செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நீதி மன்றங்கள் செத்துக் கிடக்கின்றன.!

நீதி மன்றங்கள் செத்துக் கிடக்கின்றன.!

நீதி மன்றங்களும் நீதிபதிகளும் இறைவனால் படைக்கப் பட்டது அல்ல .மனிதர்களால் உருவாக்கப் பட்டது.

மனிதர்களுக்கு இறைவன் படைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவும் அருளும் ஆற்றலும் கிடையாது .எனவே அவர்களின் தீர்ப்பு உண்மையான தீர்ப்பாக அமையாது.

நீதிபதிகள் அனைவரும் சாதாரண மனிதர்கள் தான் .அவர்களின் படிப்பும் பதவியும் மனிதர்கள் கொடுப்பதுதான்.மனிதர்களால் உருவாக்கிய சட்டத்தை,திட்டத்தை வைத்துதான் ,அவர்கள் படித்துள்ள  சட்டத்தின் பிரிவுகளை வைத்துத்தான் நீதிபதிகள் அனைவரும் அவரவர்களுக்கு என்ன தெரிந்ததோ,என்ன புரிந்ததோ அதை வைத்து தான்  நீதி மன்ற தீர்ப்புகள்  வழங்குகிறார்கள்

இறைவன் சட்டம் வேறு மனிதன் சட்டம் வேறு.

அவர்கள் வழங்கும் தீர்ப்பானது உண்மையாகாது.உறுதியாகிறது.

உதாரணம் ;--

மதங்களின் பெயரால் சமயங்களின் பெயரால் பண்டிகை காலங்களில் மிருகங்களை பலியிடக் கூடாது என்று, மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சார்ந்த வி,இராதாக்கிருஷ்ணன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் .தடை சட்டத்தின் பிரிவு 28,ஐ நீக்கக் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார் .

சமீபத்தில் மிருக நலவாரியம் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிடுவதை தடுக்கும் மாறு ,அனைத்து மாநில அரசுகளுக்கும் வெளியிட்ட கடிதம் ஒன்றில் குறிப்பிட்டதும் அந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.

மேலும் மதங்களின் பெயரால் அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ மிருகங்களை பலியிடுதல் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14,( சமஉரிமை ) மற்றும் 21,(வாழ்வதற்கான உரிமை ) ஆகியவற்றிற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார் .

இவை எந்த அளவிற்கு உயர்ந்த உண்மையான, கருத்து ஆழம் உள்ளது என்பதை வள்ளலார் கொள்கையைப் பின்பற்றும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை உடைய சுத்த சன்மார்க்கிகள் உணர்ந்தவர்கள் ஆவார்கள்.

நீதிபதியின் தீர்ப்பு.--

வி,ராதாக்கிருஷ்ணன் தொடுத்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,எச்,எல், தத்து மற்றும் நீதிபதி அமுதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது,

நீதிபதிகள் சொல்லியது .

மனுதாரரின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜூ ராமச்சந்திரன் ,இந்த பிரச்சனையை இந்த  வழக்கில் நீதிபதிகள் நடுநிலையுடன் அணுக வேண்டும் என்றும்.

மிருகங்களை பலியிடும் விஷயத்தில் மதம் சார்ந்த விஷயங்களை மீறி மிருகங்கள் பலியிடுவதின் மூலம் சித்ர வதைக்கு ஆளாவது தடுக்கப் படவேண்டும்

எனவே மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை மிருகவதை தடை சட்டத்தின் இருந்து நீக்க வேண்டும் என்று வாதிட்டார் .

பாரம்பரிய விஷயங்கள் ;--

இதனை கேட்ட நீதிபதிகள் மிருகவதை தடை சட்டத்திலேயே  மத ரீதியான காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவது அனுமதிக்கப் பட்டு உள்ளது பல நூற்று ஆண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும்  பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன் பாடு இருக்க வேண்டும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

இதுதான் தீர்ப்பு.;--

அந்த நீதிபதிகள் உயிர்களின் உண்மையும்,ஆன்மாவின் உண்மையும்,உடம்பின் உண்மையும்,அதை தோற்றுவித்தவர் யார் என்ற உண்மையும் தெரிந்து இருந்தால் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பார்களா ?

அவர்கள் மிருகங்களின் மாமிசத்தை உண்பவர்களாக இருப்பார்கள் போலும் . அதனால்தான் அவர்களுக்கு ,அன்பு, தயவு, கருணை, இரக்கம், ஒழுக்கம், நேர்மை உண்மை சத்தியம்,அகிம்சை  என்பது எல்லாம் என்னவென்று விளங்காது.தெரியாது.அவர்கள் சம்பளம் வாங்கும் உழியர்கள்.அவர்களுக்கு உயிர்கள் போனால் என்ன ? இருந்தால் என்ன ? அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வந்தால் போதும்.

மேலும் பாரம்பரிய மான விஷ்யங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியாது என்று சொல்லுகின்ற நீதிபதிகள் எது எது பாரம்பரிய விஷயங்கள் .,என்று அவர்களால் சொல்ல முடியுமா ?

பாரம்பரியமாக எல்லாமே நடந்து கொண்டுதான் உள்ளதா ? அப்படியே நடந்து கொண்டு இருந்தால் .அதற்கு எதற்கு சட்டமன்றம்,பாராளுமன்றம்,நீதி மன்றம்,நீதிபதிகள். இழுத்து மூடிவிட வேண்டியது தானே,

பாரம்பரியமாக .மக்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்கள், அறிவு இல்லாமல் வாழ்ந்தார்கள்,இந்த நாட்டை மன்னர்கள் .ஆண்டார்கள் ,ராஜாக்கள் ஆண்டார்கள்,ஜமீன்தார்கள் ஆண்டார்கள் ,மொகலாய சாம்ராஜயம் ஆண்டது  ,கிருத்தவர்கள் ஆண்டார்கள்.ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள்.அவரவர்களும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி  சட்டத்தை திட்டத்தை அவர்களுக்கு சாதகமாக உருவாக்கினார்கள்.

பாரம்பரியம் என்று விட்டுவிட வேண்டியதுதானே .எதற்கு இந்த நாட்டிற்கு சுதந்திரம் .எதற்கு மக்கள் ஆட்சி ,எதற்கு புதிய சட்டம் புதிய திட்டம் ,எதற்கு பாதுகாப்பு,கொஞ்சமேனும் அறிவு வேண்டாமா ? சிந்திக்க வேண்டாமா ?

பாரம்பரியமாக ,ஆண்கள் பெண்களை கற்பழிக்கின்றார்கள்,,கொள்ளை அடிக்கின்றார்கள்,பழி வாங்குகின்றார்கள்,மாற்றான் சொத்தை அபகரிக்கின்றார்கள்,மக்களை கொலை செய்கின்றார்கள்.நாட்டுக்கு நாடு போரிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்,மதக் கலவரங்கள் நடந்து கொண்டே உள்ளது. எல்லாமே பாரமபரியமாகத்தானே நடந்து கொண்டு உள்ளது. விட்டுவிட வேண்டியதுதானே

பாரம்பரியமாக விறகு வைத்துதானே சமையல் செய்தோம்,அரிக்கன் லைட்டை வைத்துதானே வாழ்ந்து கொண்டு இருந்தோம்,சாதாரண குடிசை வீடு கூரை வீட்டில்தானே வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.எதற்கு இப்போது  மின்சாரம் ,எதற்கு கேஸ் அடுப்பு,எதற்கு அரண்மனை போல் வீடு,எதற்கு செல் போன்.எதற்கு டிவி,எதற்கு ரேடியோ ,எதற்கு பைக் ,கார்,ரயில்,வானஊர்தி.மேலும் அளவில் அடங்காத வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறோம்.எதற்கு அறிவியல்,விஞ்ஞானம்.போன்ற கண்டுபிடிப்புக்கள் பாரம்பரியமாக வாழ வேண்டியதுதானே ..

இதுவெல்லாம் மதங்களா சமயங்களா கண்டு பிடித்தது.பாரம்பரிய பழைய வாழ்க்கையே வாழ வேண்டியதுதானே ?

அறிவு இல்லாத தெளிவு இல்லாத,புத்தி இல்லாத  மதங்கள் செய்யும் கொலை காரியங்களுக்கு துணைபோவதுதான் பாரமபரியமா ? உங்களின் சட்டமா ?உங்களின் தீர்ப்பா ?

உங்களின் மகன் மகள் உயிரை கொலை செய்தால் விட்டு சென்றால்  விடுவீர்களா உங்கள் உரிமை உள்ள உயிர்கள் வேறா ? மிருகங்களின் உயிர்கள் வேறா ?

மனித உயிர்களை கொலை செய்தால் தூக்குத்தண்டனை .வாய் பேசாத உயிர் இனங்களை அதாவது மிருகங்களை கொலை செய்தால்.தண்டனை இல்லையா? ஏன் என்றால் அது பேசாது .அதற்கு சட்டம் தெரியாது,நீதி மன்றம் தெரியாது நீதிபதிகள் தெரியாது வழக்குத் தொடுக்கத் தெரியாது அதுதானே உண்மை .

கேட்டால் மதக்கொள்கை .சமயக்கொள்கை பாரம்பரியம் என்கின்றீர்கள் என்னய்யா விசித்திரம்  இதற்குத்தான் கடவுள் உங்களுக்கு உயர்ந்த அறிவை கொடுத்தாரா ?

மனுநீதி சோழன் வரலாற்றை வள்ளலார் எழுதினார்.

எல்லா உயிர்களும் ஒன்று என்பதைப் போதிக்க வள்ளலார் மனுநீதிச் சோழன் என்ற வரலாற்றை மக்களுக்குத் தந்து உள்ளார் .

மனுநீதிச் சோழனின் மகன் வீதி விடங்கன் என்பவன் கோயில் வழிப்பாட்டிற்கு தேரில் செல்லும் போது தேர்க்காலில் அகப்பட்டு பசுங்கன்று மடிந்து விட்டது.

அதைக் கண்ணுற்ற தாய்ப் பசுவானது நீதிக் கேட்டு ,மனுநீதி சோழனின் அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை தம்முடைய கொம்புகளால் அசைத்து,நான் பெற்ற  என்னுடைய கன்றுகுட்டிக்கு பதில் சொல் .என்று நீதிக் கேட்டது .

மனுநீதி தவறாத மன்னன் சொன்னான் ;--.உன்னுடைய இறந்துபோன குழந்தையின் உயிரை   அதாவது கன்றுக்குட்டியை  என்னால் தரமுடியாது.

உயிர் என்பது மனிதர்களால் கொடுக்க முடியாது ,அது இறைவனால் மட்டுமே கொடுக்க முடியும்..இறைவன் கொடுத்த உயிரை அழிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும்.

பத்து மாதம் சுமந்து பெற்றக் கன்று குட்டியை, .அந்த இளங் கன்றை இழந்து  வாடும் உன்மனம் எப்படித் துடி துடிக்கும் என்பது எனக்குத் தெளிவாகவேத்  தெரியும்.

உன்மனம் எப்படி துடிக்கின்றதோ அப்படியே என்னுடைய மனமும் துடி துடிக்க வேண்டும் அதுதான் நான் வழங்கும் சரியான தீர்ப்பாகும் என்று மனுநீதி சோழன் என்ன செய்தார் .

உயிருக்கு உயிர் கொடுப்பதுதான் தீர்ப்பு என்று ,தன்னுடைய ஒரே மகன் வீதிவிடங்கனை.அழைத்து சென்று ,இளங்கன்று இறந்த அதே இடத்தில் படுக்க வைத்து தானே தேரில் ஏறி அமர்ந்து தேரை ஒட்டி வீதி விடங்கனின் கழுத்தில் தேரின் சக்கரத்தை ஏற்றி,தன் மகன் துடிதுடிக்க உயிரைக் கொன்றார்.
அதன் பின் நீதி தவாராது ஆட்சி புரிந்த மன்னனின் கண்ணியத்தை உணர்ந்த இறைவன் நேரிலே அவதாரம் செய்து எல்லா உயிர்களையும் எழுப்பித் தந்தார் என்பது வரலாறு .

இது வள்ளல்பெருமான் மக்களுக்கு போதித்த ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்னும் கொள்கைகளாகும்.எல்லா உயிர்களும் ஒன்றுதான் ,பிறப்பின் உருவத்தில் வேறுபாடு உண்டு உயிரில் வேறுபாடு கிடையாது என்றார் எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு அவற்றை அழிக்கும் உரிமை யாருக்கும் கொடுக்கப் படவில்லை.அவற்றை புரியாமல் தெரியாமல் அழித்தால் உயிர்களை அழித்தால் சண்டாளப் பிறவிக் கொடுக்கப்படும் என்றார் .

இறைவன் சட்டத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

சாதியின் பெயரால் .சமயத்தின் பெயரால்,மதத்தின் பெயரால் வாய் இருந்தும் .வாய்ப் பேசாத முடியாத உயிர்களைக் கொலை செய்வதும் அதன் புலால், அதாவது மாமிசத்தை உண்பதும் எவ்வளவு மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அறியாத நீதிபதிகள் எல்லாம் நீதிமான்களா ?

இப்போது நீதி மன்றங்கள்,நீதிபதிகள்  எல்லாம் அரசியல் வாதிகளின் கைக் கூலிகளாக,மதவாதிகளின் ஏஜெண்டுகளாக உள்ளார்கள்.

நீதி மன்றங்கள் அனைத்தும் செத்துப் போய் கிடக்கின்றன.அவற்றை உயிர் பெற்று எழ வைப்பது சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.

வள்ளலார் போதித்த உண்மை நெறியான சுத்த சன்மார்க்க நெறியை,உலகம் முழுவதும் உள்ள  மனித குலத்திற்கு போதித்து மனிதர்களை  புனிதர்களாக மாற்றுவோம்.

கொல்லா நெறியை உலகம் எல்லாம் கடைபிடிக்க பாடுபடுவோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு வழிவகுப்போம்.

சராசர உயிர் தோறும் சாற்றிய பொருள் தோறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே ....என்றும்,

உயிர் எலாம் பொதுவில் உளம் பட பட நோக்குக
செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே ....என்றும்

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த் திரள் ஒன்று என உரைத்த மெய்ச்சிவமே ....என்றும்

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே ....என்றும்

கொல்லா நெறியே குருவருள் நெறி என எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே .....என்றும்

உலக உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்து தொழிலையும் யான் செய்ய தந்தனை ....என்றும்

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைத்து விளக்குக மகிழ்க ...என்றும்

இறைவன் வள்ளல் பெருமானுக்கு ஐந்தொழில் வல்லபத்தைக் கொடுத்து உள்ளார் அந்த வல்லபத்தினால் உலக உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளார்.

உலகியல் சட்டமோ .திட்டமோ,நீதி மன்றமோ மக்களையும் ,உயிர்களையும் காப்பாற்றவே முடியாது.

வள்ளலார் தோற்றுவித்த சாதி,சமயம்,மதம் அற்ற பொது நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக உலக உயிர்களைக் காப்பாற்ற முடியும் .காப்பாற்றுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு