வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

கருணை இருந்தால் கதவு திறக்கும் !

கருணை இருந்தால் கதவு திறக்கும் !

நம் ஆன்மாவில் அருளை வைத்து  திரைகள் என்னும் கதவுகளால் அடைத்து பூட்டு போடப்பட்டு உள்ளது

அந்த கதவுகளின் பூட்டைத் திறக்க சரியை.கிரியை.யோகம்.ஞானம் என்னும் பல வழிகளைப் பின்பற்றி   வாழ்ந்தும் வாழ்ந்து கொண்டும் வருகிறார்கள்

எந்த வழிகளிலும் பூட்டைத் திறக்கும் திறவு கோல் என்னும் சாவி கிடைக்கவில்லை.கிடைக்காது.

வள்ளலார் வந்துதான் திரைகளை நீக்கும் அதாவது பூட்டை திறக்கும் திறவுகோல் பெறும் வழியைக் கண்டுபிடித்தார்.அதற்குண்டான உளவை தெரிந்து கொண்டார்.

வள்ளலார் பாடல்;--

உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காணஉளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்தழுவானை யான்புரிந்த தவறு நோக்கிஎள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்டஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!...என்றும்

திரு அகவலில்...

உளவினி லறிந்தா லொழிய
மற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி !

அந்த உளவு தான் "" கருணை"" என்பதாகும்.

 உயிர்கள் இடத்தில் இருந்து அன்பும் தயவும் இணைந்த கருணையை  பெற வேண்டும்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தனிப்பெரும் கருணை உடையவர். கருணை இருந்தால் தான் கருணைக் காட்டுவார் ஆண்டவர். கருணை முழுமைப் பெற்றால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவுகோல் கிடைக்கும்.

அதற்குத்தான் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார்.

*ஜீவ காருண்யம் என்றால் சாப்பாடு கொடுப்பதும் மட்டுமே அல்ல*

எல்லா உயிர்களும் நம்மை நேசிக்கும் உளவைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுதான் ஜீவ காருண்யம் என்னும் ஜீவ ஒழுக்கம்..ஆன்ம நேயம் என்னும் ஆன்ம ஒழுக்கம் என்பதாகும். இந்த இரண்டு ஒழுக்கம் முற்றுபெற இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

இந்திரிய கரணங்களால்  உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்.அந்த உபகார சக்தியால் அன்பு.தயவு.அறிவு.கருணை.அருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.அது பூரணம் பெறும் போது மறக்கருணை. அறக்கருணையாக  மாற்றம் ஆகும்  அருள் என்னும் சாவியை அப்போதுதான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வழங்குவார்.

கருணை என்பது செயற்கை இல்லாமல் இயற்கையாகவே வரவேண்டும்.அதைத்தான் வள்ளலார்.

எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !
என்கிறார்

கருணை வேறு சிவம் வேறு அல்ல.

கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலேமருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.

கருணையே வடிவமாக நான் மாற வேண்டும்.

 கருணை இல்லாமல் உயிர்கள் கொலை படுவதும் அதன் புலாலை உண்டும் அறிவு மழுங்கி அழிந்து கொண்டு உள்ளார்கள்.
அவற்றை எல்லாம் நீக்கவும். அருட்பெரும்ஜோதி ஆண்டவரே உன் புகழை  உலக மக்களுக்கு சொல்லி வாழ்த்தவும் எனக்கு இச்சையாக அதாவது பேராசையாக உள்ளது என்கிறார்.

கருணை எப்படிவரும் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கனும்.எல்லா உயிர்களுக்குள்ளும் கடவுள் திரு நடனம் புரிகின்றார் என்ற உண்மை விளங்கினால் மட்டுமே கருணைத் தானே வரும்.

வள்ளலார் பாடல்:--

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்ற பொது உரிமை வர வேண்டும் .

மேலும் கருணை எப்படி வரும்....

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளேஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான் சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.! என்கிறார்

எல்லா உயிரையும் தம்உயிர்போல் பாவிக்கன்ற உத்தமர் எவரோ அவர் உள்ளத்தில் கருணைக் கடவுள் கருணை என்னும் அருள் சாவியைக் கொடுத்து திரைகளை நீக்கி கருணையோடு அருளை வாரி வழங்குவார்

நாமும் கருணையோடு வாழ்ந்து அருள் கோட்டையின் சாவியைப் பெற்று கதவைத் திறந்து அருளில் மூழ்கி மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

கருணை இருந்தால் மட்டுமே கதவு திறக்கும்.
கதவு திறந்தால் மட்டுமே அருள் கிடைக்கும்.

கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்றகண்ணுடையோய் சிதையா ஞானப்பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்றமலர்வாயோய் பொய்ய னேன்றன்மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்கசிந்துருக்கும் வடிவத் தோயே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
🙏🙏🙏🙏🙏

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு