சனி, 25 பிப்ரவரி, 2012

நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 2,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !



காட்சி ;---3,

உத்தர ஞான சித்திபுரம் என்றும்.,உத்தரஞான சிதம்பரம் என்றும்,திருஅருளால் ஆக்கப்பட்ட சிறப்பு பெயர்களும் .--பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும்,உலத்தாரால் குறிக்கப்பட்ட குறிப்பு பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபை ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை'' இதுதான்

ஒளிவடிவில்,திருநடனமிடும் எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளராகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்ற புனிதத் திருத்தலம் {ஞானசபை }இதுதான் .

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே,ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் --அலைந்து அலைந்து வீணே நீர் அழிவது அழகல்ல --என்று மனித சமுதாயத்திற்கு அறிவு வழிகாட்டி --

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக என்று சினந்து கூறி--சீர்திருத்த உலகை நிர்மாணிக்க புரட்சிக் குரல் கொடுத்து --சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் தந்து --உலகத்தார் அனைவரும் ஒருதாய் மக்கள் தான என்று வலியுறுத்தி,''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை "'என்னும் உயரிய கொள்கைத் தந்தவர் --திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் !

இறைவனால் வருவிக்க உற்ற இறைமகன் .இறைவன் அருளை முழுமையாகப் பெற்ற அருட் தந்தை, அனைத்து உயிர்களிலும் இதயங்களிலும் குடி இருக்கும் இதய தெய்வம்.!--

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் --எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் கருத வேண்டும் என்று போதித்த மாமேதை !

வாடிய பயிரைக் கண்ட பெதேல்லாம் வாடி 
வருந்திய இரக்கத்தின் எழுஞாயிறு!

கருணைக் குன்றென நிமிர்ந்து நின்ற திருஅருட்பிரகாச வள்ளல பெருமான் எழுப்பியதே இந்த சத்திய ஞான சபையாகும். !

இது ஆலயம் அல்ல! ,இது சர்ச் அல்ல! ,இது மசூதி அல்ல! ,இது பிரமிடு அல்ல!இது கோயில் அல்ல! ,இது தேவாலயம் அல்ல ,உண்மைக் கடவுளான ''அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ''நடனமிடுகின்ற ''ஞான சிங்காதன பீடம் ''என்னும் மேடையாகும்.,எல்லா உயிர்களிலும் இறைவன் ஆன்ம ஒளியாக இருந்து இயங்கும் தோற்றமாகும் .சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்,சன்மார்க்க சித்தியை யான பெற்றுக் கொண்டனன் என்று தான் கண்ட உண்மைக காட்சியை உலக மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற,ஆண்டவன் கட்டளைப்படி தோற்று விக்கப் பட்டதுதான் --சத்திய ஞான சபையாகும்.!

இங்கே சடங்குகள் இல்லை!இங்கே சாதி சமய மதம் முதலான எந்த ஆசாரங்களும் இல்லை சாதிகள் இல்லை !சமயங்கள் இல்லை !மதங்கள் இல்லை !வேத மந்திரங்கள் இல்லை,நாடு,மொழி இனம்,போன்ற உலகாசார சங்கற்ப விகற்பங்கள் !இல்லை!

எல்லோரும் ஓர் குலம் !
எல்லோருக்கும் ஒரே இறைவன் !
அவரே அருட்பெரும்ஜோதி !
அந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வாழும் புனித இல்லமே இந்த ஞான சபையாகும்.அதற்கு பெயர்தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !''  என்பதாகும்.   
.
இனி சத்திய தருமச் சாலையைப் பார்ப்போம்! 

சத்திய தருமச்சாலை !


வள்ளலார் ஏற்றிவைத்த அணையா அடுப்பு பழையது,புதியது.!


சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ;--

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு ! உயிர் இரக்கமே இறைவனை அடையும் வழி ! கருணைக் காட்ட முடியாதவனால் கடவுளை நெருங்க முடியாது !

என்று மனித குலத்திற்கு போதித்த வள்ளல பெருமான் ,போதித்ததோடு நில்லாமல்,ஜீவகாருண்ய நெறியான பசிப்பிணியைப் போக்கும் அறப்பணிக்காக நிர்மாணிக்க பட்டது தான் சத்திய தருமச் சாலையாகும்.

இங்கே பசியோடு வருவோற்கு இல்லை என்று கூறாமல் உணவு வழங்கப் படுகிறது.இவை '-1867,ஆம் ஆண்டு மே மாதம் 23,ஆம் தேதி .{அதாவது வைகாசி 11,ஆம் தேதி ஆரம்பிக்கப் பட்டு --இன்றுவரை அன்னதானம் நடந்து கொண்டு வருகிறது .    

கொடுங் கோலான ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பித்த தருமச்சாலையில் வள்ளல் பெருமான திருக்கரத்தால் மூட்டப்பட்ட நெருப்பு -இன்றும் கனன்று கொண்டு இருக்கிறது,இந்த அடுப்பிலே அன்று பெருமான் ஏற்றிய நெருப்பு --பசி அரக்கனை --வறுமைப் பேயைப் பொசுக்கிட மூட்டிய நெருப்பாகும் .

தினமும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு குறையாமல் மூன்று வேலையும் அன்னதானம் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

இறைவனை அடையும் வழி {சாலை }உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்ய வழியை இறைவன் எனக்கு காட்டிய அந்த வழியை பின் பற்றியதால் தான்,இறைவன் அருளைத்தந்து அனைத்து ஆற்றல்களையும் தந்தார் என்பதை வள்ளல் பெருமான் எழுதிய பாடலைப் பார்ப்போம்.

என் பாட்டுக்கு எண்ணாதத எண்ணி இசைத்தேன் என்
தன் பட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான் !

என்று பாமாலை சாற்று கின்றார்--இறைவன் சொல்லியபடி தருமச்சாலையை தோற்று விக்கிறார் வள்ளலார் .அதன் பின் எவ்வாறு பெரும் பயனை இறைவன் தந்தார் என்பதை விளக்கும் பாடல் !

''அருள் விளக்க மாலை!''என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ள பாடல் ;--

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே 
களிப்பே ஏன் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே 
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் 
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம் தருமச்
சாலையிலே ஒருபகலிற் தந்த தனிப்பதியே 
சமரச சன்மார்க்கத் தலையமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் 
மாநடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே !

என்று-- தனக்கு இறைவன் தந்த அருள் ஆற்றலை மேலே கண்ட பாடல் மூலம் தெரியப் படுத்துகிறார்.

வள்ளலார் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட கருணை மிகுந்த சன்மார்க்க அன்பர்கள் தருமச்சாலைக்கு வேண்டிய அனைத்து பொருள்களையும் அதாவது ,அரிசி,பருப்பு காய்கறிகள் .விறகு மற்றும் பணம் போன்ற அனைத்தும் விலைக் கொடுத்து வாங்காமல்,வாரி வழங்கிக் கொண்டு உள்ளார்கள்.

 தொடரும் ;--



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு