செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சாதி சமய மதங்களின் ஆசாரக்குப்பைகளை மண்ணில் போட்டு மூடவும் !

🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

🙏🌺" *ஆன்மாவிற்கு உதவாத சாதி சமய மத ஆசாரக் குப்பைகள் எல்லாவற்றையும் குழியில்கொட்டி மண்மூடிப்போடு* "🌺🙏
🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் 👏

நமது வள்ளல் பெருமான் சாதியையும் சமயத்தையும் மதங்களையும் அதனால் வகுக்கப்பட்ட சாத்திரங்களையும் தோத்திரங்களையும் ஆசாரங்களையும்  குப்பைகள் என்றும் அவற்றையெல்லாம் புன்செய் நிலத்தில் எருவாக்கி ஆழக்குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடுங்கள் என்று கூறுவதை கேட்க்கின்ற போது ,

எனது சாதி,
எனது சமயம்,
எனது மதம் என்று அவற்றையே வழிவழியாகப் பற்றி வாழ்கின்ற நம்மைப் போன்றவர்களுக்கு கடுமையான கோபம் வருவது என்பது இயல்புதான் 🙏

ஆனால் , அருளாளர்களின் வார்த்தைகள் சத்தியவார்த்தைகள் என்பதை உணர்ந்து
அனைவரும் இங்கு நன்றாக கவணித்து ஆராயவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன .

அவ்வாறு ஆராயாமல் கோபம் கொண்டு சுத்தசன்மார்க்கத்தை பற்றாது சமய மதத்தையே பற்றிநின்று காலத்தை விரையமாக்கினால், நட்டம் நம் அனைவருக்குமே அன்றி நமது வள்ளல் பெருமானுக்கு ஓர் அணுவளவும் அல்ல என்பதை சத்தியமாக உணர்தல்வேண்டும் 🌻

வள்ளல் பெருமான் இவ்வுலகில் வருவிக்கப்பட்டதன் காரணம் ,
இவ்வுலக உயிர்களின் ஐவகை உயிர்த்துயரங்களாகிய
மரணம்,
பிணி,
மூப்பு,
பயம்,
துன்பம் என்ற கொடிய துயரங்களால் இவ்வுலக உயிர்கள் படுகின்ற துன்பத்தை தவிர்த்து ,
அவ்வுயிர்களுக்கு  உண்டாகின்ற துன்பங்களை எல்லாம் போக்குவது மட்டுமல்ல அவ்வுயிர்களை மரணத்தில் இருந்து காத்து மரணமே இல்லாத பெருவாழ்வாகிய அருட்பெருஞ்ஜோதி வாழ்வில் நம் அனைவரையும் வாழவைப்பதற்காக இவ்வுலகிற்கு எல்லாம் வல்ல உண்மைக்கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்கப்பட்டார்கள் என்பதை முதலில் நாம்நன்றாக அறிதல் வேண்டும்🌻

 *அடுத்து , கீழ்வருவனவற்றை தயவுடன் சற்று சிந்தித்து பார்த்தல் அவசியம்.*

வள்ளல் பெருமான் நம்மைப் போன்று ஓர் சாதாரண பிறவியா ?

நம்மைப் போன்று தாய்தந்தையர்களின் காமத்தில் தாய்வயிற்றில் கருவானவர்களா ?

நம்மைப்போன்று ஆரம்பக் கல்வியை ஆசிரியரைக்கொண்டு பள்ளியில் கற்றவர்களா ?

 *ஏழுவயதில் சுத்த  மெய்யறிவு என்னும் அறிவு தத்துவத்தை விளக்கக்கூடிய முருக்கடவுளை* நிலைக்கண்ணாடியின் வழியாக தரிசிக்கப் பெற்று ,

குழந்தைப் பருவத்திலேயே சுத்த மெய்ஞான போதத்தை அனுபவித்த ஞானச் சுடர் அல்லவா !

குழந்தைப் பருவத்திலேயே வேதாகமங்களை எல்லாம் ஓதாமல் அருளொளியால் உணரப்பெற்று மெய்ஞானப் போதத்தை பால்ய பருவத்திலேயே  அனுபவித்த இளம் அருள்ஞானி அல்லவா !

வெம்மாலைச் சிறுவருடன் விளையாடித் திரிந்த பருவத்திலேயே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே " *நமது பெம்மான் என்ற அடி குறித்து*" பாடுவதற்கு  பணித்தருளிய  அருட்சிவஞானப் பிள்ளை அல்லவா !

அந்த இளம்பருவத்திலேயே கந்தகோட்ட முருகன் ,
திருத்தணிகை முருகன் ,
திருவொற்றியூர் அம்மை அப்பன்,
வைத்தீஸ்வரன் வைத்தியநாத சுவாமிகள்,
தில்லை அம்பலவானர் என சமயத்தில் அளவற்ற பற்று வைத்திருந்து ,

ஊனையும் உயிரையும் உருக்கச் செய்கின்ற தேவாரம் திருவாசகத்தினும் மேலான தோத்திரப்பாக்களை இயற்றியருளிய மெய்ஞான வித்தகர் அல்லவா !

ஓங்கார பஞ்சாரத்தை சதாசர்வகாலமும் ஓதியே இறைவனடி சேர்ந்திட வேண்டும் என்று தமது சைவசமய அடியார்களுக்கு அப்போது அறிவுறுத்திய  சைவசமயாதீதர் அல்லவா !

இத்தனை என்றளவிட முடியாத அளவிற்கு சமயத்தில் பற்றுவைத்து வாழ்ந்துவந்த நமது வள்ளல் பெருமான் போன்று ,
நாம் யாரும் சமயத்தில் பற்று வைத்திருந்தோமா  ?

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வள்ளல் பெருமானிற்கு நிகரான திருவருளால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் யாரும்  சயத்தில் பற்று வைத்து வாழ்ந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா ?

அப்படி ,
சமயத்தில் அதீத பற்றுவைத்த வாழ்ந்து வந்த வள்ளல் பெருமான் எதற்காக சமய மத மார்க்கங்களை பொய்நெறி என்றும் பொய்யொழுக்கங்கள் என்றும்  இவைகளால் நமது ஆன்ம லட்சியத்தை அடையமுடியாது என்றும் வெறுத்து கூறுகின்றார்கள் என்று நாம் பொறுமையுடன் நன்றாக விருப்பு வெறுப்பற்று நடுநிலையோடு ஆராய்ந்தோமானால் அதற்குரிய உண்மை நமக்கு திருவருளால் உணர்த்தப்படும் .🙏

வள்ளல் பெருமானைக் காட்டிலும் நாம் எந்தவித்தில் உயர்ந்தவர்கள் ?

பிறப்பால் உயர்ந்தவர்களா ?

கல்வி கேள்விகளில் உயர்ந்தவர்களா ?

அருட் பாக்களை இயற்றுவதில் உயர்ந்தவர்களா ?

இவ்வுலகப்பற்றை விட்டநிலையில் உயர்ந்தவர்களா ?

அறிவுவகைகளில் இந்திரிய அறிவு ,
கரண அறிவு,
ஜீவ அறிவு,
ஆன்ம அறிவு,
அருளறிவு,
முடிபான கடவுளறிவு என்ற அறிவுநிலையில் எந்தநிலையில் நமது அறிவு  வள்ளல் பெருமானைக்காட்டிலும் உயர்ந்தது ?

நமது செயற்கை குணங்களாகாய ராகாதிகளை நவம் அடக்கிவிட்டோமா ?
காமத்தை வென்று விட்டோமா ?
தத்துவங்களை நம் வசப்படுத்திவிட்டோமா ?
கோபம் சினம் வெகுளியை முற்றிலும் தவிர்த்துவிட்டோமா ?

தரையில் புழுவது துடித்தால் நமது தசைகள் துடிக்கின்றனவா ?

ஓரறிவு பயிர்கள் வாடினால் ஆறறிவு மனிதர் நாம் வாட்டம் கொள்கின்றோமா ?

இளம் வயதில் நமது வினைக்கு தக்கவாறு
விடய இச்சைகளில் பற்றுவைத்து வாழ்ந்தும்,
நமது அற்ப அறிவினால் ஆராய்ந்து,
அற்ப இன்பங்களை அனுபவித்து,
யான் எனது என்ற அகங்காரத்தில் வாழ்கின்ற நிகரற்ற அற்பர்களாகிய நமக்கு கடவுள் உண்மையை எப்படி உணர இயலும் ?

காலம்கலமாக  நமது முன்னோர்கள் கடைபிடித்து வருகின்ற மதத்தாலும் சமயத்தாலும் அடையமுடியாத நிலை என்பது சுத்தசன்மார்க்கத்தில் அப்படி எந்த நிலை இருக்கின்றது ?

அந்த நிலையை அடைவதற்கு இந்த சமயங்களும் மதங்களும் எப்படி நமக்கு தடையாக) இருக்கின்றன ?

இந்த சமயத்திலும் மதத்திலும் வாழ்ந்துவந்த நமது சமய மத ஞானிகள் அடைந்த நிலைகள்தான் என்பது என்ன ?

சுத்தசன்மார்க்கத்தில் சொல்லப்படுகின்ற சமயமதம் கடந்த பெரியநிலை என்பது எது ?

அந்தப் பெருநிலையில் அனுபவிக்கக்கூடிய பேரின்ப அனுபவங்கள் எவை எவை ?

என்று நாம் ,
நமது அறிவை விகற்பமின்றி உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலோடு விசாரித்து அறிந்தால் ,

நமது வள்ளல் பெருமான் ஏன் சமயத்தை மதத்தை பற்றிக்கொண்டு காலத்தை விரையமாக்க வேண்டாம் என்று இவ்வுலகவர்களுக்கு அறிவுறுத்தி ,
தம்மை மேல்நிலைக்கு ஏற்றிய சுத்தசன்மார்க்கத்திற்கு அனைவரையும் அழைக்கின்றார்கள் என்ற பேருண்மை விளங்கும் 🌻

அதைவிடுத்து ,
நமது அற்ப அறிவிற்கு எட்டியவாறு பெருமானாரது திருவருட்பா பாடல்களுக்கு சமயம்சார்ந்த பலப்பொருள்களை உட்புகுத்தி அதில் விளக்கம் தெரிவிப்பது ,

திருவருட்பா பாடலிற்கு
வெளிப்படையான பொருள் முன்னிற்க , மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து பொருள்கொண்டு அர்த்தத்தை அனர்த்தமாக்கி சமயம் சார்ந்த விளக்கத்தை தெரிவிப்பதுவும் சுத்த சன்மார்க்க வளர்ச்சிக்கு தடைகளாகும் .

சுத்தசன்மார்க்கம் என்பது சமய மத அனுபவங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டவை என்பதும்,

சமய மதங்களில் உள்ள அனுபவங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்க அனுபவத்திற்கு கீழ்நிலையில் உள்ள அனுபவங்களே என்பதுவும் ,

ஆனால் ,
நாம் அடையவேண்டிய லட்சியம் சுத்தசன்மார்க்க பெருநிலை அனுபவம் என்பதாலும் ,

அந்த பெருநிலை அனுபவத்தைப் பெறுவதற்கு சமயமத ஆச்சாரங்கள் என்பவை நமக்கு தடைகளாக இருக்கின்ற என்பதால் ,

அவற்றில் பற்று வைக்காமல் ,
சுத்தசன்மார்க்கத்திற்கு என்று வகுக்கப்பட்டுள்ள ஒழுக்கங்களை கடைபிடித்து , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மீது மாறாத அன்பும் , இவ்வுலக உயிர்களின் மீது ஆன்மநேய உயிர் இரக்கமும் கொண்டு வாழ்வதனால்  மட்டுமே நாம் அடையவேண்டிய சுத்தசன்மார்க்க பெருநிலையை அடைந்து ,

 *சுத்தசன்மார்க்கத்திற்கு உரிய தனிப்பெருஞ் சிறப்பாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் மரணமிலாப் பெருவாழ்வை அடையக்கூடும்* 🌻🙏

இவ்வுண்மை அறியாமல் நமது அறியாமையினால் வள்ளல் பெருமானையோ, திருவருட்பாவையோ அல்லது சுத்தசன்மார்க்கத்தையோ குறைகூறி தவறாகப் பேசுவது என்பது நமது அறியாமையையே காட்டுகின்றது 🌻

நல்லது ,
கீழ்வரும் பாடல் மூலம் பெருமான் என்ன விளக்கம் கொடுக்கின்றார்கள் என்பதை தயவுடன் கவணிப்போம் 👏

பாடல் ;🌹
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களா சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதீ
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ்ஜோதி  என்ஆண்டவர் நீரே ;

இப்பாடல் ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் என்ற தலைப்பில் பக்கம் 124 ல் பத்தாவது பாடலாக உள்ளது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , ஷடாந்தம் என்று சொல்லக்கூடிய ,
சுத்த வேதாந்தம்,
சுத்த சித்தாந்நம்,
சுத்த நாதாந்தம்,
சுத்த போதாந்தம்,
சுத்த யோகாந்தம்,
சுத்த கலாந்தம் என்ற ஆறு அந்தகங்களின் அனுபவமுடிவில் கிடைக்கப் பெறுகின்ற பதம் பதவி நிலைகளை பெருமான் வகைப்படுத்தி ,

அந்த அனுபவங்களை எல்லாம் கடந்த சுத்தசன்மார்க்க  பெருநிலையில் ஆண்டவர் பெருமானை ஏற்றுவித்து ,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் சிற்சபையைக் காட்டி அருளக்கூடிய அருட்ஜோதிவீதி அனுபவத்தை விளக்குவதாக பாடல்கள் அனைத்தும் உள்ளன.

நல்லது தற்போது இந்தப்பாடலின் பொருளைக் காண்போம்🌻

பொருள் ;🌻
இருள் என்பதும் தோஷம் என்பதும் அறியாமை என்பதும் அஞ்ஞானம் என்பதும் ஆகிய எல்லாம் ஒரு பொருளையே குறிக்கின்றனவாகும்.

மருள் என்பது மேற்கண்ட இருள், ஆன்மாவின் அறிவை விளக்கம் பெறச் செய்யவிடாமல் மறைப்பாக மூடி நிற்கும்போது ஆன்ம அறிவு விளக்கம் இல்லாமல்   உண்மையை தெரிந்துகொள்ள இயலாமல் மயங்கி தடுமாறுகின்ற நிலையாகும்.

ஆன்மாவின் அறிவு விளக்கம் பெறாது அல்லது விளக்கம் பெற முடியாமல் இருக்கின்ற நிலையே இருள் நிலையாகும் .

இந்த ஆன்ம அறியாமை என்னும் இருளை விலக்கி ஆன்மாவிற்கு விளக்கத்தை தருவதற்கு அருள்ஒளி தேவைப்படுகின்றது .

 *ஒளி வந்தால் இருள் விலகும்,                  அறிவு வந்தால் அறியாமை விலகும்,  ஞானம் வந்தால் அஞ்ஞானம் விலகும், அறிவு தெளிவு பெற்றால் மயக்கமாகிய தடுமாற்றம் நீங்கும் என்பதாகும்.*

அதுபோன்று ,
இறைவனது உண்மையை தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக தொழில் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சாதிகளும்,

தத்துவ ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சமய மத ஆசார வழக்கங்களும்,
சாத்திரங்களும், தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றையும் பெருமான் உதவாக் குப்பைகள் என்று கூறுகின்றார்கள் .

ஏன் என்றால் ,
வீட்டில் வாழுகின்ற நாம், நமக்கு உபயோகப்படாத பயனற்ற பொருள்களை குப்பையாகக்கொண்டு எறிந்து விடுவோம் .

அதே போன்று ,
அறியாமை என்னும் பேரிருள் சூழப்பட்டு நின்ற ஆன்மாக்களுக்கு ஆண்டவர் தேகம் கொடுத்து பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் ,

தன்னால் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் எல்லாம் தனது சச்சிதானந்த உண்மையை அறிந்து அது போன்றே எல்லா ஆன்மாக்களும் சச்சிதானந்த சொரூபத்துடன் சர்வசித்தி வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அழியக்கூடிய இந்த அசுத்த நேகத்தை அழியாத நித்திய தேகமாக்கிக்கொண்டு,

தன்னைப்போன்றே இவ்வுலக உயிர்களும் என்றும் உள்ளதுவாய் எல்லாம் செய்ய வல்லதுவாய் அழியாபெருநிலையில்  தன்மயமாய் நின்று இவ்வுலகில் அருள்வாழ்வு வாழவேண்டும் என்பதுதானே தவிர,

இறந்து போவதற்கோ , அல்லது வீடுபேறு என்னும் முத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு இறைவனடி சேரந்து உடம்பை மறைத்துக் கொள்வதற்கோ அல்ல என்பதை அவசியம் உணர்தல் வேண்டும்🌻

அப்படி ,
ஆண்டவரது சர்வசித்தி வல்லபத்தை பெற்று என்றும் அழியாத நித்தியதேக அனுபவத்தைப் பெறுவதற்கு வழிதுறை காட்டாத சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் எல்லாம் ஆன்மாவிற்கு பயனற்ற மார்க்கங்களாவே பெருமான் கூறுகின்றார்கள் .

அவற்றால் வகுக்கப்பட்ட சாத்திர தோத்திரங்கள் எல்லாம் ஆன்மாவின் லட்சியத்தை அடைவதற்கு பயன்படாத  வீண் குப்பைகளாக பெருமான் பொருள் படுத்துகின்றார்கள்.

சுத்தசன்மார்க்கம் என்ற நன்னீதியை அதாவது நன்னெறியை ,
ஞான நெறியை ,
திருவருள் நெறியை ,
புலைகொலை தவிர்த்தலை வலியுறுத்துகின்ற புணித நெறியைக் கொண்டுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பெருந்தயவாகிய பூரணஅருளை பெறுவதற்கு இயலும் .

அந்த பூரண அருளைப் பெற்றால்தான் எல்லாம் செய்யவல்ல சர்வசித்தியாகிய ஞானசத்தியை (சிற்சத்தி) பெற்றுக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி என்ற தனிப்பெருந்தலைமைப் பதியை நேருறக் காண இயலும் .

அந்த தனிப்பெருங்கருணையின் தயவால்தான் என்றும் அழியாத பெருவாழ்வை அளிக்கக்கூடிய அருள் அமுதத்தைப் பருகி மரணலாமிலாமல் இவ்வுலகில் சச்சிதானந்த சொரூபத்துடன் நித்தியானந்த வாழ்வையும் பெற்று எக்காலத்திலும் எதனாலும் எவ்வளவும் தடைபடாத அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருள் வாழ்வை வாழ இயலும் .

இந்த அருட்பெரு வாழ்வைப் பெற்றுவாழ்வதுதான் ஒவ்வொரு ஆன்மாக்களின் முடிபான ஆன்ம லட்சியமாகும்  .

அந்த அருட்பெருவாழ்வை நான் பெற்றுக்கொண்டேன் .
இந்தப் பெருவாழ்வு பெறுவதற்கு இவ்வளவுநாள் எனக்கு தடையாக இருந்தது நான் பற்றியிருந்த சமயப்பற்றேயாகும்.
அப்பற்றை விட்டு வெளியில் வந்தவுடன்தான் ஆண்டவர் எனக்கு  அகண்டமாக(முழுமையாக) அனைத்தையும் தெரிவித்தார்கள்.

இதுவரை இவ்வுலகில் யாரும் ஏறுவதற்கு அரிய பெரிய  நிலையில் என்னை ஏற்றிவைத்தார்கள் . அதன்பலன் இன்று இவ்வுலகமும் எவ்வுலகமும் என் வசப்பட்டுவிட்டது ,
எனது  தத்துவங்கள் எல்லாம் எனது ஏவல் செய்கின்றன,
எல்லா ஞானங்களும் எனது ஞானமாயின,
இன்று இவ்வுலகில் தேகாதி உலகனைத்தையும் படைக்கும் வல்லபம் பெற்றேன் .
என்போன்று நீங்களும் பெற்றிடவேண்டும் ,
பெற்றிட இயலும் .

அதற்கு ,
சுத்தசன்மார்க்கம் என்ற இந்த நன்னெறி இவ்வுலகில்  ஓங்கி சிறந்து விளங்கிடவும் ஆன்மாக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கி சுத்தஅறிவு என்னும் அருளொளியைப் பெற்றிட,

ஒளிநெறியாம் சுத்தசன்மார்க்க நெறியினாலேதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியிருக்கும் சிற்சபையை அடைந்திடவும் ,

இதுவரை நீங்கள்  படித்து தெரிந்திருந்த சாதி தத்துவச் சாத்திரங்கள் எல்லாம் உங்களது ஆன்மாவின் லட்சியத்தை அடைவதற்கு பயன்படாத குப்பைகளே ஆகும் .

ஆகையில் அவை அனைத்தையும்  விளைச்சலில் அதிக பயன்தருவதற்கு ஏற்றதாகிய எருவாக இந்த சாத்திரக் குப்பைகளையும் கலந்து  போடுங்கள் என்றும்,

அறியாமை என்னும் மயக்கத்தால் ஆன்மாவை அலைக்கழிக்கும்  இதுவரை இவ்வுலகம் வழக்கமாகக் கொண்டிருந்த சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சாரங்கள் என்று தொன்றுதொட்டு கொண்டிருந்த பழக்கவழக்கங்கள்  எல்லாவற்றையும்  குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடிவிடுங்கள் .

ஏன் குழியில் கொட்டி மண்ணைப்போட்டு மூடுங்கள் என்றுபெருமான் கூறுகின்றார்கள் என்றால்,

நாம் நமது முயற்சியினாலும், பக்குவத்தினாலும், அறிவு விளக்கத்தினாலும் உண்மையை அறிந்து இவைகளை விட்டு விலகி வெளியில்வந்து சன்மார்க்கத்தைப் பிடித்துக்கொண்டாலும்,

இந்த சாதி சமய மத ஆசார வகைகள் சார்ந்த நூல்கள் வெளியில் இருந்தால், நமக்கு பிறகு வருகின்ற நமது ஆன்மநேய சகோதரசகோதரிகள் அறியாமையால் அவற்றைப் பற்றிநின்று ,
கிடைப்பதற்கரிய இந்த அருமையான மானிடப் பிறவியில் அறியவேண்டியதை அறிந்து கொள்ளாமலும் அடைய வேண்டிய ஞானத்தை அடைய முடியாமலும் வீணில் காலத்தைக் கழித்து அற்ப சித்திகளுக்கு ஆசைப்பட்டு நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையக்கூடிய லட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும் என்று கருதியே யாருடைய பார்வையிலும் படாத வண்ணம் குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடச் சொல்கின்றார்கள் 🌻

ஆகவே,
சாதி சமயம் மதம் என்று காலம்காலமாக வழக்கத்தில் இருந்த  இருள்நெறிப் பற்றைவிட்டு,
சுத்தசன்மார்க்கம் என்ற ஒளிநெறியைப் பற்றிட அழைக்கின்றார்கள்  நமது வள்ளல் பெருமான்.

இவ்வுலகில் நடப்பது எல்லாம் திருவருள் செயலாலே என்று ஏற்றுக்கொள்கின்ற அறிவே பக்குவ அறிவாகும் .

வள்ளல் பெருமான் வார்த்தைகளிலும் முழுநம்பிக்கைக் கொண்டு உண்மையை தயவுடன் உணர்ந்து ஏற்றுக்கொள்வதே கடைத்தேறும் ஆன்மாவிற்குரிய பக்குவம் ஆகும்.
அறிவோம் !
உணர்வோம் !
அடைவோம் !🌻
....தயவான நன்றிகள் 🌻🙏
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🌻🙏
...பெருமான் துணையில் 🌻🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🌻🙏
...வடலூர் இரமேஷ்;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு