வெள்ளி, 3 ஜனவரி, 2014

மனித பிறப்பு !

மனித பிறப்பு !

இவ்வுலகில் தோன்றிய மனிதன் ,அறம்,பொருள்,இன்பம் வீடு என்னும் நான்கையும் ,நான்கு காலங்களில் முழுமையாக அனுபவித்து,பின் அனைத்தையும் பற்று அற விட்டு இறைவனுடைய அருளைப் பெற்று வாழும் தகுதி படைத்தவன் மனிதன் என்பவனாகும்.

அதனால்தான் மனித பிறப்பு எல்லாப் பிறப்புகளிலும் உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதாகும். ..

அரை குறையாக வாழ்பவர்கள் மீண்டும் மீண்டும் உலகில் உள்ள  மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசைகள் மீது பற்று வைத்து உலகை விட்டு வெளியேற முடியாமல்  ,பிறந்து பிறந்து ,இறந்து,இறந்து திரிந்து திரிந்து ,அவஸ்தை வசத்தர்களாகி அலைந்து கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும், இந்த மாயை என்னும் உலக ஆசைகளை அடக்க முடியாது ,ஆசையை விடமுடியாது,ஆசையை முழுமையாக அனுபவித்து,பின் இவ்வளவுதான் இந்த உலகம்  என்பதை அறிவு பூர்வமாக அறிந்து,உணர்ந்து,வெறுப்பு உண்டாகிய பின்தான் ஆசையை ஒழிக்க முடியுமே தவிர வேறு வழிகளால் ஒழிக்க முடியாது.

 அதன் பின்  அதே ஆசையை இறைவன் மேல் செலுத்த வேண்டும்.மறுபடியும் .மாயையால் உண்டாக்கிய  உலகிலுள்ள  பொருள்கள்  மீது ஆசைவராது.

பொருள் மீது ஆசை வைத்த மனிதன்,அதை வெறுத்து ''அருள் '' மீது ஆசை வைக்க விரும்புகிறான் .அந்த அருள் எங்கு எப்படி கிடைக்கும் என்பதை தேடுகிறான் .அதனால் மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதாகும்.

பொருளை சம்பாதித்து சலித்துப் போன மனிதர்கள்,.. இறைவன் அருளைப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் ,சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்னும் பக்தி,யோகம்,ஞானம் என்னும் ஆன்மீக வழிமுறைகளை மக்களுக்கு காட்டியும், வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார்கள் .ஆனால் அவர்கள் காட்டிய பாதைகள் எல்லாம் கரடு முரடான,உண்மைக்கு புறம்பான பாதைகளாகவே இருந்தன.அதனால் மனிதர்கள் முழுமையான இறை அருளைப் பெற முடியாமல் திண்டாடிக் கொண்டு உள்ளார்கள்.

துன்பம் இல்லாமல் வாழ்வதற்கும்,நீண்ட நாள் வாழ்வதற்கும் பிறப்பு இல்லாமல் வாழ்வதற்கும், பலப்பல பக்தியும்,தவமும்,தியானமும் ,யோகமும், செய்து  உடம்பை வருத்தியும்,உணவு இல்லாமலும் ,மூச்சுப் பயிற்சி செய்தும்,மேலும் பற்பல உழைப்பும் முயற்சியும் எடுத்து,சமாதி நிலையும் ,ஜீவ சமாதி நிலையும் அடைந்து  ஆண்டவர் இடத்தில் அருளைக் கேட்டு அற்ப சுகத்தைப் பெற்றார்கள்.

இறந்தால் பிறப்பு உண்டு என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை...நீண்ட காலம் பிறப்பு இல்லாமல் வாழலாம் ,ஆனால் அந்த காலம் முடிந்தால் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் அறிந்து தெரிந்து பெற்ற அருளை மக்களும் அடைய வேண்டும் என்பதற்காக வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற கற்பனைக் கலைகளை,கதைகளை  எழுத்து மூலமாகவும்,ஆலய வழிபாட்டு மூலமும்,பக்தி,தியானம்,தவம்,யோகம், மூலமாகவும் நம்பகத் தன்மையாக உலகில் படைத்து உள்ளார்கள்,அதையும் உண்மை என்று நம்பி இதுவரையில் கடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள் .அதனால் மக்கள் ஏதாவது பயன் அடைந்து உள்ளார்களா என்றால் எந்த பயனும் அடையவில்லை.என்பதுதான் தெரிய வருகிறது.

இதை அறிந்த இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,உண்மையை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்ற காரணத்தைக் கருதி காரிய உருவமாக பக்குவமுள்ள ஆன்மாவை இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கின்றார்.அந்த ஆன்மாதான்,சின்னம்மை என்னும் பெண்ணின் உடம்பில் புகுந்து உயிராகி ,கருவாகி,உருவாகி மனிதப் பிறப்பு எடுத்து வந்த     வள்ளல்பெருமான் என்பவராகும். அவர்தான் மனிதப் பிறப்பு எடுத்த மனிதர்களுக்கு உண்மையைப் போதிக்க வந்த உத்தமராகும் ,உருவம்
 தாங்கி இந்த பூவுலகத்திற்கு வந்தவராகும். .

வள்ளல்பெருமான் !

வள்ளல்பெருமான அவர்கள் வந்துதான் இந்த உலகிற்கு ஒரு மாபெரும் உண்மையை மக்களுக்குத் தெரிவித்து உள்ளார். அவர் சொல்லால் எழுத்தால் தெரிவித்தது மட்டும் அன்றி ..மனிதனாகப் பிறந்தவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதையும் வாழ்ந்து காட்டி உள்ளார்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்றும். அனைத்து ஆன்மாக்களும் அனைத்து உயிர்களும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்பதை மக்களுக்குத் தெரியப் படுத்தினார்

மக்களுக்கு அருளைக் கொடுக்கும் தகுதி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு மட்டும்தான் உள்ளது, மனிதர்களால் தோற்றுவித்த அறிமுகப் படுத்திய தத்துவ தெய்வங்களால் எந்த நன்மையையும் இல்லை, அந்த தெய்வங்களால் அருளைக் கொடுக்க முடியாது என்பதை,உலகுக்கு பறை சாற்றினார் .

உலகில் உள்ள ,தாவரம்,ஊர்வன,பறப்பன,நடப்பன,நரகர் ,அசுரர் ,மனிதர் போன்ற ஏழு விதமான உயிர் உள்ள உடம்புகளும், அதை இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாக்களும் ''அருட்பெருஞ்ஜோதி ''ஆண்டவரின் அருட்பெருட் வெளியில் இருந்து வந்த ஆன்மாக்களாகும் அந்த ஆன்மாக்கள் மீண்டும் அங்கு செல்வதைத்தான் வீடு பேறு என்று சொல்லி வைத்தார்கள் .

உலகில் வாழ்வதற்கு வந்த ஆன்மா ,உயிர் எடுத்துதான் வாழ வேண்டும் என்பது ஆண்டவர் கட்டளையாகும்.உயிர் எடுத்தால் ,உயிர் செயல் படுவதற்கு உடம்பு என்னும் கருவிகள் கொடுக்கப் படுகிறது அந்த கருவிகளான,மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,உள்ளம் என்னும் கரணங்களும்,கண்,காது,மூக்கு,வாய்,உடல் என்னும் ,இந்திரியங்களும்,கொடுக்கப் படுகின்றன.அதைக் கொண்டுதான் ஆன்மா இந்த உலகில் வாழ்கின்றன.என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார் .

பல பிறவிகள் எடுத்த ஆன்மாவுக்கு இறுதியில் மனித பிறப்பு கொடுக்கப் படுகிறது.மனிதப்பிறப்பின் நோக்கம்,உண்மையான இறைவனை அறிந்து அந்த  இறைவனிடம்  அருளைப் பெற்று ஆன்மா ,எங்கு இருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டும் என்பது இறைவன் ஆணையும் கட்டளையுமாகும் .ஆனால் ஆன்மாக்கள் இந்த உலகத்திற்கு வந்து பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து மனித தேகம் கிடைத்தும்,அருளைத் தேடும் மனிதன் பொருளைத் தேடிக் கொண்டு இருக்கின்றான்.

பொருளைத் தேடுவதால் இன்பமும், துன்பமும் சூழ்ந்து ,இறுதியில்  மரணம் அடைந்து  கொண்டே இருக்கின்றான் மனிதன்.அதைத்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்கள். மரணம் வந்தால் மறுபடியும் பிறப்பு உண்டு என்பதை அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டே உள்ளார்கள்.

மறுபடியும் பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார் நமது அருட்தந்தை வள்ளல்பெருமான்.அதற்கு ''மரணம்,இல்லாப் பெருவாழ்வு ''
என்று பெயர் வைத்துள்ளார்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

நாம் சுற்றுலாப் பயணமாக வாழ வந்த ,இந்த உலக வாழ்க்கைக்கு , நமக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மூன்று சுதந்திரம் கொடுத்துள்ளார்.அவை ஜீவ சுதந்திரம்,தேக சுதந்திரம்,போக சுதந்திரம்.என்பவைகளாகும்.இந்த சுதந்திரம் நமக்கு இறைவன் கொடுத்தது என்பது தெரியாமல்,நாமே பெற்றுக் கொண்டதாக நினைந்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

இந்த சுதந்தரத்தை கொண்டு ,அறம்,பொருள்,இன்பம் எனற உலக வாழ்க்கை வாழ்ந்து பின் பற்றிய பற்று அனைத்தும் பற்று அற விட்டு ,வீடுபேறு என்ற பேரின்ப நிலையை அடையவேண்டும் . இதுவே மனித வாழ்க்கையின் இலட்சியமும்,இலஷ்ணமுமாகும்.

இதற்கு மனிதன் செய்யவேண்டிய முக்கியமான காரியம்  என்ன வென்றால் .நமக்கு இறைவன் கொடுத்த முன்று சுதந்தரத்தையும்  இறைவனிடமே கொடுத்து விடவேண்டும்.அப்படி கொடுத்தது விட்டால் இறைவன் நம்மீது பற்று வைத்து கொள்வார் .அப்போது நமக்கும் இறைவனுக்கும் நேரடி தொடர்பு கிடைத்துவிடும் இடைத் தரகரான எந்தக் கடவுளும் நமக்கு தேவைப்படாது.

அடுத்து இறைவன் மீது தீராத அன்பு என்னும் காதல் கொள்ள வேண்டும்.அந்த காதல்,ஆசையாக, காமமாக,மயக்கமாக மாறி, மோகம் என்னும் இணைப்பு உண்டாக வேண்டும். அப்படி உண்டாவது கணவன் மனைவி உறவு  போன்றதாகும் .

ஆண் பெண் அனுபவிப்புது உடல் சுகம்,இறைவனும் மனிதனும் அனுபவிப்பது அருள் சுகம்.உடல் சுகம் அழிந்துவிடும் பிரிந்துவிடும்.அருள்சுகம் அழியாது பிரியாது.        

இறைவன் மீது அன்பு என்னும் ஆசைவைத்து அந்த அருள் சுகத்தை அனுபவித்தால், அந்த அருள் என்னும் திரவம் மனிதன் ஆன்மாவில் இருந்து சுரக்கும் ,அந்த அருள் சுகத்தை அனுபவித்தவன் ஆண்டவரை விடமாட்டான் .ஆண்டவரும் அவனை விடமாட்டார் .

அருள் கல்வியை கற்பிப்பது சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளலார் வள்ளல்பெருமான் அவர்கள்.

சாகாக் கல்வி !

உலகத்திற்கு சாகாக் கல்வியை போதிக்க வந்தவர் நமது அருட்பிரகாச வள்ளல் ஒருவரே ! இதற்கு முன் வந்த அருளாளர்கள் இவ்வளவு தெளிவாக வெளிப்படையாக யாரும் போதிக்க வில்லை.''என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்பதோடு ,அழி உடம்பை அழியா உடம்பாக மாற்றும் வழியையும் சொன்னவர் வள்ளல்பெருமான் ஒருவரே ! சொன்னதோடு அல்லாமல் சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டியவரும் வள்ளல்பெருமான் ஒருவரே !

''உடற் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணிஅனைத்தையும்
அடர்ப்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே ! '' ...அகவல் வரிகள்

நமது உடம்பு அழிவதற்கு அறிகுறியாகத் திகழ்வது ,நரை,திரை,பிணி மூப்பு,என்னும் புறத் தோற்றமாகும்.அதற்கு உடற்பிணியின் வெளித் தோற்றமாகும்.அந்த தோற்றத்தையும் மாற்றி இளமையாக வாழமுடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார் .

''என்றே என்னினும் இளமையோடு இருக்க
நன்றே தரும் ஒரு ஞான மாமருந்தே ''!...அகவல் வரிகள் ,

ஞான மருந்து என்பது அருள் என்னும் அமுதம் என்பதாகும்.!

வயது முதிர்ந்து மரணம் தருவாயில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் இறைவன் மீது உண்மையான அன்பும் உயிர்கள் மீது உண்மையான இரக்கமும் ,உண்மையான தயவும் ,உண்மையான  கருணையும் இருந்தால் அங்கே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
விளங்குவார்.

''எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் ஜோதி '' ! ...என்பார் வள்ளலார் . .

உடம்பிலே சுரக்கும் சுக்கிலம் என்னும் விந்து சக்தி சிறிய இன்பத்தைத் தரும்.அதற்கு சிற்றின்பம் என்று பெயர்,அது நீடித்து சுரக்காது.அது உணவிலே உண்டாவதாகும் .

அருள் என்னும் பரவிந்து சக்தி ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அவை இடைவிடாது சுரந்து கொண்டே இருக்கும். அதை அனுபவிப்பது பேரின்பமாகும்.அது தடை இல்லாமல் சுரந்து கொண்டே இருக்கும்.அவை பேரின்பமாகும்.அதற்கு சத்துநிறைந்த சித்துநிறைந்த ஆனந்தமாகும் அதுவே பேரின்பமாகும் .

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும். இந்த பெருவாழ்வு அளவிட முடியாத இன்பத்தை தருவதாகும்.இதை அனுபவிக்க பிறந்தவன்தான் மனிதன்.

மனித பிறப்பு பேரின்பத்தை அனுபவிக்க கொடுக்கப்பட்ட பிறப்பாகும்.இதை உணர்ந்து அறிந்து வாழ்பவனே மரணத்தை வென்றவனாகும் அவனே மனிதன் என்பவன் .

கருணை .!

மனித ஆன்மாவில் உள்ள அருள் சுரக்க வேண்டுமானால் ''கருணை'' என்னும் கருவியால் மட்டுமே முடியும். மற்ற பக்தி,தவம்,தியானம்,யோகம் ,போன்ற எந்த செயல்களாலும் அருளைப் பெற முடியாது.

அருள் என்பது கடவுள் தயவு...கருணை என்னும் ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவு..சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுவது போல் சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவதுபோல் ,சிறிய தயாவாகிய ஜீவ காருண்யத்தைக் கொண்டு பெருந் தயாவாகிய கடவுள் அருளைப் பெறவேண்டும்.

மனிதனுக்கு அருளை இறைவனிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் சக்தி.ஆற்றல் ஏழை மக்களிடம்தான் உள்ளது ...ஏழை மனிதர்களே (ஜீவர்கள்)கடவுளாகும்
அதனால் கடவுள் இடத்தில் அன்பும் ,ஜீவர்கள் இடத்தில் இரக்கம் என்னும் கருணையும் காட்ட வேண்டும் .

அந்த ஏழைகளின் துன்பத்தையும்,துயரத்தையும்,அச்சத்தையும், பயத்தையும்,பசியையும்,போக்கு கின்றவர்களே கடவுளுக்கு பாத்திர மானவர்கள் ,அவர்களே கடவுளும் ஆவார்கள்.''கருணையும்,சிவமும் பொருள் எனக் காணும் காட்சியும் பெருக ''என்பது வள்ளல்பெருமான் வாக்கு அதை உண்மை என அறிந்து மனிதன் செயல்பட்டால் அருளை எளிதல் பெற்றுக் கொள்ளலாம்

இறைவனிடம் அருளைப் பெற்றுக் கொண்டவர்களே மனிதர்கள் !அருளைப் பெற்று மரணத்தை வென்று, மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கே கொடுக்கப் பட்ட தேகம்தான் மனித தேகமாகும் .

பேரின்பம் என்பதும்,பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதும்.மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதும், அனைத்தும் ஒன்றே என்பதை உணர்ந்து மனிதன் அழியாப் புகழ் என்னும் அருளைப் பெற்று வாழ்வதே மனிதப் பிறப்பின் நோக்கமாகும்.

ஆணவம்,மாயை,மாமாயை,பெருமாயை ,கன்மம்,என்னும் ஐம்மலங்கள் உயிரைப் பற்றிக் கொண்டு ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது.அந்த மலங்கள் நீங்கிய பின்தான் ''உயிர்க்கு ஆன்மா தெரியும் ''மறுபடியும் உயிருக்கு பிறப்பு கொடுக்காமல் அருளைக் கொடுத்து உயிரையும் ஊன உடம்பையும் ஒளிஉடம்பாக மாற்றி ஆன்மாவின் தன்மைக்கு அனைத்தையும்  தன்வசமாக மாற்றி சேர்த்துக் கொள்ளும்.அதுவே அருள் உடம்பாகும், அதுவே ஒளி உடம்பாகும் .அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

மனிதன் அருளைப்பெரும் நிலைகள் அந்த அருள் மனித உடம்பில் எவ்வாறு தோன்றுகின்றது,எவ்வாறு சுரக்கின்றது என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக அனுபவித்து மக்களுக்கு விளக்கி விளக்கம் தந்து உள்ளார்கள்

அமுத நிலைகள் !

முதல் அமுதம் ;--நாக்கு நுனியில் இனிப்புற்ற ஊற்று ஜலம் போல் இனிக்கும் இது பக்குவ ஞானத்தால் பெறுவதாகும்.

இரண்டாவது அமுதம் புவனா அமுதம்;--நாக்கு மத்தியில் இளகின சர்க்கரைப் பாகுபோல் இருக்கும் இவை பக்குவ கிரியையால் பெறுவதாகும்.

மண்டலா அமுதம் ;--நாக்கின் அடியில் குழம்பிய சர்க்கரை பாகுபோல் இருக்கும் ,இவை பக்குவ இச்சையால் பெறுவதாகும் .

ரகசியா அமுதம் ;--உள் நாக்கின் அடியில் முதிர்ந்த சர்க்கரை பாகுபோல் இருக்கும். இவை திரோபவத்தால் பெறுவதாகும்.

உண்ணாக்கு மேல் மகா இனிப்புள்ள மணிக்கட்டியாக குளிர்ச்சியாக இருக்கும் .இவை பக்குவ அனுகிரகத்தால் பெறுவதாகும்.இது மனித சுபாவத்தின் அனுபவமாகும் .

இந்த ஐந்து அமுதத்தை பூரணமாக உண்டவர்கள் என்றும் அழியாத தேகத்தை பெறலாம்.என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார்.இதை பெறுவதற்கான முயற்சி செய்து, முயன்று வாழ்ந்து,இடைவிடாது  பழகி,  வாழ்க்கையில் வெற்றிப் பெற்று அருளைப் பெற்று மரணத்தை வெல்வோம். .

மேலும் அருளைப்பெரும் வாழ்க்கை வழிமுறைகளைப் பற்றி விரிவாக மேலும் சிந்திப்போம் .

மீண்டும் பூக்கும்,
ஆன்மநேயன்;--கதிர்வேலு ஈரோடு .

    

1 கருத்துகள்:

20 பிப்ரவரி, 2014 அன்று PM 2:41 க்கு, Blogger Unknown கூறியது…

ஐயா
உங்கள் கட்டுரைகள் மிகவும் எளிமையாக புரியும் படி உள்ளது. உங்கள் இடுகைகளை ஒரு முறை வாசித்தாலே புத்துனர்வும் இப்பிறவியிலேயே நாம் சாகா கல்வி கற்று பிறவியில்லா பெறும் பேறு அடைந்து விடலாம் என்ற நம்பிகை வறுகிறது. வாழ்க உங்கள் ஆன்ம நேய பணி.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருனை அருட்பெரும் ஜோதி

இப்படிக்கு
வள்ளலாரின் வழியில்
க. ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி
9655558098

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு