திங்கள், 17 அக்டோபர், 2016

இறைவன் வந்தார் !


இறைவன் வந்தார் !

உலகை படைத்த இறைவன் உயிர்களைப் படைத்த இறைவன் அண்டங்களைப் படைத்த இறைவன் வடலூர் வந்தார்  !
இந்த உலகத்தில் உண்மையான இறைவனை வரவைத்தவர் வள்ளல்பெருமான்
அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .
அவர்தான் எல்லா உலகங்களையும் .எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் படைத்தவர்.அவரே உண்மையான தெய்வமாகும்.
அவர்தான் தாயாகவும் தந்தையாகவும் தாங்கிக் கொண்டும் காப்பாற்றிக் கொண்டும் உள்ள தெய்வம்
அவர்தான் அருள் ஒளியாக இருக்கின்றார்.
நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே தெய்வம் அருட்பெருஞ் ஜோதி தெய்வம்,அந்த உண்மையான இறைவனை வணங்க வேண்டும் வழிபாடு செய்யவேண்டும்.
நம்முடைய சிர நடுவில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.
நாம் ஒவ்வொருவரும் வீட்டில் ''ஒளி என்ற தீபத்தை'' ஏற்றி வைத்து வணங்க வேண்டும் . இறைவன் உங்கள் வீட்டிற்கு பாது காப்பாக இருந்து காப்பாற்றுவார்.உங்கள் வீட்டின் இருள் அகன்று அருள் பிரகாசம் தோன்றும்.
உங்களின் துன்பங்கள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.
உங்கள் துன்பம் தொலைந்து இன்பம் பெருகும் .இருள் விலகி, ஒளி வீசும்.எல்லா நன்மையையும் தேடிவரும்.
சமய மத தெய்வங்கள் !
நீங்கள் இது வரையில் வணங்கி வழிபாடு செய்து கொண்டு இருக்கும் சமய மத தெய்வங்கள்  யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனைத் தேடி அலைந்து கொண்டு உள்ளன.
உலக உயிர்கள் நன்மை அடையும் பொருட்டு வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிமுகப் படுத்தி உள்ளார் .அவர் எங்கு உள்ளார் என்பதை வள்ளலார் தெளிவாக எளிய முறையில் விளக்கி ய்ள்ளார் .
தெளிவான் பாடல் ;---
அருட் ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் 
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் 
பொருள் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம் 
போதாந்தத்  தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் 
இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் 
எண்ணிய நான் எண்ணிய வாறு எனக்கு அருளும் தெய்வம் 
தெருட்பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம் 
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !
எனவே ஒளியை வழிபாடு செய்யுங்கள், ஒளியைத் தொடர்பு கொள்ளுங்கள் .அந்த ஒளி இருக்கும் இடம் தான் நம்முடைய ஆன்மா என்னும் உள் ஒளியாகும்.,நம்முள்,நம்முடைய சிர நடுவில் நம்மை இயக்கிக் கொண்டு  இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொள்வது நமக்கு என்ன சிரமம்...சிரமம் இல்லாத வழியைக் காட்டி உள்ளார் ..
நம்முடைய பூதக்  கண்களுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டு இயக்கிக் கொண்டு உள்ளது ..அவற்றை இடைவிடாது தொடர்பு கொண்டால் ,நமக்குத் தெரிவிக்க வேண்டியதை அறிவின் வழியாக தெரியப் படுத்தும் .அறிவைக் கொண்டு எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் .உங்கள் அறிவு உங்களிடமே உள்ளது .உங்களுக்கு நீங்களே எஜமான் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ள நீங்கள் யாரையும் தேட வேண்டிய அவசியம்  இல்லை. உங்களுக்கு நீங்களே குருவாகும் .
தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் .தலைவனை அறிந்தால் கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
வள்ளலார் தன்னை அறிந்ததால் அருட்பெருஞ் ஜோதிஆண்டவர் வள்ளலாரைத் தேடி வந்தார் .வந்ததும் மட்டும் அல்ல ! வள்ளலாரை ஆட்கொண்டு அவர் உடம்பிலே கலந்துகொண்டார் .அதேபோல் நம்மையும் ஆட்கொள்வார் நம்முடனும் கலந்து கொள்வார் ...
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் 
மா தவம் பன்னாள் புரிந்து மணிமாட நடுவே 
தேன் இருக்கும் மலர் அணைமேல் பளிங்கு கரையின் ஊடே 
திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும் 
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே 
நல்ல திரு அருள் அமுதம் நல்கியதும் அன்றி என் 
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன் 
உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந் தனையே ! 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 
எங்கே தேடி வந்தார் ..வள்ளலார் இருக்கும் இடமான வடலூருக்கு  அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாகத்திற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்  வந்தார் ,அங்கு வந்து என்ன செய்தார் என்பதை தெளிவாக விளக்கும் பாடல் ;--

என்சாமி எனதுதுரை என்உயிர் நாயகமே 
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் 
பின் சாரும் இரண்டரை நாழிகைக் குள்ளே எனது 
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் 
தன் சாதி உடையப் பெரிய தவத்தாலே நான்தான் 
சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே 
மின் சாரும் இடைமடவாய் என் மொழி நிந்தனக்கே 
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

என்னும் பாடல் வாயிலாக,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்த அனுபவத்தையும் அவரைக் கலந்து கொண்ட உண்மையையும் தெளிவாக தெரியப் படுத்தி  வள்ளலார் மக்களுக்கு இந்த உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அருட்பெருஞ் ஆண்டவரை.ஒருமணி நேரம் காக்க வைத்து , கால அவகாசம் கொடுத்து தெரிவிக்கின்றார் . 
நமக்கு ஏன் இன்னும் சந்தேகம்.வள்ளலார் வாழ்ந்து காட்டி உள்ளார் .வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் நம்மை ஆட்கொள்ள வருவார் ..இதுதான் உண்மை ...
நாம் சுத்த சன்மார்க்கத்தில் உள்ள சாகாக் கல்வியைப் பற்றி  பேசப் பழகி உள்ளோம் வாழப் பழக வில்லை ..பேச்சைக் குறைத்து வாழ்ந்து காட்டுவோம்...வள்ளலார் அகவலில் இறுதியாக சொல்லுவார் ..

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம் 
விளக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
என்பார் வள்ளல்பெருமான்.நாம் அடைந்தால்தான் மற்றவர்களுக்கு போதிக்க முடியும்..முயற்சி செய்வோம் முடியாதது ஒன்றும் இல்லை ...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு