வெள்ளி, 4 டிசம்பர், 2015

உயிரைக் காப்பாற்றும் உணவு !

உயிரைக் காப்பாற்றும் உணவு !

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு .

கருணை உள்ளமே கடவுள் வாழும் இல்லம் .

பசித்தவருக்கு உணவு கொடுப்பதே கடவுள் வழிபாடு.

பசிக்கு ஏழை பணக்காரன் என்ற பேதம் கிடையாது.

பசி எல்லோருக்கும் பொதுவானது .

பசியைப் போக்காதவன் பாவத்தை சம்பாதித்துக் கொள்வான்

என்பதை வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக மக்களுக்கு போதித்து உள்ளார் .

சொல்லியதோடு அல்லாமல் 1867 ஆண்டு வைகாசி 11,ஆம் தேதி வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்றுவித்துள்ளார் .

உலக வரலாற்றில் எந்த அருளாளர்களும் செய்யாத செயலை செய்துள்ளவர் வடலூர் வள்ளல்பெருமான்.

மூன்று நாட்களாக  மழையால் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கு முதலில் தேவை அவர்களின் ''உயிர்'' .

உயிர் !

உயிர் போகும் அபாயத்தில் இருக்கும் மக்களுக்கு உயிரைக் காப்பாற்றுவதே மனித நேயம் ஆன்ம நேயம்,என்பதாகும்.அதுவே ஜீவ காருண்யமாகும்..

எத்தனைக் கோடி பணம் இருந்தாலும் பணம் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாது .உணவால்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

உயிர் இரக்கத்தோடு உணவு கொடுத்து உயிரைக் காப்பாற்றுபவரே.கடவுளுக்கு சமமானவர்.என்பதை புரிந்து கொண்டு மக்களின் பசியைப் போக்கவேண்டும்.

இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கும் அனைவரும் உணவு இல்லாமல் பசி பட்டினி என்ற கொடுமையான துன்பங்களுக்கு ஆளாகி உள்ளார்கள் .அவர்களின் பசியைப் போக்குவதே ஒவ்வொரு மனிதனின் உயிர்க் கருணையாகும்.

பணம்,வீடு,வசதி,ஆட்சி,அதிகாரம்,பட்டம் பதவி,புகழ்,,அப்பா,அம்மா, அண்ணன்,தம்பி,உற்றார் உறவினர் ,போன்ற எது வேண்டுமானாலும் இல்லாமல் வாழ்ந்து விடலாம்..

இன்று மக்களின் அவலநிலை .எங்களுக்கு வீடு வேண்டாம்,பணம் வேண்டாம்,ஆடை வேண்டாம் பொருள் வேண்டாம்,இப்போது எங்களுக்கு ''உணவும் தண்ணீரும் மட்டுமே வேண்டும்'' என்று அழுது கண்ணீர் வடித்துக் கொண்டு உள்ளார்கள்.

 பசி இல்லாமல் ,உணவு இல்லாமல் வாழவே முடியாது.என்பதை வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .

பசியைப் போக்குபவர் எவரோ அவரே கடவுள் !

இறைவன் கொடுத்த உயிரைக் காப்பாற்றுவதே உணவு.!

உணவு இல்லாமல் உயிர் இயங்காது !

பசியினால் உடலில் உண்டாகும் அவத்தைகளைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ளது...

பசி அதிகரித்த காலத்தில் ;--

ஜீவ அறிவு விளக்கம் இல்லாமல் மயங்குகின்றது .!

அது மயங்கவே அறிவுக்கு அறிவாகிய கடவுள் விளக்கம் மறை படுகின்றது !

அது மறையவே புருட தத்துவம் சோர்ந்து விடுகின்றது !

அது மயங்கவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது !

அது மழுங்கவே குணங்கள் எல்லாம் பேதப்படுகின்றது !

புத்தி கெடுகின்றது !

சித்தம் கலங்குகின்றது !

அகங்காரம் அழிகின்றது !

பிராணன் சுழகின்றது !

பஞ்ச பூதங்கள் எல்லாம் புழுங்குகின்றது !

வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன !

கண் பஞ்சடைநது குழிந்து போகின்றது !

காது கும்மென்று செவிடு படுகின்றது !

நா உலர்ந்து வரளுகின்றது !

நாசி குழைந்து அழல்கின்றது !

தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது !

கை கால்,சோர்ந்து துவளுகின்றது !

வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது !

பற்கள் தளருகின்றது !

மல சல வழி வெதும்புகின்றது !

மேனி கருகுகின்றது !

ரோமம் வெறிக்கின்றது !

நரம்புகள் குழைந்து நைகின்றன !

நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன !

எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்கு விடுகின்றன !

இருதயம் வேகின்றது !

மூளை சுருங்குகின்றது !

சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது !

ஈரல் கரைகின்றது !

இரத்தமும் சலமும் சுவருகினறன !

மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றன !

வயிறு பகீல் என்று எரிகின்றது !

தாப சொபங்கள் மென்மேலும் உண்டாகின்றன !

உயிர் இழந்து விடுவதற்கான மிகவும் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன .

பசியின் இவ்வளவு அவத்தைகள் தோன்றுவது ஜீவர்களுக்கு எல்லாம் பொதுவாகவே இருக்கின்றது .

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரம் கிடைத்த போது உண்டு பசி நீங்க நீங்குகின்றன ,

அப்போது தத்துவங்கள் எல்லாம் தழைத்து ,உள்ளங் குளிர்ந்து ,அறிவு விளங்கி ,அகத்திலும்,முகத்திலும்,ஜீவ களையும் கடவுள் களையும் துளும்பி ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகின்றது.

இப்படிப் பட்ட இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணை என்று சொல்லுவது ?

இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்திற்கு இணை என்று சொல்லுவது ?

எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்ச என்றே சத்தியமாக சொல்ல வேண்டும்.

வள்ளல்பெருமான் சொல்லிய கருத்துக்களை சிரமேற்க் கொண்டு ,மழை வெள்ளத்தால் பாதித்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கு,சாதி,சமயம்,மதம், மொழி, இனம்,நாடு என்ற பேதம் இல்லாமல்  உணவு அளிப்பதே இப்போதைய மிக்கிய கடமையாகும் !

நாங்களும் பசியைப் போக்குகின்றோம் ,,நீங்களும் பசியைப் போக்குங்கள் ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
போன் ..9865939896 ,,, 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு