞ் சேர்த்து

மற்றவைகளைக் கொண்டு அங்காங்கு விளக்கத்தை யுண்டு பண்ணி .ஈளை.குரும்பை.நகத்தூசு.தொப்புள் அழுக்கை வெளிப்படுத்துகின்றது.

மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள  திரவாம்சத்தைப் பிரித்து.உதிரமாக்கி ஊட்டுகின்றது .
மூன்று மணிக்கு மேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது.இதுபோல் எந்த வஸ்துக்களையும்.தன்னைத்தானே பிரிக்கின்றது...

*இது யாரால் இப்படி செய்யப் படுகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்*

.நாம் உண்ணும் உணவு பல இரசாயன மாற்றம் செய்து இரத்தமாக மாற்றம் அடைகின்றது. பின் இரத்தமானது உடம்பு வளர்ச்சிக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு.. அதில் உள்ள வீரிய அணுக்களை பிரித்து வேதியல் மாற்றம் போல் வீரியமான சுக்கிலமாக ஒருபையில் சேர்க்கிறது.

அதற்கு குண்டலினி பை என்றும் குண்டலினி வட்டம் என்றும் சொல்லப்படுகிறது...
அந்த விந்து என்னும் சுக்கிலம் தான் ஆண் பெண் உறவு கொண்டு மீண்டும் ஒரு உயிரை உண்டாக்குகிறது.

இவை அனைத்தும் நாம் உண்ணும் பொருள் உணவால் நம் உடம்பு இயங்குகிறது.. பின்பு நரை.திரை.பிணி.மூப்பு அடைந்து மரணம் வந்து விடுகின்றது.

உடம்பை விட்டு உயிர் பிரிகின்றதை மரணம் என்றும் இறப்பு என்றும் பெயர் வைத்துள்ளோம்.

*வள்ளலார் கண்டு அனுபவித்த அருள் உணவு.!*

அழியும் உடம்பை அழியாமை யாக்கும்  வகையை கண்டு பிடித்தவர் வள்ளலார் !

வள்ளலார் பாடல் !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

ஆன்மாவிற்கு உயிர் வந்த வழியும்.உடம்பு வந்த வழியும் தெரிந்து கொண்டால் தான் ஆண்டவர் யார் என்பது தெரிந்து கொள்ள முடியும்..அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எதையும் தெரிந்து கொள்ள முடியாது....

மேலே கண்ட பாடலின் வாயிலாக மக்களுக்கு புரிய வைக்கிறார்.. உடம்பையும்.உயிரையும்.ஆன்மாவையும் இயக்குகின்றவர் யார் ? என்பதை கண்டு பிடிக்கின்றார்...

சமய மதங்கள் சொல்லிய கடவுள்கள் யாவும் உண்மைக் கடவுள்கள் அல்ல ! எல்லாமே ஜட தத்துவங்கள்.இவைகள் யாவும் ஜடங்கள் இந்தக் கடவுள்களுக்கு எந்த சக்தியும் ஆற்றலும் இல்லை .என்பதை வள்ளலார் தெளிவாக தெரிந்து அறிந்து புரிந்து கொள்கிறார்..

தனது சத்திய அறிவால் கடவுளைக் காண முயற்சி செய்து உண்மைக் கடவுளைக் கண்டு கொள்கிறார்...

வள்ளலார் சொல்வதை நன்கு கவனிக்கவும் !

தமது திருவருட் சக்தியால்
தோற்றுவித்தல்.
வாழ்வித்தல்
குற்றம் நீக்குவித்தல்
பக்குவம் வருவித்தல்
விளக்கம் செய்வித்தல்

என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை.
இயற்று விக்கின்றவர் என்றும்.
எல்லாம் ஆனவர் என்றும்.
ஒன்றும் அல்லாதவர் என்றும்.
சர்வ காருண்யர் என்றும்.
சர்வ வல்லபர் என்றும்.

எல்லாம் உடையவராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை..

அருட்பெருஞ்ஜோதியர்

என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் .அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்...

என்ற உண்மையை அறிந்து கொள்கிறார்.வள்ளலார்.
மரணத்தை வெல்லும் வழியைக் கண்டு பிடிக்கின்றார்...

முன்பு சொல்லியதைப் போல். பொருள் உணவால் உடம்பும் உயிரும் பிரிகின்றது .ஏன் பிரிகிறது ? எதனால் பிரிகிறது ? என்பதை ஆராய்ந்து.தெரிந்து பிரியாமல் அழியாமல் வாழும் வழியைக் கண்டு பிடிக்கின்றார்..

அருள் உணவு பெற்றால் தான் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற முடியும்..பிறப்பு இறப்பு இல்லாமல் வாழமுடியும்..என்பதை தெரிந்து கொள்கிறார்.

அருளை யாரிடம் பெறுவது ? நம்மை படைத்த உண்மைக் கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம்தான் பெற முடியும் .பெற வேண்டும் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வது எவ்வண்ணம் என்பதும்.அவரிடம் அருளைப் பெறுவது எவ்வண்ணம் என்பதும் தான் வள்ளலார் எழுதிய திருஅருட்பா முழுவதும் சொல்லப்பட்டு இருக்கின்றது..வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்கத்தை கடைபிடித்து திருஅருட்பாவைப் படித்தால் தான் புரியும்.

அருளைப் பெறுவது எப்படி என்பதை ஞானசரியை 28 பாடல்களில் தெளிவாக சொல்லி உள்ளார்...

முதல்பாடல் மிகவும் முக்கியமான பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலை கண்ட பாடலிலே இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு நினைந்து.உணர்ந்து.நெகிழ்ந்து அன்பே நிறைந்து ..உடம்பு முழுவதும் கண்ணீர்  நிரம்பும் வரை அழுது நன்நிதி என்னும்.என்றும் அழியாத அருள் அமுத நிதியைப் பெற வேண்டும்.என்கிறார்.

என் உரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்தும் நாம் வம்மின் உலகிலயலீர்
மரணம் இல்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்.

நான் மற்றவர் போல் புனைந்து உரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் .நான் அருளைப் பெற்று மரணத்தை வென்ற அனுபவத்தை சொல்கிறேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே என்கிறார்...

உடம்பு மாற்றம் !

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது ஊன் உடம்போடு நீண்ட காலம் வாழ்வதும் அல்ல...

சமாதி நிலையில் ஒடுங்கி இருப்பதும் அல்ல..!

பஞ்ச பூதங்களில் கலப்பதும் அல்ல.!

காணாமல் போய்விடுவதும் அல்ல !

ஊன் உடம்பை அருளினால்  ஒளி உடம்பாக மாற்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து மீண்டும் பிறப்பும் இறப்பும் இல்லாமல் வாழும் வாழும் வாழ்க்கையே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்

அதற்குத்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆதல் என்று பெயர் அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்றும் பெயர்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் பெயர்...மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் பெயர்...

அருள் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்..

உபாய மார்க்கத்தாலோ.உண்மையைத் தெரிந்து கொண்டதாலோ மரணத்தை வெல்ல முடியாது. அனுபவ மார்க்கத்தால் மட்டுமே அருளைப் பெற்று  மரணத்தை வெல்ல முடியும்..வேறு சமய மத மார்க்கத்தின் வழியாக மரணத்தை வெல்ல சாத்தியமே இல்லை..

உடம்பும் உயிரும் அழிக்காமல்  மாற்றம் அடைய செய்விப்பதே மரணத்தை வெல்வதாகும்..அவை வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பொது நெறி என்னும் மெய்நெறி.
திருநெறியால் மட்டுமே சாத்தியமாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலின் வாயிலாக உண்மையைத் தெரிவிக்கின்றார்.

அருள் பெறும் வழி !

அருள் நம் சிரநடு ஆன்மாவில் இருந்து சுரக்க வேண்டும்.வேறு வழியால் அருள் பெற முடியாது...அதுவும் அருட்பெருஞ்ஜோதி பெருங் கருணையால் தான் கிடைக்கும்...

வள்ளலார் கருணையே வடிவமாக தன்னை மாற்றிக் கொண்டார் .எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால்.

அறியாமை.அஞ்ஞானம் என்னும் திரைகளை எல்லாம் நீக்கி அருளை வாரி வழங்கினார்.

மேலும் அருளைப் பெறுவதற்காக. ஒழுக்கத்தை முழுவதுமாக கடைபிடித்து .சுத்த உஷ்ணத்தை உடம்பு முழுவதும் நிறைப்பிக் கொண்டார்.எனவே அருளை அவரால் பெற முடிந்தது..

அன்பு.தயவு.கருணையினால் மட்டுமே சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடியும்...

முரட்டுத் தனமான தியானம்.யோகம்.தவம்.வழிபாடு போன்றவை செய்வதால் சுத்த உஷ்ணம் உண்டாகாது..

சுத்த உஷ்ணம் பெற்றால்.தான் அருளைத் தாங்கிக் கொள்ள முடியும்.அவை கோடிக்கணக்கான அக்கினிப் பிரகாசம் உடையதாகும்.

ஆன்மாவே கோடிக்கணக்கான சூரிய பிரகாசம் உடையது என்கிறார் வள்ளலார்.

*உடல் மாற்றம் !*

அருள் பெரும்போது உடலில் என்ன என்ன மாற்றம் உண்டாகும் என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக விளக்கி உள்ளார்...

அகவல் விளக்கம் !

725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே

741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே

742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே !

மேலே கண்ட மாற்றங்கள் எல்லாம் அருள் பெறும் போது உடம்பிற்கு உண்டாகும்..

அந்த அருள் உடம்பை பெற்றவர்களை எந்த தீய சக்தியாலும் அழிக்க முடியாது..பஞ்ச பூதங்களாலும் அழிக்க முடியாது..அணுக் கதிர்களாலும் அழிக்க முடியாது.வேறு எந்த கருவிகளாலும் அழிக்க முடியாது.என்பதை வள்ளலார் பாடலிலே விளக்கமாக தந்து உள்ளார்

பாடல் !

காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

மேலே கண்ட பாடலில் எல்லோருக்கும் புரியும்படி பதிவு செய்துள்ளார்..

மேலும் எந்த கடவுளைத் தொடர்பு கொண்டால் சாத்தியமாகும் என்பதையும் சொல்லி உள்ளார்.

என் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்..

மேலும் ....

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!

இவற்றை விட வேறு என்ன விளக்கம் வேண்டும்.

இந்த சாதி.சமய.மதங்களை பிடித்து அலைந்து. தொங்கிக் கொண்டு இருக்கும்.. அப்பாவித்தனமான.
உண்மை அறியாத உணராத மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமே ! சந்தேகம் பட வேண்டியதில்லை..

ஆன்ம அறிவை அறிந்தால் எல்லாம் தெளிவாகத் தெரியும்.

இன்னும் விரிக்கில் பெருகும்......

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு