வெள்ளி, 11 ஜூலை, 2014

வள்ளல் பெருமான் தருமச்சாலையை உருவாக்கியது ஏன் ?

வள்ளல் பெருமான் தருமச்சாலையை உருவாக்கியது ஏன் ?






வள்ளல்பெருமான் தன்னுடைய  நாற்பத்து ஏழு ஆண்டுகால வாழ்க்கையில் பல தெய்வங்களை வழிபாடு செய்தும்,அத் தெய்வங்கள் பெயரால் பல ஆயிரம் பக்தி பாடல்களை தோத்திரங்களாகவும்,சாத்திரங்களாகவும்   பாடியும், எழுதியும்  இயற்றிக் கொண்டு வந்தார் .

அவருடைய வாழ்க்கை முறையும் ,அவர் கடைபிடித்த ஒழுக்க நெறி முறைகளையும் ,அவருக்கு உண்மையைத் தேடும் ஆன்ம அறிவும் தெளிவும் மேலோங்கியது..

தாம் வணங்கி வந்த  தெய்வங்களும்,,தாம் பாடிய பக்தி பாடல்கள் யாவும் தத்துவங்களை பற்றியே பாடிய பாடல்கள் என்பதை அறிந்து கொண்டார்   அவைகள் உண்மை அல்ல என்பதை அறிந்து, உண்மை எங்கோ மறைந்து இருக்கின்றது ,அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற உறுதி பூண்டார் .

நான் இந்த உலக மாயையில் சிக்கித்  தவித்துக் கொண்டு உள்ளேன் ,எனக்கு உண்மையைக் காட்ட வேண்டும்,உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று இயற்கையிடம் போராடுகின்றார்.அந்த போராட்டத்தின் பலபாடல்கள் .

கண்ணே கண்மணியே --
கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விண்ணிறைவே --சிவ
மேதினி மெய்ப் பொருளே
தண் நேர் ஒண்மதியே---எனைத்
தந்த தயாநிதியே
உண்ணேர் உள்ளொளியே --எனக்
உண்மை உரைத்தருளே ...

என்றும்,...

நந்நாலுங் கடந்தே --ஒளிர்
ஞான சபாபதியே
பொன்னாருஞ் சபையாய் --அருட்
பூரண புண்ணியனே
என்னால் ஆவதொன்றும் --உனக்
இல்லை எனினும் எந்தாய்
உன்னால் வாழுகின்றேன்--எனக்
உண்மை உரைத்தருளே ..

என்னும் பாடல்கள் வாயிலாக...,எல்லாவற்றையும் கடந்து எல்லா வற்றையும் இயக்கி இயங்கிக் கொண்டு இருக்கும்,சக்தியும்,ஆற்றலும் வாய்ந்த  நீங்கள் யார் ? என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும்.உன்னை அறிந்து தெரிந்து கொள்ளவே நான் வாழுகின்றேன்,ஆதலால் எனக்கு  உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று அழுது புலம்புகின்றார்
அடுத்து ;--

மாயையாற் கலங்கி வருந்தியபோதும்
வள்ளல் உன் தன்னையே மதித்து உன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவா வேறு எண்ணியது உண்டோ
தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்
துயர் இனிச் சிறிதும் இங்காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்து
நன்று அருள் புரிவது உன் கடனே !

என்றும்,

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை ஒன்று என்றே
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்
இறையும் வேறு எண்ணியது உண்டோ
அண்ணல் நின்பாதம் அறிய நான் அறியேன்
அஞர் இனிச்சிறிதும் இங்கு ஆற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணை என் தன்னைத்
தெளிவித்துக் காப்பது உன் கடனே !

என்னும் பாடல்கள் வாயிலாக எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி பாடி தொழுது  வேண்டுகின்றார்..
நான் மாயை என்னும் இந்த உலகில் வாழ்வதற்கு உயிர் எடுத்து உடம்பு எடுத்து அலைகின்றேன்.

உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும்.வேறு அனைத்தும் பொய் என்பது எனக்குத் தெரிந்து விட்டது .

இந்த உலகத்தில் உண்மையை மறைத்து,தத்துவங்களை எல்லாம், பல வண்ணங் களாகவும்,பல வடிவங்களாகவும் தத்துவ கடவுள்களாகவும், சமய,மத வாதிகள்,கதைகளாகவும்,கற்பனைகளாகவும் படைத்துள்ளார்கள் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொண்டேன் இனிமேல் என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.இனிமேல் சிறிது நேரம் கூட தாமதப் படுத்த வேண்டாம் .என்னால் தாங்க முடியாது .என்னுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம்.தயவு கூர்ந்து எனக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் .

உன்மேல் ஆணை இட்டுச் சொல்கிறேன் எனக்கு தெளிவுபட காட்டி தெளிவு படுத்துவது உன்னுடைய கடமையாகும் உன்னுடைய கடனாகும்.என்பதைப் மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவு படுத்துகின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

இறைவன் !

வள்ளல்பெருமான் ஆணையை ஏற்றுக் கொண்ட அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு ஒரு கட்டளையைப்  பிறப்பிக்கின்றார் .

என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன் என்
தன்பாட்டைச் சத்தியமாய்த் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
கலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு சொன்னது ---நீ எப்படி எண்ணிப் பாடினாலும்,யாரை நினைத்து பாடினாலும்,எந்த உருவத்தை நினைத்து பாடினாலும் உன்னுடைய பாடல்களை நான் சத்தியமாக ஏற்றுக் கொள்கிறேன்..வருத்தப்பட வேண்டாம் .

உனக்கு,.. என்னுடைய உண்மையை தெரிவிக்க வேண்டுமானால் என்னுடைய உருவத்தை காட்ட வேண்டுமானால்,என்னுடைய ஆற்றலை தெரிவிக்க வேண்டுமானால், என்னுடைய அருள் வல்லபத்தை தெரிவிக்க வேண்டுமானால்  நீ ஒன்று செய்தாக வேண்டும்.அதை கவனமாக கேள் சொல்கின்றேன். இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் உடம்பை வளர்ப்பதற்கும் உயிரை வளர்ப்பதற்கும் உண்மை தெரியாமல்  பசி,பட்டினி வறுமையில் வாடிக் கொண்டு உள்ளார்கள்.அவர்களின் துன்பத்தை போக்க வேண்டும்.அதற்கு தகுந்த வழிகாட்டியாக நீர் திகழ வேண்டும்.ஆதலால்

ஏழைகளின் பசியைபோக்க முதலில் தருமச்சாலையை தோற்றுவிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளைப்  பிறப்பிக்கின்றார் .வள்ளல்பெருமான் இறைவன் கட்டளையை சிரமேற்  ஏற்று கொண்டு   தருமச்சாலையை தோற்றுவிக்க முற்படுகின்றார்.

தருமச்சாலை அழைப்பு !

தருமச்சாலைத் தொடக்க விழா அழைப்பு ! 25--4--1867 ,ஆம் ஆண்டு !

ஆன்மநேய சித்தமுடைய தயவுடைய அனைவருக்கும் வந்தனம் .

சிதம்பர தலத்திற்குச் சுமார் இரு காத வழிநடை எல்லையில் கடலூரைச் சார்ந்த வடலூர் என்றும், பார்வதிபுரம் என்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுறத்தில்,சென்னை நகரில் இருந்து கும்பகோணத்திற்கு போகின்ற பெரியபாட்டைசுமார் நூறு-மயிலில் மஞ்சகுப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை சுமார் ஐம்பதாவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம்.குருவாரம் உதய காலம்,ருஷப  லக்கினத்தில்

சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டங்களுக்கு அஸ்திவாரங்களும் ,கிணறு,கேணி,முதலிய நீர் நிலை எடுப்புகளும் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன் மேய்ந்த மண் கட்டடச் சாலையில்,ஒருசார் ஆகார தரும விருத்தியும் தொடக்கம் செய்யும்படி நிச்சயித்து இருக்கின்றது.

ஆதலில் அந்த தினத்தில் தாங்கள் தங்கள் மனைவியர், புத்திரர்,துணைவர்,தந்தையர்,தாயார்,உறவினர் ,சினேகிதர், முதலியவர் களோடும்,வந்திருந்து நடத்து விப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரபவ வருடம் சித்திரை மாதம் 14,ஆம் நாள் மேலே கண்ட கடிதம் அனைவருக்கும் அனுப்பட்டதாகும்.

சமரச வேதத்  தருமச்சாலைத் தலைவராகிய சிதம்பரம் இராமலிங்க பெருமான் கட்டளைப்படி மேற்படி தருமச்சாலையை நடத்துகின்ற சமரச வேத சன்மார்க்க சங்கத்தாரில் ஒருவராகிய மு,அப்பாசாமி அவர்கள் மூலமாக கடிதங்கள் அனுப்பி வைக்க படுகின்றன ..

சாலை விளம்பரம் -- 23--5--1867. ஆம் வெளியிட்டது.

ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம் என்ற தலைப்பில்... வள்ளல்பெருமான் அவர்கள் தருமச்சாலையை தோற்றுவித்தது ஏன் ? எதற்காக ? என்பதை ஆண்டவர் கட்டளைப்படி ,மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்.

கல்வி கேள்விகளால் பகுத்து  அறியத்தக்க அறிவை உடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிப்பது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ளபோதே அறிந்து அடையவேண்டும் .

அந்த பிரயோஜனம் யாதெனில் ;--

எல்லா அண்டங்களையும்,...எல்லா புவனங்களையும் ...எல்லாப் பொருள்களையும் ...எல்லாச் சீவர்களையும் ...எல்லாச் செயல்களையும் ,,,எல்லாப் பயன்களையும் ...

தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற ''இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின்'' பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும், எவ்விதத்தும்,எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும்.

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடைய வேண்டும் எனில் ?;;--

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும்.என்று அறிய வேண்டும் .

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக் கூடும் எனில் ?;--

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக் கூடுமே அல்லது வேறு எந்த வழியாலும்  சிறிதும் பெறக் கூடாது என்று உறுதியாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யத்தின் முக்கிய லஷியமாவது எது எனில்  ?;--

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குக் உண்டாகின்ற ''பசி'' என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லஷியம் என்று அறிய வேண்டும்.

ஆகலில் அந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கூடலூர் ஜில்லா கூடலூர் தாலுக்காவைச்சார்ந்த வடலூர் என்கின்ற பார்வதிபுரத்தில்,சமரச வேத தருமச்சாலை என்று, ஒரு தருமச்சாலை ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அது பலர் சகாயத்தாலேயே நிலைபெற வேண்டும் ஆதலால் ,ஜீவ தயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடிய வரையில் பொருள் முதலிய உதவி செய்து அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.என்பதை வள்ளல்பெருமான் மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார்.

பசியினால் வரும் அவத்தைகள் !

உலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கிரவர்த்தியாகிய அரசனுக்கும் ,...உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும்,...  மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை போன்ற மூன்று ஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஜீவன் முததர்களுக்கும் பசி நேரிட்டபோது மனம் இளைத்தும், வலி குலைந்தும் அனுபவம் தடைப்பட்டும் வருந்துகின்றார்கள் என்றால் ,

எந்த வகையிலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடு படுவார்கள் என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் .

பசியினால் உண்டாகும் அவத்தைகள் !

பசி அதிகரித்த காலத்தில் முகம் புலர்ந்து போகின்றது ...
உச்சி வெதும்பு கின்றது ...
பிரமரந்திரம் அடிபடுகின்றது ..
காது கும்மென்று செவிடு படுகின்றது ...
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது ..
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது ...
நாக்கு நீர் உலர்ந்து தடிப்பு ஏறுகின்றது...
மெய் முழுதும் கருகி சக்தி அற்று ஸ்மரணை கெடுகின்றது ...
வாக்கு குழறித் தொனி மாறுகின்றது ...
கைகளும் கால்களும் தடதடத்துச் சோர்ந்து தடுமாறுகின்றது ..
மலசல வழி வெதும்பி வேறு படுகின்றது ...
உரோமம் வெறிக்கின்றது ....
பற்கள் கருகித் தளர்கின்றது...
இரத்தமும் சலமும் சுவறுகின்றது ...
சுக்கிலம் தன்மை மாறி வறளுகின்றது ...
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது...
நாடி நரம்புகள் வலியிழந்து மெலிந்து கட்டு விடுகின்றது ...
வயிறு பகீர் என்கின்றது ..
மனசு தளர்ந்து நினைவு மாறுகின்றது ...
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது ...
சித்தம் கலங்கித் திகைப்பு ஏறுகின்றது...
அகங்காரம் குலைந்து அச்சம் உனாடாகின்றது ....
பிரகிருதி சுருங்குகின்றது ,...

கடவுள் விளக்கமும் ஆனம் விளக்கமும் மறைபடுகின்றது ..
தாப சோபங்கள் மென்மேலும் உண்டாகின்றது .

இவ்வளவு அவத்தைகளும் ஏக காலத்தில் உணடாகின்றது ...
     
எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றது .ஆகாரம் உண்டு பசி நீங்கிய தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைத்து கடவுள் விளக்கமும்,ஆன்ம விளக்கமும்,அகத்திலும் புறத்திலும் முகத்திலும் வெளிப்பட்டு திருப்தி இன்பம் உண்டாகின்றது .

ஆகலில் நாம் அனைவரும் எந்த வகையிலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடிய மட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக  நிவர்த்திப் பதற்கு முயற்சி செய்வதே ஆன்மலாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.

பிரபவ வருடம் வைகாசி பதினொன்றாம் தேதி பார்வதிபுரம் சமரச வேத தருமச்சாலை ;--சன்மார்க்க சங்கத்தார் என்று வெளியிடப்பட்டுள்ளது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் தருமச்சாலையை வள்ளல்பெருமானால் தோற்றுவிக்கப் பட்டது என்பதை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்களும் ,மற்றும் அனைத்துலக ஆன்மநேய அன்பர்களும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல் பெருமானுக்கு அருள் வழங்கியது !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையை ஏற்றுக் கொண்டு வள்ளல்பெருமான் தருமச்சாலையை தோற்றுவித்து அனைவருக்கும் சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இல்லாமல் அன்னதானம் தினந்தோறும்  நடை பெற்றுக் கொண்டு வருக்கின்றது .

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அருளை எப்படிக் கொடுத்தார் என்பதை பின் வரும் பாடலில் பதிவு செய்கின்றார் .

காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைகின்றேன்---ஞாலமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கு அடிமை ஏற்று  !

என்றும் .மேலும் ;--

கலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தேகனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத்து தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மாநடத் தென் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

தருமச்சாலையை தோற்றுவித்த பின் இறைவன் முழுமையான உண்மையை காட்டியதோடு அல்லாமல் ,அருளை வாரி வாரி வழங்கி உள்ளார் .

அதனால் அடைந்த இன்பத்தை சொல்ல முடியாமல் பாடல்களாக பதிவு செய்கின்றார் .மரணம் என்பது இயற்கை அல்ல ! மரணத்தை வெல்லமுடியும்...
நான் காகா வரம் பெற்றேன்

தத்துவங்களை எல்லாம் தாண்டி உண்மையான மெய்ப் பொருளைக் கண்டு கொண்டேன் .தருமச்சாலை வழியாக சென்றால் மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையை மக்களுக்கு பறை சாற்றுகின்றார் .

வேத சன்மார்க்கம் என்பதை தூக்கி எறிந்துவிட்டு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்று பெயர் மாற்றம் செய்கின்றார்.,சாதி சமயம்,மதம்,எல்லாம் பொய்யானது .சமரசம் ஒன்றுதான் இறைவனிடம் அருளைப் பெரும் வழி என்பதை உணர்ந்து கொள்கின்றார்.''கருணை'' ஒன்றினால்தான் எல்லா நன்மைகளையும் பெறமுடியும் என்பதை தெளிவு படுத்துகின்றார். ''எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி'' என்றும் ''யாரே என்னினும் இரங்கு கின்றார்க்கு சீரே அளிக்கும் சிதம்பர சிவமே''என்றும் ''மேயினை மெய்ப் பொருள் விளங்கினை நீ அது ஆயினை என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி''  என்பதை அருட்பெருஞ் ஜோதி அகவலில்,தகவலாக பதிவு செய்கின்றார் .

பல ஆண்டுகள் இடைவிடாது தவம் செய்து பெற முடியாத,.. இம்மை இன்ப லாபத்தையும்,...மறுமை இன்ப லாபத்தையும்,...பேரின்ப லாபத்தையும் தருமச்சாலையில் ஒரே பகலில் இறைவன் தந்துவிட்டதாக,ஆனந்த  கூத்தாடி எக்காலம் இடுகின்றார் .இறைவன் என்னுடைய ஆன்மாவில்,உயிரில், உடம்பில்,உள்ளத்தில்,கருத்தில் யாவுமாக கலந்து என்றும் சுவை மாறாத நறுங்கனி போன்று இனித்துக் கொண்டு உள்ள அருள் என்னும் பெரும் பொருளே என்கின்றார் .

இனிமேல் இறைவனை அடையும் மார்க்கம்....இறைவனுடைய மார்க்கம்.....இறைவன் அருளைப் பெரும் மார்க்கம், ..சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கம் என்பதை மக்களுக்கு தெளிவுப் படுத்துகின்றார்.

அடுத்து உலக மக்களுக்கு உண்மையானக் கடவுள் யார் ? என்பதையும்.அவர் எங்கு உள்ளார் என்பதையும்,அவர் எப்படி செயல் படுகின்றார் என்பதையும் அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும், அருளைப் பெறுவதற்கு எதை விடவேண்டும்,எதை விடாமல் பிடிக்க வேண்டும் என்பதையும் ,எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பதையும் .மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள் .
 ..
அதன் அடையாளமாக.சாதி,சமயம் ,மதம் ,இனம்,நாடு,மொழி என்ற பேதம் இல்லாமல்  ..சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுள் ஒளியாக உள்ளார் .அவர்தான் சத்திய ஞான சபையில் அமர்ந்து கொண்டு உலக மக்களுக்கு  அருள் பாலித்துக் கொண்டு உள்ளார்

அனைவரும் வடலூர் வந்து வந்து தரிசித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும்  மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்  .

ஆன்மநேய அன்புடைய
 ஈரோடு அமுதா கதிர்வேல்
108,C,நந்தா இல்லம்
வள்ளலார் வீதி
வய்யாபுரி நகர்
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002
தமிழ் நாடு ,இந்தியா
sell ..91.8526906100 .
    


             

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு