வெள்ளி, 15 மே, 2020

உணவே அருளுக்குத் தடை !

*உணவே அருளுக்குத் தடை !*

இந்த பஞ்ச பூத உலகில் இறைவனால் அனுப்பிய ஆன்மாக்கள் வாழ்வதற்கு உயிர் தேவை உடம்பு தேவை.

ஆன்மாவானது உயிர். உடம்பு எடுத்துவிட்டால்  அடுத்து அடுத்து பிறவி எடுக்கும் வரை அந்த அந்த உயிர்களின் தகுதிக்குத் தகுந்தவாறு உணவு அவசியம் தேவை.

தாவரம் முதல் மனித தேகம் வரை உணவு உட்கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டும். *அதுவே இந்த மாயை உலகத்தின் பிறப்பு இறப்பின் சட்டம்*.

உணவு உட்கொள்ளுகின்ற வரை பிறப்பு இறப்பு உருமாற்றம் உடல் மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கும்.

ஆன்மாவானது உயிர் உடம்பு எடுத்துக் கொண்டே இருக்கும்.

பசி என்பது ஒரு உபகாரக்கருவியாகும்.அந்த கருவியை அகற்ற வேண்டும் நீக்க வேண்டும்.
உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகத்தில் மட்டுமே பசியை நீக்க வேண்டும் நீக்க முடியும்..பசியை நீக்கினால் தான் இறைவன் அருளை வழங்குவார்.

*மனித தேகத்தில் மட்டுமே அருள் பெறமுடியும்*.

ஆன்மாவானது  உயிர் உடம்பு இரண்டையும் அருள் ஒளியாக மாற்றம் அடைய செய்விக்க வேண்டும்.

பசியையும் உணவையும் நீக்க வேண்டுமானால் அருள் பெற்றாக வேண்டும்.அருள் பெற வேண்டுமானால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

*உணவு*
 *உட்கொள்ளுகின்ற
 வரை* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாது*.

உணவுதான் மரணத்திற்கு காரணம் !

உணவினால் தான் மரணம் வருகின்றது. பிறப்பு இறப்பு நிகழ்ந்து கொண்டே உள்ளது என்பதை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து.அறிவால் அறிந்து  இறைவன் மேல் இடைவிடாது அன்பு செலுத்தியவர் வள்ளலார்

உண்மையாக இறைவன்மேல் அன்பு செலுத்தினால் *அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ*  என்பார் வள்ளலார்.

பசி எடுக்காமல் இறைவன் மீது அன்பு செலுத்தி அறுசுவை உணவை  நிறுத்தி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று பிறப்பு இறப்பு இல்லாமல் *ஒளிதேகத்தோடு வாழ்ந்து கொண்டுள்ளவர் வள்ளலார்.*

வள்ளலார் பாடல் !

உற்ற தாரணியில் எனக்கு உலக உணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்

பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருணவு  உண்டனன் சிலநாள்

உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்

மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.!

வள்ளல்பெருமான் அவர்கள் பெற்ற தாய் வருத்தம் அடையாமல் இருக்க வயிறு நிறைய உணவும்.நெருங்கிய நண்பர் மனம் வாட்டம் அடையாமல் இருக்க ஒரு கவலம் உணவும்  உட்கொண்டு இருக்கிறேன் மற்று இவை அல்லால் உணவை நினைத்தாலே மனம் நடுங்கியது என்கிறார்.

மேலும் வள்ளலார் பாடல் !

ஈரமும் அன்பும் கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. !

மேலே கண்ட பாடலில்.. ஊரமுது என்னும் உணவை உண்டு அழியாதீர்கள்.
ஒழியாதீர்கள் என்னைப்போல் ஆரமுதம் உட்கொண்டு. என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் அருட்பெருஞ்ஜோதி கண்டு அருளைப்பெறலாம்  என்று ஆனந்த களிப்போடு தெளிவாக சொல்லி அழைக்கின்றார்.

உணவே எமன் !

வள்ளலார் பாடல்!

சோற்றாசை யொடு காமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொல்லக்

கூற்றாசைப் படும் எனநான் கூறுகின்ற
துண்மை யினில் கொண்டு நீவீர்

நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
போலும் அன்றி நினைத்த வாங்கே

பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பேசு வீரே.!

சோற்றாசையும் அதனால் உண்டாகும் காமம் என்னும் சேற்றாசைப் படுவோரை எமன் என்னும் கூற்றுவன்  சர்வசாதாரணமாக வந்து அழைத்து கொண்டு போய்விடுவான்.எனவே ஞானசபாபதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று.முத்தேக சித்தி என்னும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்..

வள்ளலார் பாடல் !

சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம் எலாஞ் சுருங்கி

ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்

போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்

சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.!

சோற்றிலே விருப்பம் உள்ளவன் எவ்வளவு காலம் தவம் செய்தாலும் பயன் இல்லை அருள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.

எப்படிஎனில் ஆற்றிலே கரைத்த புளி பயன் இல்லாமல் கரைந்து கண்களுக்குத் தெரியாமல் போய்விடுவது போல் .காரம் சாரம் சேர்த்து ஆகாரம் உட்கொண்டால் அவை
 பயன் அற்றுப் போய்விடும் என்பதை அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்..

எனவே *சாதாரண மனிதர்களின் பசியைப் போக்கி தன் பசியை நீக்கி* வாழ்வதே அருள் பெரும்  வழியாகும். அதுவே சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நமக்கு உணர்த்தும்  சாகாக்கல்வி  பயிற்சியாகும்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்

சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளை என் றொருபேர்ப்

பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.!

*பிறப்பு இறப்பு என்னும் மாயை சட்டத்தை கிழித்தவர் வள்ளலார்*.

*அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது உணவே என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்*.

 இன்னும் விரிக்கில் பெருகும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு