வியாழன், 8 ஜனவரி, 2015

பொருளை அருளாக மாற்றுவதே சாதனம் !



பொருளை அருளாக மாற்றுவதே சாதனம் !

நாம் வாழும் இந்த மாயை உலகம் பொருள் நிறைந்தது...பொருளகள் அனைத்தும் ஐந்து பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டதாகும்.பொருட்கள் அனைத்தும் அசுத்த பூத காரிய அணுக்களால் உண்டானதாகும் .

நம்முடைய உடம்பும் பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டதாகும். கடவுளால் அனுப்பி வைக்கப் பட்ட ஆன்மா என்னும் ஒளி, உயிர் எடுத்து,உடம்பு எடுத்து  வாழ்வதற்கு, சுத்த பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் உடம்பாகும் .அந்த வாடகை வீட்டிற்கு தினமும் உணவு என்னும்  வாடகை கொடுக்க வேண்டும்.வாடகை கொடுக்க வில்லை என்றால் பசி,கொலை,பிணி,தாகம்,இச்சை எளிமை,பயம்,போன்ற தொல்லைகளைக் கொடுத்து உடம்பை அழித்து விடும் அதற்கு மரணம் என்று பெயர்.

மரணம் அடைந்தால் மறுபடியும் வேறு ஒரு உடம்பைக் கொடுத்து உணவு என்னும் வாடகை வசூலித்துக் கொண்டே இருக்கும் அதனால் பிறப்பு .இறப்பு இடைவிடாமல் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கும்.

பொருள் இல்லாற்கு இவ்வுலகம் இல்லை !
அருள் இல்லாற்கு அவ்வுலகம் இல்லை !

பொருள் நிறைந்த உலகில் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் வந்து கொண்டே இருக்கும் .அருள்  நிறைந்த உலகில் மகிழ்சியும் ஆனந்தமும் குறைவில்லாமல் இருக்கும் .

பொருள் நிறைந்த உலகில் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் .அருள் நிறைந்த உலகில் பிறப்பு இறப்பு இல்லாமல் இறைவன் துணையுடன் ஆனந்தமாக வாழலாம் அதற்கு பேரின்ப வாழ்வு என்பதாகும் /

இறப்பையும் பிறப்பையும் நீக்க வேண்டும் !

பிறப்பையும் இறப்பையும் நீக்க வேண்டுமானால்,மனிதன் கடைபிடிக்க வேண்டிய  சாதனம் இரண்டு வகைப்படும் ஒன்று பரோபகாரம் ஒன்று சத்விசாரம்.இந்த இரண்டு சாதனங்களால் மட்டுமே பிறப்பையும் இறப்பையும் நீக்கி மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற வேண்டும்.

அந்த முத்தேக சித்தி என்பது,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதாகும்.அதாவது அசுத்த பூத காரிய உடம்பை சுத்த பூத காரிய உடம்பாக மாற்றி பின் அருள் உடம்பாக மாற்ற வேண்டும்.உயிர் எடுத்து வாழும் ஜீவ தேகத்தை  ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பை பெறுவதாகும் .

அழியும் பொருள் உடம்பை அழியா அருள் உடம்பாக மாற்ற வேண்டும்.அதுவே பொருளை அருளாக மாற்றுவதாகும்.

சன்மார்க்க அன்பர்களின் சாதனம் எது வென்றால் ...பஞ்ச பூதப் அணுப் பொருள்களால் பின்னப்பட்ட உயிர் உள்ள பூத ஊன உடம்பை ...அருள் உடம்பாக மாற்ற வேண்டும்

அந்த அணுக்களை எப்படி மாற்றுவது என்பதை வள்ளல் பெருமான், தான் மாற்றிக் கொண்டு நமக்கும்  வழி காட்டுகின்றார்

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார். இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது !

எல்லா வற்றையும் என்பது ...நம் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ள அறியாமை என்னும் பொய்யான மாயா திரைகளாகிய சாதி,சமயம்,மதம் போன்ற கற்பனைக் கதைகளில்உள்ள தெயவங்களின் பற்றுகளான, வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள் போன்ற, ஆச்சார சங்கற்பங்கள் எதிலும் பற்று இல்லாமல் ஒழித்து அழித்து விட்டு விட  வேண்டும்.

அடுத்து நம்மை அழித்துக் கொண்டுள்ள நம்மிடம் உள்ள பொருள்களை ஜீவ காருண்யம் என்னும் இயற்கை கருணையால் மற்றவர்களுக்கு கொடுத்து,அவர்கள் அடையும் ஆன்ம நெகிழ்ச்சியால் கிடைக்கும் சுத்த உஷ்ணத்தை பெற்று ,ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கி ஆன்மாவில் உள்ள அருளைப் பெற வேண்டும் .

வள்ளல்பெருமான் எல்லா பற்றுகளையும் விட்டு விட்டார் .அதனால் அவரை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஏறா நிலைமிசை ஏற்றி வைத்துள்ளார் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் ஆனால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் ,இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் பெற்றுக் கொள்ளவில்லை .

நான் அந்த சாதி ,சமயம்,மதத்தில் வைத்து இருந்த லஷியம் என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ,அந்த லட்ஷியம் தூக்கி விடவில்லை என்னை உயர்ந்த இடத்திற்கு தூக்கி விட்டது யாதெனில் ...

அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று சத்தியப் பெரு விண்ணப்பத்திலும் ''எத் தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றித் தலைவா வேறு எண்ணியது உண்டோ ''எனவும்

தேடியது உண்டு நின் திரு உரு உண்மை என்னும் தொடக்கம் உடைய பதிகத்திலும் விண்ணப்பித்து இருக்கின்றேன் என்று தெளிவு படுத்தி உள்ளார் .

வள்ளலாருக்கு தெரிவித்த உண்மை யாதெனில் ? உண்மைப் பெரு நெறி ஒழுக்கம் யாதெனில் ....

கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக!என்றது தான்
என்னை ஏறா நிலைமிசை ஏற்றி விட்டது ,அது யாதெனில் தயவு ,தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும் .தயவு வந்தால் தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது.

நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் என்று ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை பற்றி தெளிவுப் படுத்துகின்றார் .

அந்த ஒருமை யாதெனில் .

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்து உருவாய் எம் பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !

என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார்கள் .

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரே தன்மை உடையது ஆதலால் அவைகள் யாவும் நம்முடைய உயிர்கள் போன்றது என்பதை எண்ணி உணர்ந்து அந்த உயிர்களிடம் அன்பு,தயவு,கருணை.வைத்து வாழும் உள்ளமே கருணை உள்ள கடவுள் வாழும் இடம் என்று நான் அறிந்தேன்

அந்த உண்மை தெரிந்தவன் எவனோ அவனே உண்மை தெரிந்த வித்தகன். அவனே கடவுள் என்பதை அறிந்தேன்...அவனை நான் தினமும் கடவுளாக நினைந்து வணங்குகிறேன் ,என்பதை அனைத்து உலக மக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு ''கருணை '' என்னும் கருவியால் மட்டுமே இறைவன் இடம் இருந்து அருளைப் பெற்று, ஆன்மாவை மறைத்துக்  கொண்டுள்ள அறியாமை என்னும் மாயா திரைகளை நீக்கி,பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்ற முடியும் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்.

ஆதலால் நமக்கு கருணைத்தான் சாதனம் என்பதை புரிந்து கொண்டு ,ஜீவ காருண்யம் என்னும் கருணையும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாடு என்னும் உரிமை,எங்களுக்குள் , எக்காலத்தும்,எவ்விடத்தும் எவ்விதத்தும் ,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச செய்வித்து அருளல் வேண்டும் என்கின்றார் .

அனைத்து உயிர்களும் ஒரே தன்மை உடையது என்பதை அறிந்து கொள்வதே  சத் விசாரம் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் சாதனமாகும் .என்பதை அறிந்து இடைவிடாமல் கடைபிடிக்க வேண்டும் .

கருணை ஒன்று தான்  பொருளை அருளாக மாற்றும் ஆற்றல் பெற்றதாகும் .அன்பு, தயவு,கருணை என்பது ஒரேப் பொருளாக கொண்டு இருந்தாலும் அன்பை விட தயவு உயர்ந்தது ,தயவை விட கருணை உயர்ந்தது ,கருணையை விட அருள் உயர்ந்தது ,அருளைக் கொண்டு உயர்ந்த பேரறிவைப் பெற்று கடவுளின் இயற்கை உண்மையை அறிந்து ,கடவுள் மயமாக வேண்டும்.

அதுவே கடவுள் நிலை அறிந்து அம் மயமாதல் என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.அதுவே சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும் அதுவே முத்தேக சித்தி என்பதாகும்.அதுவே பேரின்ப லாபமாகும் ,அதுவே பேரின்ப வாழ்வாகும் .

பொருள் உள்ள இடத்தில் அருள் இருக்காது .அருள் உள்ள இடத்தில் அனைத்தும் இருக்கும் .ஆதலால் அருள் பெறுவது ஒன்றே சுத்த சன்மார்க்க பெரு நெறியாகும்.

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம்
இருள் நெறி யென எனக்கு இயம்பிய சிவமே !

அருள் பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

அருட் சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ் சுகம்
மருட் சுகம் பிற வென வகுத்த மெய்ச்சுகமே !

அருட் பேர் அதுவே அரும் பெறற் பெரும் பே
றிருட் பேர் அறுக்கும் என்று இயம்பிய சிவமே !

என்று அகவலில் நமக்குத் தகவல் சொல்லி உள்ளார் நமது வள்ளல்பெருமான்

ஆதலால் பொருளை அருளாக மாற்றத் தெரிந்தவர்கள் மரணத்தை வென்று ,பிறப்பு இறப்பு இல்லாமல் கடவுளின் இல்லத்திற்கு சென்று பெரு மகிழ்ச்சியுடனும் பேர் ஆனந்தமாகவும் நிலைத்து வாழலாம் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
திரு அருட்பா ஆராய்சி மையம் .கைபேசி ..9865939896 ,,,

குறிப்பு ;--

மாநில தழுவிய எழுச்சி மாநாடு ..தைப்பூச பெருவிழா ..விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஜனவரி 31,to பிபரவரி 01,02,03,( தை 17,18,19,20,) ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது .மாநாட்டு வித்தகர் ,சுத்த சன்மார்க்க சிந்தனையாளர் மாநாடு அமைப்பாளர் வள்ளலார் சன்மார்க்க கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் ஆன்மநேய சகோதரர் திருவாளர் ஜெய அண்ணாமலை பரதேசி அவர்களின் தீவிர முயற்சியால் மாநாடு நடை பெறுகின்றது .அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற்று மகிழ்சியுடன் வாழ்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம் .அனைத்து ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களையும் மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு