திங்கள், 9 ஏப்ரல், 2012

மெய் மொழியும் ஒழுக்கமும் ! 2 ,பாகம் !

மெய் மொழியும் ஒழுக்கமும் !


பல்லாயிரம் ஆண்டுகளாக பல நாடுகளில் பலப்பல அருளாளர்கள்,இறைவனைப் பற்றியும் இறைவனை அடையும் வழி,முறைகளைப் பற்றியும் அவரவர்களுக்கு தெரிந்தவைகளை சொல்லியும் எழுதியும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் ,அவர்கள் சொல்லியது எல்லாம் உண்மையா என்று உணரும் போது,தத்துவ உண்மைகளாக இருந்ததே தவிர,நேரடியாக உண்மையை சொல்லத் தவறிவிட்டார்கள் .

காரணம் அவர்கள் இறைவனை அடைய சிறு சிறு முயற்சிகள் மேற்க்  கொண்டார்களே தவிர முழுமையான ஒழுக்க நெறியை கடை பிடிக்கவில்லை என்பது வள்ளலார் எழுதிய அருட்பாவை படிக்கும் போது உணர முடிகிறது.

வள்ளலார் சொல்லும் விளக்கப்பாடல் !

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்
இறங்கிலில் என் பேசுதலால் என்பயனோ நடஞ் செய்
இறைவரடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

என்று தெளிவுப் படுத்துகிறார் வள்ளலார் .

ஆகாரம் ,மைத்துனம்,தூக்கம்,பயம்,இவைகளால் மரணம் வரும் இடைவிடாது உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களுக்கு,
ஆகாரம்,மைத்துனம்,தூக்கம்,பயம் வராது. உள் ஒளியில {ஆன்மாவில் }இருந்து அமுதம் என்னும் திரவம் வெளியே சுரக்கும்.அப்பொழுது உண்மை தானே விளங்கும் ,அப்போதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும் .  
 மனிதன் இறை நிலையை அடைய வேண்டுமானால் முதலில் வள்ளலார் சொல்லிய ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்தால் அன்றி வேறு வகையால் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறவும் முடியாது, அடையவும் முடியாது. அவை யாவை என்பதை முதலில் அறிந்து தெரிந்து,புரிந்து அதன்படி வாழ பழகிக் கொள்ள வேண்டும் ,

அந்த ஒழுக்க நெறிகள் ;-- இந்திரிய ஒழுக்கம் ,--கரண ஒழுக்கம்,--ஜீவ ஒழுக்கம் ,--ஆன்ம ஒழுக்கம் ,என்ற நான்கு ஒழுக்கங்களாகும்.

வள்ளலார் காலத்தில் தன்னுடன் இருந்த அன்பர்களுக்கு ஒழுக்க நெறிகளை மிகவும் வளியுறித்தி சொல்லி வந்தார் .சொல்லியதோடு அல்லாமல் ,தருமச்சாலையில் எழுதி வைத்துள்ளார் ,நீங்கள் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வந்தால் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்தவுடன் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .

ஏன் அப்படிச சொன்னார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் .!

வள்ளலார் ஞானசபை தோற்று வித்ததே அதாவது கட்டியதே இறைவன் ஆணைப்படிதான் -.இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டு தன்னை அழைத்து
செல்ல ஞான சபைக்கு வருவது குறித்து ஞான சபை விளக்கப் பத்திரிகையில் தெரியப்படுத்துகிறார்.அவர் மட்டும் செல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அல்ல,ஆசை அல்ல , மற்றவர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதே அவருடைய பேராசையாகும்.அதற்காக ஒழுக்க நெறியை பின் பற்றுங்கள் என்று வலியுறித்திக் கொண்டே இருந்தார் , ஆனால் ஒருவரும் அவர் சொல்லியதை கடைபிடிக்கவில்லை, செவி சாய்க்கவில்லை, என்பது தெளிவாகிறது

ஞானசபையை தோற்றுவித்து ஞானசபை விளக்கப் பத்திரிகை வெளியிடுகிறார் அவர் விளக்கம் தந்து அதன்படி நடந்தார்களா என்றால் இல்லை என்பது புலனாகிறது --.எப்படி என்பதை கவனிப்போம் .

இன்று தொடங்கி ஆருட்பெரும்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் என்றும், பித்தளை முதலியவற்றால் செயத குத்து விளக்கு வேண்டாம் மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி ,கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,உட்புற வாயிலில்களுக்குச சமீபங்களில் வைத்துவரச் செய்விக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார் வள்ளலார்

அடுத்து நாலு நாளைக்கு ஒருவிசை காலையில்,மேற்குறித்த சிரியரைக் கொண்டாயினும்,பெரியரைக் கொண்டாயினும்,உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்,தூசு துடைப்பிக்கப் புகும் போது நீராடிச் ,சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் {துணி }சுற்றிக் கொண்டு புகுந்து ,முட்டிக் காலிட்டுக் கொண்டு ,தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும்.விளக்கு வைக்கின்ற போதும் இங்கணமே செய்விக்க வேண்டும் ,

விளக்கு வைத்ததற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவரும் ,எழுபத்தி இரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியரும்,பொருள்,இடம்,போகம்,முதலியவற்றில் இச்சை சிறிதும் இல்லாதவர்களாய் ,தெய்வ நினைப்பு உள்ளவர்களாய் ,அன்பு உடையவர்களாய் இருத்தல் வேண்டும்,விளக்கு வைக்கும் போதும் தூசு துடைக்கும் போதும் ,நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும் .

யாரும் யாதொரு காரியங் குறித்தும் தற்காலம் உள்ளே புகுதல் கூடாது.ஞான சபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருத்தல் கூடாது .அத் திறவுகோலை வேறு ஒரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவு கோலை ஆஸ்தான காவல் உத்தர வாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் .

என்று ஞானசபை விளக்கப் பத்திரிகை எழுதி அங்கு உள்ள நமவர்களுக்கு தெரியப் படுத்தி கட்டளை இடுகிறார் .மேலும் இதன் தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன் என்று முடிக்கிறார் .வள்ளலார் எழுதி அறிவித்தபடி அங்கு உள்ளவர்கள் செயல் பட்டார்களா இல்லையா என்பதை கவனிக்கும் போது செயல்பட வில்லை என்பது அவர் எழுதிய அருட்பாவின் வாயிலாகவும் ,எச்சரிப்பு பத்திரிகை வாயிலாகவும் அரிய முடிகிறது .      

எச்சரிப்பு பத்திரிக்கை ;--

அவர் ஞானசபை விளக்கப் பத்திரிகை வெளியிட்டது ,{1873,ஆம் ஆண்டு } ஆங்கிரச வருடம் ,ஆடிமாதம் ஐந்தாம் தேதியாகும்

வள்ளலார் சொல்லியபடி அங்கு உள்ளவர்கள் செயல்பட வில்லை என்பது அவர் வெளியிட்ட எச்சரிப்புப் பத்திரிகையில் தெளிவுப் படுத்தி உள்ளார். அந்த வருடம் {1873,ஆம் ஆண்டு } ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் பணிரண்டாம் தேதியாகும் அதில் அவர் அறிவித்துள்ளதை நன்கு கவனிக்க வேண்டும் .

அன்பர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்பு பத்திரிகை ;--

ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும் ,அவர் பொதுப்பட உலகத்தில் உள்ள யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று ,நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப் படுகின்றனர் என்றும் ,அது காலையிற் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்வோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ,ஒத்து இருத்தல் அவசியம்.

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷிகள் உண்டானாலும் அல்லது உண்டாகிறதா இருந்தாலும், உடனே ஜாகிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்து விடல் வேண்டும் .அப்படி இருந்தால் மேல் விளைவை உண்டு பண்ணாது இருக்கும் .அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைத்தாலும் அப்படி வைதவர் களையும் அந்த வைதலைக் கேட்டு சகிப்பவர்களோடு ,மறுத்தபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

அப்படி மருவாதவர் களையும்,உடனே ஓதிக்கிவிட வேண்டுவது.அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டுத் தாங்கள் எதிர்த்து வார்த்தை யாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டு அல்லது ஒருவருக்குத் தெரிவித்தல் வேண்டும்.அப்படித் தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச சண்டை தொடுப்பவர்களும் இங்கு இருப்பது அனாவசியம் .அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சும் இல்லாமல் ,இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்ச்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்
என்று எச்சரிப்பு பத்திரிகையில் வெளியிடுகிறார் .

வள்ளலார் காலத்தில் நடந்த இக் கொடுமையை என்னவென்று சொல்வது .உலகத்தை திருத்த வந்த வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை உணர்வாரும் கேட்பாரும் இல்லாமல் போயிற்று இருந்தாலும் வள்ளலார் மனம் தளரவில்லை .இந்த மக்களை எப்படியாது திருத்தியே ஆகவேண்டும் ,கடவுளின் ஆணையை நிறைவேற்றியே யாகவேண்டும் என்ற கருணை உணர்வோடு உள்ளத்தோடு யாருடைய மனமும் நோகாமல் ஒரு வார்த்தையை சொல்லுகிறார் .
  • உங்களைத் தொட்டாலும் தோஷம் உறும் ,விட்டாலும் கதியில்லை .!
அந்த அளவிற்கு சாதி,சமயம்,மதம் என்னும் பேய் பிடித்து இவர்களை ஆட்டுகின்றன .இவர்களுக்கு ஒழுக்கம் ,உண்மை என்றால் என்னவென்றே தெரியவில்லை அந்த அளவிற்கு மூடமாக உள்ளார்களே இவர்களை விட்டு விட்டு எப்படி செல்வது என்று பரிதாபப் படுகின்றார் இவர்களைப் போன்றுதான் உலகில் உள்ள அனைவரும் இருப்பார்கள் என்று உள்ளும் புறமும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் முறை இடுகிறார் .
  • சத்திய ஞானசபையை பூட்டிவிடுகிறார் !
அருட்பெரும்ஜோதி ஆணைப்படி வள்ளலார் ஞானசபைக்கு உள் சென்று இறைவனோடு இரண்டற கலந்திருக்க வேண்டும்..அதற்கு உண்டான காலம் நேரம் எல்லாம் ஆண்டவரால் அறிவிக்கப் பட்டு உள்ளது ..

வடலூரில் தன்னுடன் இருந்த அன்பர்கள் வள்ளலார் அறிவித்தப்படி வழிபாட்டுக் கொள்கையை ,,முறையாக செய்யத் தவறி விட்டார்கள்.அப்படி செயல்படாத காரணத்தினால்
ஞானசபையை பூட்டிவிட்டு வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார் .

அங்கு தனிமையில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் முறையிடுகிறார் .அருட்பெரும்ஜோதி ஆண்டவரும் தானும் பலமுறை சந்தித்து கலந்துரை செய்கின்றார்கள் ஆண்டவர் பல முறை வள்ளலாரை நேர்கான வந்து உள்ளார் .அதற்கு வள்ளலார் எழுதிய அருட்பாவில் ஆதாரங்கள் நிறைய உள்ளன .  
  • அருள்விளக்க மாலையில் உள்ள ஒரு பாடல் !;-
நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் நினையே
நேர் காண வந்தனம் என்று என்முடிமேல் மலர்க்கால்
தான் நிலைக்க வைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித்
தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே
ஏன் நினைத்தாய் இவ்வளவு சதந்தரம் என் மகனே
எனக்கு இல்லையோ என்று அருளி எனை யாண்ட குருவே
தேன் நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வ நடத்தரசே என் சிறு மொழி யேற்று அருளே .
  • அடுத்து ;--
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம
எதாக முடியுமோ என்று
எண்ணி இரு கண்ணிற் நீர் காட்டிக் கலங்கி நின்று
ஏங்கிய இரவில் ஒருநாள்
மின்செய் மெய்ஞ் ஞான உருவாகி நான் காணவே
வெளி நின்று அனைத்து என் உள்ளே
மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்கனே
விற்று இருக்கின்ற குருவே
நன்செய்வாய் இட்ட விளைவது விளைந்தது கண்டு
நல்கு உரைவினோடு நான் அடைந்த
நன் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகமாகவே
நான் கண்டு கொண்டு மகிழவே
வன் செய்வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை
வலிய வந்து ஆண்ட பரமே
மணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜபதியே .!

என்ற பலபாட்ல்கள் வாயிலாக ,வள்ளலாரைத் தேடி அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சென்று உள்ளார் என்பதை அறிய முடிகிறது .அது மட்டும் அல்ல வள்ளலாரின் துயரங்களையும் துன்பங்களையும் போக்கி தான் நினைத்தையை எல்லாம் நிறை வேற்றி வைத்துள்ளார் எனபதும் தெளிவாகிறது,
  • அடுத்த பாடல் ஒன்று !;--
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே
தேன் இருக்கும் மலர் அணைமேல் பளிக்கறையின் யூடே
திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே
நல்ல திருவருள் அமுதம் நல்கியதும் அன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே !

எனவும் பதிவு செய்துள்ளார் ,பலகாலமாக,உலகை நிர்வாகம் செய்யும், ஐந்து கர்த்தாக்களும் ஆண்டவர் என்றாவது ஒருநாள் வருகை புரிவார் என்ற நம்பிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள் .எப்படி அவர்கள் காத்து இருக்கிறார்களாம் ,அவர்கள் ஆட்சி புரியும் இடமான, மணிமாடத்தின் நடுவே ஆண்டவரின் கால் நோகாமல் இருக்க, அவர் வரும் போது,அவருடைய கால் பதியும் இடம் எல்லாம் ,தேன் இருக்கும் மலர் போல் விரிப்பு விரித்து திரு அருளுக்காக காத்துக் கொண்டு,ஆண்டவர் வருவார் வருவார் என்று நம்பிக்கையுடன் தோத்திரம் செய்தும் ,பக்தி செய்தும் வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள் ,

அப்படி எல்லாம் அவர்கள் இருக்க ,

நான் இருக்கும் இடமோ ஓட்டைக் குடிசையாகும் ,அந்த குடிசையில் அழைப்பு இல்லாமல் வலிந்து நுழைந்தது அல்லாமல் எனக்கு நல்ல திரு அருள் அமுதம் கொடுத்ததும் அன்றி, என் புன்னால் ஆன உடம்பு என்னும் குடிசையிலும் மகிழ்ச்சியுடன் நுழைந்து எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசையிலும் நுழைந்தனையே !உன் பெருமையை உன் ஆசையை .உன்னை நான் அடைந்த அந்த பெருமையை எப்படி எடுத்து உரைக்க முடியும் ,சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சொல்லால் அளக்க முடியாது என்று மிகவும் பெருமைப் படுகிறார் வள்ளலார் .      
 
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்திய போது அதனைத்
தன் வருத்தம் எனக் கொண்டு என்னுடயை வருத்தம் எல்லாம் நீக்கி என்னை என்றும் இடைவிடாது ஆண்டு கொண்டு இருக்கும் குருவே ! இச்சிறுவனுடைய சிறு உரையைக் கேட்டு நேரே காண வந்த உன் கருணையை, பெருமையை எதற்கு சமமாக, ஈடாக, எடுத்து உரைக்க முடியும் என்னை உன் உண்மையான மகனாகக் கருதி, நல்ல பிள்ளையாக ,செல்லப் பிள்ளையாக, சொல் கேட்கும் பிள்ளையாக,ஏற்றுக் கொண்டு ,என்றும் என்னை விட்டு பிரியாமல் இருக்கும் படியான அருளைத் தந்து வளர்க்கின்ற தெய்வ நடத்தரசே என்னை புரிந்து கொண்டு என்னுள் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றாய் . ஆகலின் தேவரீர் திருவருட் பெருங் கருணையை என்னவென்று கருதுவேன், என்னவென்று துதிப்பேன்,என்னவென்று போற்றி புகழ்வேன் ,
  • அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !.  
பாதி இரவில் எழுந்து அருளி இப்பாவி யேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே !

இந்த உலக மக்களை திருத்துவதற்கு என்னை அனுப்பி வைத்தாய் ,நான் எப்படி வாழ வேண்டும் என்ற வழியையும் காட்டி வைத்தாய் ,கோடு தவறாமல் உன்னுடைய பெருமையும் புகழையும் .உண்மையும் இந்த மக்களுக்கு சொல்ல வைத்தாய் ,உங்கள் கட்டளையை மீறாமல் அனைத்தும் எழுதி வைத்து விட்டேன் ,எழுதியது போல்,வாழ்ந்தேன்,வாழ்கிறேன் ,வாழ்ந்து கொண்டே இருப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார் ..

இப்போது என்னை ஏறா நிலைமிசை ஏற்றி வைத்துள்ளீர் எனக்கு இது போதும் .நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது {சொல்லமுடியாது }ஆனால் இருந்தாலும் இது எனக்கு மகிழ்ச்சி இல்லை --நான் உழைத்த உழைப்பிற்கு ,வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் போதித்த போதனைக்கு ,எனக்கு மட்டும் கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு போதாது ,என்போல் இவ் உலகம் பெறுதல் வேண்டும் ,இதுவே என்னுடைய விருப்பமும் ,பேராசையும் ஆகும் .

என்று தன்னுடைய விருப்பத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் சொல்லி வேண்டுகிறார் .

எப்படியாவது இந்த மக்களை ஒழுக்க நிலைக்கு கொண்டு வந்து அழைத்து செல்லலாம் என்று மக்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறார் .சன்மார்க்கத் சங்கத்தவர்களுக்கு வேண்டுகோள் தரும் ஒரு பாடல் ,

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்று கின்றேன் தயவினொடுங் கேட்பீர்
என் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்குச் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் நீண்டே !

உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல் இந்த மக்கள் என்னை கடவுள் என பாவித்து வணங்க்குகிறார்கள் ,இவர்களுக்கு எப்படி புரியவைப்பேன் ,என வருந்தி வேதனைப்படுகிறார் ,

ஆன்மநேய அன்புடைய நண்பர்களே! உங்கள் தாள் வணங்கிக் {காலைத்தொட்டு }கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் ,--நானும் உங்களில் ஒருவன்தான் என்னைக் கடவுள் என நினைத்து வணங்க வேண்டாம் ,எல்லாம் வல்ல தனித் தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் உண்மையானக் கடவுளாகும் அவரை விட்டு வேறு எதையும் வணங்காதீர்கள் ,

உலகில் உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல், உண்மைக்கு புறம்பான பொய்யான கற்பனை உருவங்களை வணங்கும் புன்மார்க்கத்தவர்கள் {அறிவு இல்லாதவர்கள் } போல் நீங்களும் செயல்ப்பட்டு புத்தி மயங்கி அழிந்து விடாதீர்கள் ,

எங்கும் பூரணமாய் விளங்கி, எல்லார்க்கும் நன்மையே செய்யும், கருணையே வடிவமான ,அருளை வாரி வழங்கும் ஒப்பற்ற உயர்ந்த தெய்வம் ஒன்றே ---ஒன்று !அதுவே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தான் என்பதை அறிவால் அறிந்து உள்ளத்தால் உணர்ந்து, வணங்கவேண்டும் வழிபட வேண்டும் .இதுவே சத்தியம் ,என்மீது ஆணையாக-- உங்கள் மீது ஆணையாக-- சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் என்று நம்மை எல்லாம் அன்புடன் அழைக்கிறார் வள்ளலார் .

அன்றும் யாரும் கேட்கவில்லை இன்றும் யாரும் தெரிந்து கொள்வார் இல்லை !

நாமும் நமக்கு முன் இருந்தவர்களும் இன்றுவரை யாரும் கேட்டதாக தெரியவில்லை அறிந்ததாக தெரியவில்லை,வாழ்ந்ததாக தெரியவில்லை சுத்த சன்மார்க்கம் என்ற போர்வையில் உலகியலில் உள்ளவர்கள் போல்தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்..
  • அடுத்து வேதனையுடன் பதிவு செய்துள்ள பாடல் !
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மை யுடையனவே
வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என் வாய்
விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்ற படியால்
செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத்தினத்தே
தேமொழி அப்போது எனை நீ தெளிந்து கொள்வாய் -கண்டாய்
ஒல்லுகின்ற வகை எல்லாஞ் சொல்லு கின்றேனடி நான்
உண்மை இது உண்மை இது உண்மை இது தானே !

இப்படி பல கோணங்களில் வள்ளலார் மக்களுக்கு போதித்து கொண்டே இருந்தார் .ஆனால் அவருடன் இருந்தவர்கள் யாரும் அவர் சொல்லிய ஒழுக்கத்தை கடைபிடித்ததாக தெரியவில்லை ,வள்ளலார் உடன் இருந்தால் உலகியல் வாழ்க்கைக்கு ஏதாவது பொன் பொருள் போன்ற லாபம் கிடைக்கும் என்று நினைத்தார்களே ஒழிய, அருள் வேண்டும்,அருளைப்பெற வேண்டும் என்று யாரும் தங்களை தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை ,அதற்குத் தகுந்த ஒழுக்கத்தை யாரும் கடைப் பிடிக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.

அன்றும் இல்லை, இன்றும் இல்லை ,வள்ளலார் வழியை பின் பற்றுகிறோம் என பலவழிகளில் பொருள் சேர்ப்பதிலே கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள், அதைப்பற்றி நான் சொல்ல விரும்ப வில்லை ,

மரணத்தை வெல்ல தன்னாலே முடியவில்லை ,நரை திரை மூப்பு இல்லாமல் வாழ வழி தெரியவில்லை, மரணத்தை வெல்லுவது குறித்து மற்றவர்களுக்கு விளக்கம் சொல்லித் கொண்டு இருக்கிறார்கள் ,மரணத்தை வெல்லும் பயிற்சி என்ற பெயரில் பல தவறான வழியில் மக்களுக்கு போதித்துக் கொண்டு இருக்கிறார்கள் .அதுமட்டும் அல்ல மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் சாகாக்கலைஆராய்ச்சி என்றும் இன்னும் பல தலைப்புகளில் புத்தகம் எழுதி வெளியிட்டுக் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளார்கள் .

வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஒன்றே போதுமானது அதைப் முழுமையாக படித்து அதில் உள்ள உண்மையான ஒழுக்க நெறிகளை கடைபிடித்து, அருள் நிலையை அறிந்து ,உணர்ந்து வாழ்ந்தாலே போதுமானதாகும் .வள்ளலாரை விட மற்றவர்கள் எழுதிய நூல்கள் உண்மையை தெரிவித்து விடுமா என்ன ?

உலகில்--நீங்கள் கண்டது கேட்டது,படித்தது ,களித்தது அனைத்து பொய் என்கிறார் வள்ளலார் .
  • பாடல் பாருங்கள் ;--
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !,

மரணத்தை வெல்வது என்பது சாதாரண காரியம் அல்ல ,! மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !

அவர்களுக்கே கிடைக்கவில்லை என்றால் அவை எப்படிப்பட்ட நிலை என்பதை அறிய வேண்டும்..சுத்த சன்மார்க்கம் என்பது .சரியை,கிரியை ,யோகம ,ஞானம் எண்ணும் நாலாவது நிலையில் உள்ள ஞானத்தில் யோகம்  எண்ணும் பதினைந்தாம் நிலையில் உள்ளவர்களுக்கு சொல்லியது என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,அந்த நிலைக்கு வந்தவர்கள்தான் சுத்த சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து,புரிந்து கொண்டு அருள் பெறுவதற்கு மேலும் முயற்சி செய்வார்கள் .அவர்களுககே சுத்த சன்மார்க்கம் நன்கு விளங்கும் ,அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பின் வரும் பாடலில் தெளிவுப் படுத்துகிறார்
  • அந்த பாடல் ;--
ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் முன்னும்
யோக மாந்தருக்குக் காலம் உண்டாகவே யுரைத்தேன் ..

வள்ளலார் காலத்திற்கு முன்னாடி வந்த அருளாளர்கள் ,மரணத்தை வெல்லும் வழிமுறையை யாரும் முறையாக மக்களுக்கு சொல்லவில்லை ,அவர்களும் கடைபிடிக்க வில்லை, யோக நிலையில் உள்ளவர்கள் சரியான யோக வழி தெரியாமல் முயற்சி செய்து வீணாக மாண்டு போய் விட்டார்கள் .இனிமேல் யோக நிலையில் உள்ளவர்கள் சமரச சுத்த சத்திய உண்மை சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து ,அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங் கருணையால் அருளைப் பெற்று ,பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்னும்,மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து ,கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

நாமும் முயற்ச்சி செய்தால் அந்த நிலைக்கு வரலாம் என்பதை வள்ளலார் அவர்கள் ,மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் நமக்குத் தெரியப் படுத்தி உள்ளார்கள் .

தொடரும் ;--

ஆன்மநேயன் கதிர்வேலு .

  •        

2 கருத்துகள்:

28 ஆகஸ்ட், 2015 அன்று PM 3:55 க்கு, Blogger Unknown கூறியது…

சுவாமிகளின் வாழ்வியல் சிந்தனைகளை நயம் பட உரைக்கும் கட்டுரை மனம் லயிக்க அறம் ஓங்கநல்லறி புகட்டும் கருத்துரை

 
28 ஆகஸ்ட், 2015 அன்று PM 3:55 க்கு, Blogger Unknown கூறியது…

சுவாமிகளின் வாழ்வியல் சிந்தனைகளை நயம் பட உரைக்கும் கட்டுரை மனம் லயிக்க அறம் ஓங்கநல்லறி புகட்டும் கருத்துரை

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு