ஞாயிறு, 20 ஜூலை, 2014

கொல்லாமை ! ,புலால் உண்ணாமை !

கொல்லாமை ,புலால் உண்ணாமை !

நமது தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் மற்றைய நாடுகளிலும்  தற்போது ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள்,முன்னாடி ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள்.மற்றும் தமிழ் அறிஞர்கள்,தமிழ் ஆராய்சியாளர்கள், தமிழ்ப் புலவர்கள்.தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மேல் பற்று உள்ளவர்கள் ,தமிழுக்கு வக்காலத்து  வாங்குபவர்கள்.என தமிழ் அறிந்த பெருமக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் நாடு தான் தமிழ் நாடாகும் .

தமிழ் கற்ற ஆன்மீக பெரியோர்கள்,நாயனமார்கள் ஆழ்வார்கள்,சித்தர்கள்,யோகிகள் ,ஞானிகள் என பல்லாயிரம் தமிழ் அருளாளர்கள் தோன்றிய நாடு தமிழ் நாடாகும்.

இவர்களில் எத்தனை பேர் உயிர்க் கொலை செய்யாதவர்கள்,புலால் உண்ணாதவர்கள்.என்பதை அவரவர்களே சிந்திக்க வேண்டும்.ஒரு உயிரை கொலை செய்வதும் கொலை செய்த புலாலை உண்பதும்,கொடியப் பாவச்செயல் என்பதை மக்களுக்கு போதிக்காது இருப்பதின் நோக்கம் ஏன் ? மேலும் கடவுளின் பெயரால் உயிர்பலி செய்வது எவ்வளவு குற்றம் என்பதை ஆன்மீக பெரியவர்கள்,ஆன்மீக சிந்தனையாளர்கள்,ஆன்மீக ஆதினங்கள ஏன் மக்களுக்கு புரிய வைக்கவில்லை ? பகுத்தறிவை போதித்த பெரியார்,போன்ற பகுத்தறிவு வாதிகளும்,  கொலையும் புலையும் உடம்புக்கு கெடுதலை விளைவிக்கும் என்பதை ஏன் போதிக்கவில்லை.

ஏன் என்றால் அனைவரும் புலால் உண்பவர்கள், புலால் உண்பவர்கள் எல்லாம் தமிழைப் பற்றி பேச தகுதி உடைவர்களா ? இவர்களால் தமிழை பாதுகாக்க முடியுமா ? சித்திக்க வேண்டும்.

தமிழ் பேசும் தமிழ் அறிஞர் என்று சொல்பவர்கள் அனைவரும் ஓர் அளவிற்கு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் படித்து இருப்பார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி,.திருவள்ளுவர் ,தாம் எழுதிய திருக்குறளில் இரண்டு அதிகாரம் ,கொல்லாமை ,புலால் மறுத்தல் (புலால் உண்ணாமை ), பற்றித் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.அதைப் படித்து இருப்பார்கள் அதன் விளக்கம் தெரிந்து இருப்பார்கள்..இன்று தமிழ் நாட்டில்,கலவிக் கண்ணை திறக்கும் கல்வி அதிகாரிகள்,கல்வி ஆய்வாளர்கள்,தமிழ் நாட்டு ஆட்சியில் இருப்பவர்கள்,கல்லூரி, பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் ஆசிரியைகள் பணியில் இருக்கிறார்கள்.அவர்கள் புலால் உண்ணாமல் இருக்கிறார்களா ?அவர்களுக்கு திருக்குறளில் உள்ள கொல்லாமை புலால் உண்ணாமைப் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் உள்ளது அவர்களுக்குத் தெரியாதா >அதன் உண்மைகளை மாணவர்களுக்கு போதிக்கிறார்களா ? போதிக்காது ஏன் ?

கல்வித்துறை அதிகாரிகள் திருக்குறள் படித்து இருக்க மாட்டார்களா ? பள்ளிக் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கும்,கல்வித் துறை அதிகாரிகள் ,ஆசிரியர் ஆசிரியைகள் ,தாம் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பார்கள்?.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று வாய் கிழிய பேசிவிட்டால் போதுமா ?

தமிழன் என்று சொல்பவன் ,உயிரைபற்றியும் உடம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ளாதவன், தமிழன் என்று எப்படி சொல்ல முடியும்.இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி ஆன்மீக வாதிகள் செய்த சூழ்ச்சியாகும்.மக்களை அறியாமையில் தள்ளிவிட்டு ,ஒரு கூட்டம் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு கடவுள் பெயரால் மக்களை முட்டாள்களாக்கி,அவர்களை அழியவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறார்கள்.

ஆரியர்கள் ,பிராமணர்கள் என்பவர்கள்.தங்களை ஆண்டவரின் பிரதிநிதி என்றும் ,ஆண்டவரின் அடியாட்கள் என்றும் ,அவர்களே கடவுள் என்றும்,அவர்களை அனைவரும் வணங்க வேண்டும் என்றும் .அவர்கள் காட்டிய தெய்வங்களை வழிபட வேண்டும் என்றும்.வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற நூல்களை எழுதி மக்களுக்கு பொய்யான தகவல்களை மெய்யாக இருப்பது போலவே ,ஆலயங்கள் கட்டி வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்துள்ளார்கள்.

அதுமட்டும் அல்ல,சாதி,சமயம் மதம் போன்ற கொள்கைகளை வகுத்து,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,உயர்ந்தசாதி ,தாழ்ந்த சாதி,என மக்களை பிரித்து வைத்து,வேதங்கள் சொல்கிறது என்று வேறுபடுத்தி விட்டார்கள்.

அவர்கள் வணங்கும் தெய்வங்கள் உயிர்க் கொலை செய்யக் கூடாத பிரம்மா,விஷ்ணு சங்கரன்,மகேஸ்வரன்.சதாசிவம் போன்ற ஆண் தெய்வங்களும்,லஷ்மி,சரஸ்வதி.பார்வதி,போன்ற பெண் தெய்வங்களையும்,
படைத்து வைத்துள்ளார்கள்.அந்த தெய்வங்களுக்கு ,பால்,பழம்,தேன்,நெய்,சர்க்கரை ,கற்கண்டு,போன்ற உயர்ந்த சக்தி உள்ள பொருள்களைப் படைத்து சாமிக்கு அபிஷேகம்,என்ற பெயரில் அவர்களே எடுத்து சென்று விடுவார்கள்.கடவுள் என்னும் பொம்மைகளை வைத்து அதன் அருகில் உள்ளதால் அவர்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்று மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

சாதாரண மக்கள் வழிபடும் தெய்வங்கள்,உயிர்களை பலிவாங்கும் தெய்வங்களான,காட்டேறிக் கருப்பன்,மாடன்,காடன்,மூடன் போன்ற ஆண் தெய்வங்களும்,காளி,மூளி பத்ரகாளி,போன்ற பெண் தெய்வங்களையும் படைத்து வழிபாடு செய்ய வைத்து விட்டார்கள்.அந்த தெய்வங்கள் எப்படி இருக்கும் தெரியுமா,கையில் கத்தி,சூலம்,அரிவாள் ,துப்பாக்கி,போன்ற கருவிகளை வைத்து,நாக்கை நீளமாக வெளியே நீட்டி மிகவும் கோடுரமான தோற்றத்துடன் ஊருக்கு வெளியே கோயிலைக் கட்டி வைத்து இருப்பார்கள்.

 சாதாரண மக்களுக்கு துன்பம் சோதனை வந்தால் அந்த தெய்வங்களுக்கு,சாராயம்,கஞ்சா,கள்ளு,போன்ற போதை வஸ்துக்களையும் ஆடு,மாடு,பன்றி,கோழி,போன்ற  உயிர்களை பலிக்கொடுத்து ரத்தத்தினால் அபிஷேகம் செய்து,அந்த புலாலையும் போதை வஸ்துக்களையும் உட் கொண்டால் துன்பங்கள் தீர்ந்துவிடும்,என்று பொய்யான வழிமுறைகளை மக்களுக்குக் காட்டி மக்களை படுகுழியில் தள்ளி விட்டார்கள்.அதனால் மக்கள் உண்மை தெரியாமல் கடவுள் பெயரால் தவறு செய்து கொண்டு உள்ளார்கள்.இவை பால்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது.

திருக்குறள் !

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பொய்யா மொழிப் புகன்ற அருளாளர்  திருவள்ளுவர் இவற்றை எல்லாம் பார்த்து மக்களை நல்வழிக்கு கொண்டு வரவேண்டும் என்ற பெருங் கருணையோடு திருக்குறளை மக்களுக்குத் தந்துள்ளார்கள்.

மனிதனாக பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதை திருவள்ளுவர் ,அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்னும் உண்மை நெறிகளைப் பற்றி தமிழில் மக்களுக்கு,133,அதிகாரங்கள் அடங்கிய, 1330,..திருக்குறளை வகுத்து தந்துள்ளார் .மனிதனாக பிறந்தவன்,உண்மையான அறம்,நேர்மையான பொருள்,என்றும் அழியாத இன்பம் பெற்று வாழ்பவன்தான்,வீடுபேரான இறைநிலையை அடையமுடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக ஒன்றே முக்கால் வரிகளில் வடித்து தந்துள்ளார் .

திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறள் அனைத்தும்,என்றும் அழியாத பொன் (தங்கம் ) போன்ற பொக்கிஷமாகும்.,அனைத்து குறள்களும் உடம்பைப் பற்றியும் ,உயிரைப் பற்றியும் பேசுவதாகும்.அதிலே தலையாய குறள் கொல்லாமை,புலால் உண்ணாமைப் பற்றியதாகும்.

அவர் அறிவுடமைப் பற்றி ;--,அறிவுள்ள மனிதன் யார் என்பதை தெளிவு படுத்துகிறார்.

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு .

எந்த சமாசாரத்தையும், எந்த விபரத்தையும்,எந்தப் பொருள் பற்றியும் எவர் ரெவர் வாய் மூலமாகக் கேட்டாலும் அந்த விஷயத்தின் நிஜத்தின் அதாவது உண்மையை அறிந்து கொள்வது மனிதனின் உயர்ந்த அறிவாகும்,அப்படி அறிந்து கொள்பவனே மனிதன்.அவனே உயர்ந்த அறிவுள்ள மனிதனாகும் என்பதை விளக்குகிறார்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

எந்த உயிர்களுக்கும் அழிவு வராமல் காக்கும் கருவி அறிவாகும்.அந்த அறிவு பகைவராலும் அழிக்க முடியாத கோட்டையாகும் என்கிறார் திருவள்ளுவர்.மேலும் கொல்லாமை ,புலால் உண்ணாமைப் பற்றி இரண்டு அதிகாரங்களைத் தந்துள்ளார் .

கொல்லாமை !

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை .

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழநாளமேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை .

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை .

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

புலால் உண்ணாமை !

தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன்உண்பான்
எங்கனம் ஆளும் அருள்.

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு .

படை கொண்டார் நெஞ்சம்போல் நன்ரூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு .

தினற் பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத் துண்ணாமை நன்று.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

மேலே கண்ட குறள் வரிகள் மனிதனை மனிதனாக்கி தெய்வநிலையை அடையும் மாண்புடையதாகும்.உலகிலே வாயில்லாத உயிர்களை கொலை செய்தலும்,அதன் புலாலை உண்பதும் மன்னிக்க முடியாத பெருங் குற்றமாகும்.என்பதை திருவள்ளுவர் தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலே உள்ள திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறளை தமிழ் சான்றோர்கள் படித்திருப்பார்கள்,கொல்லாமைப் பற்றியும் ,புலால் உண்ணாமைப் பற்றியும் மக்களுக்கு ஏன் போதிக்கவில்லை.பள்ளி கல்லூரிகளில் ஏன் கட்டாய பாடமாக கொண்டு வரவில்லை.ஏன் என்றால் அனைவரும் புலால் உண்பவர்களாக இருப்பதால் அதைப்பற்றி யோசிப்பதும் இல்லை,கவனம் செலுத்துவதும் இல்லை.

தமிழ் மொழியின் உண்மை அறிந்து இருந்தால்,நாம் தமிழ் கற்கும் பண்புடையோர் என்பதை உணர்ந்து இருந்தால்.தமிழ் மொழியின் சிறப்பு என்ன என்பதை அறிந்து இருந்தால்,தமிழின் தோற்றம் அதன் இலக்கணம்,இலக்கியம் உண்மையிலே அறிந்து தெரிந்து புரிந்து இருந்தால் ,உயிர்க்கொலையும்,புலைப் புசிப்பும் செய்யமாட்டார்கள்.      

தமிழ் !

இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பை பெற்றுக் கொண்ட மனிதர்களாகிய நாம், உயிரையும் உடம்பையும்,தெரிந்து கொள்ளவும் ,அவற்றைக் பாதுகாத்துக் கொள்ளவும்,மற்ற உயிர்களை அழிக்காமல் இருக்கவும், தோற்றுவிக்கப் பட்டதுதான் தமிழ் மொழியாகும்.தமிழ் மொழி இறைவனால் படைக்கப் பட்ட மொழியாகும்.மனிதர்களால் படைக்கப் பட்ட மொழி தமிழ் மொழி அல்ல என்பதை மனிதர்களாய் பிறந்தவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிரைப் பற்றித் தெரிந்து கொள்ள உயிர் எழுத்தும்,உடம்பைப் பற்றித் தெரிந்து கொள்ள மெய் எழுத்தும்,உயிரையும் உடம்பையும் அறிந்து கொண்டு இறைநிலையை அடைய ஆயுத எழுத்தையும் இறைவனால் படைக்கப் பட்டதாகும்.ஆதலால் உலக மொழிகளிலே தலைசிறந்த மொழி தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழி என்பது படித்து பட்டம் பெற்று பொருள் ஈட்டி வாழ்ந்து பின் அழிந்து போவதற்கு அல்ல ! என்றும் அழியாமல் மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வை பெற்று கடவுள் நிலையை அடைய,இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழிதான் தமிழ் மொழியாகும்.

பிற உயிர்களைப் பாதுகாத்தால் தான் தன் உயிரை பாதுகாக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை திருவள்ளுவர் தமிழ் மொழியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.இவற்றை தெரிந்து கொள்ளாதவனை தமிழன் என்று எப்படி சொல்லுவது.?

வள்ளலார் கொல்லாமைப் பற்றியும் புலால் உன்னாமைப் பற்றியும்.தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .  

வள்ளல்பெருமான் ஒருவர்தான் மனித குலத்திற்கு கொல்லாமை ,புலால் உண்ணாமைப் பற்றி தெளிவாக போதித்து உள்ளார் .

உயிர்க்கொலை செய்பவர்களும் ,புலால் உண்பவர்களும் கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள் ,அவர்களை எப்போதும் கடவுள் ஏற்றுக் கொள்வதில்லை.கடவுளின் அருள் துளி கூட அவர்களுக்கு கிடைக்காது .அவர்கள் எப்பொதும் துன்பங்களையே அனுபவிக்க நேரும்.,அவர்களுக்கு,அடுத்த பிறவியில்  துன்மார்க்க பிறவிகளே கிடைக்கும்.மேலும் பலகோடி பிறவிகள் கடந்து தான் மனித பிறவி கிடைக்கும் அதுவரையில் அவர்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை என்பதை அவர் எழுதி உள்ள திருஅருட்பாவில் மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார் .  

3 கருத்துகள்:

11 மார்ச், 2016 அன்று PM 4:07 க்கு, Blogger Ronin கூறியது…

அருமை, தெளிவு பெற்றேன். நன்றி ஐயா.

 
11 மார்ச், 2016 அன்று PM 4:07 க்கு, Blogger Ronin கூறியது…

அருமை, தெளிவு பெற்றேன். நன்றி ஐயா.

 
29 மே, 2017 அன்று AM 2:57 க்கு, Blogger Dr. B.V.SAI CHANDRAN MCh. DNB (CTVS) கூறியது…

அருமை

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு