செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஜீவ காருண்யத்தின் முடிவு !

ஜீவ காருண்யத்தின் முடிவு !

ஒரு நாள் ஜீவ காருண்யம் என்றால் மக்கள் இடத்தும்.. ,மாக்கள் இடத்தும் கருணைக் காட்டுவது என்ற அளவில் சில அன்பர்கள் ,பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டு வள்ளலார் சொன்ன விளக்கம் .

அந்த அன்பர்களை அருகாமையில் அழைத்து அவர்களை நோக்கி ''நீங்கள் பேசிக் கொள்கிற ஜீவ காருண்யம் முடிவு பெற்று விடாது.அது இன்னும் பறந்து செல்வது ; என்று உதாரணமாக ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் ''என்று சொல்லத் தொடங்கினார் .''அன்பர்களே ! இரு முதியவர்கள் ஒரு வீதி வழியே சென்று கொண்டு இருந்தனர் .அப்போது அவருள் ஒருவரின் கால்பட்டு வீதியில் கிடந்த ஒரு மண் கட்டி உடைந்து போனது .

அதைக் கண்ட மற்றொருவர் உடனே மூர்ச்சை யானார் .மூர்ச்சை அடைந்த அவருக்கு உபசாரங்கள் செய்து முர்ச்சையைத் தெளிவித்த முன்னையவர் ,தாங்கள் மூர்ச்சை உற்றத்திற்குக் காரணம் என்ன ? என வினவ ,அதற்கு அம் முதியவர் ''உம்முடைய காலினால் அவ் அழகிய மண் கட்டி உடைந்து உருக்குலைந்து போனதே காரணம் ''எனக் கூறினார் ''என்று கதையைச் சுருக்கமாக முடித்து ,அவர்களுக்கு ஜீவ காருண்யத்தின் முடிவினை உணர்த்தி அருளினார் .வள்ளலார் ....

யோகத்தினும் சிறந்தது தோத்திரமே !

ஒருநாள் வள்ளலாரை அன்பர்கள் ''யோகம் முதலியன செய்ய எங்களால் இயலாதன வாக இருக்கின்றன ...ஆதலால் நாங்கள் ஈடேறுதற்குரிய ஒரு இலகுவான மார்க்கத்தைத் தேவரீர் திருவாய் மலர்ந்து அருளல் வேண்டும் ''என்று கேட்க வள்ளலாரும் ,'' இக் கடையுகமாகிய கலியுகத்தில் உங்களால் யோகம் முதலிய சாதனங்களை இயற்ற முடியாது .ஆதலால் நீங்கள் தோத்திரத்தையே  ஈடேறும் மார்க்கம் எனக் கொள்ளுங்கள் ''என்று இசைத்தனர் ....

இறைவனை தோத்திரம் செய்யுமாறு சொல்லிய பாடல்;--

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழுங் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே ! நன்னிதியே ! ஞான
நடத்தரசே ! என்னுரிமை நாயகனே ! என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர் !
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்று தோத்திரம் செய்யச் சொல்லி உள்ளார்....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896...   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு