வெள்ளி, 31 ஜனவரி, 2014

சுத்த சன்மார்க்க மரபு !


சுத்த சன்மார்க்க மரபு !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாம்  நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில்.;--

எல்லா அண்டங்களையும் உலகங்களையும் உயிர்களையும் பொருள்களையும் ,தத்துவங்களையும், சத்தி சத்தர்களையும், கலைகளையும்,செயல்களையும்,இச்சைகளையும்,ஞானங்களையும்,
அனுபவங்களையும், பயன்களையும்,மற்றை எல்லாவற்றையும்,

தமது திருவருட் சத்தியால் ;--தோற்றுவித்தல் ,வாழ்வித்தல் ,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும் எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும், எல்லாம் உடையவ  ராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை கடவுள் ஒருவரே !

''அருட்பெருஞ் ஜோதியர்'' என்றும்,..சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் {அருட்பெருவெளி }அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .என்ற உண்மையை அறிந்து உலக மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்... நமது தாயினும் சிறந்த தயவு உடைய திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் .

மனிதப்பிறப்பு !

மனித ஜீவர்களாகிய நாம் .உண்மை கடவுள் ஒருவரே ஆகிய அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரை அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வாகிய ''மரணம் இல்லாத பெரு வாழ்வாகிய சுத்த பிரணவ ஞான தேகத்தை பெற்று '' வாழாமல் பலவேறு கற்பனைகளால் பலவேறு சமயங் களிலும்,பல்வேறு மதங் களிலும் ,பல்வேறு மார்க்கங் களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம் பிறந்து பிறந்து,  இறந்து இறந்து , அவத்தை வசத்தர் களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து  பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து,வின்போயினோம்,வின்போகின்றோம்.

ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் வின்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று  நற்செய்கை உடையவர்களாய் ,எல்லா சமயங்களுக்கும்,
மதங்களுக்கும், மார்க்கங் களுக்கும்,உண்மைப் பொது நெறியாக விளங்கும்

சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ...மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ..

ஓர் ஞானசபையை,சித்திவளாகம் என்னும் இச்சன்னி தானத்திற்கு அடுத்த உத்தர ஞான சிதம்பரம்,அல்லது ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதி புரத்தில் ,தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ..,''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளித் திருவிளையாடல் செய்து அருள்கின்றோம் "' ..என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெரும் தயவுடைய நமது கருனையாங் கடவுளாகிய அருமைத் தந்தையார் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிபடுத்துகின்றார் ....

நமது அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பல வாற்றாலும் பிரசித்திப்பட வெளிப் படுத்தி அருட்பெருஞ் ஜோதி சொருபராய் ..அப்பெருங் கருணை வள்ளலாரது உடல்,பொருள்,ஆவிகளைக் கொண்டு பொற்சபை,சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்தருளி ,அறிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலம் கொண்டு அருள் அரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்து அருள்கின்றோம் என்னும் திரு குறிப்பை வெளிப்படுத்து கின்றார் .

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், வள்ளலார் வசம் ஐந்தொழில் வல்லபத்தையும்,அருள் அரசாட்சியும் அளித்து உள்ளார் .உலக மக்களை எப்படியாவது திருத்தியாக வேண்டும் என்றும் ...அதுவும் வெகு வேகமாக திருத்த வேண்டும் என்றும்.உன்னால்தான் இதை செய்ய முடியும் என்பதால் அம்பலத்து அரசாட்சி பொறுப்புகள் அனைத்தும் ஒப்படைக்கின்றேன் என்று  ஆணை இடுகின்றார்.

இறைவன் அனுமதியுடன் ஆணையை சிரமேற் கொண்டு வடலூரில்  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற அமைப்பை உருவாக்குகின்றார் .அதற்கு தலைவர்  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்தான் என்று பெயர வைக்கின்றார். வழி நடத்துபவர் வள்ளல்பெருமான்.

இறைவனை தெரிந்து கொள்வதற்கும்,இறைவனுடன் இணைவதற்கும் முதலில் ஒழுக்கம் வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு சமரச சுத்த சன்மார்க்க  சங்கத்தின் வழியாக முதலில் ஒழுக்கங்களைப் போதிக்கின்றார் .

ஒழுக்கம் நான்கு வகை !

மனித ஜீவர்களாகிய நாம் இறைவன் அருளைப் பெறுவதற்கு ,இறைவனால் தோற்று விக்கப் பட்ட ''சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெரும் நெறியாகிய நான்கு ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டுவது அவசியமாகும் ''.அந்த ஒழுக்கங்கள்,..இந்திரிய ஒழுக்கம்,...கரண ஒழுக்கம்,,...ஜீவ ஒழுக்கம்,..ஆன்ம ஒழுக்கம்,என்பவைகளாகும்,அவற்றைப் பற்றி திருவருட்பா ஆறாம் திருமுறையில் ''மெய் மொழியும் ஒழுக்கமும் '' என்ற தலைப்பில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுத்த சன்மார்க்க மரபு !

சுத்த சன்மார்க்க மரபு என்ன ? என்பதை வள்ளலார் மிகவும் வலியுறித்தி பதிவு செய்துள்ளார்..

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவேதகும் அறிவு
மலம் ஐந்தும் வென்ற வல்லபமேதனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலேமெய்த் தொழிதலாகும்  \
இந்நான்கையும் ஒருங்கேவியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எலாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாம்
மண்ணும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு 
என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்தேற்றி
அருள் செய்த சிவமே
சிற்சபையில் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜபதியே !

என்னும் பாடல் வாயிலாக வள்ளல்பெருமான் மக்களுக்கு சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்ன என்பதை தெளிவு படுத்தி உள்ளார்,

சாகாத கல்வியைக் கற்றுக் கொள்வது !.
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியர்  என்பதை அறிவால் அறிந்து கொள்வதே உண்மையான அறிவு !
ஆணவம்,மாயை,கன்மம்,மாமாயை,பெருமாயை.என்னும் ஐந்து மலங்களை வெல்லும் வல்லபத்தை பெறுவது !
மரணத்தை வென்று ஐந்தொழில் செய்யும் ஆற்றலைப் பெரும் தொழிலை இறைவனிடம் இருந்து பெறுவதே சிறந்த தொழிலாகும்.!

மேலே கண்ட நான்கையும் கைவரப் பெற்று உலகம் எல்லாம் உள்ள அணைத்து ஜீவராசிகளிடத்தும் கருணையும் இரக்கமும் பெற்று, ஆண்டவரிடத்தில் அன்பும் காதலும் கொண்டு எல்லாம் வல்ல பூரண சித்தியைப் பெறுவதே (மரணம் இல்லாப் பெருவாழ்வு } எவ்வகையிலும் அழிக்க முடியாத இன்பமாம்.! அதுவே பேரின்பமாம் !

அதாவது....சாகாக்கல்வி, ..உண்மை அறிவு ,...மலம் ஐந்தும் வெல்லும் வல்லபம்,...மெய்த்தொழில்,....அருட் சித்தி பெரும் பேர் இன்பம் .இவை பெறுவதுதான் சுத்த சன்மார்க்க மரபாகும்.

இதுவே ''சுத்த சன்மார்க்கத்தின் மரபு '' என்பதை வள்ளலார் கடைபிடித்து  வாழ்ந்து, அனுபவித்து தான் பெற்ற அனுபவத்தை   மக்களுக்கு போதிக்கின்றார்.

மரணம் !

இறைவன் மனிதப்பிறப்பு கொடுத்ததின் நோக்கம் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்பதற்கு அல்ல ,மனிதப் பிறப்பு ஒன்றினால் தான் இறைவன் அருளைப் பெற்று, மரணத்தை வென்று இறைவனோடு சேரமுடியும் சேரவேண்டும்  என்பது இறைவனுடைய சட்டமாகும்.

மரணம் என்பது இயற்கை என்று நினைத்து கொண்டு இருந்தோம்,மரணம் என்பது இயற்கை அல்ல,! நாம் செய்யும் தவறான செய்கையாலும் தவறான வழிபாட்டாலும் ,தவறான வாழ்க்கை முறையாலும், அறியாமையாலும் தான் மரணம் வருகின்றது என்பதை வள்ளல்பெருமான் திருஅருட்பாவில் பதிவு செய்கிறார்.

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுள நாண நான் சாதலைத் தவிர்த்தேன்
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழி நீ என்னோடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க
ஜோதி என்று ஓதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதி கண்டு ஆடேடி பந்து.

என்று விளக்கம் தந்து உள்ளார். ''சுத்த சன்மார்க்க மரபு ''என்பது உண்மையான இறைவனைக் கண்டு.அன்பெனும் பிடியுள் அடங்கி  அன்பு என்னும் காதல் கொண்டு,அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கமே ''சுத்த சன்மார்க்கத்தின் மரபு''  என்பதாகும்.

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி
நோவது இன்று புதியது அன்றே என்றும் உலதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவதென்னே !

சாவதும் பிறப்பதும் போன்ற பாவச்செயல்கள் என்னும் நோய் , உலகம் தோன்றி மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்தே நடந்து கொண்டு வருகின்றது.இந்த நோயை நீக்குவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே முயுமே தவிர  வேறு எந்த இறைவனாலும் முடியாது,எந்த வழிபாட்டாலும் முடியாது.,தவம்,தியானம், யோகம் போன்ற செய்கையாலும் முடியாது, என்பதை அறிந்து ,சுத்த சன்மார்க்க மரபின் வாயிலாக தெளிவு படுத்துகிறார் .

பேருபதேசம் என்னும் பகுதியில் !

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள் .

நீங்கள் அனைவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள். நம் நம்முடைய நிலை எப்படிப் பட்டது,நமக்குமேல் நம்மை இயக்குகின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப் பட்டது என்று விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ் விசாரணையில் இருந்தால் நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கிவிடும்.அது நீங்கினால் மற்ற திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப் பட்டது என்றால் கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டும் என தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும் நமது குறையை உன்னியும், இவ்வண்ணமாக இருக்கின்ற போதும்,படுக்கின்ற போதும்,இடைவிடாதும் ,இவ் அக விசாரத்தோடும்,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.

விசாரம் !

விசாரம் என்பது,பரம்,அபாரம்,என்று  இரண்டு வகையாக இருக்கின்றது.இவற்றில் பரம் ...பரலோக விசாரம் ,அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல ..பரலோக விசாரமே விசாரமாகும்.இவ்விசார நிலையில் இருந்தால் .ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல்.நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடிக் கொண்டு  இருக்கின்ற பச்சைத் திரையாகிய இராகாதிகளை விசார அதி உஷ்ணத்தால் நீக்கிக் கொள்ளலாம். மற்ற உஷ்ணத்தால் நீக்க முடியாது .

அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும்.அதை மனித தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.அந்த விசாரத்தைவிட ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும்,கோடி கோடி பங்கு ,பத்துக்கோடி பங்கு அதிக உஷ்ணம் உண்டாகும் ,யோகிகள் வனம்,மலை,குகை,முதலிய இடங்களில் சென்று நூறு ,ஆயிரம்,முதலிய வருடங்கள் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் நமக்கு அவை தேவை இல்லை என்கிறார் வள்ளல்பெருமான். இதுவே ..புற செய்கைகளை செய்யாமல் அகத்தில் உள்ள ஆன்மாவை இடைவிடாது தொடர்பு வைப்பதே சுத்த சன்மார்க்க மரபாகும்.

நாம் கடைபிடிக்க வேண்டுவது !

நாம் நாமும் ..இதுவரையில் பார்த்தும் ,கேட்டும்,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்.ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது வெளிப்படையாக தெயவத்தை இன்னபடி என்றும்,தெயவத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணு அளவாவது தெரிவிக்காமல், பிண்ட லஷ்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில் ;--கைலாயபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்திய லோகாதிபதி என்றும்,பெயரிட்டு ,இடம்,,,வாகனம் ...ஆயுதம்.... வடிவம்...ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகவே சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்திற்கு கை ..கால்...உடம்பு முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாகவே இருப்பதாகவே ..முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்.ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை என்கிறார் வள்ளலார்.

உண்மையை மறைத்து பூட்டியவன் ஓர் வல்லவன் என்கிறார் ...அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை என்கிறார் . .இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார்  .நான் உடைத்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்லுகின்றார் வள்ளலார் / இனிமேல் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.கவலைப்பட வேண்டாம் ,துன்பப் படவேண்டாம் என்கிறார். .மேலும்  சாதி,சமயம்,மதம் போன்ற எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் .நீங்கள் அவற்றை விட்டு விடுவதால் உங்களுக்கு எந்த நட்டமும் இல்லை.அதையும் மீறி சாதி, சமய மத வழிபாட்டில் பற்று வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டு இருக்கின்ற உண்மையான பற்றுப் போய்விடும்.

உண்மையான ஆண்டவரிடத்தில் வைத்த லட்ஷியம்(பற்று ) போய் விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய ஆன்ம லாபம் போய்விடும் .அதனால் மரணத்தை வெல்லும் முக்கிய லாபம் போய்விடும்.

அதேபோல் சைவம் வைணவம் முதலிய சமயங் களிலும், வேதாந்தம், சித்தாந்தம்,முதலிய மதங்களிலும் பற்று  வைக்க வேண்டாம்.ஏன் எனில் ;--நமக்கு காலம் இல்லை,மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானே இருக்கின்றேன்.நான் முதலில் சைவ சமயத்தில் பற்று வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது.

அதைப் பற்றி நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.அந்த பற்று எப்படிப் போய்விட்டது.? பார்த்தீர்களா ? அப்படி பற்று  வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை.நான் பாடி இருக்கின்ற திருஅருட்பாவில் அடங்கி இருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடியப் பாடலையும் பொதுவான சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார்.

வள்ளல்பெருமானுக்கு  அற்ப அறிவு என்பதில்லை ,மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் மக்களுக்காக அப்படி சொல்கிறார்.தான் எழுதிய சமய மத பாடல்கள் குற்றம் உடையது என்று வள்ளலாரைத் தவிர வேறு எவரும் சொன்னதாக வரலாறுகள் இல்லை,என்பதை அறிய வேண்டும்.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் தான் இது, ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் என்றால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக் கொள்ளவில்லை.

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த பற்றே  என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ ,அந்த பற்று என்னை தூக்கி விடவில்லை.என்னை இந்த இடத்திற்குத் தூக்கி விட்டது யாதெனில்.;--அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று சத்திய பெரிய விண்ணப்பத்திலும் ,''எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே யன்றித் தலைவா வேறு எண்ணியதுண்டோ ''எனவும்,'' தேடியதுண்டு நின் திருஉரு உண்மை ''என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும்.விண்ணபித்து இருக்கின்றேன்.

மேலும் ஆண்டவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில் ''கருணையும் சிவமும் பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது என்று மக்களுக்கு ''சுத்த சன்மார்க்க மரபை'' பற்றி தெளியாக பதிவு செய்கிறார் நமது வாளால்பெருமான் அவர்கள்.

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் .கருணை ஒன்றுதான் கடவுளை அடையும் துவாரமாகும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .
  
ஆன்மநேய ஒருமைப்பாடு !

நமக்கு தயவு வரவேண்டுமானால் ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்.தயவு வந்தால் தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கிறது.அது அந்த ஒருமை யினாலே தான் வந்தது .நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் .

அந்த ஒருமை என்னவென்றால் எல்லா உயிரகள் இடத்தும் இறைவன் இருக்கின்றார் .என்பதை உணர்ந்து எல்லா உயிர்களையும்  தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவர்களாகி அனைத்து உயிர்களையும் இயக்கும்  ஆன்மாவே {உள் ஒளி } கடவுளாகக் கருதி ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ்வதே மனித பண்பாகும் என்பதை வலியுறித்தி உள்ளார் .ஆதலால் எந்த உயிர்களையும் எக்காரணத்தைக் கொண்டும் கொலை செய்யக் கூடாது.அதன் புலாலை உண்ணக் கூடாது.என்பதை மிகவும் வலியுறித்தி உள்ளார் .

அனைத்து உயிர்களும் இறைவன் வாழும் ஆலயம் !

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !

எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த
செவ்வியர் தஞ் செயல் அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை இலாத் திருநெறி  அத்திருவாளர் தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ !

கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர்போல் கண்டு ஞானத்
தெரு நெறியில் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நீதி செலுத்தா நின்ற
பொருள் நெறி சற்குணம் சார்ந்தப் புண்ணியர் தம் திருவாயால் புகன்ற
வார்த்தை
அருள் நெறி வேதாகமத்தின் அடிமுடிசொல் வார்த்தைகள் என்று அறை
வராலோ !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பராபரனின் உண்மையான இருப்பிடத்தை கண்டு களித்து ஆனந்தம் கொண்டு,அருள் பூரணத்தை அடைந்து  சுத்த பிரணவ ஞான தேகத்தைப் பெற்று, மரணத்தை வென்று ,ஐந்தொழில் வல்லபத்தை இறைவனிடம் பெற்று ,ஐந்தொழிலை நடத்திக் கொண்டு இருக்கும் நமது திருஅருட் பிரகாச வள்ளல்பெருமானை வாழ்த்தி வணங்குவோம்...மரணத்தை வெல்வதே சுத்த சன்மார்க்க மரபாகும்

சுத்த சன்மார்க்க மரபின் கொள்கைகள் !

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

சிறு தெய்வ வழிபாடுகள் செய்யவேண்டாம்.!

தெய்வங்கள் பெயரால் உயிர் பலி செய்யவேண்டாம்.!

சாதி,சமய,மதம் முதலிய வேறுபாடுகள் வேண்டாம்!

எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.!

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

புராணங் களையும் ,இதிகாசங் களையும்,சாத்திரங் களையும் நம்ப வேண்டாம்!

இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !

கருமாதி ,திதி,முதலிய சடங்குகள் வேண்டாம் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம் !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும் !

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும் .அனைவருக்கும் வந்தனம் .

ஆன்மநேயன்
ஈரோடு செ ,கதிர்வேல் .
அருட்பா ஆராய்ச்சி மையம்
108,c, நந்தா இல்லம்
வையாபுரி நகர் ,
வள்ளலார் வீதி
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002 ,,,
cell ;--9865939896,...land line;--0424 2401402 ,
    
.  


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு