புதன், 23 ஆகஸ்ட், 2017

அருள் அமுத கதவு திறந்த்து !

அருள் அமுத கதவு திறந்த்து !

வள்ளலார் அருள் அமுதம் பருக அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் கதவைத் திறக்கச் சொல்கின்றார்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

பஞ்ச அமுத ஸ்தானங்கள்

சுத்த அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.

2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.

3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.

4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.

5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.

இந்த 5-வது அமுதத்தையுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள்

யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவஞானத்தால். சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.

2-வது புவனாமுதம் - நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி பிரஞ்ஞை யுணர்ச்சியால்.

3-வது மண்டலாமிருதம் - நாக்கினடியில், பக்குவஇச்சை, சம்சார உணர்ச்சியால்.

4-வது ரகசியாமிருதம் - உள் நாக்கடியில், பக்குவதிரோபவம்.

5-வது மௌனாமிருதம் - உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம். அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.

மேலே கண்ட சுத்த  அமுதங்களில் நான்கு வகையான அமுதவகைகளை ஞான யோகத்தால் நிறைய ஞானிகள் பெற்று சுவைத்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

ஐந்தாவது அமுதமான  சுத்த மெளனா அமுதம் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் விரும்பினால் மட்டுமே  கொடுக்க முடியும்.

அதற்கு மதிமண்டலத்து அமுதம் என்று பெயர்.

அந்த அமுத்த்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் கேட்டுப் பெருகிறார் வள்ளலார்.

அந்த அமுத்தை உண்டவர்கள் கடவுள் நிலை அறிந்து அம்மயமாவார்கள்..அவர்களுக்கு மரணம் என்பது எக்காலத்திலும் கிடையாது.பேரின்ப லாபத்தை அடைந்தவர்கள்  பெற்றவர்கள் அவர்களே என்பதாகும்

அவர்கள் தான் ஐந்தொழில் வல்லபம் பெற்று ஆட்சி செய்யும் தகுதி உடையவர்கள்.

அந்த அமுதம் வேண்டி ஆண்டவர் இடம் கேட்கும் பாடல் தான் கீழே உள்ள ஞானத்தில் ஞானம் பெரும் பாடலாகும்.

திருச்சிற்றம்பலம்

1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
சிவனே கதவைத் திற.

2. இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
கோவே எனது குருவே எனையாண்ட
தேவே கதவைத் திற.

3. சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.

4. அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற.

5. வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
சிறப்பா கதவைத் திற.

6. எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
செல்வா கதவைத் திற.

7. ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
தேவா கதவைத் திற.

8. ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
ஞான அமுதமது நானருந்த - ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற.

9. திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
தேனே கதவைத் திற.

10. சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
தேகா கதவைத் திற.

ஞான தேகமாக உள்ளவர் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.ஞானத்தில் ஞானம் பெற ஞான தேகத்தை பெற்றவர் மட்டுமே  கதவைத் திறக்க முடியும்.

அதனால் தான் ஞான தேகா கதவைத்திற என்று வள்ளலார் கேட்கின்றார். கதவும் திறக்கப் பட்டது .மதிமண்டல அமுத்த்தை வாயார உண்டே .ஊன உடம்பை ஒளிதேகம் என்னும் அருள் தேகம் பெற்று மரணத்தை வென்றவர்தான் வள்ளலார்.

அவர்போல் பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றை பற்றினால் அருள் பெற்று என்றும் இறவாமல்.பிறவாமல்  நாமும்  பெறலாம்.

வள்ளலார் பாடல்.!

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த யதிருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவேஇத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

என்னும் பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு