சனி, 6 ஆகஸ்ட், 2011

அருள் அற்புதம் !



அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே

( 4906 )

சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்

( 4907 )

செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்

( 4908 )

ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்

( 4909 )

சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமு துண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்

( 4910 )

வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்

( 4911 )

புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்

( 4912 )

வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்

( 4913 )

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு