வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உண்மையான அருளாளர் யார் ?

உண்மையான அருளாளர் யார் ?

ஆன்ம நேய உடன் பிறப்புக்களே அனைவருக்கும் வந்தனம்.

இந்த உலகத்தை இறைவன்  ஏன் படைத்தார் என்றால் ,ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே படைத்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

இறைவன் குழந்தைகள் ஆன்மா என்பதால்  தன் குழந்தைகளாகிய ஆன்மா  உலகம் முழுவதிலும் சென்று விருப்போம் போல் வாழ்ந்து ,பின்பு தன்னுடைய சொந்த வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது இறைவன் ஆணை இறைவன்  கட்டளை ...

இந்த உலகிற்கு வந்த ஆன்மா பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து  இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு கொடுக்கப்படுகின்றது...

இங்குதான் பிரச்சனைகளே ஆரம்பமாகின்றது.!

ஆன்மாக்கள் பல பிறவிகள் எடுத்து உள்ளதால்,உயர்ந்த மனித பிறப்புக் கொடுத்தும் உயர்ந்த அறிவு கொடுத்து இருந்தும் , பக்குவம் இல்லாமல் உண்மைத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றது.,,அதற்கு பக்குவா பக்குவம் உள்ள  ஆன்மாக்கள் என்று பெயர்...மற்ற பிறப்புக்கள் எல்லாம் அபக்குவ ஆன்மா என்று பெயர். ........சுருக்கமாக சொல்லுகின்றேன்

உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களை பக்குவப்படுத்தி,  உண்மையை தெரிவித்து இறைவனிடம் செல்லும் வழியைக் காட்டுவதற்காக ''பக்குவம் ''உள்ள  ஆன்மாக்களை இந்த உலகத்திற்கு அனுப்பிக் கொண்டே உள்ளார்  இறைவன்...அவர்கள்தான் ''வாழையடி வாழை என வந்த திருக் கூட்டம்'' அவர்கள்தான்  .சித்தர்கள்,யோகிகள், ஞானிகள்,போதகர்கள்,நாயன்மார்கள்  போன்ற அறிவுள்ள  அருளாளர்கள்  என்பவர்களாகும்...

அவர்கள் இந்த உலகத்திற்கு வந்து,மாயையால் சிக்கி,மாயையின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து ,முழு  உண்மையைத் தெரிந்து கொள்ளாமல்,  சொல்லாமல் தவறான வழியையே காட்டி விட்டார்கள்.அவர்களுக்குத் தெரிந்த அறிவு சார்ந்த  கதைகளையும் ,கற்பனைகளையும்,சொல்லி எழுதி வைத்து விட்டு சிலர்  மாண்டு போனார்கள்..சிலர் மறைந்து போனார்கள்,சிலர் சமாதி ஆனார்கள், ..

அவர்களால் தோற்று விக்கப் பட்டது தான் சாதி,சமயம்,மதங்கள் ..அவற்றைப் பின்பற்றி மக்கள் அழிந்து கொண்டு உள்ளார்கள் ..

இதைத்தான் வள்ளலார் ...

கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண் மூடிப் வழக்கம் எல்லாம் மண் மூடிப்போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம்
வாழ்ந்து ஒங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே
உலைவறும்  இபோழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம் கரைத்துத் திருஅமுதம் அளித்தோய்
சித்த சிகா மணியே என் திரு நட நாயகனே !

என்று மக்களுக்குத் தெரிவிக்கின்றார் ..

மனித தேகம் எடுத்தவர்கள் பூரண  அருளைப் பெறாமல் இறைவனிடம் செல்ல முடியாது என்பதையும்,..பூரண அருளைப் பெறாதவர்கள் சொல்லுவது யாவும் குற்றம் உடையதே என்று சொல்லுகின்றார் .

பூரண அருள் பெற்றவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்,மரணத்தை வென்றவர்கள் மட்டுமே இறைவனின் சொந்த வீட்டிற்கு செல்லமுடியும்...மாயையால் கட்டிக் கொடுத்த தேகத்தோடும்  செல்ல முடியாது. சில சித்தி முத்திகளைப் பெற்று ,பஞ்ச பூதங்களில் கலந்து கொண்டவர்களும் இறைவனிடம் செல்ல முடியாது...

பூரண அருளைப் பெற்று... ஊன உடம்பை ,ஒளி உடம்பாக மாற்றி  அருள் உடம்பாகிய ஞான தேகம் பெற்றவர்கள் மட்டுமே இறைவன் அருள்  கோட்டைக்குள்..இருக்கும் ''அருள் பெரு வெளிக்குள்''  செல்ல முடியும்.
அங்கு இருந்துதான் ஆன்மாக்கள் வந்தது என்பதையும்,அங்குதான் செல்ல வேண்டும் என்பதும், ஆன்ம உரிமை என்பதும் ,ஆன்ம சுதந்திரம் ,என்பதும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் தோன்றிய அருளாளர்கள் எவரும் இந்த உண்மையை ,அறிவு சார்ந்த மக்களுக்கு சொல்லவில்லை... அறிவை அறியாமையால் அஞ்ஞானத்தால்,ஊழ் வினையால்  மறைத்து விட்டார்கள்.அவைகள் தான் மாயா திரைகள் என்கின்றார் வள்ளலார்.

நம்முடைய தமிழ் நாட்டில் தோன்றிய ''திருவள்ளுவர்'' இலைமறை காய்மறையாக சொல்லி உள்ளார்,மரணத்தை வெல்லும் வழியையும் சொல்லி உள்ளார் ....கதைகளாக சொல்லாமல் கருத்துக்களை சொல்லி உள்ளார் ..மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் வழியைக் காட்டியவர் ''திருவள்ளுவர் ''  ஆனால் அவர்  வாழ்ந்து காட்டவில்லை...

உலகில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் ''திரு அருட்பிரகாச வள்ளலார் '' என்பவராகும்..

இரண்டு பேரும் உயர்ந்த அறிவுள்ள அருளாளர்கள்..அவர்கள்  நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்துள்ளது .நாம் செய்த புண்ணிய பயனே !

இந்த இரண்டு அருளாளர்கள் தான் உலகின் உயர்ந்த அருளாளர்கள் என்பதை உலகில் உள்ள அனைவரும்  ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்த இரண்டு அருளாளர்களில்  உயர்ந்தவர் யார் ? என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே பதில் சொல்லுகின்றார் ...

அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன்
அறிவறியா இச்சிறியேனை அறிவு அறியச் செய்வித்தே
இந்தோங்கு சடைமணி நின் அடியும் முடியும் காட்டி
இது காட்டி அது காட்டி என் நிலையம் காட்டிச்
சந்தோட சித்தர்கள் தன் தனிச்சூதும் காட்டி
சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி
வந்தோடு நிகர் மனம் போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ் வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளது !

மேலே கண்ட பாடலை பலமுறைப் படித்து பாருங்கள் அதில் உள்ள உண்மையை உணருங்கள்.மேலும்

நாட்டானை நட்ட எனை நயந்து கொண்டே
நம் மகன் நீ அஞ்சலை என நவின்று என் சென்னி
தொட்டானை எட்டும் இரண்டும் சொல்லினானைத்
துன்பம் எல்லாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !.

இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார் , என்னுடைய உண்மையான உருவத்தையும் ,என்னுடைய செயல்கள் யாவும்,ரகசியத்தையும்  எல்லாம் இந்த உலக மக்களுக்கு சொல்லி விட்டதால் .என்னுடைய துன்பம் எல்லாம் தீர்ந்தது என்று வள்ளலார் இடம்  சொல்லுகின்றார்...

துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்திரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ்வு எல்லாம் பெற்று மிகவும்
மண் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெருக உலவாது நீடுழி
விளையாடுக ''அருட்ஜோதியாம் ''
ஆட்சி தந்தோம் உனைக் கை விடோம்  கை விடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாம் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நடத்து அரசே !

இவைபோல் ஆயிரக் கணக்கான பாடல்களிலே பதிவு செய்து உள்ளார்
அகவலில் தெளிவாக பதிவு செய்து உள்ளார் ..

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை ....என்றும்..மற்றும்

நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை !....

என்னைப்போல் இறைவனிடம் தொடர்பு கொண்டவர்களும்.சாகாக் கல்வி கற்றவரும்,சாவா வரம் பெற்றவரும் ,பூரண அருளைப் பெற்றவரும்  இந்த உலகில் எவரும் இல்லை , .என்பதை மிகவும் துணிச்சலாக ஆணித்தரமாக உலக மக்களுக்குத் தெரியப் படுத்தி உள்ளார் ..

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ? ;-- இந்த உலகில் உண்மையான அருளாளர் '''திரு அருட்பிரகாச வள்ளலார் '' மட்டுமே என்பதை அறிந்து போற்றி புகழ்ந்து ,,,அவர் காட்டிய பெரு நெறியான ,திரு நெறியான சுத்த சன்மார்க்கத் தனி நெறியைப் பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம்
விளக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன்  ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு