வியாழன், 25 அக்டோபர், 2018

கடவுளைக் கண்டவர் யார் ?

கடவுளைக் கண்டவர் யார் ?.

இறைவன் படைத்தை உலகில் வாழ்ந்தாலும் இறைவனைக் காண முடியாமல் வாழ்கிறோம்.

இறவனைக் காண்பதற்காகவும் இறைவனிடம் தொடர்பு கொள்வதற்காகவும்.
இறைவனிடம் அருளைப் பெற்று இறைவனோடு கலந்து பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்து கொண்டே இருப்பதற்காகவே  ...இறைவனால் கொடுக்கப்பட்டதுதான்

மனிதப் பிறப்பு !

ஆகவே தான் உயர்ந்த அறிவை  மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பிறவியாகும்...

மனிதன் இவ்வுலகில் பிறந்தது முதல் இன்று வரை நம்மைப் படைத்த கடவுளைக் காண வழி தெரியாமல் தவித்துக் கொண்டே உள்ளான்.

காண முடியாத காரணம் என்னவென்று தெரிந்து கொண்டால் மட்டுமே மனிதன் உயர்ந்த அறிவை பயன் படுத்த தெரிந்து கொண்டவன் ஆவான்...

நாம் எவரும் சுயமாக கடவுளைத் தேடவில்லை.
தேடுவதற்கு விரும்புவதும் இல்லை . 

நாம் கண்டது .கேட்டது.
கற்றது.களித்தது.
உண்டது எல்லாமே கடவுளை மறைக்கும் செய்திகளாகும்.

நாம் உலகில் வணங்கும் வழிபாடு செய்யும் கடவுள்கள் யாவும் உண்மையான கடவுள்கள் அல்ல. என்பதை நாம் உண்மை அறிவோடு தெளிவு பெற்று தெரிந்து கொள்ள வேண்டும்..

ஏன் என்றால்? ..கடவுளை கற்பித்தவர்கள் எல்லாம் அருள் பெற்ற ஞானிகள் என்பதை நம் மனதில் விதைத்து விட்டார்கள்.ஆதலால் நம் மனதில் ஆழமாக  பதிந்து விட்டது.

அவர்கள் எல்லாம் உண்மையான ஞானிகளா என்பதை நம் அறிவைக் கொண்டு விளக்கம் பெறவில்லை.. எனவே ஆட்டு மந்தைகள் பின்பற்றி வருகிறோம்.

வள்ளலார் வந்துதான் உண்மையை வெளிப்படுத்துகிறார்..

வள்ளலார் சொல்லும் அருள் பாடல் வரிகளை மனதைக் கொண்டு படிக்காமல்.அறிவைக் கொண்டு படித்தால் தான் உண்மை விளங்கும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்னும் பாடலிலே தெளிவாக விளங்க வைக்கிறார்..

நீங்கள்  இதுவரையில் உண்மை அறியாமல்.பொய்யான நெறிகளைப் பின்பற்றி  வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள்.இனிமேல் நீங்கள் பொய் நெறியைப் பின்பற்றி வாழாமல்...மெய் நெறியை கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து..

உண்மை இறைவனை அறிந்து அவரிடம் அருளைப் பெற்று.இறவாத அதாவது மரணம் அடையாமல் வாழ்ந்தால் மட்டுமே இறைவனைத் தொடர்பு கொள்ள முடியும்.இறைவனைக் காண முடியும் என்ற உண்மையை உலகிற்கு தெரியப்படுத்தியவர் வள்ளலார் ஒருவரே ....

மற்ற ஞானிகளால் உண்மையை உலகிற்கு ஏன் ?  சொல்ல முடியவில்லை என்ற உண்மையும் வெளிப்படுத்துகின்றார்.

வள்ளலார் பாடல் !

 அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை

அறிவறியார் வார்த்தை எதனால்எனில் இம் மொழிகேள்

உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்

மறங்குலவும் அணுக்கள்பலர் செய்த விரதத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.!

என்ற பாடலில் மேலே கண்ட ஞானிகள் உண்மையான மெய்ப்பொருளைக் காணமுடியாத சிற்றறிவு பெற்றவர்கள்.

உண்ணுதற்கும் உறங்குதற்கும்.விழிப்பதற்கும்.பின் இறப்பதற்கும் பிறப்பதற்குமாய் உழலும் மறங்குலவு அணுக்களைப் பெற்றவர்கள்.அவர்கள் செய்த சிறிய விரதத்தால் மதத்தலைமை பதத்தலைமை பெற்றார்கள்..

அவர்கள் படைத்தது  தோற்றுவித்துள்ளது யாவும் உண்மைக் கடவுள்கள் அல்ல. உண்மைக்கு புறம்பான கடவுள்கள் ..
அனைத்தும் தத்துவங்கள். இறைவனால் படைத்த உயர்ந்த தத்துவங்களை.
அவரவர்களுக்கு கிடைத்த காட்சிகளை வைத்து கடவுள்களாக படைத்து விட்டார்கள்..

அதனால் அவர்கள் படைத்துள்ள கடவுள்களை வணங்குவதாலும் வழிபடுவதாலும்.
போற்றுவதாலும் எந்த பயனும் இல்லை...அந்த கடவுள்களால் அருள் வழங்கும் தகுதியும் இல்லை.பொருளை வழங்கும் தகுதியும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

வள்ளலார் கண்ட உண்மைக் கடவுள் !

காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்

கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்

கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்

குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்

நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி

நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே

மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்

வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.!

வள்ளலார் கண்ட காட்சியை படம் பிடித்து காட்டுவது போல் காட்டுகின்றார் .

அந்த உண்மைக் கடவுள்தான் சுத்த சிவம் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அவர் எங்கு எங்கு இருந்து செயல்படுகின்றார் என்பதை விளங்க வைக்கின்றார்...

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்

விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும்

இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்

இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ

பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்

பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.!

மேலே கண்ட பாடலில் நான் உண்மையாக  கண்ட காட்சியின் வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான்  மெய்பொருள் என்று சொல்லியும்.

மீண்டும் இப்பொருள் அப்பொருள் என்று சொல்லிக் கொண்டும் தேடிக்கொண்டும்.அலைந்து கொண்டும்  இருப்பதால் எந்த பயனும் கிடைத்துவிடாது..

சாதி.சமயம்.மதத் தலைவர்கள் காட்டிய கடவுள்கள் குருடன் யானையைத் தடவி பார்த்து சொல்லியது போல் சொல்லி உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள் தாம்

கவ்வைபெறு குருடர் கரி கண்டகதை போலே

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்

நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்

செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழி ஆயினவே.!

உண்மைக்கடவுள் ஒருவரே உள்ளார் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளாத வரை.அவரிடம் தொடர்பு கொள்ளாத வரை.எவரும் சாகாத கல்வி கற்கவும் முடியாது. அருளைப் பெறவும் முடியாது.

இந்த உண்மை மெய்பொருளை மக்கள் தெரிந்து கொள்ளும் காலம் இப்போது விரைந்து விரைந்து. வளர்ந்து வளர்ந்து.தெளிவு அடைந்து கொண்டே வருகின்றது.

இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை

அருள்ஒளி தருகின்றாம்

கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே

குறிக்கொள்வர் நினக்கேஎம்

ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்

வாழ்கநீ மகனேஎன்

றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்

இணைமலர்ப் பதம்போற்றி.!

என்னும் பாடலில் உண்மையை உரக்க சொல்லி உள்ளார்.

வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூரண அருளைப் கொடுத்து.தன் அருள் உடம்பையும் கொடுத்து   ஐந்தொழில் வல்லபத்தையும் கொடுத்து தன் அருள் ஆட்சியையும் கொடுத்து தன்னுடன் கலந்து அருட்பெருஞ்ஜோதி யாகவே செயல்பட்டுக் கொண்டு உள்ளார்.

எனவே உலக மக்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்து பின்பற்றும் காலம் இனி உலகம் எல்லாம் அறிந்து தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்...

மேலும் வள்ளலார் பாடல் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!

உலகில் உள்ள சாதி.சமயம்.மதம் என்னும்  துன்மார்க்கங்கள் யாவையும் தொலைத்து விட்டேன். மெய்ப்பொருளைக் காணும் சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து விட்டேன்.

இதுவே நன்மார்க்கம் என்று இந்நாட்டு மக்களும் வான் நாட்டில் உள்ள ஞானிகளும் தெரிந்து கொள்வார்கள் .இதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை கட்டளை...

இனிமேல் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கயவர்கள் கூட்டம் ஒழிந்து அழிந்துவிடும்.

ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்ற உண்மையை அறிந்து வழிபடும் காலமும் தொடர்பு கொள்ளும் காலமும்.அனைத்துதர  மக்கள் மனதிலும் அறிவிலும் நிலைபெற்றுவிடும். 

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய.என் அன்புடைய  சகோதர சகோதரிகள் அனைவரும் உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 நமக்கு தாயாகவும் தந்தையாகவும் தாங்கிக் கொண்டு நமது ஆன்மாவில் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அவர் எங்கு இருந்து எல்லா அண்டங்களையும் .உலகங்களையும் இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

இன்னும் விரிக்கில் பெருகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு