வெள்ளி, 15 ஜனவரி, 2021

திருந்துவோம் திருத்துவோம் !

 *திருந்துவோம் திருத்துவோம்*! 


*திருந்தியவன் மட்டுமே மற்றவர்களை திருத்த முடியும்.*


உத்தமர் தம் உறவு கொண்டு உத்தமர் போல் வாழ்வதே ஈடுசெய்ய முடியாத இயற்கை உண்மை வாழ்க்கையாகும். *உத்தமர் தம் உறவு கொண்டு வாழ்பவரே மற்றவர்களை திருத்தும் வல்லமை பெற்றவராகும்.* 


உத்தமன் என்பது யார் எனில் *எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உத்தமன் என்பவராகும்*. 


உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும். *ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்* என்பதே வள்ளலார் வாய்மொழியாகும்.


இயற்கை உண்மை. இயற்கை விளக்கம். இயற்கை இன்பம். எதுவோ அவற்றை தொடர்பு கொண்டு  அருளைப் பெற்றவர் எவரோ அவரே மற்ற உயிர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தும் அருளாளர் என்பவராகும். *அவரே உத்தமர் தம் உறவு கொண்டவர் என்பவராகும்*.


*மெய்ப்பொருள் கண்டு தெளிந்து திருந்தி வாழ்ந்தவர் வள்ளலார். திருந்தியபடி இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டியவர் வள்ளலார். உலகில் உள்ள அனைவரையும் திருத்த வேண்டும். என்பதற்காக அன்பும் தயவும் கருணையும் அருளும் வலிமையும்  பெற்றவராக திகழ்ந்து கொண்டு இருப்பவரும் வள்ளலார் ஒருவரே*


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்லாயிரம் அருளாளர்களையும் ஞானிகளையும்.போதகர்களையும் இவ்வுலகிற்கு அனுப்பிக் கொண்டே இருப்பவர்தான் *எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்* 


ஞானிகளும் யோகிகளும். சித்தர்களும் ஏகதேச அருளைப்பெற்று  மக்களுக்காக வாழ்ந்தும் காட்டி உள்ளார்கள். உலகியலில் வாழ்வதற்காக வழிகாட்டி உள்ளார்கள். *அருள் உலகில் வாழ்வதற்கு வழிகாட்ட தவறிவிட்டார்கள்*.


உலகியலில் வாழ்வதற்கு *வழிகாட்டிய ஞானிகளும் சித்தர்களும்.போதகர்களும் மற்றும் அருளாளர்கள் அனைவரும் மக்களுக்கு உண்மையை மறைத்து.உண்மைக்கு புறம்பான வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் போன்ற கற்பனை கதைகளைத் தோற்றுவித்து அதன்படி வாழ்வதற்கு வழிகாட்டி உள்ளார்கள் என்பதை துணிவுடன் வெளிப்படுத்தியவர் வள்ளலார்.* 


*வள்ளலார் பேருபதேசத்தில் சொல்லியது*


*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்*. *சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்து இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் *இத் தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்கக் காலம்*


*மேலும் சொல்லுகிறார்.*


நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.  ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.* என்னும் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 


*அவர்கள் பூட்டிய பூட்டை திறந்துவிட்டேன் இனி பூட்டமுடியாதவாறு உடைத்து விட்டேன் என்கிறார். அவர்கள் மறைத்த உண்மையை  வெளிப்படையாக சொல்லிவிட்டேன் என்கிறார்*.


*தனித்து நின்று தனிவழி காட்டியவர்* 


*உலகத்தோடு  ஒத்துபோக வேண்டும் என்ற  உலக வழக்கில் உள்ள வார்த்தையை வள்ளலார் ஏற்றுக் கொள்ளாமல்*.

தனித்து நின்று ஈடுசெய்ய முடியாத தனிவழியை உண்மையை உணர்த்தும் ஜீவகாருண்ய பொதுவழியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க* கொள்கையை தோற்றுவித்து அதன்படி வாழ்ந்தவர் வள்ளலார்.

தனியாக நின்று தனிவழியைக் காட்டி.எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களின் மீதும் இடைவிடாத அன்பும். தயவும் கருணையும் . எல்லா ஆன்மாக்களும் ஒரேத்தன்மையான ஒளித்தன்மை உடையன என்ற உண்மையையும் அருளாலே அறிந்து அன்புகாட்டி ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் உறவு கொண்டு இவ்வுலகில் தனித்து நின்று போராடி  இறை அருளைப் பூரணமாகப் பெற்று அனுபவித்து வெற்றிப்பெற்று உலகத்திற்கு உண்மை சொல்லவந்த  ஒரே ஒரு அருளாளர் வள்ளல்பெருமான் ஆவார்கள்.


*உலகினில் உயிர்களுக்கு உறும்*

 *இடை யூறெலாம்*

*விலக நீ யடைந்து* *விலக்குக மகிழ்க!*

*சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக*

*உத்தம னாகுக வோங்குக வென்றனை!* 


மேலே கண்ட அகவல்  வரிகளை ஊன்றி படித்து அதன் உட்பொருளை அறிந்து உணர்ந்து தெரிந்து  தெளிவுபெற்று கடைபிடித்து வாழபவனே  உயர்ந்த சிறந்த உத்தமனாகும். உயர்ந்த சிறந்த பூரண அருள் பெற்று போற்றதகுந்த மனிதனாகும். 


*இறைவன் கொடுத்த அனுமதி* !  


உலகில் அருளாளர்களால் உண்மைக்கு புறம்பான சாதி சமயம் மதங்களும் அதன் கொள்கைகளும் தோற்றுவிக்கப் பட்டது. அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் *அதற்கு தகுதியான தனி நபர் நீ ஒருவர் மட்டுமே* என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அனுமதி வழங்குகிறார். 


*பாடலை பாருங்கள்*


பேருற்ற உலகில் உறு சமயமத நெறிஎலாம்

பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்

பிள்ளைவிளை யாட்டு என உணர்ந்திடாது  உயிர்கள் பல

பேதமுற்று அங்கும் இங்கும்


போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண்

போகாதபடி விரைந்தே

புனிதமுறு சுத்த சன் மார்க்க நெறி காட்டி மெய்ப்

பொருளினை உணர்த்தி எல்லாம்


*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ*

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.! 


மேலே கண்ட பாடலின் வாயிலாக  மக்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துகின்றார். இதில் இருந்து *நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும். திருந்த வேண்டியதும் மற்றவர்களை திருத்த வேண்டியதும் சுத்த சன்மார்க்கிகளின் முக்கிய பொறுப்பு உள்ள கடமையாகும்*


ஒரு சுத்த சன்மார்க்கியானவர்  வள்ளலார் சொல்லியுள்ள கொள்கைகளை முழுவதும் கடைபிடித்து. இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார்.மேலும் தன் உண்மை உருவத்தை நேரிலே காண்பதற்கு காட்சியும் கொடுப்பார்.


*மேலும் வள்ளலார் பாடல்*


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


எல்லா உயிர்களையும் படைத்தவர் *இறைவன் ஒருவர் தான் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து உணர்ந்து நெகிழ்ந்து எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி பேதம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு சாதி சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் தோன்றாது. *இந்த உண்மை அறிந்தவர் எவரோ அவரே  உளவு தெரிந்த உத்தமர் வித்தகர் என்பதை கண்டுகொண்டு இறைவன் அவர் உள்ளத்திலே குடியிருப்பார்*.


*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வள்ளல்பெருமான் வாழ்ந்ததால்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமான் இருக்கும் இடம் தேடி அருள் வழங்கி ஆட்கொள்ள வந்துள்ளார்*


*வள்ளலார் பாடல்*.


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்


சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை


ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 


என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


எனக்கு மட்டும் அருள் கிடைத்தால் போதாது.என் உள்ளத்தில் உயிரில் ஆன்மாவில் கலந்தால் போதாது. *நான் மட்டும் மரணத்தை வென்றால் போதாது.என்போல் இவ்வுலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும்  அருள்பெற்று மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வில் வாழவேண்டும் என்பதே என் உயர்ந்த  விருப்பமும் பேராசையும் யாகும் என்கிறார். எனவேதான் *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே* என்கிறார். 


எனவே *நாம் திருந்தினால் மட்டும் போதாது மற்றவர்களையும் திருத்த வேண்டும்.இதுவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்*. *இதுவே சுயநலம் இல்லாத  பொதுநலமாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு