வெள்ளி, 26 அக்டோபர், 2018

சுத்த சன்மார்க்க தியானம் !

சுத்த சன்மார்க்கத்தில் தியானம் செய்யும் முறை !

ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் செய்யலாம்.
கல்வி அறிவு மேம்படும்.நோய்கள் அணுகாது .என்றும் துன்பம் இல்லாமல்
மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம் ...

இதற்கு குரு என்பவர் எவரும் தேவை இல்லை.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே குரு !

தியானம் செய்யும் எளிய வழி !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்களைத் மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் ...

நம் வீட்டில் தனியாக ஒரு அறையோ அல்லது பூசை அறையோ இருக்க வேண்டும்.
அந்த அறையில் நான்கு சதுரம் கொண்ட தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும்.

அதில் ''நல்ல எண்ணெய் '' அல்லது ''தேங்காய் எண்ணெய்'' அல்லது பசுநெய் ..ஊற்றி சிறிய திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,

அந்த தீபத்தின் முன்னாடி நான்கு அடி தூராம் தள்ளி நாம் கிழே ஒரு விரிப்பை போட்டு அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும் .

அந்த விளக்கின் தீப சுடர் ஒளியை மட்டும் இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் ...

தீபம்,.. அலை பாயாமல் எரிய வேண்டும் .கண்கள் தீப சுடர் ஒளியை மட்டும் தான் பார்க்க வேண்டும் .

நம் ஆன்மாவிற்கும்,
ஜீவனுக்கும் ,
மனதிற்கும்,
கண்களுக்கும் ,அந்த திரு விளக்கிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கின்றது .என்பதை அறிவால் தெரிந்து கொள்ள வேண்டும் .

நம்மால் எவ்வளவு நேரம் தீபத்தைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .

ஆனாலும் காலை 4-30 மணியில் இருந்து 6-00 மணி வரையில் தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.ஏன் என்றால் அமுதக்காற்று வீசும் காலம்
அந்த காலத்தை அமுதகாலம் என்றும் சொல்வார்கள்.இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

நம் உடம்பின் ஐம் புலன்கள் என்பது {கண்...காது....மூக்கு ....வாய் ...உடம்பு) என்பதாகும் அதில் முக்கியமானது,முதன்மையானது இந்திரியங்களில் உள்ள கண்களாகும்

கண்களின் வழியாகத்தான் நாம் புறத்தில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்க முடிகின்றது.

ஐம் புலன்களான கண்,காது,வாய்,மூக்கு,உடம்பு என்பதில் முதல் இடம் கொள்வது கண்கள் ,

கண்களில் பார்க்கும் அனைத்தும்...
கரணங்கள் என்னும் ...மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் .உள்ளம்..என்னும் காரணங்களில் முதல் இடத்தில் உள்ள மனத்தில் பதிவாகின்றன.

கரணங்களில் முதன்மையானது   மனமாகும் .கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகிறது ...

அதே நேரத்தில் கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது...கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகும்.

மனதில் பதிவாகியது, அனைத்தும் ஜீவன் என்னும் உயிரில் பதிவாகும் ...ஜீவனில் பதிவானது அனைத்தும் ஆன்மா என்னும் உள் ஒளியில் பதிவாகும்,அந்தப்பதிவுகள் தான் மாயா திரைகள் என்பதாகும்.நல்வினை தீவினை என்பதாகும்.

நமக்கு வரும் ,துன்பத்திற்கும் துயரத்திற்கும், அச்சத்திற்கும், பயத்திற்கும், நோய்க்கும்,மரணத்திற்கும்  அந்தப் பதிவின் அறியாமை என்னும் திரைகளே காரண காரியமாகும்.

துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் முதலியவற்றைப் போக்க வேண்டாமானால்,
மரணத்தை வெல்ல வேண்டுமானால்,
வெளியில் செல்லும் மனத்தை உள்ளே கொண்டு செல்ல வேண்டும்.அதை கண்கள் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும்.

ஆலய வழிபாடும் கண்கள் வழியாக உருவத்தைப் பார்த்துதான் வணங்குகிறோம்.அதற்கு பக்தி என்பதாகும்.
அப்படி பார்த்து வழிபடுவதால் பார்க்கும் உருவம்தான் மனதில்  பதிவாகும்.அந்த நேரத்தில்  மனமகிழ்ச்சி உண்டாகும் அதனால் எந்த பயனும் இல்லை.

மன மகிழ்ச்சி என்பது வேறு. ஆன்ம மகிழ்ச்சி என்பது வேறு..

ஏன் என்றால் ? ஆன்மாவில் இருந்துதான்.
ஜீவனுக்கும்.
மனதிற்கும் கண்களுக்கு ஒளி வழங்கப் படுகின்றது.
எனவே ஆன்ம மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்.

மனம் ;--

மனம் என்பது பேய் பிடித்த குரங்கு போன்றது...மனம் அகத்தில் செல்லாமல் புறத்தில் கண்கள் துணை கொண்டு அலைந்து கொண்டு உள்ளது..

மனதை அடக்குவதற்கு  சமய மதங்களில் சொல்லிய தியானம்,தவம்,யோகம் போன்ற வழி முறைகளால் மனதை அடக்கவே முடியாது.

மனதை எப்போதும் அடக்க முடியாது,ஆனால் மனதை மாற்ற முடியும் என்கின்றார் வள்ளலார் .

மனதை அடக்க வேண்டுமானால்,மாற்ற வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .மாற்ற முடியும் மனிதன் மனதை மாற்றியே ஆக வேண்டும்.மாற்றாமல் இருக்கின்ற வரை  எல்லாத் துன்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதற்குத்தான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை அவசியம்  தேவைப்படுகிறது .

சுத்த சன்மார்க்க தியான முறைக்கு
சத் விசாரம் என்றும்,ஞான சரியை என்றும் வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.

புறத்தில் திரியும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்.அதாவது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் .சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும்.

அகம் என்பது ஆன்மா அது நம் சிரநடுவில் உள் ஒளியாக இருந்து இயங்கும் இடமாகும். ஆன்மாவை கண்கள் நேரடியாக பார்க்க முடியாது,

மனம், கண்களின் துணைக் கொண்டுதான் ஜீவனையும் ஆன்மாவையும் தொடர்பு கொள்ள முடியும் . உள்ளே செல்ல முடியும்.அப்போது தான் மனம் வெளியில் செல்லாமல் உள்ளே அடங்கும்.மனத்தை அமைதிபடுத்த முடியும் .

கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக என்றார் வள்ளலார்

எனவே கண்களைத் திறந்து கொண்டுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்ய வேண்டும் .

கண்களை மூடிக் கொண்டால் !

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வதால், அளவில் அடங்காத  இல்லாத கற்பனைகளும். தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,

மனம் என்பது ஒரு பேய்க்  குரங்கு... அதை அடக்க முடியாது தீப ஒளியின் வழியாகத்தான் மனத்தை அடக்க முடியும் அதைக் கண்களால் தான் அடக்க முடியுமே தவிர, வேறு எந்த வழியாலும் அடக்க முடியாது.வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

உருவங்களை வைத்தோ .உருவங்களைப் பார்த்தோ ,மந்திரம் சொல்லிக் கொண்டோ மணியை எண்ணிக் கொண்டோ தியானம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை ,
நன்மையையும் இல்லை,அவைகளால் மனமும் அடங்காது.

அந்த நேரம் எதோ ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைப்பதுபோல் தோன்றும் ,கொஞ்ச நேரத்தில் அழிந்துவிடும்,மேலும் பழைய நிலைக்கே மனம் திரும்பி விடும்.

உருவம் அற்ற ஒளி !

ஆதலால் நம் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .ஏன் என்றால்
கண்களும் ஒளி-- ,
தீபமும் ஒளி --
இரண்டும் ஒளியாக இருப்பதால் ...
ஜீவனும் ஒளி.. ஆன்மாவும் ஒளியாகும்--,

நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்தது,படித்தது,
கேட்டது,செய்தது ,
உண்டது,உணர்ந்தது
அனுபவித்தது , அனைத்தும் மனம் ...ஜீவன் ,,,
வழியாக ஆன்மாவில் பதிவாகி உள்ளது .
அந்த பதிவுகள் தான் நினைவு அலைகளாக திரும்பி நமக்கு துன்பமும் ....துயரமும் ......அச்சமும்,...பயமும்,.... நோயும்....மரணமும் தந்து கொண்டு வருகின்றது .

அந்த பதிவுகளை அறவே நீக்கினால் தான் மனம் அமைதி பெரும்,அலைபாயும் மனம் அமைதியடையும்,
பின் அனைத்து துன்பங்களும் துயரங்களும் நீங்கும் .

ஆன்மாவை நிரப்பிக் கொண்டுள்ள குப்பைகளை அகற்றி. வெற்று இடமாக மாற்ற வேண்டும்.

அந்த பதிவுகளை அகற்ற சுத்த சன்மார்க்க **ஞான  தீப ஒளி தியானம் தான்** முக்கியமானதாகும். மேலே கூறியபடி தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால்,தீப ஒளி கண்களின் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை மோதுகின்ற போது அந்த மோதலில்  உஷ்ணம் உண்டாகும் . அதற்கு சுத்த உஷ்ணம் என்று பெயர்...

அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் பதிவாகி உள்ள அசுத்த மாயை என்னும் (அறியாமைத் திரைகள் ) திரைகளை கரைத்துவிடும்.எரித்துவிடும்.

அதன்பின் தடைகள் இல்லாமல் கண்கள் மனம் இரண்டும் ஜீவனை .ஆன்மாவை நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.,

மனம் தடை இல்லாமல்  நேரடியாக  சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ளும்.

அதுவரையில் புறத்தில் சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

புறத்தில் பார்த்து வந்த தீப ஒளியின் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .

துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் ..இதுதான் சமரச  சுத்த சன்மார்க்க சத்தியமான தியான முறையின் உண்மையாகும் .

மலம் ஒழிப்பு !

சமய மதங்களில் மலம ஒழிப்பு என்பார்கள் ,சமய மதங்களில் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது ஆணவம் மாயை,கன்மம், என்னும் மூன்று மலங்களை சொல்லுவார்கள். அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள்,
தீட்ஷை கொடுக்கும் தகுதி மனிதர்களுக்கு கிடையாது.

மரணத்தை வென்ற ''வள்ளலார் போன்ற சுத்த பிரணவ ஞான தேகிகளுக்கு மட்டுமே'' சாத்தியமாகும். .

வள்ளல்பெருமான்.. ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் .

மலம என்பது யாதெனில் ஆணவம், மாயை, கன்மம், மாமாயை, பெருமாயை என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள பதிவுகளாகும் அதுவே மலங்களாகும்,

அதற்கு மலம்  ஒழிப்பு என்பார்கள்.மலம் ஒழிப்பு என்றால் பதிவு அகற்றம்.நீக்கம்  என்பதாகும். அந்த மலத்தை நீக்குவதற்காக  தீட்சை கொடுப்பேன் என்பார்கள் , மனிதர்கள் எதையும்  நம்பி ஏமாந்து விடாதீர்கள்

பல சகோதரர்கள்.. விபரம் தெரியாமல் நிறைய பணத்தை கட்டி தேவை இல்லாமல் சென்று  தியானம் ...
யோகம.... தவம்  .....காயகல்பம் ...
மனவளக்கலை ...
குண்டலினி யோகம்..ஈசா யோகம்,  போன்ற தவறான பயிற்சி முறைகளை கற்று,அதனால் எந்தப் பயனும் இல்லாமல்  துன்பப் படுகின்றார்கள்.
ஆதலால் அப்படி செய்வது செல்வது அறியாமையாகும்,
விபரம்  அறியாத மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கும்,மன்றங்களும்,தியானப் பயிற்ச்சி கூடங்களும்,மேலும் நிறைய அமைப்புகளும் நாட்டில் நிறைய உருவாகி விட்டது...

மலத்தை எவராலும் ஒழிக்க முடியாது நீக்க முடியாது !

அறியாமையின் செயல்களால் ஆன்மாவில் பதிவான திரைகள்   என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது,அகற்றவும் முடியாது. அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும்,நீக்க வேண்டும்.வேறு ஒருவரால் ஒழிக்கவும் அழிக்கவும் முடியாது,நீக்கவும் முடியாது  என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்....

தீதும் நன்றும் பிறர் தர வாராது ! என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜீவ காருண்யம் என்னும் ஜீவ தயவாலும் உயிர் இரக்கத்தாலும்.பரோபகாரத்தாலும்.,...

சத்விசாரம் என்னும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் தியானத்தாலும் மட்டுமே மலம் என்னும் திரைகளை நீக்க முடியும் ,ஒழிக்க முடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.அதனைக் கருத்தில் கொண்டு,  அனைத்துத் தர மக்களும் தெரிந்து கொண்டு சுத்த சன்மார்க்க ஞான யோகம் என்னும் ஆன்ம தியானம் செய்ய வேண்டும் . .

வள்ளலார் சொல்லியது !

ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் ,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,தீபத்தை புறத்தில் வைத்து தடைபடாது, இடைவிடாது ஆராதியுங்கள் என்று தெளிவாக விளக்கி உள்ளார் .ஆதலால் தீபத்தை இடைவிடாது ,கண்களை திறந்து கொண்டு பார்த்து தியானம் செய்ய வேண்டும் .

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .

கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .

என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே என் கண்ணுன் மணியே !

கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே
விளங்குகின்ற கற்பூர விளக்கே !

கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விணணிறைவே சிவ சிவ தனி மெய்ப் பொருள!

வள்ளலார் வாக்கு !

மேலே சொல்லியபடி செய்து பாருங்கள்,செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும்.ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆதலால் மேலே கூறிய வண்ணம் சந்தேகம் இல்லாமல் தியானம் செய்து வாருங்கள் .எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவார் ..
இது சத்தியம்... .இது சத்தியம்,..இது சத்தியம்.

ஞானசரியை யில் பதிவு செய்துள்ளபாடல் !

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
உள்ள
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!

சிற்சபை நடத்தை தெரிந்து தொடர்பு கொள்வதற்கும் சித்தி எல்லாம் பெறுவதற்கும் ஆரம்ப தியானமுறையே சுத்த சன்மார்க்க தியானமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சுத்த சன்மார்க்க ஞான யோக தியானம் செய்யும் முறையாகும்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
 --9865939896 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு