புதன், 3 ஜூலை, 2013

நான் ஆன்ம ஒளி ! இரண்டாம் பாகம் !



நான் ஆன்ம ஒளி ! இரண்டாம் பாகம் !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யின் விளக்கம் !

கலவி கேள்விகளாற் பகுத்து அறியத் தக்க அறிவை உடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிப்பது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ள போதே அறிந்து அடைய வேண்டும்.

அந்த பிரயோஜனம் யாதோ எனில் ;--எல்லா அண்டங்களையும் எல்லா புவனங்களையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாச் சீவர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லாப் பயன்களையும், தமது பரிபூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியால் தோன்றி விளங்க,வில்ககஞ் செய்விக்கின்ற இயற்கை ''உண்மை வடிவனராகிய கடவுளின் ''பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும்,

இயற்கை இன்பத்தைப் பெற்று தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடைய வேண்டும் எனில் ; கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும் என்று அறிய வேண்டும்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் எனில் ; ஜீவ காருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக் கூடும்,அல்லது வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்பதை உறுதியாக அறிதல் வேண்டும்.

ஜீவ காருண்யத்தின் முக்கிய  லஷியம் யாது எனில் ;

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குக் உண்டாகுகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லஷியம் என்று அறிய வேண்டும்.

ஆகலில் அந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கடலூர் மாவட்டம் வடலூர் தாலுக்காவைச் சார்ந்த வடலூர் என்கின்ற பார்வதி புரத்தில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை''என்று ஒரு தருமச்சாலை ஏற்ப்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அது பலர் சகாயத்தாலேயே நிலை பெற வேண்டும் ஆதலால் ,ஜீவதயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவிகளைச் செய்து அதனால் வரும் லாபத்தை ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகள் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கோரிக்கை யாகும்.என்பதை வள்ளலார் அறிவிக்க அறிந்து கொண்டேன்.மேலும் வள்ளல் பெருமான்  சொல்லியது .

உலகம் முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தி யாகிய அரசனுக்கும் உலகம் முழுதும் ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும் ,மூன்றுஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஜீவன் முத்தர்களுக்கும்,பசி நேரிட்டபோது மனம் இளைத்தும் வலி குலைந்தும்  அனுபவம் தடைப்பட்டும் வருந்துகின்றார்கள் என்றால்,எந்த வகையிலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடுபடுவார்கள் ! பசி உண்டாகுகின்ற போது ஒவ்வொரு ஜீவர்களுக்கும் உடம்பில் உண்டாகுகின்ற மாற்றங்களைப் பற்றி வள்ளலார் மிகத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.இவை போன்ற உண்மை நிலைகளை உலகில் தோன்றிய எந்த அருளாளர்களும் தெளிவு படுத்தவில்லை.ஏன் என்றால் பசியின் அவத்தைகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

பசியினால் உண்டாகும் அவத்தை !

பசி அதிகரித்த காலத்தில் முகம் புலர்ந்து போகின்றது.!
உச்சி வெதும்பு கின்றது !
பிரமரந்திரம் அடிபடுகின்றது.!
காது கும்மென்று செவிடு படுகின்றது.!
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது.!
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது.
நாக்கு நீர் உலர்ந்து தடிப் பேருகின்றது !
மெய் முழுவதும் கருகி சகதியற்று ஸ்மரணை கெடுகின்றது !
வாக்கு குழறித  தொனிமாறுகின்றது !
கைகளும் கால்களும் தடதடத்துச் சோர்ந்து தடுமாறுகின்றது .!
மலசல வழி வெதும்பி வேறுபடுகின்றது.!
உரோமம் வெறிக்கின்றது.!
பற்கள் கருகித் தளர்கின்றது !
இரத்தமும் சலமும் சுவருகின்றது.!
சுக்கிலம் தன்மை மாறி வறளுகின்றது..!
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது.!
நாடி நரம்புகள் வலியிழந்து மெலிந்து கட்டுவிக்கின்றது !
வயிறு பகீர்ரென்கிறது !
மனது தளர்ந்து நினைவு மாறுகின்றது !
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது .!
சித்தம் கலங்கித் திகைப்பேறு கிகினறது !
அகங்காரம் குலைந்து அச்சம் உண்டாகின்றது !
பிரகிருதி சுருங்குகின்றது .
கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் மறைபடுகின்றது.!
தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றது.!

இவ்வளவு அவத்தைகளும் ஏக காலத்தில் உண்டாகின்றது.எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருகினறது..ஆகாரம் உண்டு பசி நீங்கிய  தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைந்து கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும்,அகத்திலும் புறத்திலும் வெளிப்பட்டு ,திருப்தி இன்பம் உண்டாகின்றது.

ஆகலில் நாம் அனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்ட போது மிகவும் கருணை உள்ளவர்களாகி தம்மாற் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்தி செய்வதற்கு முறச்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.

பசியை நீக்கும் குணமுடைய புண்ணியர்கள் ,மேலும் ஜீவர்களுக்கு உண்டாகும் பிணி,கொலை ,தாகம்,இச்சை,எளிமை,பயம்,போன்ற துன்பங்களையும் போக்குவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை இதுவே  சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் நோக்கமும் செயலுமாகும்.என்பதை,வள்ளலார் எழுதி வைத்துள்ள ''திருஅருட்பா''என்னும் அருள்  நூலின் வாயிலாக என்னுடைய ஆன்மா அறிந்து கொண்டது.

கடவுள் ஒருவரே !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையின் விளக்கம் !

வள்ளலார் வெளியிட்டது .

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,அடைந்து அறியாத அற்புத குணங்களையும் கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும் ,செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்  என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியாற் பெருங் களிப்புடையே னாகி இருக்கின்றேன்.

நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது ''சுத்த சன்மார்க்க லஷ்யமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு ''உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

இயற்கையில் தானே விளங்க்கு கின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும் ,எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும் ,எல்லா சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும் ,எல்லாக் கலைகளையும் ,எல்லாப் பொருள்களையும்,எல்லாத தத்துவங் களையும்,எல்லாத் தத்துவி களையும்,எல்லா உயிர்களையும் எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும் மற்ற எல்லா வற்றையும்,

தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்த்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்.எல்லாம் ஆனவர் என்றும் ,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லவர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும்,ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெருந்தலைமை ''அருட் பெருஞ் ஜோதியர்''என்றும் சத்திய அறிவால் ஆரியப் படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த ''சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில்'' அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து ''அருளை அடைந்து'' அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,பலவேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பலவேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தரகளாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்து இறந்து இறந்து வீண் போகின்றார்கள் .

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல்,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்,முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,எல்லாச் சமயங்களுக்கும் ,எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும், உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் ''சுத்தசன்மார்க்கத்தைப் பெற்று ,பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும்'' அடைந்து வாழும் பொருட்டு,

மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு ,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபை யை'' இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்று வித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப் படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் ''என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி ,அருட்பெருஞ் ஜோதியிராய் வீற்றி இருக்கின்றார்.

ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர் களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி ,இறந்தவர் உயிர் பெற்று எழுதல் மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள் .என்று உண்மையான கடவுளை இந்த உலகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள்  காட்டி உள்ளார்கள்.மேலும் விளக்கமாக எழுதிக் கீழே கையொப்பம் இட்டு உள்ளார்கள்.

இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம் .

மேலும் வடலூரில்  தோற்றுவித்து உள்ள ''சத்திய ஞானசபையை'', அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அனுமதியைப் பெற்று வள்ளல் பெருமான் தோற்றுவித்து உள்ளார்.மேலும் அந்த ஞானசபையில் உண்மைக் கடவுள் என்னும் ''அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே'' அருள் ஒளியாக வந்து அமர்ந்து ,அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், உலக உயிர்களுக்குத் நன்மையை வழங்கும் நிமித்தமாக அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு வருகிறார் .

ஆதலால் உலகில் உள்ள அனைத்து ஜீவன் களுக்கும் ''அருளைத் தரும் இடம்'' வடலூரில் உள்ள சத்திய ஞானசபையாகும் . என்பதை வள்ளலார் மக்களுக்குத் தெரியப் படுத்தி உள்ளார் .அந்த உண்மையை அறிந்து வடலூர் சென்று சத்திய ஞானசபையில்,உண்மைக் கடவுளான ''அருட்பெரும் ஜோதி ஆண்டவர்''அமர்ந்து இருக்கும் ஞான சிங்காதனப் பீடத்தை கண்குளிரக் கண்டு உண்மை அன்பால வழிபாடு செய்து கொண்டு வருகிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.அதனால் ஆன்மாவாகிய நான் அடைந்த ஆன்ம லாபத்திற்கு அளவே இல்லை .அவ்வளவு பெருங் களிப்பு உடையவனாக இருக்கிறேன்.

வள்ளலார் சித்தி பெற்றது.!

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாகத் திருமாளிகை !

வள்ளல் பெருமான அவர்கள் ,கருங்குழி என்னும் கிராமத்தில் 1858 ,இல் இருந்து  1867 வரையில் தங்கி இருந்து , வடலூரில் சத்திய தருமச் சாலையையும் , சத்திய ஞான சபையையும் நிறுவியபின் , தனிமையையும் அமைதியையும் விரும்பி, வடலூருக்குத் தெற்க்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக் குப்பம் என்னும்  சிற்றூரில் உறையத் தொடங்கினார்கள்.மேட்டுக் குப்பத்தில் பெருமானார் உறைந்த இடத்திற்கு திருமாளிகை என்று பெயர் வைத்து இருந்தனர்.

இறைவனும் வள்ளல் பெருமானும் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒளிதேகம் பெற்று சித்திப் பெற்ற இடம் அந்த இடம் .ஆதலால் அந்த இடத்திற்கு சித்தி வளாகம் என்னும் பெயர் வழங்கப் பட்டு ,தற்போது  ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று மக்களால் போற்றப் பட்டு வருகிறது.

வள்ளல் பெருமான் அவர்கள் இந்த உலகில் பிறந்து வாழ்ந்து,அனைத்து ஆன்மாக்களுக்கும் வழிகாட்டி உள்ளார்கள்.

ஒரு ஆன்மா இந்த பஞ்ச பூத உலகில் வந்து, ...தான் வாழ்வதற்கு உயிரும் உடம்பும் எடுத்து  பலகோடி பிறப்புகள் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து, ,இறுதியாக மனிதப் பிறப்பு எடுத்துதான் அருளைப் பெற முடியும் என்பது இறைவன் கட்டளையாகும்.இறைவன் கருணையால் அருளைப் பெற்று, அந்த அருள் சக்தியால்தான் , பஞ்ச பூதங்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட,வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும். அணுக்களால் உருவாக்கப்பட்ட  ஊன் உடம்பை,அருள் சக்தியால் ''வேதியல்'' மாற்றம் போல் ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.அந்த தேகத்திற்கு அருள் தேகம் என்றும்,ஒளி தேகம் என்றும்,ஞான தேகம் என்றும் பெயராகும்.இந்த தேகம் கிடைத்தால் தான் இறைவனைக் காண முடியும்.இதுவே சொந்த வீடாகும்.

பஞ்ச பூத அணு உடம்பானது ,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்,என்னும் முத்தேக சித்தி பெற்றவர்தான் நமது வள்ளல் பெருமான் ஆவார்கள்.பிறப்பு,இறப்பு இல்லாமல், மரணம் அடையாமல் ஒளிதேகமாக தன்னை மாற்றிக் கொள்வதுதான் ''மரணம் இல்லாப் பெருவாழ்வு'' என்பதாகும்..''பேரின்ப சித்திப் பெருவாழ்வு '' என்பதாகும்..

மேலே கண்ட,அருள் தேகம்,என்னும் ஒளி தேகம் பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.,என்ற பேருண்மையை வள்ளலார் எழுதிய ''திரு அருட்பா ''என்னும் அருள் நூல் வாயிலாக ஆன்மாவாகிய நான் அறிந்து,கொண்டேன்.இதுவே ஆன்மா தனக்கு என்று சொந்த வீடு கட்டிக் கொள்வதாகும்.அந்த ஒளி உடம்பு பெற்றுக் கொண்ட ஆன்மா எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லும் ஆற்றல் படைத்ததாகும்.இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தன்மை யுடையதாகும்..

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் ,வள்ளல் பெருமான் அவர்களுக்கு என்றும் அழியாத அருள் தேகம் கிடைத்துள்ளதைப் பற்றி பதிவு செய்துள்ள பாடல் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெருஞ் ஜோதி இறைவனைச் சார்வீரே !

ஆன்மாவாகிய நான்,வள்ளல் பெருமான் அவர்கள்,காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்,வழிகாட்டுதலின் படி வாழ்ந்து வருகிறேன்.நீங்களும் உண்மையை அறிந்து மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து இறைநிலையை அடைய வேண்டுமாறு,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் பூக்கும்,

உங்கள் ஆன்மநேயன் ;---கதிர்வேலு.        



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு