வெள்ளி, 27 நவம்பர், 2020

வாழ்க்கை வாழ்வதற்கே !

 *வாழ்க்கை வாழ்வதற்கே*  !

*ஒவ்வொரு ஆன்மாவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே விரும்புகின்றது*.

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக இறைவனால்  அனுப்பபட்ட ஆன்மாக்கள் உலகியல் வாழ்க்கையில் மூழ்கி சிறிய இன்பம் துன்பம் என்னும் சாகரத்தில் சிக்கி இறுதியில் அனைத்தும் நோய்வாய்பட்டு அழுது புலம்பி கண்ணீர் மல்கி துயரத்துடனும் துக்கத்துடனும் வாழ்ந்து *புண்ணியம் குறைந்து பாவம் அதிகமாகி* பாவத்தின் சம்பளமாக மரணப் பெரும்பிணி வந்து மனித உடம்பை விட்டு வேறு உடம்பு எடுக்க சென்று விடுகிறது. வேறு தேகம் எதுவென்று தெரியாமல் இவ்வுலகில்  வாழ்ந்து செல்வது மிகவும் அதிர்ச்சியான ஆச்சரியமான கொடுமையான தண்டனையாகும்

*வள்ளலார் பாடல்* ! 

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த

வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்ததனைப் பெறவே

மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே.!! 

மேலே கண்ட பாடலிலின் வாயிலாக வள்ளல்பெருமான் தெளிவான விளக்கம் தருகின்றார்.

*மரணம் வருவதற்கும்  மரணம் வராமல் தடுத்து வாழ்வதற்கும் உண்டான ரகசிய வழியைத் தெரியப்படுத்துகின்றார்.*

இவ்வுலகில் உயர்ந்த அறிவு மனித தேகம் படைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.அகம் என்னும் ஆன்மாவில் உள்ள அறிவை பயன் படுத்த தெரியாமல்.புறத்தில் செல்லும் மனதையும் புத்தியும் பயன்படுத்தி மண்ணாசை.

பெண்ணாசை.

பொன்னாசைக்காக வாழ்க்கையைப் பயன்படுத்தி ஸ்தூல தேகத்தின் இல்லற வாழ்க்கையில்  வாழ்ந்து இறுதியில் துக்கமான மரணப்பெரும் பிணியில் சிக்கி மாண்டு போகின்றார்கள்.

*முன்பு வாழ்ந்த அருளாளர்கள்*

மனித ஆன்ம அறிவைப் பயன்படுத்தி.கடுமையான  தவம்.தியானம்.யோகம் போன்ற கலைகளில் தங்களைப் பயன்படுத்தி ஏகதேசம் அருளைப்பெற்று. மரணத்தை  வெல்ல வழி தெரியாமல் *பஞ்ச பூதங்களான நீர்.நிலம்.அக்கினி.காற்று. ஆகாயத்தில் கலந்து வாழ்ந்துகொண்டுஉள்ளார்கள்*. 

மரணத்தை வென்று அருள் ஒளிதேகம் பெற்றால் மட்டுமே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பேரொளியில் கலந்து *பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழமுடியும்*.

மனிதன் மரணத்தை வென்று ஆன்மதேகம் என்னும் சூட்சமதேகமான அருள்தேகம் பெற்று வாழ்வதே வள்ளல்பெருமான் காட்டும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய உண்மையான வாழ்க்கையாகும்.

*ஆன்மா ஸ்தூல தேகத்தில் வாழ்கின்ற வரை மரணம் வந்தே தீரும்.*

பஞ்சபூத ஸ்தூல தேகமான ஜீவ தேகத்தை சூட்சும தேகமாக மாற்ற வேண்டும்.அதற்கு ஆனமதேகம் என்றுபெயர்.

*உயிருடன் வாழ்வது ஜீவதேகம்.உயிர் இல்லாமல் வாழ்வது ஆன்மதேகம்*

அந்த ஆன்மதேகத்தை பூரண அருள் தேகமாக மாற்ற வேண்டும்.அதுவே கடவுள் தேகம் என்றும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகுதல் என்றும் வள்ளல்பெருமான் பெயர் சூட்டுகின்றார்.  

*அருள் தேகம் பெற்ற ஆன்மாவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது* அருள்தேகம் பெற்றுவிட்டால்

*அருள் வழங்கிய

கடவுளாலும் அழிக்க முடியாது* 

*வள்ளலார் பாடல்* ! 

காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக் கருவி யாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறை வனைச்சார் வீரே.! 

*அடுத்த பாடல் !*

ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளேஅம்மே என் அப்பா என்ஐயா என் அரசே

காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்

பாராலும் படையாலும் 

பிறவாலும் தடுக்கப்படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே

சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞானசித்திபுரத் தமுதேஎன் நித்திரை தீர்ந் ததுவே.!  

மேலே கண்ட பாடல்கள் எளிய தமிழில் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்.அதிலே ஒரு பெரிய  உண்மையை தெரிவிக்கின்றார்.யாராலும் அறிந்து கொள்ள முடியாத அறிய பெரும்பொருள் எது என்றால்?  அதுதான் இயற்கை உண்மையான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். 

ஆன்மாவானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறியாமல் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றவரை அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை.மரணத்தை வெல்லும் வாயப்பே இல்லை. 

மனித ஆன்மா உண்மை அறிந்து பொய்யான சாதி சமய மதங்களில் பற்று வைக்காமல்.

ஜீவகாருண்யமான பரோபகாரத்தையும்.கடவுளை நிலை அறிந்து கொள்ளும் சத்விசாரத்தையும் இடைவிடாமல் கடைபிடித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

உலகில் புறக் கண்களுக்குத் தெரியும் அனைத்தும் மாயையின் பொய் தோற்றங்களாகும். எனவே புறத்தில் உள்ள எவற்றையும் தொடர்பு கொள்ளாமல்.

அகத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

*வள்ளலார் பாடல்*

படமாட்டேன் துயர் சிறிதும் படமாட்டேன் இனிநான்பயப்படவும் மாட்டேன் நும் பதத்துணையே பிடித்தேன்

விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்மெய்ம்மை இது நும்மாணை விளம்பினன் நும் அடியேன்

கெடமாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்கிளர்ஒளி அம்பலத்தாடல் வளர்ஒளி நும் அல்லால்

நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.! 

மேலே கண்ட பாடல் மிகவும் முக்கியமானதாகும்.வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார்.

நான் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டதால் *படமாட்டேன் துயர் சிறிதும் படமாட்டேன் இனி நான் பயப்படவும் மாட்டேன் உன் பத்துணையே பிடித்தேன் என்றும் விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் விட்டிடவும் மாட்டேன் என்னும் உண்மையை அழுத்தமாகச் சொல்லுகிறார்*. 

எனவே பிடிக்க வேண்டிய உண்மையைப் பிடித்துக்கொண்டும் விடவேண்டிய பொய்களை விட்டுவிட்டும்  வாழ்வதே சுத்த சன்மார்க்க சிறந்த வாழ்க்கையாகும்.

*வள்ளலார் பாடல்!*

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்

உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே

மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனேமெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே

தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியேசத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.!  

மேலே கண்ட ஞானசரியையின் இரண்டாவது பாடலை  ஊன்றி படித்து பயன் பெறவும்.

*வாழ்க்கை வாழ்வதற்கே*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு