ஞாயிறு, 22 மார்ச், 2015

வல்லவன் பூட்டிய பூட்டு !

எல்லோரும் நல்லவரே !

உலகில் தோன்றிய அருளாளர்கள், சித்தர்கள்,  ஞானிகள்  மதவாதிகள், சமயவாதிகள், .அனைவரும், தங்களுக்காகவும்,மக்களுக்காகவும்,மக்களை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான், ஆன்மீக கருத்துக்களை பாடல்களாகவும் கதைகளாகவும், எழுதி வைத்துள்ளார்கள், உபதேசங்களாக சொல்லியும்  உள்ளார்கள்.

அவர்கள் இறைவனைப் பற்றியும்,ஆன்மாவைப் பற்றியும், உயிர்களைப் பற்றியும் ,உடம்பைப் பற்றியும்,அண்டங்களைப் பற்றியும்,அண்டங்களில் உள்ள  கிரகங்களைப் பற்றியும்,அணுக்களைப் பற்றியும்,மாயைப் பற்றியும் பஞ்ச பூதங்களைப் பற்றியும் ,அவைகளின் செயல்பாடுகள் பற்றியும் சொல்லி உள்ளார்கள்.

இந்த பஞ்ச பூத உலகத்தைப் பற்றியும்,,உலகத்திற்கு வந்துள்ள ஆன்மாக்கள் பற்றியும்,உயிர்களைப் பற்றியும் ,உடம்பைப் பற்றியும் .இறுதி வாழ்க்கையான மனித வாழ்க்கைப் பற்றியும் மனிதனைக் கடந்த மனிதனும் தெய்வமாகலாம் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி உள்ளார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லிய வழிமுறைகள் யாவும் முன்னுக்குப்பின் முரணாகத் தவறாகப் போய் விட்டது .,

அவர்களின் குற்றம் அல்ல .அவர்கள் அறிந்து கொண்டதும்,தெரிந்து கொண்டதும் அவ்வளவுதான் .அவர்களுக்கு முழுமையான கடவுளின் ''அருள் பூரணம்''   கிடைக்கவில்லை.

கிடைத்த அருளே போதுமானது என்று உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு தெரிந்த சில உண்மைகளை கதைகளாகவும்,கற்பனை களாகவும்,மக்களுக்குப் படைத்து விட்டார்கள்.

சித்தர்கள் ஒருபக்கம் மக்களை திட்டித் தீர்த்து, சித்தம் போக்கு சிவம் போக்கு என்று ஒப்பாரி வைத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

அவர்களைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்  !

அறங்குலவு தோழி இங்கே நீ யுரைத்த வார்த்தை
அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இம்மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் யுழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர்பால்
இறங்களில் என் பேசுதலால் என் பயனோ நடஞ் செய்
இறைவரடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

வேத வியாசர் !

எல்லா ஞானிகளையும் விட ''வேதவியாசர்'' மிகவும் உயர்ந்தவர் முழுமையான அருளைப் பெற்றவர்.அவருக்கு எல்லா அண்ட ரகசியங்களும்,பிண்ட ரகசியங்களும் தெரிந்துள்ளன.மேலும் உள்ள எல்லா  ரகசிய உண்மைகளும் தெரிந்துள்ளன,அவர் எழுதிய மகாபாரதம்,உடம்பின் தத்துவத்தையும் உயிரின் தத்துவத்தையும் ,ஆன்மாவின் தத்துவத்தையும் கடவுளின் உண்மை தத்துவத்தையும் வெளிப் படுத்தி உள்ளன.

ஆனால் உண்மையான கடவுள் யார் ? என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை.பரமாத்மா என்றும்,சிவன் என்றும்,கிருஷ்ணன் என்றும் கிருஷ்ண பரமாத்மா என்றும் பெயர் வைத்துள்ளார். தத்துவங்களையும் ,அதன் வல்லமையும் ஆற்றலையும் தெரிந்து கொண்டுள்ளார்.

கற்பனைக் கதைகளாகச்  சொல்லாமல், உண்மையை மக்களுக்கு நேரடியாகச் சொல்லி இருந்தால் இவ்வளவு குழப்பம் வந்து இருக்காது.அவர் எல்லா வற்றையும் மறைத்து விட்டார் .

அவருக்கு பின்னாடி வந்தவர்களான,வால்மீகிமுனிவர் ,மேலும்  ஏசுபிரான் ,நபிகள்நாயகம் அவர்கள் , புத்தர்,போன்ற அருளாளர்கள் அனைவரும் மதத் தலைவர்களாகி விட்டார்கள்.பதத் தலைவர்களாகி விட்டார்கள்..''மதம் என்ற பேய்'' மக்களை பிடித்துக் கொண்டு ஆடாத ஆட்டங்கள் ஆடி மக்களை வேற்றுமைப் படுத்தி அழித்துக் கொண்டு உள்ளன

அதற்கு வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் உற்று அங்கும் இங்கும்
போருற்று இரந்து.வீண் போயினார் இன்னும் வீண்
போகாத படி விரைந்து
புனித முறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ
என்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு
எண்ணற்க என்ற குருவே .
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணானந்த பரநாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !......என விளக்கம் தருகின்றார் .

பேருபதேசம் !

வேத வியாசரைப் பற்றி வள்ளலார் மிகத் தெளிவாகச் சொல்லி உள்ளார்.

இதுவரையில் நாம் நாமும் பார்த்தும்,கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது
குழுஉக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் ,கொஞ்சமேனும் புறங் கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல்,பிண்ட லஷ்னத்தை அண்டத்தில் காட்டினார்கள்.

யாதெனில் ;--கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு .இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ,ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகவே  .
சொல்லி உருவங்களாகப் படைத்து இருக்கின்றார்கள்.

தெய்வத்திற்குக் கை ,கால்,மூக்கு ,வாய்,காது,தலை (போன்ற) முதலிய உறுப்புகள் இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள் .

பெரியவர்கள் என்று பெயர் வைத்துள்ளவர்கள் !

சரி.. வேத வியாசர்தான் அப்படி உண்மையை மறைத்து சொல்லி இருந்தாலும்,அவர்கள் காட்டிய  கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த,பெரியவர்கள் என்னும்  மகா புருஷர்கள் ,இஃது உண்மையாக இருப்பதாகவே  ---முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயர் இட்டுக் கொண்டு இருந்தவர்களும்,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்.

அவர்களாவது இதுதான் உண்மை என்று அறிந்து அதன் உட்பொருளை மக்களுக்கு தெளிவுப் படுத்தி இருக்கலாம் .அவர்களும் அப்படி எந்த உண்மையும் தெரியப் படுத்த வில்லை.

மறைத்தவன் ஓர் வல்லவன் ! .

''ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை என்கின்றார் வள்ளல்பெருமான் ''.

உண்மையை மறைத்தவன் சாதாரண ஆள் இல்லை,மற்ற அருளாளர்களை விட , அவர் உயர்ந்த அருள் ஆற்றல் பெற்றவர் ,அவன் பெரிய வல்லவன் அவன் தான் ''வேத வியாசர்'' என்று சொல்லாமல்,.. பெரிய வல்லவன் என்று  வள்ளல்பெருமான் அவரை உயர்த்தி பேசுகின்றார்.

அவன் பூட்டிய ( மறைத்த ) பூட்டை அந்த பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை,என்கின்றார் அதன் அர்த்தம் என்னவென்றால் நான் அந்த பூட்டை திறக்கவில்லை .திறந்தால் மறுபடியும் பூட்டைப் போட்டு பூட்டி விடுவார்கள்.ஆதலால் அந்த பூட்டை உடைத்து எரிந்து விட்டேன் என்கின்றார் ..
இனிமேல் உலக மக்களுக்கு கடவுளின் உண்மையும்,ஆன்மாவின்  உண்மையும்   வெளிப்படையாக சொல்லுவேன்.என்பது பொருளாகும்.ஆதலால் வேதம் ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற கலைகள் எதிலும் லஷியம் வைக்காதீர்கள், எதனையும்  நம்பாதீர்கள்,''அத்தனையும் புளுகு மூட்டைகள்'' என்று வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

வேதம் ஆகமங்கள்  என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதம் ஆகமத்தின் விளைவை அறியீர் ---சூதாகச்
சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைத்தது இல்லை
என்ன பயனோ இவை .

இதுபோல் சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும்,;லஷியம் வைக்க வேண்டாம் என்கின்றார். ஏன் ? என்றால் அவற்றில் தெய்வத்தைப் பற்றி தத்துவங்களாகக் குறித்து இருக்கின்றதே அன்றிப் வெளிப்படையாக சொல்லவில்லை.நான் சொல்லியும் நீங்கள் கேட்காமல் அந்த வழியிலே செல்வீர்களானால் .

அவ்வாறு பயிலுவோமானால் நமக்குக் காலம் இல்லை.ஆதலால் அவற்றில் லஷியம் வைக்க வேண்டாம்.

ஏன்எனில் அவைகளிலும் --அச்சமய மதங்களிலும்,--அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுகிறதற்கு,
கூடாது, முடியாது..ஏன் எனில் அவற்றில் உள்ளதை அறிந்து,புரிந்து,தெரிந்து கொள்வதற்கு நமக்குக் காலம் இல்லை.

மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானே இருக்கின்றேன் .நான் உங்களைப்போல் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது..அது என்னுடன் இருந்த பட்டினத்துச் சுவாமிகளுக்கும்,வேலாயுதம் அவர்களுக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும்.அந்த லஷியம் எப்படி போய்ப்  விட்டது ? பார்த்தீர்களா ?

அப்படி லஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியது இல்லை.நான் முதலில் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கிய இருக்கின்ற பக்திப் பாடல்களையும்,மற்றவர்கள் பாடி இருகின்ற பக்திப் பாடல்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும் என்கின்றார்.

என்னவென்று சாட்சி சொல்லும் .மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களை காட்டிலும்,வள்ளல்பெருமான் பாடியப் பாடல்கள் உயர்ந்த அருள் ஆற்றல் மிகுந்த கருத்து  ஆழம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.என்கின்றார் . .
ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கின்றார் .

அற்ப அறிவு என்பது வள்ளல்பெருமானுக்கு இல்லை !

வள்ளல்பெருமான் நடித்த நாடகம் !

வள்ளல் பெருமானுக்கு அற்ப அறிவு என்பது இல்லை.அவருக்கு ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தில்லை சிதம்பர ரகசியத்தை திரை விளக்கி காட்டியபோதே ,இறைவன் எல்லா வற்றையும் வெட்டவெளியாக காட்டிவிட்டார் .

மக்கள் சாதி ,சமய,மதங்களிலே பற்று வைத்துள்ளார்கள்.அவர்களை தம் வசம் மாற்ற வேண்டுமானால் ,அவர்கள் பின் பற்றிய தெய்வங்களைப் பற்றியும் பக்தியைப் பற்றியும்,தாமும் அவர்களைப்  போலவே பக்தியில் உள்ளவர் போல் காட்டி,..வள்ளலார் மக்களை தன்வசமாக மாற்றிக் கொண்டார் .

அவர் நடித்த நாடகத்தின் ஒரு பகுதிதான், அவர் எழுதிய முதல் ஐந்து திருமுறைகளாகும். அவர் எழுதிய ஐந்து முறைகளும் அற்ப அறிவாக இருந்தபோது எழுதியது என்று ,அவர் எழுதியதையே குற்றம் என்றும் சொல்லும் அளவிற்கு தன்னை தாழ்த்திக் கொண்டு மக்களுக்கு சொல்லுகின்றார் என்றால் அவருடைய அருள் ஆற்றலை என்னவென்று சொல்லுவது.பெருந்தன்மையை என்னவென்று சொல்லுவது.

எப்படியாவது மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்ற பெருங் கருணையினால் அப்படி சொல்லி உள்ளார்.

மேலும் .இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் ,.இப்போது எல்லா வற்றையும் விட்டு  விட்டதினால் வந்த லாபம் இது.,
ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் .

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்ற ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார் . எவரும் பெற்றுக் கொள்ளவில்லை என்று திரு அருட்பாவில் விளக்கம் தந்துள்ளார் ,

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்து இருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ,அந்த லஷியம் தூக்கி விடவில்லை..

என்னை இந்த இடத்திற்குத் தூக்கி விட்டது யாதெனில் ;-அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று சத்தியப் பெரு விண்ணப்பத்திலும் ,''எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றித தலைவா வேறு எண்ணியது உண்டோ ''எனவும்.''தேடியது உண்டு நின் திருஉரு உண்மை என்னும் தொடக்கம் உடைய பதிகத்திலும்,விண்ணப்பித்து இருக்கின்றேன்.

மேலும் ஆண்டவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில் .''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக "'என்றதுதான் .என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது.அது யாதெனில் ,தயவு,..தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

கருணை ஒன்றினால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்,அவருடைய அருளைப் பெற முடியும் என்பதை மிகத் தெளிவாக வள்ளல்பெருமான் விளக்கி உள்ளார்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே !

செயற்கை இல்லாமல் இயற்கையான கருணை எங்கு இருக்கின்றதோ அங்கே இறைவன் நிலைப் பெற்று இருப்பான் என்பதை அருட்பெருஞ் ஜோதி அகவலில் தெரியப் படுத்தி உள்ளார்.

அந்த கருணைக்கு தயவு வரவேண்டும் .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.( ஒருமை என்பது ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்பதாகும் ) அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும்.தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .

இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கின்றது ,அது அந்த ஒருமையினாலே தான் வந்தது .நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள்..மேலும் ஒருமை என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணுவதாகும் .

ஆதலால் எந்த உயிர்களையும் கொலை செய்வதோ அதன் புலாலை உண்பதோ பெரியப் பாவமாகும் ,பெரிய குற்றமாகும் என்கின்றார் வள்ளல்பெருமான்.கொலையும் புலையும் செய்பவர்கள் இறைவனை நினைக்கவோ வழிபடவோ தகுதி அற்றவர்கள் .கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் .

மக்களை திருத்த வள்ளலார் சொல்லியது.!

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத் தனமாய் எப்படி இருந்தாலும்.

அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்

மிரட்டிச் சொல்லுவேன்

தெண்டன் விழுந்து சொல்லுவேன் .

அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன் .

அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன் .

இப்படி எந்த விதத்தில் ஆவது, நல்ல வழிக்கு வரச்செய்து விடுவேன்.நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.என்று சன்மார்க்க அன்பர்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றார் .

நான் இல்லாமல் இந்த ஜனங்கள் ஷணநேரம் இருக்க மாட்டார்கள்.என்று ஆண்டவர் இடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன்,அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரம் அல்ல .உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.

ஏனெனில் எல்லவரும் சகோதரர்கள் ஆதலாலும்,இயற்கை உண்மை ஏக தேசங்கள் ஆதலாலும்,ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை வைத்துக் கொண்டு இருக்கின்றேன் என்கின்றார்.

ஆன்மா!

இந்த உலக மாந்தர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதை மறந்து விட்டார்கள் .இயற்கை உண்மையின் ஏகதேசம் என்கின்றார் வள்ளல்பெருமான்.இயற்கை உண்மை என்பது ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்'' அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் தான் ,ஆன்மா என்பதாகும்.

ஆன்மாக்கள் இந்த உலகத்தில்,அதாவது அண்டத்தில்,வந்து வாழ்வதற்குகாகவே இந்த உலகத்தை இறைவன் படைத்து இருக்கின்றார்.ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டுமானால் தனித்து வாழாது.உயிர் எடுத்து,உடம்பு எடுத்துதான் வாழ வேண்டும்.அதுதான் இயற்கையின் சட்டமாகும்.

உயிரையும் உடம்பையும் கொடுப்பது மாயை ,மாமாயை,பெருமாயை, என்னும்,அதிகாரத் தத்துவங்களாகும்.அந்த தத்துவங்கள் அளவில்லா ஆற்றல் படைத்தது.

இயற்கை உண்மை என்னும் கடவுளின் சட்டப்படி முதல் பிறப்பான தாவரங்கள் தொடங்கி ,ஊர்வன, பறப்பன,நடப்பன,தேவர்,அசுரர்,மனிதர் என்ற ஏழு பிறவிகளுக்கு உண்டான,ஆன்மாவிற்கு  உயிரும் உடம்பும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

மனித தேகம் கிடைக்கும் போது மட்டும் தான் ,ஆன்மா தன்னை உணர்ந்து கொள்ளும் அறிவும் அருளும் வெளிப்படும்.மனித தேகத்திற்கு முன் ஆன்மாவிற்கு அறிவும் அருளும் வெளிப்படாது.மனமும் புத்தியும் மட்டுமே செயல்படும்

அன்பாலும் அறிவாலும்,கருணையாலும் அருளாலும் மனதை மாற்றத் தெரிந்தவன் என்பதால் மனிதன் எனற பெயர் ,கொடுப்பப் பட்டுள்ளன.

நமது சமய ,மத வாதிகள் .ஆன்மா அழியாது ,உடம்பும் உயிரும் அழிந்துவிடும் ஆன்மாவிற்கு பந்தமோ ,பாசமோ,இல்லை.நாம் செய்யும் காரியங்களால் உண்டாகும் வினைப் பயன்கள் எல்லாம்.ஆன்மாவில் பதியாது ..உடம்பிலும் உயிரிலும் தான் பதிவாகும்.

நாம் செய்யும் வழிபாட்டாலும்,தோத்திரத்தாலும்,விரதத்தாலும்,புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தால்,வினைப்பயன்களை நீக்கிக் கொண்டு,மரணம் அடைந்தால், சொர்க்கம்,வைகுண்டம்,கைலாயம்,போன்ற மோட்சத்திற்கு சென்று  இன்பங்களைப் பெறலாம் என்று சொல்லி வைத்து விட்டார்கள்.

சமய,மதங்கள் சொல்லிய இந்த பொய்யான புழுகுக் கொள்கைகளை வள்ளல்பெருமான் ஏற்றுக் கொள்ளவில்லை...அவை உண்மைக்கு நேர் விரோதமானது.கடவுளின் உண்மையான,தோற்றத்தையும்,அதன்  கொள்கைகளை எல்லாம் மண்ணைப் போட்டு மறைத்து வைத்து விட்டார்கள் என்கின்றார் வள்ளலார் . .அதை மறைத்தவன் தான் ஒரு வல்லவன் என்கின்றார் .

அவன் படைத்த பொய்யான கருத்துக்களையும்,பொய்யான தெய்வங்களையும்,உண்மை யென்று நம்பி மக்கள் பின் பற்றி வருகிறார்கள்.ஆதலால் நாம் அடைய வேண்டுவது முடிவான் ஆன்ம லாபமாகிய சிவா அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அனுபவமாகும் .

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க ,நரக விசாரம் இல்லை.சுவர்க்க ,நரக விசாரம் உள்ளவர்கள் தங்கள் தங்கள் கருத்தின் படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று முடிவில் தடைப்பட்டுத் மீண்டும் கருணை நன்முயர்ச்சி எடுத்துக் கொண்டு பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள் .அஃது அருமை.ஆதலால் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள் என்கின்றார் .

இத்தருணம் ஆண்டவர் எல்லா வற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு ,முடிவான இன்பா அனுபவத்திற்குச் சாதக சகாயகமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை ( தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகா மந்திரத்தை ) எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய் அறிவின்கண் அனுவத்து எழுந்த, உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை,நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் ,குறிப்பிக்கின்றேன் ,குறிப்பிப்பேன் .என்று மக்களுக்கு தெளிவுபட தெரிவித்து உள்ளார் .

மேலும் நமது ஆண்டவர கட்டளை இட்டது யாதெனில் ;--நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக ,

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

என்னும் திரு மந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார் .
தயவு,கருணை ,அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும் என்கின்றார் .ஆதலால் பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாம் ,--

அது ஒப்பற்ற பெருந் தயவு உடைய பேரறிவேயாம் .இஃது வாச்சியார்த்தம் .இவ்வண்ணம் ,சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெறுவதற்குத் தடை இல்லை.''சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும் '' என்னும் பிரமாணத்தால் உணர்க .

அதாவது வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற எதனிலும் பற்றுதல் வைக்க வேண்டாம். அப்படிமீறியும்  பற்று வைத்தால் உங்களுடைய வாழ்க்கையே நீங்களே அழித்துக் கொள்வதாகும்.என்று வெளிப்படையாகச் சொல்லுகின்றார்.

மேலும், இதுகாறும் தெயவத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது ,அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

சுத்த மாயா காரிகளாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.

சுத்த சன்மார்க்கமும் இல்லை.சுத்த சன்மார்க்கம் இருந்து இருந்தால் ,அனுபவித்து அறியாத அனுபவமும்,கேட்டறியாத கேள்வியும் கேட்டு இருப்போம்.மேலும்,இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள் .ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே,ஆதலால் இத்தருணம் --இக்காலமே சன்மார்க்க காலம். 






    .

 .



      .

ஆரம்பம்.வாழ்க்கை.முடிவு  என்ன என்பதை முழுமையாகத் அறிந்துகொள்ளவில்லை..அவரவர்களுக்குத் தெரிந்தை சொல்லிவிட்டு மாண்டு போய்விட்டார்கள்.சமாதி அடைந்துவிட்டார்கள்.அவர்கள் சொல்லியதை நம்பி வாழ்ந்தமக்களும் அவர்களைப்போலவே சென்றுகொண்டுஉள்ளார்கள்.ஒளிவு,மறைவு இல்லாத உண்மைகளை மக்களுக்குத் தந்தவர் வள்ளலார்.சொல்லியதோடு அல்லாமல் சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவர்....உலக மக்களுக்கு உண்மையை சொல்லி நல்வழி படுத்த வந்த வள்ளலார்சொல்லியதைக் கேட்பதற்கு என்ன தயக்கம்.ஏன் மயக்கம்,.பொய்யைப்பிடித்துக் கொண்டு உண்மையத் தேடினால் கிடைக்காது.4

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு