வெள்ளி, 28 மார்ச், 2014

அருட்பெருஞ்ஜோதி என்பது யார் ?

அருட்பெருஞ்ஜோதி என்பது யார் ?

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாம் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில்,;--

அறிவு என்பது ஓர் சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்த காரத்தில் நெடுங்காலம் சிற்றணுப் பசுவாகி அருகிக் கிடந்த ஆன்மாவுக்குள் உள் ஒளியாக இருந்து அப்பாசாந்த காரத்தில் இருந்து எடுத்து ..

தாவரங்கள்,ஊர்வன,பறப்பன,விலங்குகள்,தேவர்,நரகர்,போன்ற யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று,சென்று,உழன்று உழன்று,அலுப்படைந்து,அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும்,அவலமும்,களைப்பும் துன்பமும்,திரு உள்ளத்து இரங்கி அருளி ,அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குறிய ,ஏழாவது பிறப்பாகிய ,உயர்ந்த அறிவு உடைய இம் மனித தேகத்தில் செலுத்தி அருளிய உண்மைக் கடவுளை நாம் தெரிந்து கொள்ளாமல் உள்ளோம்.

கடவுளின் தயவும் கருணையும் அருளும் இல்லாமல் எந்த உயிர்களும் இந்த பஞ்ச பூத உலகத்தில் வாழ முடியாது.

ஆன்மாவை அனுப்பியது கடவுள் ,..உயிரையும் உடம்பையும் கொடுத்தது மாயை,மாமாயை,பெருமையை  (சாத்தான் ) என்னும்,பஞ்ச பூத உலகை ஆட்சி செய்யும் அதிகாரியாகும்.மாயை என்னும் அதிகாரியாக உள்ளது உண்மைக் கடவுளை அறிமுகப் படுத்தாது,மாயையால் சிக்குண்டவர்கள் பொய்யானக் கடவுளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.ஆதலால் நாம் உண்மையானக் கடவுளை இதுவரைக் கண்டு கொள்ள முடியவில்லை.

உண்மையானக் கடவுளைக் கண்டு கொண்டு,அவருடைய அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதற்குத் தான் ,..மனித தேகம் கொடுக்கப்பட்டது என்பதை ஆன்ம அறிவாலே உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

உண்மையான நம்முடைய தந்தையாகிய இறைவனை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தவும்.அவர் யார் ? என்பதை காட்டவும்,மெய்ப்பொருள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவும்,  இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர்தான் நம்முடைய வள்ளல்பெருமான் அவர்கள்.

அவரே தான் எதற்க்காக வந்தேன் என்பதை பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்
பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் முற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ
என்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக வென்று இட்டனன் மனத்தில் வேறு
எண்ணற்க வென்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணாந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !

இந்த உலகத்தில் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தைப் பெற்ற மனிதர்கள்.உலகத்தில் உருவாக்கிப் படைத்துள்ள பலப்பல சமய,மத நெறிகள் எல்லாம் பேய் பிடித்த பைத்தியக் கார குழந்தைகள் போல் விளையாட்டு காட்டி வைத்துள்ளார்கள்.அதனால் உண்மை அறியாது,பல சமய பேதங்களும்,மத பேதங்களும் உருவாகி உயிர்கள் ,போர் செய்து கொண்டும்,சண்டையிட்டுக் கொண்டும் இறந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

என்பதை அறிந்து கொண்ட இறைவன் ,இனிமேலும் இவர்களை காப்பாற்ற வில்லை என்றால் கூண்டோடு அழிந்து விடுவார்கள் .ஆதலால் உடனடியாக இவர்களை காப்பாற்ற வேண்டும் எனற கருணை கொண்டு வள்ளல்பெருமானை இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

மேலும் மெய்ப்பொருளை மக்களுக்கு காட்ட வேண்டுமானால் .எல்லா மதங்களுக்கும்,சமயங்களுக்கும் பொது நெறியாகிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ''தோற்றுவித்து அதன் வாயிலாக எல்லா மக்களும் பயன் அடைந்து மகிழ்ச்சியுடன் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டும்.

ஆதலால் என் சொல்லைக் கேட்டு நடக்கும் செல்லப் பிள்ளை ,நல்லபிள்ளை நீ ஒருவன்தான் என்பதால் இவ்வளவு பெரிய வேலையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் .என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானிடம் தெளிவுப் படுத்துகிறார்.

மேலும் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்கள் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையுஞ்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடு மோர்
பவநெறி இதுவரை பரவியது இதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக வென்ற என்னரசே
தனி நடராஜ என் சற்குருவே !

உலகில் தோன்றிய மதங்கள்,சமயங்கள் யாவும் அறிந்துபோகும் வழியையே காட்டி உள்ளார்கள்.கற்பனைக் கதைகளையும் ,கற்பனைக் கடவுள்களையே காட்டி உள்ளார்கள்.அவர்கள் கொள்கைகளும்,நெறிகளும் உண்மைக்கு புறம்பாகவே இருந்துள்ளது. அவர்கள் நெறிகள் யாவும் பொய்யான பவநெறி என்னும் துன்மார்க்க நெறியாகவே இருந்து வருகின்றன.

அதனால் அவற்றை பின் பற்றும் மக்கள் இருள் நிறைந்த துக்கமும், துயரமும், அச்சமும்,பயமும், மரணமும் அடைந்து துன்பத்தில் வாழ்ந்து கொண்டு
உள்ளார்கள். அதனால் அகம் கருத்து ,புறம் வெளுத்து உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அனைவரையும் திருத்த வேண்டுமானால் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்து ,ஜீவ காருணயம் என்னும் ஒழுக்க நெறிகளான ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் தனிமனித ஒழுக்கத்தை பெற்று மனிதன் மனிதனாக வாழ்ந்து ,பின் மரணம் இல்லாப் பெருவாழ்வாகிய இறை அருள் பெரும் வாழ்க்கையை பெற்று வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னை இந்த உலத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதை உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறார் .நமது வள்ளல்பெருமான் அவர்கள்.
   
அருட்பெருஞ்ஜோதி என்பது வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுள் !

வள்ளல்பெருமான் காட்டியக் கடவுள் ,இதற்கு முன் சாதி ,சமய,மதம்,வேதம் ஆகமம், புராணங்களில் சொல்லுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டு கர்த்தர்கள், மூர்த்திகள்,கடவுளர்,தேவர்,யோகி, ஞானி, அல்லா ,ஏசு, பரமபிதா, புத்தர்,பிரம்மா,விஷ்ணு,சங்கரன்,மகேஸ்வரன்,சதாசிவன், சக்தி ,பராசக்தி,லட்சுமி,சரஸ்வதி,பார்வதி,முருகன்,விநாயகர், முதலானவர்களில் ஒருவர் அல்ல ! என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லா சத்திகளும் ,எல்லா சத்தர்களும்,எல்லாத் தலைவர்களும்,அறிந்து கொள்ளுதற்கு மிகவும் அரியதாய்,எல்லாத் தத்துவங்களுக்கும்,எல்லாத் தத்துவிகளுக்கும் ,அப்பாலாய்,..பல கோடி அண்டங்களையும் பலகோடி உலகங்களையும்,அதனுள் உள்ள பஞ்ச பூத அணுக்களையும், சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் போன்ற ஒளி பொருந்திய கிரகங்களையும்
உயிர்களையும்,பொருள்களையும்,மற்றை எல்லாவற்றையும் .

தோற்றுவித்தல் ,வாழ்வித்தல்,குற்றம்,நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந் தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,

இயற்கை உண்மையர் என்றும், இயற்கை அறிவினர் என்றும்,இயற்கை அன்பினர் என்றும்,நிர்குணர் என்றும்,சிற்குணர் என்றும்,நித்தியர் என்றும்,சத்தியர் என்றும்,ஏகர் என்றும்,அநேகர் என்றும்,ஆதியர் என்றும்,அநாதியர் என்றும் . அமலர் என்றும்,

அற்புதர் என்றும்,நிரதிசயர் என்றும்,எல்லாம் மானவர்  என்றும், எல்லாம் உடையவர் என்றும்,எல்லாம் வல்லவர் என்றும்,அளவுகடந்த திருகுறிப்பு திரு வார்த்தைகளால் நினைத்தும் உணர்ந்தும் புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்பவராகும்.

தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுள் ஒருவரே  ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ''என்பவராகும்.

அருட்பெருஞ்ஜோதியர் என்னும் உண்மைக் கடவுளை...சத்திய அறிவால் அருளைப் பெற்று அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே,! அவரே நமது தாயாகவும் தந்தையாகவும் தாங்கு கின்ற தெய்வம் ,தனக்கு நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்.அதுவே சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் மகா தெய்வம்  என்பதை வள்ளல்பெருமான மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்.

அவர் எங்கே உள்ளார் !

இயற்கை உண்மை நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில் (அருட்பெருவெளி ) இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய ''அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் '',இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைச் திருநடச் செய்கையை ,எல்லா உயிர்களும் இன்பம் அடைதற் பொருட்டுத் திரு உள்ளக் கருணையால் செய்து அருளுகின்ற

சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள் ஒருவரே! ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்பதாகும்.

அந்த ஒருவரே யாகிய கடவுள் ,..அகம்,அகப்புறம்,புறம்,புறப்புறம்,முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த ,மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் ,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கு உள்ளார் என்பதை பாடல் வாயிலாக வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார்.

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெருந் தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

நாம் வாழும் உலகம் பஞ்ச பூத அணுக்களான ,மண்,நீர்,அக்கினி,காற்று ,ஆகாயம் போன்ற கூட்டங்களால் படைக்கப்பட்ட,..பூத அண்டமாகும்,இவைபோல் பல கோடி அண்டங்களைப் படைத்து ,தன்னைத்தானே இயங்கிக் கொண்டு உள்ளதாகும்.ஒவ்வொரு அண்டங்களுக்கும் இடைவெளி அளவில் அடங்காத,அளக்க முடியாத அளவிற்கு வெளியாக உள்ளன்.

அருட்பெருவெளி !

இவை போன்ற பலகோடி அண்டங்களும் ,தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளன.இவற்றை எல்லாம் கடந்து ,இவைகளை எல்லாம் தன்வசமாக வைத்துக் கொண்டு ,ஓர் பேரண்டம் உள்ளது.அந்த அண்டத்திற்கு அருட்பெரு வெளி என்றும் ,அருட்பெரு உலகம் என்றும் வள்ளல்பெருமான் சொல்லுகின்றார்.

அந்த அருள் பெருவெளி,வெளிகளுக்கு எல்லாம் வெளி கடந்த வெளியாகும்.
அந்த வெளியில் அருள் என்னும் செம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.ஆதலால் அதற்கு அருள் நிறைந்த பெருவெளி என்பதாகும்.,அந்த அருட் பெருவெளியில் அருள் பூரணமாக நிறைந்து இருக்கும்.

அந்த பிரமாண்டமான பெருவெளியில் அதன் அகம் என்னும் மத்தியில் அளவில் அடங்கா ஆற்றல் என்னும் சக்தி உள்ள ,ஞான சிங்காதன் பீடம் உள்ளது.அதன் தலத்து மேன் நிலையில் ,அந்த பீடத்தில் அருட்பெரும் வடிவமாக ,அருட்பெரும் உருவமாக ,அருட்பெரும் திருஉருவம் தாங்கி,அமர்ந்து உள்ளவர்தான் அருட்பெரும் ஜோதி என்பதாகும்.

அருட்பெரும் பதியாகவும்,அருட்பெரும் நிதியாகவும், அருட்பெரும் சித்தி வழங்கும் அமுதமாகவும்.எல்லா உயிர்களுக்கும்  என்றும் அழியா இன்பம் வழங்கிக் கொண்டு இருக்கும் கருணைக் கடலாகவும் ,பேரின்பம் என்னும் இன்பத்தை வழங்கிக் கொண்டு இருக்கும் ஒரே கடவுளாகவும்,நீதி தவறாது ஆட்சி புரியும் அரசனாகவும் ,எங்கும் நிறைந்த பரம் பொருளாகவும் உள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

மெய்ப்பொருள் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் மெய்ப்பொருள் என்பதாகும்.அந்த மெய்ப் பொருள் ஒன்று தான் எல்லா உயிர்களுக்கும் தாயாகவும்,தந்தையாகவும்,குருவாகவும்,இருந்து முத்திகளையும், சித்திகளையும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் மெய்ப்பொருள் என்னும் கடவுளாகும்.வள்ளலார் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள்.

களங்கம் நீத்து உலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே !

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கும் ஒருமைப் மெய்ப்பொருளே !

எழுநிலை மிசையே இன்புருவாகி
வழுநிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே !

நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமயமாகித் திகழ்ந்த மெய்ப்பொருளே !

ஏகா தசநிலை யாது அதின் நடுவே
ஏகா தனமிசை இருந்த மெய்ப்பொருளே !        

எல்லா மூர்த்திகளுக்கும்,எல்லா தேவர்களுக்கும்,எல்லாத் தலைவர்களுக்கும்,எல்லா யோகிகளுக்கும், எல்லா ஞானிகளுக்கும், எல்லா கடவுளர்களுக்கும்,,எல்லா தத்துவங்களுக்கும், தங்கள் தங்கள் அனுபவங்களுக்கும்  தகுந்தாற் போல் ,எதிர்ப் பார்க்கின்ற அருளை வழங்கும் ,தனிப் பெருந்தலைமை பெரும்பதியாகும் .

அந்த உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி,என்பதாகும்.அதன் தன்மை,அதன் உருவம் ,இயற்கை உண்மையாக ,இயற்கை விளக்கமாக இயற்கை இன்பமாக .விளங்கிக் கொண்டு உள்ளார். அருள் ஒளியாக ,தனிப்பெருங் கருணையாக இயங்கி இயக்கிக் கொண்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்வதற்கு ,சாதி,சமயம்,மதம்,என்ற பற்றுகளில் இருந்து விலகி,மாயையின் உலக்ப் பற்றுகளில் இருந்து விலகி ,அருள் என்னும் உண்மைப் பற்றை பற்றிக் கொண்டால் அருள் என்னும் அருள் அறிவு ஆன்மாவை திறக்கும்,ஆன்மாவின் காட்சியில் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தோன்றும்.,உண்மைகள் தானே விளங்கும்,

தொடரும் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு