திங்கள், 17 செப்டம்பர், 2018

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

பேரின்ப சித்திப் பெருவாழ்வு  !

மரணத்தை வென்றவர் உடம்பு எவ் வண்ணமாக இருக்கும் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ளார்..

பேரின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை எது என்றறிய வேண்டில்:-

தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம் முதலிய அசுத்தபூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி,

மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்,

பொன்வடிவாகத் தோன்றுதல் மாத்திரமேயன்றி ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்தபூதகாரண பிரணவ தேகத்தையும்.

தோன்றப்படுதலுமின்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும்பெற்றவர்களா யிருப்பார்கள்.

அவர்களின் பெருமை.அருள் ஆற்றல் !

1.உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்;

2.புறத்தே மண் கல் முதலியவற்றால் எறியினும் அவை அவர் வடிவில் தாக்குவனவல்ல.

3.உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்;

4.புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது.

5.உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்;

6.புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல.

7.உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்;
புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித் தசைக்கமாட்டாது.

8.உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்;

9.புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்கமாட்டாது.

10.ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.

11.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் பார்த்தல் முதலிய விஷயங்களையும் பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவனவல்ல;

12.தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில், சுவர் மலை முதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பன வல்ல.

13.அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்துமுள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த விடத்திருந்தே கண்டறியும்.

14.அண்ட பிண்டங்களி லெவ்விடத்திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த விடத்திருந்தே கேட்டறியும்.

15.எவ்விடத் திருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த விடத்திருந்தே சுவைத்தறியும்.

16.எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்த விடத்திருந்தே பரிசித்தறியும்.

17.எவ்விடத் திருக்கின்ற சுகந்தகங்களையும் அவர் நாசி இருந்த இடத் திருந்தே முகர்ந்தறியும்.

18.எவ்விடத்திலிருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த விடத்திருந்தே கொடுத்தல் கூடும்.

19.எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த விடத்திருந்தே நடத்தல் கூடும்.

20.அவரது வாக்கு எவ்விடத்திலிருக்கின்ற எவ்வௌர்களோடும் இருந்த விடத்திருந்தே பேசுதல் கூடும்.

21. மற்ற இந்திரியங்கள் இருந்த விடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும்.

22.மன முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல;

23.தயவினால் பற்றத் தொடங்கில் எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்.

24.அவரறிவு ஒன்றையும் சுட்டியறியாது;

25.தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும் எல்லா உயிர்களையும் எல்லாப் பண்புகளையும் எல்லா அனுபவங்களையும் எல்லா பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி யறியும்.

26.அவர்கள் நிர்க்குணத்தராவார்களல்லது,

27.தாமச இராசத சாத்துவிக முதலிய முக்குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள்;

28.புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவனவல்ல.

29.உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்;

30.புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவனவல்ல.

31.உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்;

32.புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது.

33.உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்;

34.புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது.

35.அன்றிக் காலம் வித்தை ராகம் புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை.

36.மாயையால் பேதப்படார்கள்; சுத்தமகாமாயையைக் கடந்து அதன்மேல் அறிவுருவாக விளங்குவார்கள்.

37.ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் என்பவைகளால் தடைபடார்கள்.

38.அவர்கள் தேகத்திற்குச் சாயை, வியர்வை, அழுக்கு, நரை, திரை, மூப்பு, இறப்பு முதலிய குற்றங்கள் உண்டானவல்ல.

39.பனி, மழை, இடி, வெயில் முதலியவற்றாலும், இராக்கதர், அசுரர், பூதம், பிசாசு முதலியவற்றாலும், தேவர், முனிவர், மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்பவைகளாலும் எவ்விடத்தும் எக்காலத்தும் அவர் தேகம் வாதிக்கப்படாது;

 40.வாள் கத்தி முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது.

41.எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத் தோற்றலும், எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோற்றலும் அவர் தேகத்திற்கு உரித்து.

42.இறந்தோரை எழுப்புதல் வார்த்திபரை வாலிபராக்கல் முதலியகருமசித்திகளும் யோகசித்திகளும்ஞானசித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.

43.சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்கின்ற கிருத்தியங்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.

44.பஞ்சகர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்.

45.அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும். அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும். அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.

46.சர்வசக்தியு முடையவர்களாய், எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய், ஆணவம், மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் அம்மலவாதனைகளும் இல்லாதவர்களாய், பேரருள்வண்ண முடையவர்களாய் விளங்குவார்கள்.

47.ஜடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்சகிருத்தியங்களும் செய்யும்.

48.அவரது பெருமை வேதாந்த, சித்தாந்த, கலாந்த, போதாந்த, நாதாந்த, யோகாந்தம் என்கின்ற ஆறந்தங்களிலும் விளங்கும்; அவற்றைக் கடந்தும் விளங்குமென்று அறியவேண்டும்.

49.இவை பேரின்பலாபத்தை யடைந்தவர் பெருமை யென்று அறிய வேண்டும்.

இம்மை இன்பம்..!
மறுமை இன்பம்.!
பேரின்பம் !

இம்மூவகை இன்ப லாப வாழ்வையும் எதனால் பெறக்கூடுமென்றறிய வேண்டில்:-

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏகதேசத்தைக் கொண்டும்

அருட்பூரணத்தைக் கொண்டும் அடையக் கூடுமென்றும் அறியவேண்டும்.

இம்மூவகை இன்பங்களில் '

அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையத்தக்கவை எவை? அருட்பூரணத்தைக் கொண்டு அடையத்தக்கது யாது?' என்றறியவேண்டில்:-

இம்மையின்பலாபம் மறுமையின்பலாபம் என்கின்ற இரண்டையும் அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையக்கூடு மென்றும்

பேரின்பலாப மென்கின்ற ஒன்றையும் அருட்பூரணத்தைக் கொண்டு அடையக்கூடு மென்றும் அறிய வேண்டும்.

அருளின் வண்ணம் !

கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருள் எந்த வண்ணத்தை உடையது என்றறியவேண்டில்:-

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும்,

நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும்,

அறிவார் அறியும் வண்ணங்களும்,

அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும்

ஆகிய சர்வசத்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை யுடையது என்று அறிய வேண்டும்.

மேலே கண்டவாறு.... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பூரணத்தைப் பெற்றவர்களின் உடம்பில் இவ்வளவு மாற்றங்கள் உண்டாகும்.

இவ்வாறான மாற்றங்களைப் பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார் ஒருவரே !

வள்ளலார் வாழ்ந்து காட்டிய.சுத்த சன்மார்க்க பெருநெறியை.
தனிநெறியை.
திருநெறியை.
அருள்நெறியை.

நாமும் பின்பற்றி வாழ்ந்தால். ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு