வியாழன், 22 ஜனவரி, 2015

கலை அறிவும் ! அருள் அறிவும் !

கலை அறிவும் ! அருள் அறிவும் !

மனிதனாக பிறந்தவர்கள் எதையும் படிப்பால் அறிந்து கொள்வது ஒரு முறை !
அருளால் அறிந்து கொள்வது ஒருமுறையாகும்.

படிப்பால் அறிவது பேசுவதற்கு பயன்படும்.அருளால் அறிவது அனுபவிப்பதற்கு பயன்படும் .

அகவழிபாடு புற வழிபாடு !

அதேபோல் தான் பக்தி என்பது உருவ வழிபாடு --உருவ வழிபாட்டால் மன நெகிழ்ச்சி ,மனஉருக்கம் உண்டாகும் இவை ஆன்மாவில் பதியாது சீக்கிரம் அழிந்து விடும் .இதற்கு புற வழிபாடு என்பதாகும்.

பிற உயிர்கள் இடத்தில் அன்பு செலுத்தும் போது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் உண்டாகும்.இவை ஆன்மாவில் பதிவாகும்.ஆன்மாவில் பதிவாகும் அன்பை அழிக்க முடியாது..அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே .என்பார் வள்ளல்பெருமான் .

அன்பு எப்போதும் உண்டாகும் என்னில் .பிற உயிர்களுக்கு நன்மை செய்யும் போது அன்பு உண்டாகும்.அதற்கு ஜீவ காருண்யம் என்று வள்ளல்பெருமான் பெயர் வைத்துள்ளார் .இதுதான் அகவழிபாடு என்பதாகும்.

ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால் அருள் உண்டாகும்.அருள் உண்டானால் சிவா அனுபவம் உண்டாகும் .அதாவது கடவுள் யார் என்பது அப்போதுதான் தெரியும்..கடவுள் யார் ? என்பது தெரிந்து விட்டால் நாம் தவறுகள் செய்ய மாட்டோம்.கடவுள் இன்பத்தை அனுபவிகக தயாராகி விடுவோம் .அதற்கு பேரின்பம் என்று பெயராகும்.

கலை அறிவும் ---அருள் அறிவும் !

பத்து ஆள் சுமை கொண்டது ஒரு வண்டி பாரம்....நான்கு நூறு கொண்ட வண்டிபாரம் ஒரு சூல் வண்டி பாரம் ..சூல் வண்டி ஆயிரம் கொண்ட, அளவு நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்சியால் படிக்க சிறிய உபாசனைச் சகாயத்தால் படிக்க முடியும்.முடியாமலும் போகலாம் .

அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவின் நூல்களை ஒருவன் அருள் பெற்றால் அதாவது சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால் ஒருகணத்தில் ( ஒரு செகண்ட்) படித்து தெரிந்து கொள்ளலாம் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளது !

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

 எங்கே கருணை இயற்கையாக உள்ளதோ அங்கே அருள்  நிறைந்து உலக உண்மைகளையும் கடவுள் யார் ? என்பதையும்  வெளிச்சம்போட்டு காட்டிவிடும். என்கின்றார் .

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே !

அருள் பெறின் ஒரு துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருளிது எனவே செப்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

என்று தெளிவாக வள்ளல்பெருமான் விளக்கி உள்ளார் .ஆதலால் படிப்பு அறிவு என்பது அனுபவம் இல்லாதது .அருள் அறிவு என்பது .அனுவத்து உண்மையை அறிவிப்பதாகும்.

வள்ளல்பெருமான் எழுதிய அருட்பாவில் உள்ளது அனைத்தும் அருளைப் பெற்று அனுபவித்து ,உண்மை இறைவன் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் சொல்ல சொல்ல எழுதியதாகும்.அதனால்தான் அதற்கு ''திருஅருட்பா '' என்னும் பெயர் சூட்டப்பட்டது.

ஆதலால் கலை அறிவை விட்டு அருள் அறிவினால் எழுதிய திருஅருட்பாவைப்  படித்து உண்மையை அறிந்து தெளிவடைய வேண்டுமாய் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு