வெள்ளி, 21 மார்ச், 2014

இறந்தவரை புதைக்க வேண்டும் ! எரிக்கக் கூடாது !



இறந்தவரை புதைக்க வேண்டும் ! எரிக்கக் கூடாது !

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய சகோதர சகோதரிகளுக்கு பணிவன்புடன் தெரிவிப்பது யாதெனில் ;--

வள்ளல்பெருமான் அவர்கள் இறந்தவரை புதைக்க வேண்டும்!எரிக்கக்
கூடாது ! என்பதை மிகவும் வலியுறுத்தி திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள்.

சன்மார்க்க அன்பர்களும், மற்றும் உயர்ந்த அறிவு படைத்த மனித தேகம் கிடைத்த அன்பர்களும், தெரிந்து, அறிந்து,புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக இந்தக்  கட்டுரையை, வள்ளலார் சொல்லிய வண்ணம் தெரியப்படுத்துகிறோம் .

ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் அவரவர் வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டாயம் தெரியப் படுத்த வேண்டும்.அஜாக்கிரதையால்,அறியாமையால், செயற்கையால்  மரணம் அடைந்தால் கீழே தெரிவித்துள்ள செய்தியை உண்மை என்று நம்பி, படித்து தெரிந்து,உணர்ந்து அதன்படி அடக்கம் செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.;--அன்புடன் ஆன்மநேயன் ,ஈரோடு;--செ, கதிர்வேல் .....

உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன.உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதேபோல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான்.இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டே  வருகின்றன.

மனிதன் மட்டும் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ முடியும் எனற ரகசிய உண்மையைக் கண்டு பிடித்து,அதனபடி வாழ்ந்து மரணத்தை வென்றவர் தான் ,தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து வழிகாட்டிய  திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் என்பவராகும்.

பொருள் சம்பாதிப்பது போல் அருள் சம்பாதிக்கும் வழியைக் கண்டு பிடித்தார்...பொருளை இந்த உலகத்தில்,எவ்வகையிலாவது  சம்பாதிக்கலாம் ,அருளை எங்கு ? எப்படி ? சம்பாதிப்பது என்ற ரகசியத்தை உலக மக்களுக்கு வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

பொருள் சம்பாதிப் பவர்களுக்கும் அதை அனுபவிப் பவர்களுக்கும் கட்டாயம் மரணம் வந்தே தீரும் ,அருள் சம்பாதிப் பவர்களுக்கு மரணம் வராது என்பது வள்ளல்பெருமான் கண்ட உண்மையாகும்.அதனால் தான் அருள் சம்பாதிப் பவர்களுக்கு அருளாளர்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.அருளைச் சம்பாதிப்பவர்கள் கடவுளைக் கண்ணால் கண்டவர்களாகும்

ஆன்ம லாபம் !

உலகில் உள்ள அனைவரும் வாழ்வதற்கு ஏதாவது ஒரு லாபத்தை சம்பாதித்தே ஆக வேண்டும்,உலகில் உள்ள பொருட்களை வைத்து பொருள் சம்பாதித்து அதனால் பயன் அடைந்து ,அதை அனுபவிப்பது செயற்கை இன்பமாகும். அதாவது சிற்றின்ப லாபம் என்பதாகும்.அந்த சிறிய செயற்கை இன்பத்தை உயிரும் உடம்பும்,உடம்பில் உள்ள உறுப்புகளும் அனுபவிக்கின்றது...அதனால் வரும் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து இறுதியில் மரணம் வந்து அழிந்து போவது,பொருளால் கிடைக்கும் இன்பம் சிற்றின்பமாகும்.

உடம்பையும்,உடம்பில் உள்ள உறுப்புகளையும், உயிரையும்  ஆட்சி செய்யும் தலை பீடத்தில்  உள்ள உள் ஒளி என்னும் ஆன்மா !. பொருளை விரும்புவதில்லை...இயற்கையான என்றும் அழிவில்லாத அருளை மட்டும்  விரும்புகின்றது .அதற்கு வேண்டிய லாபம் இயற்கை இன்ப லாபமாகும் .இயற்கை இன்ப லாபம் என்பது ! மரணத்தை வென்று ,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் பேரின்பமாகும்....அந்த இயற்கை இன்பத்தை அருளால்தான் பெற முடியும்.அந்த அருளைப் பெரும் வழியை எவரும் கண்டு கொள்ளாமல் அழியும் செயற்கையான பொருளையே விரும்பி,மரணம் என்னும் பாவப்  பழியை சுமந்து அழிந்து போகின்றார்கள் .

அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழ்வது இயற்கை இன்பமான,ஆன்ம இன்ப லாபமாகும்.

செயற்கையான பொருளை பெற்று வாழ்வது பாவம் என்பதாகும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாகும்.தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார் வள்ளல்பெருமான் .

மனிதன் ஆன்மாவின் அறிவைக் கொண்டு,இயற்கையான அருளைச் சம்பாதிப்பது ஆன்ம இன்ப லாபம் என்பதாகும் அந்த அருள் கிடைத்தால்,... ஆன்ம இயற்கையான அருள் அறிவின் வழியாக,செயற்கையான  ஊன உடம்பை ..இயற்கையான ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் ( சக்தி ) பெறுவதாகும்..ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் பெற்றால் அவற்றிற்கு பேரின்ப லாபம் என்பதாகும்.அதுவே மரணத்தை வெல்லும் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் .

செயற்கையான சிற்றின்பத்தால் உலகில் மட்டும் வாழ முடியும்...இயற்கையான பேரின்பத்தால் எல்லா உலகங்களிலும்,எல்லா அண்டங்களிலும் மற்றும் கண்களுக்கு தெரியாத எல்லா இடங்களிலும்,எந்த தடைகளும் இல்லாமல் சென்று வாழும் வாழ்க்கை ஆன்ம இன்ப லாபம் என்னும் பேரின்பத்தின் லாபமாகும்.

இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆணடவர் இடத்தில் ,இயற்கை விளக்கம் என்னும் அருளைப் பெற்று ,இயற்கை இன்பம் என்னும் ஆன்ம இன்பத்தை அடைய வேண்டும்.

ஆன்ம இன்ப லாபத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன...இம்மை இன்பலாபம்,..மறுமை இன்ப லாபம் ..பேரின்பலாபம் என்பனவாகும்.இந்த மூன்று இன்ப லாபங்களிலே பேரின்ப லாபம் உயர்ந்ததாகும்...பேரின்ப லாபம் அடைந்தவர்கள் தான் மரணத்தை வெல்ல முடியும்.அந்த மூன்று இன்ப லாபத்தையும்  அடைந்தவர்,பெற்றவர் வள்ளல்பெருமான் ஒருவரே .

அருளைப் பெற்று ஆன்ம இன்பத்தை அடைந்தவர்களை , எந்த தீய சக்தியாலும் அழிக்க முடியாது . ஐந்து பூதங்களாலும் அழிக்க முடியாது . ..இயற்கையாலும் அழிக்க முடியாது .அணு ஆயுதங்களாலும் அழிக்க முடியாது... எமன் என்னும் கூற்றுவனாலும் அழிக்க முடியாது. ...ஏன் எல்லாம் வல்ல இறைவனாலும் அழிக்க முடியாது...

பொருள் பெற்றவர்களை சாதாரண கருவியாலும் அழித்து விடலாம்.அப்படியே தப்பித்து வாழ்ந்தாலும் வயது முதிர்ந்து இறுதியில் மரணம் வந்து விடும்.இதுவே பொருளினால் வரும் மரண துன்பமாகும். மரணம் என்னும் துன்பத்தை விட பெரிய துன்பம் எதுவும் கிடையாது.

அருள்என்பது ;-- உடம்பில் உள்ள உறுப்புகளை அழிக்காமல் பாதுகாக்கும் உயர்ந்த கருவியாகும்,அது மட்டும் அல்ல ஆன்மாவின் இயற்கை உண்மைத் தன்மையான ஒளி ரூபத்திற்கு உடம்பையும்,உயிரையும் ,இந்திரியங்களையும் ,கரணங்களையும்,மற்றும் உள் உறுப்புகளையும் மாற்றும் ஆற்றல், அதாவது சக்தி அருளுக்கு உண்டு .ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் அருளுக்கு உண்டு.அதுவே ஆன்மா தனக்கு என கட்டிக் கொண்ட சொந்தமான வீடாகும்.ஆன்மா சொந்தமான அருள் உடம்பாகிய ஒளி உடம்பு பெற வேண்டும் .அதற்கு ஆன்ம இன்ப லாபம் என்று பெயர் வைத்தார் வள்ளலார்.

அருள் உடம்பு பெற்றவர்களால் தான் உலகின் அனைத்து உண்மைகளையும் அறிய முடியும்.பல கோடி அண்டங்களையும் ,உயிர்களையும் ,பொருள்களையும்,படைத்தல்,காத்தல்,,அழித்தல் போன்றவற்றை இயக்கும் உண்மைக் கடவுள் யார் என்பதையும் அறிய முடியும்...கடவுள் நிலை அறிந்து அம்மயமாக தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.அருள் உடம்பு என்னும் ஒளி உடம்பைப் பெற்றவர்கள் மட்டுமே உண்மையை உணர முடியும்,உண்மையை உரைக்க முடியும் .

மனிதனாக பிறந்தவர்கள் மட்டும் தான் அருளைப் பெறமுடியும்,அதனால்தான் மனிதப் பிறப்பு எல்லாப் பிறப்புகளிலும் மிக உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதாகும்.இதை அறியாத மனிதர்கள் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வீண் போய் கொண்டு உள்ளார்கள் என்பதை நினைந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைகிறார் வள்ளல்பெருமான் .

சன்மார்க்க அன்பர்கள் பின்பற்ற வேண்டியது.!

இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர்  ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு
மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணஞ்
சேராமற் தவிர்த்திடுங் காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய்வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே !

ஞானசரியை 25,ஆம் பாடல் ;---வள்ளலார் .

மனிதர்களாய் பிறந்தவர்கள் இறந்து விடுகிறார்கள்,செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றன .சாகாத வழி ஒன்று இருக்கின்றது .அதை நம்மைப் படைத்த உண்மையான இறைவனிடம் இருந்து உயர்ந்த பெரும் வரத்தைப் பெற வேண்டும் .அவை தெரியாமல்,அறியாமல் வாழ்வதால் பிணி மூப்பு நெருங்கி இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

உங்களுக்கு பிணி,மூப்பு,மரணம் வருவதில் சம்மதமா ? உங்களுக்கு மரணம் வருவதை நினைந்து என்னுடைய மனம் நடுங்குகின்றது.பிணி,மூப்பு,மரணம் வராமல் தவிர்த்திடுதற்கு ''சுத்த சன்மார்க்கம்'' என்னும் பெருநெறி  ஒன்றே அழியாமல் வாழும் வழியைக் காட்டுகின்றது..தெரிந்து வாருங்கள் இந்த பிறப்பிலேயே நித்திய மெய் வாழ்வான பேரின்ப லாபத்தை அடையலாம் என்று மனிதர்களைப் பார்த்து அழைக்கின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உன்னை
மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்

கருணை நிதி என்பது அருள் என்பதாகும் ;--அருள் நிதி வேண்டும் என்று இறைவனிடம் வள்ளலார் வேண்டுகின்றார்.பெருநெறி என்பது சுத்த சன்மார்க்க உண்மை நெறியாகும் .அந்த பெருநேறியைப் பிடித்து நான் வாழ வேண்டும் என்று சிறுவயதிலே வள்ளல்பெருமான் பெருநெறியை பிடித்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்ந்ததால் நம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார் .

மேலும் ,

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மீன் உலகிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந் தருணம் இதுவே !

மனிதர்கள் பிணி ,மூப்பு ,மரணம் அடையாமல் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்கினார் அதற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்று பெயர் வைத்தார்.அந்த சங்கத்தில் சேர்ந்து ,வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ள உண்மைக் கருத்துக்களை  ஊன்றி படித்து,அதன்படி வாழ்ந்து  பயன் பெற வேண்டும் என்பதற்காக ''சாகாக் கல்வி '' எனற கல்வி முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.,

அந்தக் கல்வியில் தேர்ச்சி பெற்று,அருள் அமுதம் என்னும் உயர்ந்த நன்னிதியை பெற்று அழியாமல் வாழலாம் என்று மனிதர்களை ,அன்புடனும்,தயவுடனும்,கருணையுடனும் அழைக்கின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்... அருளைப் பெறுபவர்கள்  மரணத்தை வெல்லும் தகுதி படைத்தவர்கள்.மற்றவர்கள் தேர்ச்சி பெற தகுதி இல்லாதவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ..அந்தக் கல்விச்சாலையில் .சேர்ந்து அன்பையும்,தயவையும்,கருணையும் பெற்றுக் கொள்ள வேண்டும்...

தயவு உடையவர்கள் எல்லாரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் .
அருள் உடையவர்கள் எல்லாரும் சன்மார்க்க சங்கத்தை அடைந்தவர்கள் .

சாகாதவனே சன்மார்க்கி என்ற பட்டமும் வழங்கப் படுகின்றது.

சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து, ''சாகாக் கல்வி''  பயிற்சியில் தோல்வி அடைந்து மரணம் அடைந்தவர்கள் பின் பற்றவேண்டியது ! .

மரணம் அடைந்தால் சன்மார்க்க சங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் செய்ய வேண்டியது.என்ன ?

சமாதி வற்புறுத்தல் !

அன்புள்ள ஆன்மநேய சன்மார்க்க அன்பர்கள்,மற்றும் புலால் மறுத்தவர்கள்  அனைவருக்கும் தெரிவிப்பது .சன்மார்க்க சங்கத்திற்கும் ஜீவ காருண்யத்திற்கும் மிகவும் உரிமை உடையவர் களாயின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது ;--

நீங்களும் உங்களை அடுத்தவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக .

அறியாமையாலும்,ஊழ் வினையாலும், கர்மகால முதலிய பேதங்களாலும் சன்மார்க்க அன்பர்கள் யாருக்காயினும் தேக ஆனி (மரணம் ) நேரிட்டால் தகனம் (எரிக்காமல் ) செய்யாமல் சமாதியில் ( புதைத்தல் ) வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து (பிறந்து ) திரும்ப நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கின்ற முழு நம்பிக்கைக் கொண்டு எவ்வளவும் துயரப் படாமலும் ,அழுகுரல் செய்யாமலும் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

புருஷன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

மனைவி இறந்தால் ,புருஷன் வேறு கல்யாணப் (திருமணம் ) பிரயத்தனம் செய்ய வேண்டாம்.

பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்.

கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் .

தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து,, ஒர் இரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்னவிரயம் (உணவு ) செய்ய வேண்டும்.

இவ்வாறு உண்மையான நம்பிகையுடன் செய்யுங்கள் .

அப்படி செய்து இருந்தால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும்,மேற்படி சங்கத்தில் உள்ள சன்மார்க்க அன்பர்களுக்கு ,ஜீவகாருண்ய வல்லபமும்,சத்விசாரமும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும்

தனிப் பெருங் கருணைக்  கடவுள்;;அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய உண்மைத் தந்தையார் ,எல்லாம் வல்ல அருட்பிரகாசர்....சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்களுக்கு எழுந்தருளிக் காட்சி கொடுததே அருள்வார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.... கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன் என்கிறார் . .

மேலும் அந்த தருணத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சன்மார்க்க சங்கத்திற்கு உரிமை உடையவராக இருந்து ..இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து அருள்வார் .இது சத்தியம் ...இது சத்தியம் ...

இப்படி வள்ளலார் தருமச்சாலையில் உள்ள அன்பர்களுக்கும் அனைத்து உலக சன்மார்க்க சங்க அன்பர்களுக்கும் தெளிவாக விளங்கும்படி தெரியப் படுத்துகின்றார்.

தகனம் செய்யக்கூடாது !

இந்த கடிதம் வெளிப்பட்டு அறிந்து கொள்ளா முன் இறந்து தகனம்
 ( எரித்து) செய்யப்பட்ட வர்களையும் எழுப்பி அருளுவார் ...இது வெளிப்பட்டு அறிந்த பின் தகனம் செய்யக் கூடாது. ஆகலில் மேற்கண்டபடி உண்மையாக நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக ...

எனக்கு உலகு அறிவு தெரிந்தது தொட்டு ,எனது தந்தையார் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் திருவருளை நான் அடையும் வரையில் ,என்னுடன் பழகியும்,என்னை நம்பி யடுத்தும்,என்னைக் கேள்விகளால் விரும்பியும் எனக்கு உரிமைப் பட்டும்,இருந்து இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்தே  அருள்வார் ,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை விருத்தி செய்விக்கத் தக்க திருவுளத்துக் கருதிய ,பெருங் கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி இருந்தும் சன்மார்க்க சங்கத்திற்கு உரிமை உள்ளவர்களாய் இருந்தும் ,சபைக்கு உரிமை உள்ளவர்களாய் இருந்தும் ,அவ நம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரஞ் செய்தே அருள்வார் ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகதை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் .

ஆகலில் சன்மார்க்க அன்பர்கள் நம்பிக்கையுடன் இறந்தவர்களை புதைக்க வேண்டும் ..எரிக்கக் கூடாது...

சாலை,சபை, சங்கத்தில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு இந்தக் கடித்ததை தெரிவிக்க வேண்டாம் .என்று வள்ளலார் ...பிரமோதூத வருடம் ..பங்குனி மாதம் பதினெட்டாம் தேதி ...1871,ஆம் ஆண்டு வெளிப்படுத்தி உள்ளார் .      

 ஏன் புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது ?  

மனித தேகம் என்பது இறைவன் அனுமதியோடு மாயையால்  கட்டிக் கொடுக்கப்பட்ட, நடமாடும்  ஒரு அழகான வாடகை வீடாகும் அந்த அழகான வீட்டில் ஆன்மா என்னும் ஒளி குடித்தனம்  இருந்து கொண்டு உள்ளது...அந்த மனித வீடு இந்த உலகத்தில் இயங்கி செயல்பட வேண்டுமானால் ..உயிர் என்னும் ஒளி இந்த உலகத்தில் ஆன்மாவிற்கு கொடுக்கப் படுகிறது.ஆன்மா இல்லாமல் உயிர் இயங்காது .

ஆன்மாவும் உயிரும் இயங்க வேண்டுமானால்... மனம்,புத்தி,சித்தம், அகங்காரம் என்னும் கரணங்களும் ,கண்,மூக்கு,காது,வாய், மெய் என்னும் இந்திரியங்களும் ,துணைக் கருவிகளாக உடம்பில் பொருத்தி வைக்கப் பட்டுள்ளன.இவைகள் யாவும் மாபெரும் சக்தி வாய்ந்த,இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட , ஒரு அழகான,அற்புதமான வாடகை வீடாகும் .இறைவன் குடி இருக்கும் ஆலயமாகும்.

இந்த மனித ஆலயத்தில் ஆன்மா குடியிருக்கும் வீட்டிற்கு தினமும் வாடகை என்னும் குடிக்கூலி உணவு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் கொடுக்க தவறினால் மரணம் வந்துவிடும்.

உலக வாழ்க்கையில் இந்திரியங்கள் ,கரணங்களின்  செயல்பாடுகளினால் உடம்பில் உள்ள கருவி கரணங்கள் முதிர்ச்சி அடைந்து அதனால் நோய்வாய்ப் பட்டு உடம்பின் உறுப்புகள் இயங்க முடியாமல் போகின்றது ,அப்போது உயிர் இயக்கம் நின்று விடுகின்றது .உயிர் இயக்கம் நின்று விடுவதால் உடல் உறுப்புகள் செயலற்று விடுகின்றது .அதனால் உயிர் போய் விட்டது . மரணம் வந்து விட்டது, இறந்து விட்டார் என்கிறோம் .அதற்கு பிணம் என்றும் ,சவம் என்றும்,பாடி (உடம்பு ) என்றும்  பெயர வைத்து விடுகின்றோம்.

ஆன்மா தனக்கு என்று சொந்தமான  வீடு கட்டிக் கொள்ளும் வரையில்,ஆன்மாவும் உயிரும்  வாடகை வீடு என்னும் உடம்பு மாற்றிக் கொண்டே இருக்கும் .சொந்த வீடு என்பது அருள் பெற்றால் மட்டுமே கிடைக்கும் .அதற்கு அருள் உடம்பு என்றும் ,அருள் தேகம் என்றும், ஒளி உடம்பு என்றும் சொல்லப்படும் ..

இறந்தால் மீண்டும் பிறப்பு உண்டு. பிறப்பு வேண்டாம் என்பது சமய மதங்களின் கொள்கைகளாகும்.இறப்பு அதாவது மரணம் இல்லாமல் வாழ்வது சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.மரணம் இல்லாமல் ஒளி உடம்பு பெற்றால் பிறப்பு இல்லை என்பது வள்ளல்பெருமான் காட்டிய சாகாக் கலவியாகும்.

சாகாக் கல்வி கற்றால் ஒழிய மரணம் என்னும் இறப்பும்  பிறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வளவு காலம் நம்முடன் இருந்தவர்,வாழ்ந்தவர்,அன்புடன்,பண்புடன் பாசத்துடன் நேசத்துடன் வாழ்ந்து.சொத்து,பணம் எல்லாம் அளவில்லாமல்  சேர்த்து வைத்தவர்,பல அன்பர்களுக்கு நன்மை செய்தவர் .உயிர்களுக்கு உபகாரம் செய்தவர் ..உயர் பதவி வகித்தவர் ,நாட்டை ஆண்டுகொண்டு இருந்தவர் ,பெரியவர் பெரியவர் என்று எல்லோராலும் போற்ற தகுதிப் பெற்றவர் ,இப்படி எல்லாம் வாழ்ந்தவர்கள் அனைவரும் நம்மை விட்டு சென்று விட்டார்களே  ..  என்று கூட நினைக்காமல் அவசரம் அவசரமாக கொண்டு போய் சுடு காட்டில்,புதைக்காமல் எரித்து விடுகின்றோம் .இதைவிட கொடுமை வேறு ஒன்றும் இல்லை என்கிறார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

ஆன்மா! உயிர் !

உடம்பின் இயக்கம் நின்று விட்டதால், உயிர் உடம்பை விட்டு உடனே வெளியே சென்று விடாது.,உயிரானது ஆன்மாவில் சேர்ந்து.. அதனுள் அடக்கம் கொள்கிறது.

ஆன்மாவும் உயிரும் ...வேறு ஒரு தேகம் என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கும் வரை இறந்த உடம்பிலே சில நாட்கள் அமைதியாக அடக்கம் கொண்டு இருக்கும்,உடனே வெளியே சென்று விடாது .

ஆதலால் இறந்த ( பிணத்தை ) உடலை எரிக்கக் கூடாது ! புதைக்க வேண்டும் என்கிறார் வள்ளலார் .அதையும் மீறி எரித்தால் அதுவும் கொலைக்கு சமமாகும் என்கிறார்...தூங்குகின்றவரை தீ மூட்டி எரித்து கொலை செய்வதற்கு சமம் என்கிறார் வள்ளல்பெருமான்.

பிணத்தை எரித்தால் உடம்பில் அடக்கம் கொண்டு இருக்கும்,ஆன்மாவும் உயிரும் வேறு ஒரு வாடகை வீடு ( உடம்பு ) இல்லாமல் வெளியில் சென்று துன்பப்பட்டு,துயரப்பட்டு,அல்லல்பட்டு,அவதிப்பட்டு   அலைபாயும் .

அதனால் ஆன்மாவும் உயிரும் வேறு ஒரு உடம்பு எடுக்கும் வரை இறந்துபோன உடம்பிலேயே தங்கி இருக்கும்.ஆதலால் உடம்பை எரிக்காமல் புதைக்க வேண்டும் என்கிறார் வள்ளல்பெருமான்.

அதே நேரத்தில் பிணத்தை எரித்து விட்டீர்களானால்,உயிரும் ஆன்மாவும் வெளியே வந்து அலைபாயும்... வீடு இல்லாமல் தனித்து இருக்கமுடியாமல் அதற்கு தகுந்த வேறு ஒரு உயிர் உள்ள உடம்பில் புகுந்து கொள்ளும்.அந்த உடம்பில் இரண்டு உயிர்கள் இயங்கமுடியாமல், அந்த உடம்பில் புதியதாக புகுந்த உயிர் வேலை செய்யும் போது அதற்கு பேய் பிடித்து விட்டது என்றும்,...காத்து குணம் என்றும் ...ஆவி பிடித்துக் கொண்டது என்றும் ,சாத்தான் வேலை என்றும் ,வேறு யாரோ எதோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்றும், சொல்லி வேதனைப்படுகிறோம் .

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் இறந்தவரை எரிப்பது தான் என்பதை அறிந்து கொண்டு புதைக்க வேண்டும் என்கிறார் வள்ளல்பெருமான் .ஆதலால் உயிரின் உண்மையை அறிந்து கொண்டு இறந்தவரை எரிக்காமல் ,புதைக்க வேண்டும்.இதை சன்மார்க்க அன்பர்கள் அவரவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி ,வீட்டில் உள்ளவர்கள் யார் இறந்தாலும் புதைக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

உலகில் உள்ள அனைவருக்கும் ஆன்மநேய உரிமையோடு இறந்தவரை புதைக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இரங்கல் என்னும் தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !

ஆயுரைத்த அருட்ஜோதி வருகின்ற தருணம் இதே அறிமின் என்றே
வாயுரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இம்மனிதர் அந்தோ
தாயுரைத்த திருப்பொதுவில் நடம் புரிந்து என் உளங் கலந்த தலைவா இங்கே
நீ யுரைத்த திருவார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே !

இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என்று அறைகின்றாரால்
மறந்த சிறியேன் உரைக்க வல்லனோ எல்லாஞ் செய் வல்லோய் உன்றன்
சிறந்த திரு வார்த்தை எனத் தெரிந்திலர் இம் மனிதர் மதித்திறமை என்னே !

தொண்டாளப் பணம் தேடும் துறையான உலகாளச் சூழ்ந்த காமப்
பெண்டாளத் திரிகின்ற பேய் மனத்தீர் உமது உயிரைப் பிடிக்க நாளைச்
சண்டாளக் கூற்றுவரில் என்புரிவீர் ஞானசபைத் தலைவன் உம்மைக்
கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்ன இவ்வுலகிற் குலாவுவீரே !

பிறந்தவரை நீராட்டிப் பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம் மதித்தீரோ இரவிற் தூங்கி
மறந்தவரைத் தீ மூட்ட வல்லீரா உம மனத்தை வயிரமான
சிறந்தவரை யெனப்புகழ்ச் செய்து கொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீர் !

அணங்கெழு பேராசையோடும் பறையாசை பொங்கக் கோரணி கொண்டு அந்தோ
பிணங் கழுவி எடுத்துப் போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்களே நீர்
கணங் கழுகு உண்டாளும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்ட
எணங் கெழும் சாம்பலைக் கண்டீர் அது புன்செய் ஏறுவுக்கும் இயலாதன்றோ!

குணம் புதைக்க உயிர் அடக்கங் கொண்டது சுட்டால் அதுதான் கொலையாம் மென்றே
வணம் புதைக்க வேண்டும் என வாய்தடிக்கச் சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம் புதைக்கச் சம்மதியீர் பணம் புதைக்கச் சம்மதிக்கும் பேயரே நீர்
எண்ம் புதைக்கத் துயில்வார் நும்பாற் துயில்வதற்கு அஞ்சுவரே யிமுதையீரெ!

கட்டாலும் கனத்தாலுங் களிக்கின்ற பேயுலகீர் கலை சோர்ந்தாரைப்
பொட்டாலுங் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர்
கட்டாலுஞ் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாதா என்சொல்லீர் உம்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலுங் கதியில்லை மேற்சூழ்வீர் அன்றே!

பரனளிக்கும் தேகமிது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன் நீர்
சிரநெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்தடுத்தன ஈது உணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்த நிலை காணீரோ கண்கெட்ட மாட்டி நீரே !

புலைத் தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கருங்கடலிற் போகவிட்டீர்
கொலைத் தொழிலில் கொடியீர்  செத்தாரைச் சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத் தொழிலில் பெரியர் உளங் கலங்கினர் அக் கலக்கம் எல்லாம் கடவுள் நீக்கித்
தலைத் தொழில் செய் சன்மார்க்கம் தலை எடுக்கப் புரிகுவது இத் தருண்ந்தானே !

என திருஅருட்பாவில் இரங்கல் என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார் நமது வள்ளல்பெருமான். பாடலை ஊன்றி படித்து அதன்படி பின் பற்ற வேண்டும்.
 
சிலர் முன்தேகமும் இல்லை பின் தேகமும் இல்லை என்கிறார்கள் ! அதற்கு வள்ளல்பெருமான் விடை அளிக்கின்றார் .

ஒரு வீட்டில் குடிக்கூலி ( வாடகை ).கொடுத்துக் கூடி இருக்க வந்த சமுசாரி அதற்கு முன்னும் வேறு ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தான் என்றும் ,வீடு இல்லாமல் குடித்தனம் செய்ய மாட்டான் என்றும் ,பின் வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் திரும்ப வேறு வீட்டில்  குடிபோவான் என்றும் ,தனக்கு என்று சுதந்தரமாக ( சொந்தமாக ) ஒரு வீடு கட்டிக் கொண்டால் முன்போல் குடிக்கூலிக் கொடுத்துக் குடி போவதை விடுவான் என்றும் அறிவதுபோல் .--

இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடி இருக்க வந்த ஜீவன் (உயிர் ) இதற்கு முன்னும் வேறு ஒரு தேகத்தில் அந்தக் குடிக்கூலி கொடுத்து ஜீவித்து இருந்தான் என்றும் ,தேகம் இல்லாமல் ஜீவித்து இருக்க மாட்டான் என்றும் .இந்த தேகத்திலும் கலகம் நேரிட்டால் இன்னும் வேறு ஒரு தேகத்திற்கு குடிபோவான் என்றும் ,தனக்கு என்று சுதந்தரமாக நித்தியமாகிய அருள் தேகத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் , பின்பு வேறு ஒரு தேகத்தில் குடிபோக மாட்டான் என்று அறிய வேண்டும்.

சிலர் முன்தேகம் எடுத்ததும் ,பின் தேகம் எடுப்பதும் இல்லை இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால் ,தேகியும் அழிந்து விடுவான் என்றும்,சிலர் முக்தி அடைவார் என்றும் ,சிலர் பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பான் என்றும் ,சிலர் தேகம் இல்லாமல் தேகம் அழிந்த இடத்தில் இருப்பன் என்றும் ,...

பலவாறு வாதிப்பது எதனால் ? என்று அறிய வேண்டில் ?  

அவரவர்களும் தேகமே ஆன்மா என்றும் ,போகமே முத்தி என்றும்,சொல்லப்பட்ட லோகாயத மதத்தாரது கொள்கைக்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்றும்  ஆதலால் மூடமாகிய தேகத்தில் ,அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டு என்றும் ,அவனுக்குப் பந்த முத்தி உண்டு என்றும் ,முத்தி அடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறு வேறு தேகம் எடுப்பான என்றும் ...

பிரத்தியட்ச அனுமான முதலிய பிரமாணங்களால் உண்மையை அறிந்து கொள்ளப் படாதவர்கள் என்றும்,அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் யுக்தியும் அனுபவமும்,அருள் அறிவும் இல்லை என்றும் அறிய வேண்டும்.

அனுபவம் இல்லை என்பது எப்படி ? என்று அறிய வேண்டில் !

ஜீவர்கள் ,தங்கள் தங்கள் சுதந்தரத்தாலே தேக போகங்களை அடைகின்றார்கள் என்றால் ,தங்கள் தங்கள் இச்சைக் கடுத்த தேகங்களையும் ,போகங்களையும் அடைய வேண்டும்.அப்படி இன்றிச் சிலர் இச்சைக் கடுத்த பழுதற்ற அங்கம் உள்ளவர்களாகவும் ,சுகங்களை அனுபவிக்கின்றவர் களாகவும் ,சிலர் ,இச்சைக்கு அடாத பழுதுள்ள அங்கம் உள்ளவர்களாகவும் ,துக்கங்களை அனுபவிக்கின்றவர் களாகவும்,இருக்கின்றார்கள் ,ஆகலின் ஜீவர்கள் தேக போகங்களைத் தங்களின் இச்சையால் அடைந்தவர்கள் அல்ல என்றும் அறிய வேண்டும் ;--

அவரவர்கள் அப்படி அப்படி அடைவது இயற்கை என்றால் ;--இயற்கை என்பது எக்காலத்தும் வேறுபடாமல் ஒரு தனமையாக இருத்தல் வேண்டும்.அப்படி ஒரு தன்மையாக இராமல் பல வேறு வகைப்படுதலால் இயற்கை அல்ல ! என்றும் ;--கடவுள் இச்சை என்றால் கடவுள் கருணையும் நீதியும் உடையவர்... ஆதலில் எல்லாச் சீவர்களுக்கும் ஒரு தனமையாகச் சுக அனுபவங்களையே அடைவிக்க வேண்டும்.அப்படி அடைவிக்காமையால் கடவுள் இச்சை அல்ல வென்றும் அறிய வேண்டும்.

கடவுள் அருளால் சிருஷ்டித்த முதல் சிருஷ்டியில், தமது இயற்கை இன்பத்தை அனுபவிக்கும் படி விதித்த விதிகளைப் பழமையாகிய மல வாசனையால் முயற்சி தவறினபடியால்,அந்த அநாதிமல வாசனையின் முயற்சி பேதங்களால் பின் பல பல தேக போகங்கள் இரண்டாவது சிருஷ்டியில் நேரிட்டது என்றும் பிரமாணித்து அறிய வேண்டும்..

எடுத்துக் கொண்ட தேகம் தவறினால் வேறு வேறு தேகம் எடுப்பதில்லை என்றால் ;--முதல் சிருஷ்டி தொடங்கி இது வரையில் அழிந்த தேகங்களுக்கு அளவே இல்லை .,,,அப்படியே ஆன்மாக் களுக்கும் அளவே இல்லை.ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமல் இருக்க வேண்டும்.அப்படி இல்லை ;-- தேகங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆயின் ஆன்மாக்களை  நூதன நூதனமாகச் செய்து அது அதற்கு நூதனமாகத் தேகங்களை வருவிப்பது என்றால் நூதன நூதனமாகத் தேகமாத்திரம் செய்யக்கூடும்.தேகத்தில் இருக்கிற ஆன்மாவை நூதன நூதனமாகச் செய்யப்படாது .

ஆன்மா !

ஆன்மா எக்காலத்தும் உள்ளதாய விளங்கப்பட்டது அது தோன்றுதலும் அழிதலும் இல்லை....அதை ஆக்கவும் அழிக்கவும் படாது.ஆன்மாக்களும் குடத்தைப்போல் செய்யப் படுவதானால் சுக துக்கங்களை அனுபவிக்க அறியாது.புண்ணிய பாவங்களை அடைய மாட்டாது .குடம் அழிவது போல் அழிந்து போய்விடும் .

ஆன்மா அழியுமானால் பந்த முத்திகளும் இல்லை.;--புண்ணிய பாவங்களும் இல்லை.ஆதலால் குடம் உடைகின்றபோது குடத்தின் உள் இருந்த காற்றும் ஆகாயமும் உடையாமல் இருப்பது சிறுவர்களுக்கும் தெரியும் .

ஆகலில் தேகம் அழியும் போது தேகத்தின் உள் இருக்கின்ற உயிர் விளக்கமும் ,ஆன்ம விளக்கமும், கடவுள் விளக்கமும் அழியாது என்றும்,.. ஆன்மாக்கள் முயற்சி பேதத்தால் தேக போக பேதங்களை அடைவது உண்மை என்றும் யுக்தியால் அறிய வேண்டும்...என்று வள்ளல்பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் மூன்றாம் பிரிவில் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார் .

ஆதலால் உயர்ந்த அறிவு விளங்கிய மனிதர்களாகிய நாம் உண்மையை அறிந்து ;--மீண்டும் பிறப்பு உண்டு என்பதாலும் ,உயிரும் ஆன்மாவும் வேறு ஒரு தேகம் எடுக்கும் வரை இறந்த உடம்பின் உள்ளேயே இருக்கும் என்பதால்,..இயங்காத உடம்பை புதைக்க வேண்டுமே தவிர எரிக்கக் கூடாது. என்பதை சத்தியமாக அறிய வேண்டும்.

மேலும் பிறப்பு எடுக்காமல் இருக்க வேண்டுமானால் இந்த தேகத்தையே நித்திய தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அதாவது மரணத்தை வெல்ல வேண்டும்.அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்...சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்,...முத்தேக சித்தி என்பதாகும்....பேரின்ப பெருவாழ்வு என்பதாகும்....கடவுள் நிலை அறிந்து அம்மயமாகுதல் என்பதாகும்....மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதாகும்.

குறிப்பு ;--

மேற்கண்ட விபரங்களை அறிந்த சன்மார்க்க சங்க அன்பர்கள் அவரவர் வீட்டில் உள்ளவர்களுக்கும் மற்றும் உள்ள ஆன்ம நேய சகோதரர்களுக்கும் தெரிவித்து ,சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்க வேண்டும்.இதுவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும் .;---வள்ளல்பெருமான் .

சன்மார்க்க அன்பர்கள் இறந்தால் செய்ய வேண்டியவை.!

இறந்தவரை சவப் பெட்டியில் வைத்து ,நாற்றம் வராமல் இருக்க வாசனை திரவியங்களை தெளித்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அழுகுரல் செய்யாமல் சன்மார்க்க அன்பர்களும்,அக் குடும்பத்தில் உள்ளவர்களும்  வரிசையாக அமர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரார்த்தனை விபரம் !;--

எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து !

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் எங்கோவே ...துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

திருவிளங்கச் சிவயோகச் சித்தி எலாம் விளங்கச்
சிவஞான நிலை விளங்கச்சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திரு சிற்றம்பலத்தே
திருக் கூத்து விளங்க வொளி சிறந்த திருவிளக்கே
உருவிளங்க உயிர் விளங்க உணர்ச்சியது விளங்க
உலகம் எல்லாம் விளங்க அருள் உதவும் பெருந் தாயாம்
மருவிளங்கு குழல் வல்லி மகிழ்ந்து தொருபால் விளங்க
வயங்கு மணிப் பொது விளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே !

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கட்டத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே !

அடுத்து அகவல் ;---பாராயணம் செய்ய வேண்டும்.!

அடுத்து ஞான சரியையில் உள்ள ;---28,பாடல்களைப் படிக்க வேண்டும் !

அடுத்து பரசிவ நிலை;-- என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களை படிக்க வேண்டும் !

அடுத்து சுத்த சன்மார்க்க வேண்டுகோள் ;--என்னும் தலைப்பில் உள்ள 11,பாடல்களை படிக்க வேண்டும்.

அடுத்து விண்ணப்பம் படிக்க வேண்டும் .!

விண்ணப்பம் ;--

சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே ! அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே !

தேவரீர் அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும்,இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியார்களாக்கி உண்மை அறிவை விளக்கி,உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து ,நித்தியர்களாக்கி,வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும்,சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம்,ஆசிரமம்,முதலிய உலகாசார,சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்ஷயமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை ,எங்களுக்குள் ,எக்காலத்தும்,எவ்விடத்தும் ,எவ்விதத்தும் ,எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிபெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம் !வந்தனம் !

இறுதியாக ஜோதிப் பாடல் படித்து வழிப்பாட்டை முடிக்க வேண்டும்.

வழிபாடு முடிந்தபின் ;--

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ..தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ...மகா மந்திரத்தை  அனைவரும் ஒரே குரலில் சொல்லி கொண்டு ,நேர்ந்தவர்கள் சவப்பெட்டியை தூக்கிக் கொண்டு சமாதி செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .

பெட்டியை குழியில் வைத்து இறந்தவர்களின் உரிமை உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் ,சன்மார்க்க அன்பர்கள் மண்ணைத் தள்ளி மூடி புதைத்து விடவேண்டும்.

இறுதியாக மாகாமந்திரம் சொல்லி ஜோதிப்பாடல் படித்து விட்டு களைந்து விடவேண்டும்.

இறந்தவர் வீட்டில் உயிர் பிரிந்த இடத்தில் அல்லது வழிப்பாட்டு அறையில் சுமார் முப்பது நாட்கள் அணையா விளக்கு வைத்து வழிபட வேண்டும்.நம்முடைய வேண்டுதலாலும்,வழிபாட்டாலும் மீண்டும் மனித தேகம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

இறந்தவர் நினைவாக நேர்ந்த நாட்களில், நேர்ந்த மட்டில் உறவினர்களையும் சன்மார்க்க அன்பர்களையும் அழைத்து ...ஏழைகளுக்கு அன்னவிரயம் செய்து விட்டால் போதுமானது.வேறு எந்தவிதமான,சாதி, சமய, மதம் சம்பந்தமான வழிபாடுகளும், ஆசார சங்கற்ப விகற்பங்களும் செய்யாமல் இருத்தல் வேண்டும்.

இந்த உண்மையை நிலையை உணர்ந்து அனைவரும் கடைபிடிக்க வேண்டுமாய் ஆன்மநேய உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !

  அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ் ஜோதி !
தனிப்பெருங் கருணை !அருட்பெருஞ் ஜோதி !

ஆன்மநேயன்;--ஈரோடு கதிர்வேல் .
108,C, நந்தா இல்லம்
வய்யாபுரி நகர்
வள்ளலார் வீதி
46,,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002 .
தமிழ்நாடு, இந்தியா
SELL 9865939896,..LAND LAINE...0424 2401402



    

    

          

1 கருத்துகள்:

26 ஆகஸ்ட், 2019 அன்று PM 4:02 க்கு, Blogger Earn Staying Home கூறியது…

நன்று.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு